Tuesday, February 26, 2019

இயேசு ஏன் வந்தார்?


கிறிஸ்து வருகைப் பதிகம்

நல்லவர்க்கும் தீயவர்க்கும் நடுவர் வந்தார்
நாட்டவர்க்கும் காட்டவர்க்கும் நட்பாய் வந்தார்
பல்லவர்க்கும் பாவிகட்கும் பரிவாய் வந்தார்
பத்தருக்கும் சுத்தருக்கும் பரிந்து வந்தார்
புல்லருக்கும் பொடியருக்கும் பொறுக்க வந்தார்
புரவலர்க்கும் இரவலர்க்கும் பொதுவார் வந்தார்
எல்லவர்க்கும் ஏழையர்க்கும் இரங்க வந்தார்
இம்மானு வேலரசே! வந்தார் தாமே.

- வேதநாயகம் சாஸ்திரியாரின் செபமாலை எனும் நூலில் இருந்து

Saturday, December 29, 2018

திருமணம் உனக்கானது அல்ல - Marriage is not for you

எனக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் - திருமணம் எனக்காக அல்ல.
இப்பொழுது எதையாவது மனதில் யோசித்து தவறாகப் புரிந்து கொள்வதற்கு முன் தொடர்ந்து வாசியுங்கள்.

நானும் என் மனைவியும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தோம். ஆயினும் திருமணம் என்று வந்த போது, சில பயங்கள் மற்றும் கவலைகளை என்னால் தவிர்க்க முடியவில்லை. எங்கள் திருமண நாள் நெருங்க நெருங்க என்னுள் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது. நான் ஆயத்தமா? நான் சரியான முடிவை எடுத்த்திருக்கிறேனா? இவள் நான் மணம் புரிய சரியான நபரா? இவள் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருபாளா? என எனக்குள் பல கேள்விகள்.

இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில், என் எண்ணங்கள் மற்றும் கவலைகளை என் தந்தையுடன் பகிர்ந்து கொண்டேன். கடிகாரம் மிகவும் மெதுவாக சுற்றுவது போல, அல்லது காற்று நின்று போனது போலவும் நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும் நம்மை நோக்கி வருவது போலவும் உள்ள தருணங்களை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் பெற்றிருக்கிறோம். நாம் அப்படிப்பட்ட நேரங்களை ஒருபோதும் மறக்க முடியாததாகக் குறித்துக் கொள்வோம்.

என் தந்தை என் கேள்விகள் மற்றும் கவலைகளுக்குப் பதில் கொடுத்த நேரம் அப்படிப்பட்ட ஒரு நேரமாக எனக்கு இருந்தது. அவர் சிரித்துக் கொண்டே, 'மகனே, நீ மிகவும் சுயநலமுள்ளவனாக இருக்கிறாய். ஆகவே நான் இதை மிகவும் எளிமையானதாக இதை மாற்றுகிறேன்: திருமணம் உனக்கானது அல்ல. உன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக நீ திருமணம் செய்து கொள்ளவில்லை, மாறாக வேறு ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக திருமணம் செய்கிறாய். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், உன் திருமணம் உனக்காக மட்டும் அல்ல, நீ ஒரு குடும்பத்திற்காக திருமணம் செய்கிறாய். திருமணத்தினால் உருவாகும் புது உறவுகளுக்காக மட்டுமல்ல, உன் எதிர்கால குழந்தைகளுக்காக நீ திருமணம் செய்கிறாய். அவர்களை வளர்க்க உனக்கு உதவி செய்ய எவர் விரும்புவார்? அவர்களை சரியான விதத்தில் உருவாக்க எவர் விரும்புவார்? திருமணம் உனக்காக அல்ல. அது உன்னைப் பற்றியது அல்ல. திருமணம் என்பது நீ திருமணம் செய்யப் போகிற நபரைப் பற்றியது."

அந்த தருணத்தில் தான் எனக்கான சரியான வாழ்க்கைத் துணையாக நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண் அமைய முடியும் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அனுதினமும் அவள் முகத்தில் புன்னகையைக் காண, நன்றாக சிரித்து மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.  நான்      அவளுடைய ஒரு குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், அவள்; என் குடும்பத்தில் ஒரு அங்கமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

    என் தகப்பனின் ஆலோசனையானது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் அதே வேளையில் வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. இன்று பரவலாக காணப்படும் சிந்தனையான, 'ஒன்று உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வில்லை எனில், அதை விட்டுவிட்டு புதிய ஒன்றை எடுத்துக் கொள்" என்பதற்கு       எதிரானதாக இருந்தது.

உண்மையான திருமண வாழ்வு என்பது ஒருபோதும் உன்னைப் பற்றியது அல்ல. அது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது -   அவர்களின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கனவுகள் ஆகும். 'எனக்கு என்ன கிடைக்கும்?" என சுயநலம் எதிர்பார்க்கிறது.    அதேவேளையில், அன்போ, 'நான் என்ன கொடுக்க முடியும்?" என கேட்கிறது.
சில காலத்திற்கு முன்பு, சுயநலமின்றி நேசித்தல் என்றால் என்ன என்பதை என் மனைவி எனக்குக் காண்பித்தாள். அனேக மாதங்களாக, என் இருதயமானது பயம் மற்றும் குழப்பம் ஆகியவை கலந்து கடினமாகிக் கொண்டிருந்தது. பின்னர் தாங்கமுடியாமல் உணர்ச்சிப் பிழம்பாக வெளிவந்து இருவரும் தாங்கமுடியாததாக இருந்தது. நான் அவளைப் பற்றிய கரிசனை அற்றவனாகவும், சுயநலமுள்ளவனாகவும் இருந்தேன்.

ஆனால், என் சுயநல நோக்கின்படி அவள் இல்லை, மாறாக என் மனைவி மிகவும் ஆச்சரியமானதொன்றைச் செய்தாள் - அவள் அன்பு மழை பொழிந்தாள். நான் அவளுக்கு உண்டாக்கிய அனைத்து வேதனை மற்றும் கவலைகளைப் புறம்பே தள்ளி வைத்து விட்டு, அவர் நேசத்துடன் என்னை எடுத்து, என் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் சுகத்தைத் தந்தாள்.

நான் என் தகப்பனின் ஆலோசனையை மறந்து  போனதை உணர்ந்தேன். என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னை நேசிப்பதே திருமணம் என இருந்த நேரத்தில், என் பக்கத்தில் திருமணம் என்பது முழுவதும் என்னைச் சுற்றியதும், பற்றியதுமாகவே இருந்தது. இந்த பயங்கரமான உணர்வு என்னுள் கண்ணீரை வரவழைத்தது. நான் என்னால் இயன்றதைச் செய்வேன் என என் மனைவியிடம் உறுதி கூறினேன்.

இந்தக் கட்டுரையை வாசிக்கிற அனைவருக்கும் - நீங்கள் திருமணமானவரோ, திருமணமாகப் போகிறவரோ, அல்லது திருமணமே செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டவரோ- நீங்கள் யாராக இருந்தாலும், திருமணம் என்பது உங்களுக்கானது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான எந்த அன்பின் உறவும் உனக்கானது அல்ல. அன்பு என்பது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது ஆகும்.

இதில் உள்ள முரண்பாடான ஒரு விசயம் என்னவெனில், நீங்கள் எவ்வளவு அதிகமாக அந்த நபரை உண்மையாக நேசிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அன்பை நீங்கள்; பெறுவீர்கள். நீங்கள் நேசிக்கிற அந்த நபரிடம் இருந்து மட்டுமல்ல, மாறாக அவ்ர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஆயிரக்கணக்கானவர்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களுடைய அன்பு சுயநலமுள்ளதாக இருந்திருந்தால் இவைகளை எல்லாம் நீங்கள் பெற மாட்டீர்கள்.

மெய்யாகவே, அன்பு மற்றும் திருமணம் என்பது உனக்கானது அல்ல, அது மற்றவர்களுக்கானதாகும்.

- சேத் ஆடம் ஸ்மித்

(இந்த ‘‘Marriage isn’t for you” கட்டுரை உலகம் முழுவதிலும் மூன்று கோடிக்கும் அதிகமானவர்களால் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கப் பட்ட கட்டுரை  ஆகும். தமிழில் மொழிபெயர்த்து  வெளியிட அனுமதி கொடுத்த ஆசிரியருக்கு நன்றி. இக்கட்டுரை  “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது)

Friday, December 28, 2018

திருமணத்திற்கு முன்... (A Christian premarital counseling article)


திருமணம் குறித்து அனேக தவறான புரிதல்கள் இன்று மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில்; பரவி வருகிறது. திருமணம் முடிந்தால்....அவ்வளவுதான் என்ற கருத்தை உருவாக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் முறைப்படுத்தப்படாத குப்பைத் தகவல்களை எங்கும்        காணலாம். இதினிமித்தம் அனேக வாலிபர்கள் திருமண உறவில் நுழையவே பயப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட திருமணம் பற்றிய புரிதல் குறைவினால், சரியான தெளிவு இல்லை. ஆகவே திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு ஆலோசனை இருந்தால், சரியான துணையைத் தேர்ந்தெடுக்கவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் அது மிகவும் பிரயோஜனமாயிருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

திருமணம் என்பது என்ன?
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆணும் பெண்ணும் முறையான குடும்ப வாழ்வில் நுழைய வழிகோலும் வாசலாக திருமணம் இருக்கிறது. திருமணம் மூலமாக ஒரு ஆணும், பெண்ணும் வெளிப்படையாக, சட்டப்பூர்வமான மற்றும் நிரந்தரமான திருமண உறவில் இணைகின்றனர். இந்த திருமண உறவு அவ்விருவரையும் மரணம் மட்டும் ஒன்றாக வாழ்வதற்கு ஏதுவாக இணைக்கிறது. திருமணம் என்பது குழந்தைகளைப் பெற்று அவர்களை ஒன்றாக வளர்ப்பதன் மூலமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நிரந்தரமான அர்ப்பணிப்புடன் இணைவதே திருமணம் என ஒருவர் வரையறுக்கிறார்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
ஒருவர் திருமணம் செய்வதற்கான அவசியத்தை பரிசுத்த வேதாகமத்தில் மற்றும் கிறிஸ்தவத்தின் பார்வையில் நாம் சில முக்கியமான காரியங்களைப் பார்க்கலாம்.
1. குடும்பம் வாழையடி வாழையாக வளர்ந்துப் பெருக முறையான திருமண உறவு அவசியம். பலுகிப் பெருகவேண்டும் என்பது இறைவனின் கட்டளை ஆகும் (ஆதி.1:28).
2. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது என்றும் விவாக மஞ்சம் அசுசிப் படாததாகவும் இருக்க வேண்டும் என்று கூறும் பரிசுத்த வேதம், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் என வேதம் தெளிவாகக் கூறுகிறது (எபிரேயர் 13:4, 1 கொரி.7:4)
3. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருடைய பரஸ்பர தேவைகளை நிறைவு செய்து நிறைவான வாழ்வு வாழ திருமணம் தேவை. திருமண உறவில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாக இருக்கிற படியால், இருவரும் சேர்ந்து வாழ, இணைந்து அனேக காரியங்களைச் செய்ய ஏதுவுண்டாகிறது.
4. கிறிஸ்துவானவர் தம் சபையுடன் கொண்டுள்ள உறவு திருமண உறவுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறதை நாம் வேதத்தில் காணலாம் (எபேசியர் 5: 22-33)
5. ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களை கர்த்தருக்குள் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ள திருமண வாழ்வு உதவுகிறது (1 கொரி.7:2)

சரியான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதற்கு முன்...
1. சரியான வாழ்க்கத் துணை வேண்டும் என்று எதிர்பார்க்கிற அல்லது ஜெபிக்கிற அனேகர் சரியான வாழ்க்கைத் துணை யாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது முயற்சி இன்றி உள்ளனர். தேவனுக்குக் கீழ்ப்படியாமலும், ஜெப வாழ்வு இன்றியும், தேவனுடனான ஆவிக்குரிய வாழ்வில் தொடர்பின்றி காணப்படுகின்றனர்.
2. அனேகர் தங்களுடைய சொந்த அளவுகோல்களின் படி, சரீர தோற்றம் மற்றும் நம்பிக்கையின் படியான ஒருவரே சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் என்று எண்ணி   தவறான நபரை எதிர்பார்க்கின்றனர்.


சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது எப்படி?
1. தெரிந்தெடு - ஒரு கிறிஸ்தவ ஆண் அல்லது பெண் கிறிஸ்துவையும் வேதாகமத்தையும் நம்புகிற விசுவாச வாழ்வில் உள்ள ஒருவரையே திருமணம் செய்ய வேண்டும்.              அவிசுவாசியான ஒருவரை திருமணம் செய்யக் கூடாது என வேதம் தெளிவாக எச்சரிக்கிறது (2 கொரி.6: 14-15).
2. தேவனை நம்பு - தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் தர விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு உண்மையாக இருப்பதும், அவரை முழுமையாகச் சார்ந்திருப்பதும் அவசியம் ஆகும். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கிறபடியால், நமக்கு கடவுளின் உதவி தேவை. அவருடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ள அவர் நம் மனதில் பேசுவதன் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மூலமாகவும் நமக்குதவுகிறார்.
3. குணநலன் நாடு - மனத் தாழ்மை, எளிமை, கிறிஸ்துவுக்கு அர்ப்பணம், சரியான முன்னுரிமைகள் மற்றும் நம்பிக்கைகள், அன்பான நடக்கை, சுய கட்டுப்பாடு, மற்றவர்களுடன் பொறுப்பாக பழகுதல் மற்றும் கிறிஸ்தவ சபையுடனான தொடர்பு ஆகியவைகளை கவனிக்க வேண்டும்.
4. ஞானம் தேவை - கர்த்தர் அருளுகிற ஞானத்தில் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அவசர முடிவுகள் அவசியமா என்று ஆராய்ந்து தேவ துணை நாட வேண்டும்.

அன்பான தேவனுடைய பிள்ளைகளே ஒருவர் திருமணம் செய்வதற்கு முன், சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேதாகம ஒளியில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்களை மட்டுமே இங்கு கொடுத்திருக்கிறேன். இவை சரியாகப் பின்பற்றப் பட்டால் சரியான வாழ்க்கைத் துணை கண்டடைவதில் தேவையற்ற சிக்கல்களை எளிதாக தவிர்க்கலாம்.
 - அற்புதராஜ்
 +91 9538328573
(இக்கட்டுரை என் இறையியல் கல்வியின் ஒரு பகுதியாக முதலில் தயாரிக்கப்பட்டு, பின் “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது).

Wednesday, October 31, 2018

சகோ. சாம் ஜெபத்துரை - மறைவும் மறவா நினைவுகளும்

நாம் வாழ்கிற காலத்தில் வாழ்ந்த தேவ மனிதர்களில் மறைந்த சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தில் இருந்து பல நல்ல பிரசங்கிகள் எழும்பியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவராலும் கர்த்தருக்காக எழுதுவதில் பிரகாசிக்க முடியவில்லை.

கர்த்தரின் எழுத்தாணி என அவரைப் பற்றி சொல்வது  மிகைப்படுத்தப்பட்ட ஒரு வாசகம் என்றாலும், கர்த்தருக்காக எழுதுவதில் ஒய்வறியாதவர். உருப்படியாக, பக்திவிருத்திக்கேதுவாக தொடர்ந்து எழுதுவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்பது உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ந்தேர்ச்சியான உழைப்பும் வாசிப்பும் இல்லையேல் தொடர்ந்து எழுதுவது மிகவும் சிரமம். சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் அனேக நற்காரியங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு ஒரு அரும்பெரும் பங்காற்றியிருக்கிறார் என்பது கொஞ்சமும் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை.

