Friday, October 13, 2017

இயேசுவுக்காக… ஆல்பம் வெளியீடும் சில ஆசைகளும்



நண்பர்களே, தேவனுடைய கிருபையால் வருகிற திங்கள் கிழமை (16-10-17) முதல் “இயேசுவுக்காக…” என்ற தலைப்பில் தேவன் அருளிய பாடல்கள் இசைத் தகடாக வெளியிடப்பட்டு உங்களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறேன்.  அடுத்தப் பதிவில் ஆல்பம் கிடைக்கும் இடம் மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். இந்த இசைத் தொகுப்பை வெளியீட்டுடன் கர்த்தருக்காக நான் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறவைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் தற்போது பெங்களூரில் உள்ள SAIACS என்ற வேதாகமக் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டே, என் இறையியல் கல்வியில் முதுகலை முனைவர் பட்டத்திற்கும் (MTh )படித்துக் கொண்டு வருகிறேன். நேரமில்லை என்று சொல்லி எதையும் நாம் எளிதில் கடந்து சென்றுவிடமுடியும் என்றாலும், இன்று காண்கிறவைகள் மற்றும் கேட்கிறவைகள், “எங்களால் சும்மா இருக்க முடியாது” என்ற உந்துதலை உத்வேகத்துடன் தரத்தான் செய்கின்றன. 

  1.     முதலாவதாக இன்று ஆராதனை என்றாலே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மாறி, அதை ஒரு performance ஆக ஒரு சிலர் மாற்றிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்க முடியவில்லை. கர்த்தருக்குச் சித்தமானால், தேவனை மையமாக வைத்து, இயேசுவைக் கொண்டாடும் ஆராதனைகளை சபைகளில் ஊக்குவிக்க விரும்புகிறேன்.
  2.  திருச்சபைகளில் திருவசனத்தைப் பற்றிய தெளிவானப் புரிதல் உண்டாக என்னால் இயன்றவைகளைச் செய்ய விரும்புகிறேன்.  
  3.   நான் வெளியிட இருக்கிற “இயேசுவுக்காக…” ஆல்பம் முழுவதும் விசுவாசத்தினால் ஆரம்பித்து, தேவ கிருபையாலும் நண்பர்களின் உதவியாலும் வெளியிடப் பட இருக்கிறது. எத்தனையோ திறமையான வாலிபர்கள் நம்மிடையே உண்டு. அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை தேவனுக்கு மகிமையாக வெளிக்கொணர என்னால் இயன்றதைச் செய்ய விரும்புகிறேன். இந்த ஆல்பம் விற்பனை, மற்றும் இனி வரும் நாட்களில் ஊழியங்களில் எனக்குக் கிடைக்கும் காணிக்கை முழுவதையும் இதற்கென முழுமையாக ஒதுக்க தீர்மானித்து இப்போதிருந்தே ஒரு வரவு செலவு கணக்கை பராமரிக்கத் துவங்கி இருக்கிறேன்.
  4. “இயேசுவுக்காக…” பாடல் சிடியை வைத்து ஒரு ஆரோக்கியமான இசை மற்றும் கருத்து பரிமாற்றம் உண்டாகவும்,  நான் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதில் முதல் கட்டமாக ஏற்கனவே இதற்கு முன் கிறிஸ்தவ பாடல்களை வெளியிட்டவர்கள் “இயேசுவுக்காக…” பாடல் சிடியைக் கேட்டு, ஆக்கப்பூர்வமான விமர்சனம் தர முன்வருவார்களானால் அவர்களுக்கு என் சார்பாக ஒரு சிடியை அவர்கள் எங்கிருந்தாலும் அனுப்பித் தரவிரும்புகிறேன். 
 இதில் உதவ, இணைய விரும்புகிற தேவனுடைய ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இப்போதைய சூழலில் நவம்பர் மாதம் முடியுமட்டும் ஊழியப் பணிக்கு முன்னமே திட்டமிட்டிருக்கிறபடியால், அதன் பின் இப்பணியில் நான் செலவிடவும் செலவிடப்படவும் விரும்புகிறேன்.
என்றும் அன்புடன் அற்புதராஜ்
9538328573
9379168300
https://www.facebook.com/arputhaa
எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 3:5 )

No comments: