Sunday, April 30, 2017

மறைந்தும் மறையாத திருமறைப் போதகர் - பாஸ்டர் K.J.ஆபிரகாம்



A tribute to Pastor. K. J. Abraham

எம்மதமும் சம்மதம், நதிகள் பலவாகினும் அவை அனைத்தும் சங்கமிக்கும் கடல் ஒன்றே என்றும், மதத்தின் பெயரால் சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டும், வசைபாடி, நக்கலடித்துக் கொண்டும் திரிந்து கொண்ட காலம் ஒன்று என் வாழ்க்கையில் இருந்தது. ஒரு மனிதன் விசாலமான எண்ணத்துடன் இருப்பதற்கு மதம் தடையாக இருக்கிறது என்று அப்பொழுது தவறாக நினைத்துக் கொண்டு, ஒரு பெயர் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.  தவறாது ஞாயிற்றுக் கிழமை சபைக்குச் செல்பவன், அதுவும் பாடகர் குழுவில் மிகவும் (தவறனாலும்) சத்தமாகப் படிப்பவன், ஆனால் எல்லாம் வெளிவேஷம் தான். என் நண்பர்களுடன் தீவிர விவாதமும், எங்கள் அனைவருக்குள்ளும் கேள்விகளும் இருந்தன.

அப்படிப் பட்ட சமயத்தில் தான் நாங்கள் வயதான ஒரு போதகர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவரைப் பற்றி சொன்னவர் மிகவும் நல்லவிதமாகச் சொன்னபடியால், நாம் அவரைப் போய்ப் பார்த்தால் கிறிஸ்தவம் மற்றும் வேதாகமம் பற்றிய நம் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம் என்று நானும் என் நண்பரும் நினைத்தோம். போய்ப் பார்க்கலாம் என்று அவரைப் பார்த்தோம். மிகவும் தயக்கத்துடன், சுமார் 70 வயது நிரம்பிய அந்தப் போதகரின் வீட்டிற்குச் சென்றோம். வாசலில் கே.ஜெ. ஆபிரகாம் என்றப் பெயர்ப் பலகையை நாங்கள் பார்க்கும்போதே, “யா(ஆ)ரானு” என்றச் சத்தம் கேட்டது. வாசலுக்கு நேரே அங்கே வயதான ஒரு மனிதர் நாற்காலியில் அமர்ந்திருந்ததைப் பார்த்தோம். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டோம், சும்மா பார்க்க வந்தோம் என்று சொன்னோம். மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றவர், சுத்தமான சில தமிழ் வார்த்தைகளைக் கலந்து உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் எங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை, அவரும் அவரைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை.  நாங்கள் கிளம்பலாம் என்று நினைத்தபோது, அருகில் புதன் கிழமை அன்று நடக்கும் Bible Study பற்றிக் கூறி, எங்களை அங்கு வருமாறு அழைத்தார். நாங்களும் பார்க்கிறோம் என்றுச் சொல்லி நழுவினோம். ஆனாலும் அவர் இளம் வாலிபர்களான எங்களை நடத்தின விதமும், அழைத்த விதமும் பிடித்திருந்தது. அவருடன் பேசின போது, கேட்பதற்கு மிகவும் மன இரம்ம்மியமாயிருந்தது.

அடுத்த வாரம், “சரி, போகலாம்” என்று தீர்மானித்து அந்த Bible Studyக்கு சென்றோம். பெரிய கூட்டம் எல்லாம் அங்கில்லை. அந்த வீட்டில் வசித்து வந்த திரு. தாமஸ் என்ற வங்கி அதிகாரியும் அவருடைய பிள்ளைகளும், அது போக நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். நாங்கள் போனதால் அன்று எண்ணிக்கை சற்று அதிகம் போலும். எங்களைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்ற அந்த தேவ மனிதர், எங்களை அமரச் சொல்லி தன் Bible Studyஐ தொடர்ந்தார். அப்பொழுது யாத்திராகமம் புத்தகத்தில் இருந்து அவர்கள் வாரவாரம் வேதவிளக்கம் அளித்து போதித்துக் கொண்டு வந்தார். அன்றில் இருந்து என் புதுப் பயணம் ஆரம்பித்தது.

நான் முன்பு சொன்னது போல, என் மனதில் பல கேள்விகள் இருந்தன. ஆனால் நான் அவை எதையும் அவரிடம் கேட்காமலேயே, அவர் நடத்தின வேதபாட வகுப்புகளில் பதிலளிக்கப்பட்டு எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனத் தெளிவு உண்டானது. வசனம் கேட்க கேட்க, ஒரு தீவிரமும், ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் கேட்பதில் இருந்த ஆர்வம் அக்காலத்தில் திருவசனத்தை வாசிப்பதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வாசித்த எதுவும் வாசித்து முடித்தவுடனேயே மறந்தும் போய்விடும். ச்சே என்று என்னை நானே நொந்து கொள்வேன். நாங்கள் ஒழுங்காக வேதபாட வகுப்புக்கு சென்ற சில நாட்களில், ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடைபெறும் உபவாச ஜெபத்திற்கு வரும்படி அழைத்தார்.  நம்மளுக்கும் உபவாசத்திற்கும் சம்பந்தமே கிடையாதே என்று நினைத்தேன். எதற்கும் போய்ப் பார்ப்போம் என்று என் நண்பரின் உதவியுடன் பாளையில் இருந்து ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடக்கும் இரண்டாவது வெள்ளி, சனி நடக்கும் உபவாச ஜெபத்திற்குச் சென்றோம்.  ஒரு சிறிய சபை, கொட்டு மட்டுமே இசைக் கருவி. ஒரு சிலப் பாடல்கள் படித்தவுடன் பாஸ்டர் ஜெபிக்கலாம் என்று சொல்லி, வேதத்தில் இருந்து சற்று பேசி அனைவரையும் ஜெபிக்கச் சொன்னார். நான் நினைத்தேன், யாராவது ஜெபத்தில் மக்களை வழிநடத்துவார்கள் என்று, ஆனால் அப்படி ஒருவரும் முன் வரவில்லை. மக்கள் முழங்கால் படியிட்டு, “ஸ்தோத்திரம்” சொல்லி மவுனமாக ஜெபிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  எனக்குப் புதிராக இருந்தது. கண்களை மூடினால், உலகமே என் கண்முன் வந்தது. சரி கண்களைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அனைவரும் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது, “இயேசுவே” என்றும் “பிதாவே” என்றும் ஏக்கப் பெருமூச்சுகள் சபையாரிடம் இருந்தும் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களிடம் இருந்தும் வந்தது. எப்படி இவர்களால் இப்படி தொடர்ந்து ஜெபிக்க முடிகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் செல்லச் செல்ல சபையில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஜெபத்தில் அனலாவதை என்னால் உணர முடிந்தது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்து மறுபடியும் சுமார் அரைமணி நேரம் ஜெபிக்க உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். ஜெபம் முடிந்ததும், எளிமையான ஆனால் கருத்துச் செறிவான ஒரு பிரசங்கம் கொடுக்கப்பட்டது. அந்நிய பாஷைகள் அதிகம் இல்லாத, ஜெபத்துக்கும் வேத வசனத்துக்கும் மட்டுமே இடம் கொடுத்த ஒரு உபவாச ஜெபத்தில் அன்றுதான் நான் முதன் முதலாக கலந்து கொண்டேன். திருப்தியாக வெளியே வந்து ஒரு பழஜூஸ் ஒன்றை நண்பரின் செலவில் வாங்கிக் குடித்து, திரும்ப வீடு வந்து சேர்ந்தோம், வீட்டுக்குத் தெரியாமல்.

அதன் பின் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களை அடிக்கடி சென்று பார்த்து பேசத் துவங்கினோம்.  ஐயா என்று அவரை மற்றவர்கள் எல்லாம் மரியாதையுடன் அழைத்து, பயந்து பேசவே தயங்கி ஒதுங்கி நிற்கையில், நாங்கள் பயமறியாது, காரணமுமறியாது அவருடன் உரிமையாகப் பேசி பழகி வந்தோம். அவர் என்னை “தம்பி” என்று அழைத்தால், என்னையுமறியாமல் அவரைத் “தாத்தா” என்று கூப்பிட ஆரம்பித்தேன்.  என் ஆவிக்குரிய தகப்பனை பாஸ்டர் தாத்தா என்று அழைத்தேன்.  ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களின் ஜெப நேரம். அந்நேரத்தில் அவர் ஆண்டவரைத் தவிர வேறு எவருடனும் நேரத்தை செலவிட மாட்டார், பார்த்து பேசவும் மாட்டார். பத்து மணியானதும், யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும், இது என் ஜெப நேரம் என்று சொல்லி, மெதுவாக மேல்வீட்டறையில் சென்று ஜெபிக்க ஆரம்பித்து விடுவார்.  அவர் ஜெபிக்கும் அவ்வேளைகளில், எவரையும் அவருடன் கூட இருக்க அனுமதிக்கவும் மாட்டார் என்று மற்றவர்கள் சொல்வதுண்டு. ஆனால் எப்படியோ என்னையும் என் நண்பரையும் சில வேளைகளில் அவர் ஜெபிக்கும்போது எங்களையும் கூட இருந்து ஜெபிக்கச் சொல்வார். அப்பொழுதெல்லாம் ஐந்து நிமிடம் ஜெபிப்பது என்பதே எனக்கு எட்டாக் கனி.  மூன்று மணி நேரம் தொடர்ந்து ஜெபம் எப்படி என்று கேள்வியுடனே போய் அமர்வோம். அங்கே சென்றதும் அவர், தன் கண்களை வானத்துக்கு நேரே ஏறெடுத்து, “பிதாவே” என்று ஜெபிக்க ஆரம்பித்து விடுவார். ஆரம்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடன் தனித்திருந்து ஜெபிக்கும் பழக்கம் வந்தது.  எப்படி ஜெபிக்க வேண்டும் என்பது அனுபவ பாடத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.  ஒரு மணிக்கு ஜெபம் முடிந்ததும், பாஸ்டர் தாத்தா வீட்டிலேயே நல்ல உணவும் கிடைக்கும். ஆவியும் ஆத்துமாவும் ஜெபத்தில் பசியாறிய பின், சரீரத்திற்கும் திருப்தியான உணவு என்ன ஒரு வரப்பிரசாதம்!

இப்படியாக ஏறக்குறைய 10 வருடங்கள், 1998 க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களை அடிக்கடி சந்தித்து, பேசி, ஜெபித்து மற்றும் கற்றுக்கொண்டவைகள் மறக்க முடியாதவை. இடைப்பட்ட நாட்களில் தூரம் கருதி ஸ்ரீவைகுண்டத்திற்குப் பதிலாக செய்துங்கநல்லூரில் உள்ள கிளைச்சபைக்குச் சென்ற போதிலும் அதை ஊக்கப்படுத்தி, அன்பு மாறாமல் எப்பொழுதும் இன்முகத்துடன் வரவேற்று பேசி, உற்சாகபடுத்தி, கிறிஸ்துவை விட்டு தூரமாகக் கிடந்த என்னை, அவருக்குச் சமீபமாக, கிறிஸ்துவுடனான தனிப்பட்ட வாழ்வில் வளரவும், ஒரு ஊழியக்காரனாகவும் உருவாக தேவன் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களைப் பயன்படுத்தினதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்கள் அதிகம் பேசுகிறவர்களைக் காட்டிலும், ஜெபிப்பவர்களையே நம்புவார். அந்நிய பாஷைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆவியோடும் கருத்தோடும் பேசவேண்டும், ஜெபிக்க வேண்டும் என சபையில் அடிக்கடிச் சொல்வார். சிலர் ஜெபத்தில் அழும் அழுகை கூட உண்மையா அல்லது போலியா என்பதை எப்படிக் கண்டுகொள்ளலாம் என்பதை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் சொல்வார். ஆராதனை என்றால் தான் மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்காமல், சபையில் அனேகர் ஊழியர்களாக எழும்பவேண்டும் என்று பலருக்கும் பத்து நிமிட பிரசங்க வாய்ப்பு கொடுப்பார். மூத்த விசுவாசிகளும், ஊழிய ஆர்வமுள்ளவர்களும் எப்பொழுது சொன்னாலும் பிரசங்கிக்க ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. அதே போல் பத்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், தயங்காது அவரை பேசி முடிக்க வைத்துவிடுவார்.  பத்து நிமிடத்தில் ஒரு முழு பிரசங்கம் என்பது மிகவும் சுவராசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.  அவர்கள் பேசி முடித்ததும், பாஸ்டர் கே.ஜெ ஆபிரகாம் அவர்கள்  பத்து நிமிட பிரசங்கங்களைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்லி, அதன் பின் அவரும் சுருக்கமாக ஒரு பிரசங்கம் செய்து முடிப்பார். ஆரம்பத்தில் பத்து நிமிட பிரசங்கங்கள் செய்பவர்கள் தடுமாறினாலும், போகப் போக அவர்கள் அப்பயிற்சியில் தேறி, முழுநேர ஊழியர்களாக ஆகிவிடுவர். கிளைச் சபைகளில் உள்ள போதகர்கள் அனைவருமே இப்பயிற்சி பெற்றவர்கள் தாம்.  பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்கள் நல்ல தீர்க்கதரிசன வரம் உடையவர்கள். பலர் இவருடன் பேசப் பயப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.  ஜெபத்தின் வல்லமையை பேசுவதுடன் மட்டும் அல்லாது, தன் தனிப்பட்ட வாழ்விலும், ஊழியத்திலும் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்கள் செயலில் காட்டினார்கள்.

பாஸ்டர் கே.ஜெ ஆபிரகாம் அவர்கள் குறையே இல்லாத ஒரு தேவ மனிதர் அல்ல, ஆனால் தன் முன் மாதிரியான வாழ்க்கையினால் நல்ல ஒரு மாதிரியை விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள்  மனதிலும் வாழ்க்கையிலும் விதைத்திருக்கிறார். ஸ்ரீவைகுண்டம் வந்த புதிதில் சாப்பாட்டுகே வழியில்லாமல் பட்டினி கிடந்த இவரின் குடும்பத்தில், இவருடைய மகன் அமெரிக்காவில் மிக உயர்ந்த வேலை செய்த போதிலும் அந்த சிறிய ஊரை விட்டுப் பிரியாமல், கடைசி வரை அழைப்பில் உண்மையுடனும், ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்வதில் நேர்மையுள்ளவராகவும் இருந்தார் என்று என்னால் சொல்ல முடியும்.

 அது மட்டுமல்ல, இவர் மூலமாக உருவான, உருவாக்கப்பட்ட, பயனடைந்த ஊழியர்கள் எத்தனையோ பேர். அவர்களின் பெயரையும், அவர்கள் சொன்ன விவரங்களையும், என் அனுபவங்களையும் எழுத இங்கு இடம் போதாது. இவர் ஸ்ரீவைகுண்டம் வந்த புதிதில், புதன் வேதபாடவகுப்புக்கு 50க்கும் அதிகமானவர்கள் தவறாமல் தூர இடங்களில் இருந்தும் வருவதுண்டு, அவர்களில் பலர் இன்று பெரிய ஊழியக்காரர்கள். ஆனால் அக்காலத்தில் ஞாயிறு ஆராதனை வரும் விசுவாசிகள் மிகவும் சொற்பமாகவே இருந்தனர். இன்றும் கூட ஒரு பெரிய பிரமாண்டமான சபை என்று சொல்ல முடியாது. ஒரு ஊரில் இருந்து அதிகம் விசுவாசிகள் வந்தால், அவர்களில் ஒருவரை ஊழியராக பயிற்சி கொடுத்து உள்ளூரிலேயே ஒரு சபையை ஆரம்பிக்கச் செய்வதுதான் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் கற்றுக் கொடுத்த நல்ல பழக்கம்.
வேதத்துக்கும், ஜெபத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்த பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களைக் கொண்டு தேவன் தமிழகத்திலும் மற்றும் பல இடங்களிலும் தாம் செய்ய நினைத்ததைச் செய்து முடிக்க கிருபை செய்து, ஓட்டத்தை முடிக்கவும், நீதியின் கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன் அவரை தம்முடன் கூட இருக்கும்படி, ஏப்ரல் 22, 2017 அன்று அவருடைய 91வது வயதில் எடுத்துக் கொண்டார். தேவன் இவரைக் கொண்டு விதைத்த தேவ வசனம் வெறுமையாகத் திரும்பாமல், ஒன்று முப்பதும், அறுபதும் நூறுமாக பலன் கொடுத்து, வழுவாமல் சத்தியத்தின் படி வாழவும், பிரசங்கிக்கவும் தேவன் இன்னும் அனேகரை எழுப்புவாராக.  






Friday, April 28, 2017

தமிழின் முதல் உரைநடைத்தமிழ் நூல் - கிறிஸ்தவ நூலும் கூட

-->
நாம் பள்ளிக்கல்வி பயிலும் போது தமிழின் முதல் உரைநடைத்தமிழ், முதல் நாவல் (புதினம்) பிரதாப முதலியார் சரித்திரம் என்று படித்திருப்போம். அதற்கு மேல் அதைக் குறித்து பெரும்பாலும் பெரும்பாலானோர்க்கு (எனக்கும்தான்) எதுவும் தெரியாது. அதை எழுதின மாயூரம் வேதநாயகம் குறித்தாவது எதாவது தெரிந்திருக்குமா என்றால் அதுவும் எங்கேயோ கேட்ட குரல்தான். 

தமிழ் செம்மொழி அந்தஸ்தை இந்தியாவில் பெற்று சில வருடங்களே ஆகினும் உலக மொழிகளில் தொன்மையான நூல்களை கொண்ட ஆறே ஆறு நூல்களில் தமிழும் ஒன்று என்பது எவ்வளவு பெருமைக்குரியது. இந்தியாவில் தமிழும் சமஸ்கிருதமும் தொன்மையானவை. ஆனால் சமஸ்கிருதம் பேச்சுமொழி அல்ல. அந்து மந்திரம் ஓதுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுத்துமொழியாகவும் பேச்சுமொழியாகவும் இருந்து சாதனை புரிந்து வருகிறது. அதுவே சிலருக்கு வேதனையாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொல்தமிழானது இயற்றமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ் என மூன்று வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. உலகில் வேறெந்த மொழிகளிலும் இம்மாதிரியான பகுப்புகள் கிடையாது என மொழியியலார் கூறுகின்றனர். இவ்வகையான சிறப்புகள் தமிழுக்கு இருந்தாலும் பாமரனுக்கும் படிக்காதோருக்கும் புரியும் வண்ணம் தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இதற்கு காரணம் பேச்சுத்தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் காணப்பட்ட இடைவெளிதான். ஏன் நீங்களே ஏதாகிலும் பழைய செய்யுளை எடுத்து படித்தால் தலையும் புரியாமல் காலும் புரியாமல் திருதிருவென நாம் முழிப்பதே இதற்கு சாட்சி. சாம்பிளுக்கு ஒன்றை தருகிறேன்.

காக்கக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
நோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா. பாடியவர் - காளமேகப் புலவர்)

என்ன வாசித்துப் பார்த்தீர்களா? நாக்கு சுளுக்கிவிட்டதாநாம் பள்ளிக்கூடத்தில் படித்த இந்த பாடலின் பொருள் எளிமையானதுதான் (தெரிந்தால் அட இவ்வளவுதானா? இதற்கா இந்த பில்டப்பு என்று சொல்லிவிடுவீர்கள்). ஆனால் எல்லாருக்கும் பொருள் புரியாது கற்றறிந்தவர்களே தமிழை ரசிக்க ருசிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. எதுவரைக்கும்உரைநடைத்தமிழ் என்ற ஒன்று வரும் வரைக்கும்.  உரைநடைத்தமிழுக்கான தேவை உணரப்பட்டு வந்தாலும் அதைச் செய்ய எவரும் முன்வருகிலர். ஏனெனில் முன்னைய பாரம்பரியங்களிலிருந்து விடுபட்டு புதிய பாதை போட எவருக்கும் துணிவு இல்லை.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பார் அத்தகைய துணிவு பெற்று தமிழின் முதல் உரைநடை நூல், முதல் புதினம் ஆகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இந்நூல் பிரதாப முதலியார் என்பவர் தனது சுய சரிதையை சொல்லும் பாங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைக்குறித்து சொல்லுவதற்கு முன்பு நூலாசிரியர் வேதநாயக்ம் குறித்து கொஞ்சமாவது சொல்ல வில்லை எனில் நான் பெரும் பாவியாவேன். ஏனெனில் தமிழ்கூறும் நல்லுலகில் இவர் குறித்த தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதே! இவர் கிறிஸ்தவர் என்பதினாலோ என்னவோ!
மாயூரத்தில் நீதியரசராக பணியாற்றிய வேதநாயகம் திருச்சி குளத்தூரில் பிறந்தவர். இவரே இந்தியாவின் முதல் இந்திய மற்றும் தமிழ் நீதிபதி ஆவார் என்பது ஒரு ஆச்சரியமான செய்திதான். தமிழுக்காக தமிழ் கிறிஸ்தவர்களும் அயல்தேச மிசனெரி ஊழியர்களும் ஆற்றிய திருத்தொண்டை எவ்வளவுதான் மறைக்க பலர் முயன்றாலும் ஆயிரம் கைகளை வைத்தாலும் ஆதவனை மறைக்க முடியுமோ? என்பதுபோல நம்மவர்களின் படைப்புக்கள் அவர்களின் நல் முயற்சிகளுக்கு சான்றாக உள்ளன.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் கதைநாயகன் தனது சுய சரிதையை கூறுமாறு தன்னிலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் இவ்வகைப் படைப்புகள் இன்றளவும் மிகவும் குறைவே. ஆங்கிலமொழியில் தன்னிலை தன்மையிலான படைப்புகள் ஏராளம் உண்டு. தமிழில் மிகவும் குறைவாக இவ்வகையில் படைப்புகள் இருப்பதற்கு முழு நூலையும் தன்னிலையில் எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதன்று.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தலைப்பு நமக்கு வாசிக்கும் விருப்பத்தை அவ்வளவாக தூண்டாவிடினும் நூலின் உள்ளடக்கம் மிகவும் சுவையாகவும் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் உள்ளது. இந்த நூலை ஆசிரியர் எழுதக் காரணம் முதல் நாவலை எழுதி புகழ் பெற வேண்டும் என்பதல்ல... ஏனெனில் அவர் ஏற்கனவே மிகவும் புகழ்பெற்றவர், முதல் இந்திய நீதிபதி. தாம் ஏன் எழுதினோம் என்பதைப் பாடலாகவே எழுதி வைத்திருக்கிறார்.
"வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்'
பிரதாப முதலியார் சரித்திரம் நூல் வெறும் நாவல் மட்டுமல்ல, பல உலகச் சம்பவங்களையும், தத்துவங்களையும் அதைவிட முக்கியமாம சிறந்த நகைச்சுவைகளையும் உடையதாக உள்ளது. நகைச்சுவை என்பது இன்னாட்களில் திரைப்படங்களில் வருவது போல தனி டிராக்கில் செல்லாமல் கதியினூடேயே பின்னிப்பிணைந்து வருகிறது. உதாரணமாக ..,
“நாங்கள் வந்தபோது எங்கள் வீட்டிற்கு வீட்டிற்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்த போது இராமரும், ல்ஷ்மணனும் நகரத்தை விட்டு புறப்பட்டு காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்பொழுது தசரதல் கௌசல்யை முதலான சகல ஜனங்களும் அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதை கண்டவுடனே நான் கனகசபையைப் பார்த்து, “ அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாழவும் சம்பவித்திருக்கிறதே! இந்த அநியாயத்தை பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பது தர்மமா?என்று கேட்க அவன் “இந்த அக்கிரமத்தை தடுக்க முயற்சிக்காமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல என்றான். நானும் அவனும் மற்றப்பிள்ளைகளும் எங்கள் கைகளில் இருந்த சிலம்பக் கம்முகளுடன் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறிமிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்துவிட்டோம். அங்கே தன் பிள்ளைக்கு பட்டாபிசேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்த கைகேயியை வளைத்துக் கொண்டு எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் “ பரதனுக்கு பட்டம் வேண்டாம், வேண்டாம்என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்பொழுது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்: காட்டுக்குப் போகிற இராமரிடம் நகரத்துக்கு திரும்பும்படிச் சொன்னோம். அவர்  “பிதுர் வாக்கிய பரிபாலனம் (தந்தையின் வாக்கை நிறைவேற்ற) செய்வதற்காக நான் காட்டுக்கு போவது அகத்தியம்”  என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோம் என்று வழிமறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் “ சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்கு சம்மதித்து ஊருக்கு முரசறைவித்த பின், உமக்குக் கொடுத்த இராச்சியத்தை பரதனுக்கு கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்தால் அது அசத்தியமல்லவா? உமக்கு பட்டாபிஷேகம் ஆனால்தான் உம் தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.
“என்னே அரசர் இயற்கை யிருந்தவா
தன்னே ரிலாத தலைமகற்கு தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்
என்று கம்பரும் சொல்லியிருக்கிற படியால், ஊருக்குத் திரும்பும் என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்கும் பயந்து உடனே நகரத்துக்கு திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையை எடுத்தானென்ற அ அபவாதம் இல்லாமலும் இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச்சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாராம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.
ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்து கொண்டேன். கனகசபை “ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்?என்று கேட்டான். “நமக்கு சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்கு கோபமாயிருக்குமென்றூ பயந்து ஒளிந்து கொண்டேன் என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, “ பூர்வீக மனுஷர்கள் எல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்துபோனதற்கு காரணமென்ன?என்றூ கேட்டார். நான் அவ் அரைப் பார்த்து “ பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் அவர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து விட்டதுஎன்றேன்.

