Wednesday, March 6, 2019

1. லெந்து காலம் என்றால் என்ன? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்பது கிறிஸ்தவர்களால் பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் ஒன்றாகும். லெந்து, Lent என்ற வார்த்தையானது கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் உயிர்த்தெழுதல் நாளுக்கு முந்தைய நாற்பது நாட்களைக் (Forty days before Easter) குறிக்கிற ஒன்றாக இருக்கின்றது. லெந்து காலம் என்பது சாம்பற் புதன் கிழமை அன்று துவங்கி உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை வரையிலான நாட்களை உள்ளடக்கியது ஆகும்.  நாற்பது நாட்கள் என்று பொதுவாக கிறிஸ்தவர்கள் கூறினாலும், உண்மையில் 46 நாட்களை உள்ளடக்கியதே லெந்து காலம் ஆகும். லெந்து காலத்தில் வரும் ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே நாற்பது என்ற எண் பரவலாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம் ஆகும்.

நாற்பது என்ற எண் வேதாகமத்தில் அடிக்கடி குறிப்பிடப் பட்டிருக்கிற ஒரு எண் ஆகும். மோசே, நோவா, எலியா, யோனா மற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவர்களின் வாழ்க்கையில் நாற்பது நாட்கள் என்பது ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. லெந்து காலம் என்பது கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே கிறிஸ்தவ சபைகளில் இருந்து வருகிற ஒன்றாகும். லெந்து காலம் என்பது நாளடைவில் தவக் காலமாக மாறிவிட்டது. உபவாசம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக தற்போது ஆசரிக்கப்படுகிறது.
உயிர்த்தெழுந்த இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அவர் பட்ட பாடுகளை நினைவுகூறுவதுடன், இயேசு வந்த நோக்கம் நம் வாழ்விலும், நம் மூலமாகவும் நிறைவேற நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வதற்காக இந்நாட்களை பயன்படுத்திக் கொள்வது அர்த்த முள்ளதாக இருக்கும்.

- அற்புதராஜ்
9538328573

No comments: