Saturday, March 3, 2018

வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை – Rev. Billy Graham




உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. (யாக்கோபு 4:14)
வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பெரிய ஆச்சரியமான காரியம் என்ன என்று அனேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக மாணவர் என்னிடம்  கேட்டார். “ வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை ” என நான் உடனே பதில் சொன்னேன். பெரும்பாலும் நாம் இந்த உண்மையை அறிவதற்கு முன்னமே, ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன, வாழ்க்கை அதன் இறுதி காலத்தை நெருங்கிவிடுகிறது.
ஒரு பக்கத்தில், வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நமக்கு அறைகூவல் விடுகிறது. நாம் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலம் என்ற ஒன்று இருந்தால், அது இப்பொழுதே! ”ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” என்று இயேசு சொன்னார் (யோவான் 9:4).
வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நம்மை ஆறுதல்படுத்தவும் செய்கிறது. வாழ்க்கை மிகவும் குறுகியது – நமக்கு முன்னே இருப்பது நித்தியம்!  உபத்திரவங்கள்  அல்லது போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளும்போது அல்லது கடினமான சூழ்நிலைகள் நம்மை தீவிரமாக தாக்கும்போது, அவை சீக்கிரத்தில் கடந்து போகும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:17-18).
இந்த  உலக வாழ்க்கை நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழாதீர்கள். அது நடக்காது. மாறாக, நித்தியத்தை உங்கள் கண்முன் வைத்துக் கொண்டு வாழுங்கள்.

(Rev. பில்லி கிரகாம் அவர்கள் எழுதிய  “Hope for Each Day” என்ற தின தியான நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

Friday, February 9, 2018

சுய பரிசோதனை – யார் அவன், விழுந்து போன ஆராதனை வீரன்???!!!



சமீபத்தில் ஒரு சபையில் பாடப்பட்ட பாடல் வரிகள் நன்றாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பாடலை நான் திரும்ப் படித்த போது, இதைப் பாடியவர் யார் தெரியுமா? என்ற ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. அதன் பின் அந்தப் பாடலை என்னால் பாட முடியவில்லை அல்லது விருப்பமில்லை. ஒரு இசைக் கலைஞராக அந்தப் பாடலின் வரிகளும், இசையும் நன்றாக இருப்பதை நான் ஒப்புக் கொண்டாலும், அதன் பின் இருக்கும் நோக்கத்தையும் ஆவியையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை நானே ஒரு சுய பரிசோதனைக்குள்ளாக்கிக் கொண்டேன்.
எனக்கும் சம்பந்தப் பட்டவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நேரில் கூட பார்த்தது கிடையாது. நான் செய்வது தவறா அல்லது சரியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எழுதியவர் யாராக இருந்தால் என்ன, அந்தப் பாடலைப் பாடுவதில் என்ன தவறு என்று ஒரு தற்பரிசோதனைக் கேள்வி ஒன்றை முன் வைத்து சிந்திக்க ஆரம்பித்தேன். அடுத்த சில விநாடிகளில் விடை கிடைத்தது. கர்த்தரே அதை நினைவுபடுத்தினார் என்று நம்புகிறேன்.

சாத்தான் யார், அவன் என்னவாக முன்பு இருந்தான் என்ற கேள்வியிலேயே எனக்கான பதிலும் கிடைத்தது.
இதை வாசிக்கும் சிலர், சாத்தானைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா, அவன் மிகவும் கேவலமானவன், தேவனுடைய சித்ததிற்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் எப்போதும் எதிர்த்து நிற்பவன் மாத்திரம் அல்ல இரவும் பகலும் அவர்கள் மேல் குற்றம் சாட்டுபவன் அல்லவா என்று நினைக்கக் கூடும். வேதாகமத்தில் எசேக்கியேல் 28: 12-19 ஐ வாசிக்கும்போது நாம் சாத்தான் அவன் வீழ்ச்சிக்கு முன் என்னவாக இருந்தான் என்பதை அறியலாம்.
ஏசாயா 14:12ல் “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே” எனத் துவங்கும் வேத பகுதிக்கு முன் பின்வரும் வசனத்தை வாசிக்கிறோம்.
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.

இதை எழுதுவதற்குச் சற்றுக் கடினமாக இருப்பினும், எழுத வேண்டிய தருணம் இது என்பதால் எழுதுகிறேன்.
ஆவியானவர்  சபைகளுக்குச் சொல்கிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்.
(வெளி. 3:22).

Sunday, December 31, 2017

2018க்கான தேவனுடைய வார்த்தை - இலவசம்

புதிய ஒரு ஆண்டு நமக்கு முன்பாக இருக்கிறது. 2018 ஐ குறித்த பல ஆசைகளும், யோசனைகளும் நம் மனதில் இருக்கத்தான் செய்கின்றன. குறைவற்ற கர்த்தருடைய வேதம் தேனிலும் மதுரமான தேவனுடைய வார்த்தை ஆகும். அதுவே நமக்கு இதுவரை பல யோர்தான்களைக் கடந்து வரவும், நிற்கவும் நிலைத்து நிற்கிறதற்குமான பெலனையும் தந்தது என்பதை நாமறிவோம். முறையான வேத வாசிப்பு தேவனுடனான என் உறவிலும், மனிதர்களுடனான என் தொடர்பிலும் உண்டாக்கிய மாற்றங்களை நான் அறிந்து உணர்ந்து இருக்கிறேன். நீங்களும் தான்!

அமைதி நேர நண்பன் என்ற பெயரில் நான் முன்பு வெளியிட்டு வந்த கிறிஸ்தவ மாத இதழில் ஒரு வேத வாசிப்பு அட்டவணையை நான் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வந்தேன். அதை பலரும் பயன்படுத்தி, பிரயோஜனமாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே சில வருடங்களுக்கு முன்பே, அவைகளை தொகுத்து ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டு அனைவர் பயனடைய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவ்வாசை என் சூழலினிமித்தம் கரைந்து, மறைந்தே போனது வருத்தமே.

சமீபத்தில் நண்பரும் மருத்துவருமான பேதுரு தேவதாசன் அவர்களைச் சந்திக்க சென்றிருக்கையில், அவரது சகோதரும் ஆசிரியருமான பிலிப்பு அவர்கள், “நல்லதொரு வேத வாசிப்பு அட்டவணை வேண்டும்” எனக் கேட்ட பொழுது, மறுபடியும்  நான் முன்பு நினைத்திருந்த வேத வாசிப்பு அட்டவணையை நினைவு கூர்ந்து, என்னிடம் இருப்பதை தருவதாக வாக்குப் பண்ணி இருந்தேன். அவர் விரும்பிய வண்ணம் அவர் செல்லும் சபையில் உள்ளவர்கள் வேதாகமத்தை முறையாக வாசிக்க அது உதவக் கூடும் என்று நினைத்தோம்.  இன்று ஒரு பெரும் முயற்சியில், பழைய கோப்புகளைத் தேடி அவற்றைத் தொகுத்து ஒரு அட்டவணை தயாரிக்க தேவன் கிருபை செய்தார். அதை இப்பதிவில் இணைத்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட அட்டவணையில் உள்ளது போல வேதத்தை வாசித்து, உங்கள் ஆன்மீக வாழ்வில் நாட்டமும், வளர்ச்சியும் பெருக விரும்புகிறேன். இணைக்கப்பட்ட கோப்பின் பிரிண்ட் வேண்டும் என விரும்புகிறவர்கள் முகநூல் செய்தியிலோ அல்லது Whatsapp இல் எனக்கு உங்கள் முகவரியைத் தருவீர்கள் எனில், ஜனவரி முதல் இருவாரங்களுக்குள் தேவையான பிரதிகளை நான் தபாலிலோ அல்லது கூரியரிலோ அனுப்பத் தயார்.  நண்பர்கள் இந்த வேத வாசிப்பு அட்டவணையின் படி வேதத்தை வாசித்து, தியானிப்பதுடன், மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு உதவின தேவனுக்கும், உற்சாகப்படுத்தின சகோ. பேதுரு தேவதாசன் மற்றும் பிலிப்பு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Arputharaj
9538328573

To download Tamil Bible reading plan pdf file click this link
https://drive.google.com/file/d/1EcC1qr3LRMcqs5kpulKb2GegJXBNunmG


Tuesday, December 5, 2017

கைவிட்டவர், மறந்தவர் - யார்?

நாம் அடிக்கடி வாசிக்கிற மற்றும் கேட்கிற வேதவசனங்களில் இருந்தும் கூட தேவன் நமக்கு புதிய புரிதலைத் தரத் தவறுவதில்லை என்பதை சமீபத்தில் ஒரு வீட்டுக் கூட்டம் நடத்துகையில் உணர்ந்தேன். தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது அல்லவா!

ஏசாயா 49: 15,16
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

இந்த வசனத்தை வாசிக்கையில், மூன்று முக்கியமான விசயங்களை கர்த்தர் உணர்த்தினார். முதலாவதாக, ஒரு தாய் தன் பிள்ளையை மறப்பாளா?  பொதுவாக அன்பிற்கு உதாரணம் காட்ட மனிதர்களாகிய நாம், அம்மாவையே குறிப்பிடுகிறோம். “தாயிற் சிறந்த கோவிலில்லை”.  எனக் கொண்டாடுகிறோம். அன்பின் மறு உருவமாக நாம் நம்மைப் பெற்று, வளர்த்தூட்டிய அம்மாவைக் காண்கிறோம்.  ஒரு தாய் தன் பிள்ளையை மறப்பாளோ?  அதெப்படி அவள் மறப்பாள் என்று நீங்கள் சொல்லக் கூடும்.ஆனாலும் விதிவிலக்காக, சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை நாளிதழ்களிலும், சமூக நடப்புகளிலும் வாசித்து அறிகிறோம். ஆனால் நம் தேவன் சொல்கிறார், அவள் ஒருவேளை மறக்கக் கூடும். நான் உன்னை மறக்க மாட்டேன்.

தேவன் நம்முடன் பேசுகையில் நமக்குப் புரியாத மொழியில் பேசுவதில்லை. நன்றாகக் கவனித்துப் பாருங்கள். அனேக சிறு குழந்தைகள் பேசுவது சுற்றிலும் இருப்பவர்களுக்குப் புரியாது. ஆனால் உடனிருக்கும் தாய் அதை சரியாக விளங்கிக் கொண்டு, குழந்தைக்கு புரியும் மொழியில் பேசவும் செய்வார். நம் தேவனும் நமக்குப் புரியும் மொழியில் நம்முடன் பேசுவதைக் கவனியுங்கள். நாம் பேசுவதும், நம் இதயத்தின் பெருமூச்சு கூட அவருக்குப் புரியும் என்பதும் எவ்வளவு நம்பிக்கையான ஒன்று பாருங்கள். நான் உன்னை மறப்பதில்லை - என்று சொன்னவர் அதன் தொடர்ச்சியாக மேலுமிரு காரியங்களைச் சொல்கிறார்.

இரண்டாவதாக, உள்ளங்கைகளில்  வரைந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இங்கே இரு காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். நாம் நம் முகத்தைக் கூடக் கண்ணாடியில் சில நாள் பார்க்கத் தவறலாம். ஆனால் நாம் அனுதினமும் உபயோகிக்கிற நம் கரங்களின் உள்ளங்கைகளை அவ்வப்போது சும்மாவேணும் நாம் பார்ப்பதுண்டு. யோசித்து, சோதித்துப் பாருங்கள். நம் எல்லா அவயவங்களையும் நாம் எளிதில் காண இயலாது. ஆனால் உள்ளங்கைகள்!!! அந்த உள்ளங்கைகளில் நம்மை தேவன் வரைந்திருக்கிறார் என வாசிக்கிறோம். இது, ஏதோ ஓவியம் வரைவது போன்ற ஒன்று அல்ல, மூல மொழி தரும் பொருளில் சொல்வதானால், write or carve as a formal or permanent record. செதுக்குதல் எனும் பதத்தை நாம் எப்போது பயன்படுத்துவோம். ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கி அதை ஒரு அழியா படைப்பாக மாற்றுகிறார். கல்வெட்டுகளில் நாம் காணும் எழுத்துக்கள் அழிக்கக் கடினமானவை. அந்தக் கல்லுக்கு ஏதேனும் நேர்ந்தாலொழிய அந்த எழுத்துக்களுக்கு எதுவதும் நடக்காது, நடக்கவும் முடியாது. நம்மையும், நம்மைப் பற்றிய, நம் வாழ்வைப் பற்றிய சித்திரத்தையும் தேவன் தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். நாம் எதற்குக் கவலைப் படவேண்டும்! அதை அவரைத் தவிர எவரும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது. அவர் நம் வாழ்வின் தற்போதைய சூழ்நிலையை மட்டும் அல்ல, நம் வாழ்வைப் பற்றிய மொத்த வரைபடமும் அறிவார். நம் திட்டங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை அவரிடம் விட்டுவிட்டு அவருக்கு முன்னுரிமை கொடுத்தால், அனைத்தும் அவரால் சாத்தியப்படும். 

மூன்றாவதாக, உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று சொல்கிறார்.  என்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உங்களிடம் நான் கேட்கிறேன். மதில், அல்லது சுவர் என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது. என் அருகில் இருந்தவர்கள், அது நம் வாழ்வில் வரும் பிரச்சனைகள் என்றும், சிலர் அதுதான் நம் வாழ்க்கை என்றும் சொன்னார்கள். நீங்கள் இருக்கிற இடத்தைச் சுற்றிப் பாருங்கள். சுவர் இல்லாத வீடு எப்படி இருக்கும். பாதுகாப்பற்றதாக இருக்கும் அல்லவா!

நாம் நம்மைச் சுற்றிலும் ஒரு சுவரை கட்டி வைத்திருக்கிறோம். காணக்கூடிய சுவர்கள் நாம் வாழ்கிற வீட்டிலும், கண்ணுக்குப் புலனாக சுவர்களை உறவுகளிலும் உண்டு. அருகருகில் இருந்தாலும், ப்கைமை, வெறுப்பு மற்றும் கசப்பினால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாதளவுக்கு நாம் ஒருவரோடுருவர் ஒரு தடுப்புச் சுவர் இருப்பதைக் காண்கிறோமல்லவா! நம் நெருக்கமான உறவுகளிடையே ஒரு அன்பின் சுவரை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் அரணாக இருக்கிறோம் என்பது உண்மைதானே! இவை காணமுடியாவிடினும், உணர முடியும். நம்மைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும் சுவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால்.... நாம் பாதிக்கப்படுவது உறுதி அல்லவா! அதுதானே பிசாசின் விருப்பமாகவும் இருக்கிறது. ஆகவேதான் அவன் நம் உறவுகளை, நம் மதில் சுவர்களை வீழ்த்த எப்போதும் விழைகிறான்.

ஆனால் ஆண்டவர் என்ன சொல்கிறார். நீ மட்டுமல்ல, உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் மதில் சுவர்கள் என் முன் இருக்கிறது. உலகப் பிரகாரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எவ்வளவு பலமுள்ளவை என்பதை இன்று வல்லரசு நாடுகளின் பயங்கள், பதைபதைப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?  ஆனால் நாம் ஆண்டவரின் பாதுகாப்பில் இருக்கும் போது, பயப்படக் காரணமெதுவும் உண்டா என்ன!  “உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்” என தீர்க்கன் சொல்லி வைத்திருக்கிறார். உங்கள் பாதுகாப்பைப் பற்றிய பயம் இருக்குமெனில், உங்கள் கையை உங்கள் கண்ணுக்கு நேராகக் கொண்டு சென்று, அதைத் தொட முடிகிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள். முடியவே முடியாது. ஏனெனில் கண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும்போதே இமைகள் தானாக உங்களை தடை செய்யும். கர்த்தரின் பாதுகாப்பில் நாம் இருக்கையில் நாம் எதற்கும் பயப்படவேண்டாம்.  சத்துரு முனைப்பாக நம் மதில் சுவரைத் தாக்கி நம்மை நெருக்க முயற்சி செய்யும்போது, தேவன் நமக்குதவ நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“அவருடைய பார்வையில் நாம்” என்பதை நினைத்தாலே தித்திப்பாக இருக்கிறதல்லவா. இன்று தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பார்வை படாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், எதையாவது செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நமக்காக, நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற நம் தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம்.
எப்போதாவதல்ல, எப்போதும்! அதுவே நமக்குப் போதும்.
அன்புடன்
அற்புதராஜ்
9538328573

Thursday, November 30, 2017

இயேசு எல்லாவற்றிலும் புதுமையானவர்

மனிதனைத் தேடி மனிதனாக வந்தவர்
குருவைத் தேடும் மானிடரிடையே
சீடரைத் தேடித் தெரிந்தெடுத்து
“சீடராக்குங்கள்” என்றார்

சட்டம் பேசி, கட்டம் கட்டிய தலைவர்கள் நடுவிலும்
தேவன்பின் மகத்துவம் பகிர்ந்து
தேவைகள் சந்தித்து, தேவனுக்காக வாழ
தேன்மதுர வாழ்வியல் நெறிகள் உதிர்த்தார்.

ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தார்
எதிரிகளை மன்னித்தார்
துரோகிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தார்
துவண்டவர்களையோ தூக்கி நிறுத்தினார்

வீழ்ச்ச்சியால் விரிசலான உறவில்
தன்னைத் தாழ்த்தி, கிரயம் தந்து
“நானே வழி” என இணைத்து
மனிதனைத் தேடி வந்த இறைவன் அவர்

நாம் தேடுவதற்கு முன்னமே
நம்மை தெரிந்தெடுத்துவிட்டார்
எதையும் கொடுப்பதற்கு முன்னமே
தம்மையே தந்து, அன்பைக் காட்டியவர்
தனித்துவமான புதுமையானவர்
இயேசு 
- Arputharaj
9538328573