மேலே சொன்னவை பிரதாப முதலியார் சரித்திரம் நூலில் உள்ள  கடலளவு நகைச்சுவையில் ஒரு துளியே. மேலும் மூட நம்பிக்கைகளுக்கெதிராகவும் பல சிந்திக்கக் கூடிய கருத்துக்களையும் இந்நூலில் நாம் அடிக்கடி காணலாம்.

பிரதாப முதலியார் சரித்திரம் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதை நீங்கள் வாசித்தால்தான் முழுமையான சுவையை நீங்கள் பெற முடியும். வாசிக்க ஆரம்பித்தால், முடிப்பது கடினம். இந்நூலின் மின் பதிப்புக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். வாசித்து மகிழுங்கள்.
Download Link:


இன்னுமதிக தகவல்களுக்கு:

2. ஆண்களுக்குத் தலை பத்தா? வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1

3.மாயூரம் வேதநாயகர் நாவல் மட்டுமா எழுதினார்?

4.மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3

5. மாமிசம் உண்ணும் பிராமணர்கள்

6. மாயூரம் வேதநாயகரின் சமுதாயப்பணி

7. சாதனையாளர் மாயூரம் வேதநாயகர்

 8. மறக்கப்பட்டாரா மாயூரம் வேதநாயகம் பிள்ளை?

 

 


 

 

 


Wednesday, April 26, 2017

2. சின்னச் சின்ன ஆசைகளுடன் சின்னச் சின்ன இசை அனுபவங்கள்

ஒன்றாம் வகுப்பு முடித்தவுடனேயே என் பெற்றோருடன் தங்கிப் படிப்பதற்காக இராஜகோபாலபுரம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு வருடமும், அதைத் தொடர்ந்து எங்கள் படிப்பு கருதி, குடும்பமாக பாளை வந்து குடியேறிய பின் என் ஞாயிற்றுகிழமைகள் விசேசமான நாட்களாக மாறியது.

நான் R.C துவக்கப்பள்ளியில் படித்ததாலும், பாளை சவேரியார் பேராலயம் அருகே குடியிருந்ததாலும் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே ஆலயத்தில் ஒலிக்கும் பாடல்களுடனே விழித்தேன்.  அன்று கேட்ட பாடல்கள் இன்றும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் பின்வரும் பாடல்கள் அடிக்கடி ஒலித்தன, என்னை மிகவும் கவர்ந்தன.
1. நீயே எமது வழி
2. உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
3. அமைதியின் தூதனாய் என்னை நீர் மாற்றிடும்
4. உம் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பம் ஐயா
அந்நாட்களில் ஞாயிற்றுக் கிழமையானால் ஆலயம் செல்ல வேண்டும், ஓய்வு நாள் பாடசாலையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கிட்டத்தட்ட ஒரு வெறியாகவே எனக்கு இருந்தது. ஆண்டவர் மீது கொண்ட அன்பினால் நான் அப்படி இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும், அங்கு சொல்லித் தரப்படும் பாடல்கள் மற்றும் கதைகள் எனக்கு கேட்க கேட்க திகட்டாதவைகளாக இருந்தன என்பதுதான் உண்மை. காலமே முதலில்  R.C சபையில் இருக்கும் ஓய்வு நாள் பள்ளிக்கும், அதைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்துடன் இணைந்து மிலிட்டரிலைன்ஸ் CSI சபையில்  வைத்து நடைபெறும் ஓய்வு நாள் பள்ளிக்கும், அதன் பின் மாலை வேளைகளில் எங்கள் வீட்டிற்கருகில் பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் இரு ஓய்வு நாள் பள்ளிகளுக்கும் அடுத்தடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.  இயற்கையாகவே நான் முந்தைய கட்டுரையில் சொன்னது போல “உளத்தி”யாக இருந்த படியால் அங்கே கற்றுக் கொண்ட பாடல்கள் எல்லாம் என்க்கு தொடர்ந்து எதையாகிலும் பாடிக்கொண்டிருக்க உதவியாயிருந்தன. இதில் R.C ஓய்வு நாள் பள்ளிக்குச் செல்வதை சில வருடங்களில் நிறுத்தி விட்டேன். ஏனெனில் ஒரு முறை, நான் நான்காவது படிக்கும் போது ஒரு திருவிழா சமயத்தில் சவேரியாரைப் புகழ்ந்து ஒரு பாடலைக் கற்றுக் கொடுத்தார்கள். அதன் பின்பு ஏனோ அங்கு செல்ல எனக்கு விருப்பமில்லாமல் போயிற்று.