ஒரு நற்செய்தியாளராக தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து அனேக வாலிபர்களை கிறிஸ்துவுக்காக எழுப்பி இருக்கிறார். சுவிசேஷகர்களாக கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்பும் எவரும், இவரின் ஜெபம் மற்றும் வைராக்கியம் ஆகியவற்றை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மலையில் தினந்தோறும் சென்று இராமுழுதும் ஜெபிக்கிற வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். நண்பர்களே! ஜெபிக்கிறவர்கள் என்றைக்குமே தேவனால் பயன்படுத்தப்படாமல் போவதில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

இவர் தன்னை ஒரு எழுத்தாளராகவோ, நற்செய்தியாளராகவோ சுருக்கிக் கொள்ளாமல், எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை தயங்காது செய்தார். ஒரு காலத்தில் இவரின் பாடல் கேசட்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. நல்ல மலையாளப் பாடல்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததுடன், இவரே நல்ல பாடல்களை எழுதவும் செய்தார். வேளை வந்த போது, தன் பயணங்களைக் குறைத்துக் கொண்டு சபை ஊழியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

பொதுவாக ஒருவரின் மறைவின் போது, அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையே சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். என்னளவில் சில் விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது உண்மைதான். மணிபர்சில் அபிசேகம் போன்ற சில காரியங்களைச் சொல்வதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. இவர் தவறே செய்யாதவர் என்றும் நான் சொல்ல வில்லை. ஆனால் தவறே செய்யாதவர் எவர்தான் உண்டு. அவைகளின் மத்தியிலும் இவர்  மீண்டும் எழுந்து தேவனுக்காக இறுதி வரை ஓடியமைக்காக தேவனை துதிக்கிறேன். இவர் உண்டாக்கிய நல்ல விளைவுகள் மற்றும் எண்ண மாற்றங்களுக்காக தேவனை நன்றியோடு நினைக்கிறேன். கடைசியாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று ஆராதனை துவங்குவதற்கு சற்று முன்பு இவருடைய மனைவி மரித்து விட்டார்கள். அன்று ஞாயிறு ஆராதனைக்கு எந்த பங்கமும் வரக் கூடாதென, அவர் ஆராதனைக்கு முன்னரோ அல்லது ஆராதனை வேளையிலோ சொல்லாமல், அன்றும் வழக்கம் போல கர்த்தருடைய செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்து ஆராதனை முடிந்த பின் அனைவரையும் அமரச் செய்து, கண்ணீருடன் தன் மனைவியின் மறைவைச் சொல்லி இருக்கிறார். இது அவருடைய சபையில் ஊழியம் செய்கிற என் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி. அவர் மறைந்தாலும், அவர் ஆரம்பித்த ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை மற்றும் ஜெபமாக இருக்கும். அதுதான் நமது விருப்பமும் கூட!
தேவனுடைய சமூக இளைப்பாறுதலில் பிரவேசித்திருக்கும் அருமை சகோதரன் சாம் ஜெபத்துரை அவர்களுக்காக தேவனை துதிக்கிறேன்!

Arputharaj
Bangalore
+91 9538328573

Saturday, September 1, 2018

ஞானஸ்நானம் - அறிய,புரிய,தெரிய வேண்டிய 10 காரியங்கள்

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும். என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின் கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல் வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

ஞானஸ்நானம் என்றால் என்ன?
ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும் தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம் பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம் பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல் செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to explain,I think.

இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல் ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும் உயர்வானது.
(source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0 )
(இன்னுமதிகமாக அறிந்து கொள்ள:http://en.wikipedia.org/wiki/Baptism

ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 காரியங்கள் எவை?

ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?

1.தேவ நீதியை நிறைவேற்ற

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)

2.இரட்சிக்கப்ப
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)

3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)

4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)

5.பரலோகத்திற்குப் போக
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)

6.பாவ மன்னிப்பு பெற
நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)

7.கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்பட
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)

8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)

9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)

10. நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை
ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)

மேலே கண்ட பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பரமேறிய பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.

நீங்கள் மறுபடி பிறந்தவரா? ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவரா?


Also posted in:http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0