Tuesday, March 13, 2018

ஆண்டுகள் கடந்தும் காட்சிகள் மாறவில்லை

சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளைக் கண்டு பாரதத் தாய் வேதனையுடன் பாடுவதாக  சந்தியாகு ஐயர் அவர்கள் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலைப் படிக்கும்போது அதில் சொல்லப்பட்டிருப்பவைகள் இன்றும் உண்மையாக இருப்பதை அறியலாம்.

பல்லவி
எந்தன் நிர்ப்பந்தம் பாரும் என் மக்களே!
இரங்க மனமில்லையோ
அனுபல்லவி
இந்து மா சமுத்ரம் தொடங்கி
இமய மலை வரைக்கும்- ஐயோ!
1
பஞ்சம் பசியுற்றோரைப் பார்க்கப்
பதறுதே என் உள்ளம்! – யாரும்
அஞ்சும் பாழ் கொள்ளை நோயின்வாளினால்
அறுப்புண்டவர் எத்தனை பேர்!
2
கண்மணிகளில் கணக்கற்ற பேர்கள்
கல்வி யாதும் அறியார்!-பலர்
விண்ணோளியற்று வீண்பக்தியினில்
வீழ்ந்து கிடக்கின்றாரே! – ஐயோ!
3
சாதி என்னும் பேயும் நுழைந்து
சகலரையும் கலைத்தான்! – அவன்
வாதினால் பல சாதிகள் எழ
வம்புகள் மிக வந்ததே! – ஐயோ!
4
ஏசு என்னும் உலக ரட்சகர்
எனக்காகவும் மரித்தார்! – பல
தேசம் அவரைப் பெற்றிருக்க, அந்த
நேசர் எனக்கு இல்லையோ? – ஐயோ!

34 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட “கிறிஸ்தவ அருட்கவிஞர்கள்” எனும் நூலில், இப்பாடல் கிறிஸ்தவ கீர்த்தனைகள் நூலில் சேர்க்கப்படாதப் பாடல் எனக் கூறும் தயானந்தன் பிரான்சிஸ் அவர்கள் இப்பாடலின் அடியொற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “ அறுபதாண்டுகளுக்கு முன்பு இருந்த இழிநிலைகளும் கொடுமைகளும் எந்த அளவுக்கு மறைந்திருக்கின்றன, இன்று? பட்டினிக் கொடுமைகள் – கல்வியில்லாமை- மூடப் பழக்க வழக்கங்கள் – சாதி வெறி ஆகியவை புதுப் புது வடிவம் பெற்று மக்களை இன்றும் வதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் தாயின் புலம்பல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.”


சந்தியாகு ஐயர் அவர்கள் பல ஆங்கிலப் பாமாலைகளை அதன் பொருள் மாறாமல் நம் தேச மொழியிலும், இசையிலும் யாவரும் பொருளுணர்ந்துப் பாட வழி செய்தவர். “விந்தைக் கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை” என்ற பாடல் ஒரு உதாரணம்.

இதை வாசிக்கையில், கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கிருக்கும் பொறுப்பையும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும் இருப்பதை மறந்து “மற்ற” விசயங்களில் கவனம் செலுத்துதல் முறையாகாது என்று நான் உணர்கிறேன். நீங்கள்!



Saturday, March 3, 2018

வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை – Rev. Billy Graham




உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. (யாக்கோபு 4:14)
வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பெரிய ஆச்சரியமான காரியம் என்ன என்று அனேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக மாணவர் என்னிடம்  கேட்டார். “ வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை ” என நான் உடனே பதில் சொன்னேன். பெரும்பாலும் நாம் இந்த உண்மையை அறிவதற்கு முன்னமே, ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன, வாழ்க்கை அதன் இறுதி காலத்தை நெருங்கிவிடுகிறது.
ஒரு பக்கத்தில், வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நமக்கு அறைகூவல் விடுகிறது. நாம் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலம் என்ற ஒன்று இருந்தால், அது இப்பொழுதே! ”ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” என்று இயேசு சொன்னார் (யோவான் 9:4).
வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நம்மை ஆறுதல்படுத்தவும் செய்கிறது. வாழ்க்கை மிகவும் குறுகியது – நமக்கு முன்னே இருப்பது நித்தியம்!  உபத்திரவங்கள்  அல்லது போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளும்போது அல்லது கடினமான சூழ்நிலைகள் நம்மை தீவிரமாக தாக்கும்போது, அவை சீக்கிரத்தில் கடந்து போகும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:17-18).
இந்த  உலக வாழ்க்கை நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழாதீர்கள். அது நடக்காது. மாறாக, நித்தியத்தை உங்கள் கண்முன் வைத்துக் கொண்டு வாழுங்கள்.

(Rev. பில்லி கிரகாம் அவர்கள் எழுதிய  “Hope for Each Day” என்ற தின தியான நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)