ஓய்வு நாள் பள்ளியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு பாடல்,
குட்டி நானையா கழுதைக் குட்டி நானையாஇயேசு ராஜா ஏறிச் செல்லும் குட்டி நானையா”
இப்பாடலைப் பாடிக் கொண்டே நடந்து செல்லும்போது, இயேசு என் மீது இருப்பதாகவும், நானோர் கழுதைக் குட்டி போலவும் நினைத்துக் கொண்டு இன்பமாக பாடிச் செல்வேன். நினைக்கவே இன்பமாக இருக்கும். இப்போதும்தான். ஞாயிற்றுக் கிழமைகள் ஆனால் ஒரேயடியாக சண்டேஸ்கூல் பையனாக நான் மாறினாலும், மற்ற நாள்களில் நான் நானாகவே, தவறு செய்கிற, இயேசப்பாவுக்கு பிரியமில்லாதவைகளைச் செய்து விட்டு ஐயையோ நான் செய்து விட்டேனே என்று பதறி, உதறித் தள்ளாமல் திரும்ப திரும்ப விழுகிற ஒரு வாழ்வையே வாழ்ந்து வந்தேன். ஆனாலும் ஆண்டவர் தம் அன்பினால் என்னை தூர போக விடவில்லை, திரும்ப திரும்ப இழுத்து வந்தார்.

மிலிட்டரிலைன்ஸ் சபையில் சிறுவர்கள்  ஆறாவது, ஏழாவது வகுப்பு படிக்கும்போது பாடகர் குழுவில் சேர்ந்து விடுவர். எனக்கும் சேர ஆசை. ஆனால் பாடகர் குழு தலைவர் தாமஸ் சார் அவர்களை நினைத்து பயம். ஏனெனில் அவர் சனிக்கிழமை பாட்டு பயிற்சியில் கையில் பிரம்பு வைத்திருப்பார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். மிகவும் கண்டிப்பானவர். ஆகவே பாடகர் குழுவில் சேருவதை சற்று ஒத்திப் போட்டேன். ஆனால் என் வயதுடையவர்கள் அனைவரும் பாடகர் குழுவில் சேர்ந்த பின், நானும் சேராமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்து சேர்ந்து விட்டேன். தாமஸ் சார் இனிமேல் பாடகர் குழுவிற்கு வரமாட்டார் என்றும், புதிய choir master வந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் ஒரு காரணம். புதிதாக பாலசிங் சார் அவர்கள், நல்ல குரல் வளம் உடையவர், Casio Keyboard வாசிக்க funk முடியுடன் ஜோசுவா அண்ணன். ஒவ்வொரு வாரமும் புதிய் புதிய பாடல்களை பாமாலைப் புத்தகத்தில் இருந்தும், கீர்த்தனைகளில் இருந்தும் கற்றுக் கொண்டது பேரானந்தனுபவமாக இருந்தது. அதுவும் நான் பாடகர் குழுவில் சேர்ந்த சில நாட்களில் Choir Sunday க்காக சிறப்புப் பாடல்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது.
கூடு தேடும் பறவைகள் கூடுகின்றன
இயேசு ராஜன் புகழையே பாடுகின்றன
பிதா மகனின் சபையில் இன்று ஆடுகின்றன

வான் வெளியிலே தேர் வருகுது
இயேசு ராஜன் தேர் வருகுது


இந்தப் பாடலின் இராகமும், பிண்ணனி இசையும் என்னவோ செய்தது. ஞாயிற்றுக் கிழமை பாடுவதற்காகவே சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.  பாடகர் குழுவில் சேர்ந்த முதல் வருடம் (1992 அல்லது 1993ல்) பாடகர் குழு ஆராதனையில் பாடியப் பாடல் இது என நினைக்கிறேன்.  பாடகர் குழுவில் கற்றுக் கொண்ட ஒவ்வொரு பாடல்களும் மெய்மறக்கச் செய்தன. அவை ஜோசுவா அண்ணனின் இசை சேர்ந்ததும் உயிர்பெற்று பேசின.
- இன்னும் பேசுவோம்








முந்தைய கட்டுரை
1. இசையுடன் நான் - பயணக் கட்டுரைத் தொடர்

என் இசைத் தொகுப்பு பற்றிய அறிமுகக் கட்டுரையை இதுவரை படிக்கவில்லையெனில், ப்ளீஸ் படித்துவிடுங்கள் :)

இயேசுவுக்காக...

4. தமிழ் டேவிட் - பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற அனுபவம்



நான் செய்து வந்த ஊழியத்தின் முடிவுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. நான் பிரசங்கம் பண்ணும்போது திரளான ஜனங்கள் கூடினர். என் வார்த்தைகள் அவர்களின் மூளையைத் தொட்டது, அவர்களின் இருதயத்தைத் தொடவில்லை.  என் பிரசங்கங்கள் ஒரு ஆவிக்குரிய சுற்றுலா போல அனேகரால் ரசித்து கேட்கப்பட்டது.  தற்காலிகமான மாற்றங்களே உண்டாயின. உண்மை என்னவெனில், ஆத்துமாக்கள் அந்த இடத்திலேயே இரட்சிக்கப்படுவதைப் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லாதிருந்தது. எனது நோக்கமெல்லாம், பிரசங்கித்து விட்டு அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. இன்னுமதிக ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்ற தாகம் எனக்குள் எழுவதை நான் அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் எதையும் தேடாமல் இருந்தேன். எனக்கு உள்ள குறை  என்ன என்பதை நான் அறியாதிருந்தேன்.  நான் சுயாதீனமான ஊழியம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே நான் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு, பணம் சம்பாதித்து, பிரசங்க ஊழியம் செய்தேன். அதன் பின் புத்தகம் பைண்டிங்க் செய்யும் வேலையை முயற்சித்துப் பார்த்தேன்.  நான் பெரிய பெரிய காரியங்களைச் செய்வேன் என என்னைப் பற்றி நினைத்துக் கொண்டேன்.  இப்படியாக வேலை செய்து கொண்டே நான் சில காலம் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் சில ஆத்துமாக்களே ஆதாயம் செய்யப்பட்டது. நான் அடிக்கடி மன திருப்தியின்றி சோர்வடைந்தேன்.

இரட்சண்ய சேனையைச் சேர்ந்த கேப்டன் ஒருவர் என்னிடம் நான் தேவனுக்கு என்னை அர்ப்பணிக்க வேண்டும் என அன்புடன் ஒரு நாள் கேட்டுக் கொண்டார்.  நான் அதை ஏற்கனவே செய்து விட்டேன் என பதில் சொன்னேன். இல்லை, நீ தவறாக் புரிந்து கொண்டிருக்கிறாய் என அவர் சொன்னார்.  நீ பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது.  நீ முற்றிலும் கர்த்தருடையவனானால், அவருடைய ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு கர்த்தரால் மிகவும் ஆச்சரியமான விதத்தில் பயன்படுத்தப்படுவாய் என்றார். அவருடைய வார்த்தைகள் என் மனதைத் தொட்டன. அவர் சொல்வது சரி என்பதை நான் அறிந்திருந்தேன்.  முற்றிலும் என்னை ஒப்புக்கொடுப்பது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.  அழிந்து போகிற ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு தேவன் என்னிடம் எதிர்பார்க்கிற எதையும் செய்வதற்கு நான் தயாராக இருந்தேன். என் விருப்பங்களை செயல்படுத்த, அவருடன் நான் கொழும்பில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு இரவு  11 மணிக்குச் சென்றேன். அங்கே நான் ஆண்டவருடன் தனித்திருக்கும்படி என்னை விட்டுவிட்டு அவர் புறப்பட்டுவிட்டார்.

அர்ப்பணித்தல் என்ற பதத்தின் பொருளை நான் அறியாதிருந்தேன்.

நான் முற்றிலும் தேவனுக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். நான் முழுவதுமாக தேவனிடம் சரணடைந்தேன், எதையும் விட்டுவைக்க வில்லை.

இதோ, ஆண்டவரே, என் சரீரம், ஆத்துமா, உடைமைகள் மற்றும் என் விருப்பங்கள் அனைத்தையும் நான் உம் பாதத்தில் உம் கன மகிமைக்காக படைக்கிறேன். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு, உம்முடைய நாமம் மகிமையடைய நான் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன், எந்த மாற்றத்திற்கும் தயாராக இருக்கிறேன், பூமியின் கடையாந்தரமான பகுதிகளுக்கும் செல்ல நான் ஆயத்தம், என் உறவுகளை நண்பர்களை மற்றூம் என் மனைவியைக் கூட  மறந்து அவர்களைப் பிரியவும் நான் ஆயத்தம். இதோ நான் என்னைப் படைக்கிறேன், என்னை எடுத்துக் கொண்டு நீர் விரும்புகிறபடி என்னை மாற்றும். அந்த இரவு நான் தேவனிடம் ஏறெடுத்த ஜெபத்தின்  சாராம்சம் இதுதான். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நான் தேவனுக்கு முன்பாக சகலத்தையும் முன்வைத்து ஒரு முடிவுக்கு வந்தேன். அதன் பின் என்னால் ஜெபிக்க முடியவில்லை. அவருக்கு படைப்பதற்கென்றோ அல்லது விட்டுவிடவோ என்னிடம் எதுவும் மிச்சம் இருக்கவில்லை.

நான் முற்றிலும் வெறுமையாக்கப்பட்டேன். கடைசியாக நான் சொன்னது, “ஆண்டவரே, நான் உம்முடையவன், நீர் என்னுடையவர்.”  ஏதாகிலும் உடனடி மாற்றம் நடக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை.  என் தலைக்கு மேல் அக்கினி ஜூவாலைகள் எதையும் நான் காணவில்லை.  நான் முற்றிலும் நம்பி உணர்ந்திருந்த ஒரு உண்மை என்னவெனில் - நான் முழுவதுமாக கர்த்தருடையவன் – நான் கர்த்தரை முற்றிலும் எனக்கு சொந்தமானவராக எடுத்துக் கொண்டேன்.  நான் முழங்காலில் இருந்து எழுந்து, கிறிதுவுக்காக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட தேவைப்பட்டால்  தலைகீழாக  நடந்து செல்லவும் ஆயத்தமாக இருந்தேன். இதை முற்றிலும் உணர்ந்தவனாக, அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்குச் சென்றேன். என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பி, நடந்த அனைத்தையும் நான் அவளிடம் சொன்னேன். அவள் ஆச்சரியப்பட்டாள். நான் ஏற்கனவே தேவனுக்கு என்னை அர்ப்பணித்தவன் தானே என அவள் நினைத்தாள். அந்த இரவு நான் அர்ப்பணித்திருந்ததைப் பற்றி அவள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. 

ஆண்டவருக்காக என் வேலை, குடும்பம், மனைவி, வீடு மற்றும் அனைத்தையும் இழக்க ஆயத்தம் என்பதை அவளிடன் நான் சொன்னேன். இது அவளை இன்னும் அதிக ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அவள் எதுவும் சொல்ல வில்லை.

அடுத்த நாள் ஞாயிற்ற்குக்கிழமையாதலால், நான் சி.எம்.எஸ் சபையில் கலந்து கொண்டேன்.  ஆராதனை முடிந்த பின்,  நான் கேட்ட பிரசங்கம் பற்றி பிரசங்கித்தவரிடம் போய் பேசவேண்டும் என்ற ஆண்டவரின் உணர்த்துதலைப் பெற்றேன்.  நான் மன உண்மையுடன் ஆவியானவரின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தேன்.  நான் கீழ்ப்படிந்த உடனேயே அனைத்தையும் மறந்தேன், நான் என்ன சொன்னேன் என்பதையோ அல்லது எங்கிருக்கிறேன் என்பதையோ  மறந்தேன்.  நான்  அற்புதமான ஒரு அனுபவத்தை, வல்லமை என்னை நிரப்பின அனுபவத்தைப் பெற்றேன். அதன் பின்பு நான் வீட்டிற்குச் சென்று, ஒரு கூட்டத்தை நடத்தினேன். ஆனால், தேவனுக்கு மகிமையுண்டாவதாக, என்ன ஒரு வித்தியாசமான முடிவுகள், ஆத்துமாக்கள் மனமாற்றம் பெற்றார்கள். பாவிகள் சத்தமிட்டு இரக்கம் பெற கதறி அழுதார்கள்.  நான் மிகவும் மகிழ்ந்து, சந்தோசத்தில் சத்தமிட்டு அழுதேன். நான் வெளியே சென்ற சற்று நேரத்தில், ஆவியானவர் என்னை சி.எம்.எஸ் பள்ளிகூடம் ஒன்றிற்குச் செல்ல வழிநடத்தினார். கர்த்தர் தான் என்னை நடத்தினார் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

நான் பேச ஆரம்பித்த அந்த நேரத்திலேயே அனேகர் கர்த்தருக்கு தங்கள் இருதயங்களை ஒப்புக் கொடுத்தார்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம்.
பின்னர் சில ஆத்துமாக்கள் மரத்தினடியில் இருக்கையில் மனமாற்றம் அடைந்தார்கள். சிலர் சாலையில் அனைவரும் காண முழங்கால் படியிட்டு, ஜெபித்து மனமாற்றம் பெற்றனர்.  கர்த்தர் எனக்காக பெரிய காரியங்களைச் செய்தார். உதவாக்கரையாக இருந்த நான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்ற பின் பயன்படுத்தப்பட்டேன்.  உன்னதத்திலிருந்து வந்த வல்லமையே அந்த வேலைக்காக என்னை பலப்படுத்தினது. அந்த நாட்களில் இருந்து கர்த்தருக்காக ஊழியம் செய்வது எவ்வளவு மகிமையான பாக்கியம் என்பதை அனுபவித்து வருகிறேன். முன்பு, கொஞ்ச நேரம் பேசினாலே நான் சோர்வடைந்து விடுவேன். இப்போது எனக்குள் இருக்கும் வல்லமை  என்னைப் பேச வைக்கிறது, தேவைப்பட்டால் ஒரே நாளில் எட்டு அல்லது ஒன்பது கூட்டங்களில் கலந்து கொள்ளவும், தேவையான அளவு பேசவும்  பெலனை தருகிறது.

முன்பு நான் மிகக் கவனமாக பிரசங்கங்களை ஆயத்தம் செய்வேன்.  இப்போது ஆண்டவர் என் வாயில் அவர் வார்த்தைகளை வைக்கிறார்.  முன்பு என் வார்த்தைகள் கேட்பவர்களுக்கு சலிப்பை உண்டாக்கியது. இப்போது அவர்கள் மணிக்கணக்கில் நான் பேசுவதைக் கேட்கிறார்கள். நான் சந்திக்கிற ஒவ்வொரு பாவியையும் முத்தம் செய்து அவருடன் கூட  அழ முடியும் என்பது போல நான் உணர்ந்தேன்.

எல்லா புகழும், கனமும், மற்றும் மகிமையும் உன்னதத்தில் இருந்து வந்த வல்லமைக்கே.

கிறிஸ்தவனே – கர்த்தருடைய கரத்தில் நீ பயனுள்ள பாத்திரமாக இருக்க விரும்புகிறாயா? நீங்கள் ஒரு பயனுள்ள தாயாராக, சகோதரனாக, எஜமான் அல்லது வேலைக்காரராக, ஊழியராக, அல்லது உபதேசியாக இருக்க விரும்பினால், இப்போது இந்த வல்லமையை உரிமை பாராட்டி பெற்றுக் கொள்ளுங்கள். ஆனா நிபந்தனைகளை நிறைவேற்றுங்கள், செலுத்த வேண்டிய கிரயத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்ய வேண்டியது மிக முக்கியம்.

இந்த வல்லமையை உரிமை பாராட்டவோ, பெற்றுக்கொள்ளவோ நீங்கள் விருப்பம் இல்லாதிருந்தால், நீங்கள் உங்கள் வேதாகமத்தை ஓரமாக தூர வைத்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம். நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால், கடவுள் அவர் செய்ய வேண்டியதைச் செய்ய தயாராக இருக்கிறார்.  ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. பிசாசு மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்.  உங்களால் சும்மா இருக்க முடியுமா, எதுவும் செய்யாமல் இருப்பீர்களா? அன்பான கிறிஸ்தவனே, நீ என்ன செய்யப் போகிறாய்? நான் ஒன்று சொல்லட்டுமா?  முழுவதுமாக தேவனிடம் ஒப்புக்கொடு – இயேசுவுக்காக எதையும் செய்வதற்கும்,  எங்கும் செல்வதற்கும் விருப்பமுள்ளவராகும்படி அர்ப்பணியுங்கள். இந்த வல்லமையை விசுவாசத்தினால் உன்னதத்திலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். கலாத்தியர் 3:14. பின்பு அனைவரும் அறிய அதை சாட்சி பகருங்கள்.

பின்பு, அதன் பின்பு மாத்திரமே, பலவீனமான, உபயோகமற்ற மனிதராக இருக்கும் நீங்கள் பெலப்படுத்தப்பட்டு, உபயோகமானதும், மதிப்புள்ளதுமானவராக உங்களுக்குள்ளும், உங்கள் மூலமாகவும் கிரியை செய்கிற வல்லமையின் மூலமாக மாற்றப்படுவீர்கள். அல்லேலூயா.

நான் வெறுமையிலும் வெறுமையானவன். ஏசாயா 41:24. அவரே எல்லாமுமாக இருக்கிறார்.




முந்தய கட்டுரைகள்

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் – 1. தமிழ் டேவிட் - ஒரு அறிமுகம்

நாம் மறந்த சிறந்த தேவ மனிதர்கள் - 2 தமிழ் டேவிட் (இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கதை)

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் தொடர் கட்டுரை 3 - தமிழ் டேவிட் பரிசுத்தமாக்கப்பட்டது எப்படி?