Wednesday, December 5, 2007

இயேசு நேசிக்கிறார்

 இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?



இந்த பாடலின் வரலாற்றை சில வருடங்களுக்கு முன்பாக நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவின் வாலிபர் கூட்டம் ஒன்றில் அறிந்து கொண்டேன். குறு நாடகமாக நடித்துக் காட்டப்பட்ட அந்த காட்சி இன்றும் என்னகத்தே பசுமையாக உள்ளது.

19ம் நூற்றாண்டில் இலங்கை, யாழ்ப்பாணத்தில் கொலைக்குற்றத்திற்காக தூக்குத்தண்டணை பெற்ற கைதி ஒருவர் சிறையில் இருந்தார். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்தியாளர் ஒருவர் அவரை சந்தித்து அன்பாக பேசி "இயேசு உங்களை நேசிக்கிறார் " என்று கூறினார். கொலைக் குற்றவாளியான தன்னையும் நேசிக்க ஒருவர் உண்டா என்று வியந்த அவர், அதை நம்ப மறுத்து "உண்மையாகவே இயேசு என்ன நேசிக்கிறாரா" என்று வினவினார். அப்போது அந்த நற்செய்திப் பணியாளர் தன் கையிலிருந்த வேதாகமத்தை காட்டி "இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே" எனப் பகர்ந்தர்.
அதன்பின்பு பலவாரங்கள் தொடர்ந்து அவர்கள் இருவரும் வேதாகமத்தை சேர்ந்து வாசித்து இயேசுவின் அன்பைக் குறித்து சிந்தித்தனர். தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர் அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.
அவரை தூக்கிலிட்டபின் அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல அவரது உறவினர் வந்தனர். அப்போது அவரது தலையணைக்குக் கீழே ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.
இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்வின் அனுபவ வரியாக, சாட்சியாக பிரிக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரின் இறுதி நாட்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு நம்பிக்கையுடன் கழிந்தது.

ஓ இயேசுவே நீர் என்னை நேசிக்க என்னிடம் ஒன்றுமில்லையே!

Link to hear this song:
http://www.manavai.com/songs/trad5_3.ra

இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன் தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிழல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து நார்கழிந் துலைந்தும்
நீதன் இயேசென்னை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை அன்பாஇ நேசிக்கிறார்
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய் பறப்ப்பேன்

5. ராசன் இயேசுவின்மேல் இன்பக் கீதஞ்சொலில்
ஈசன் இயேசெனை தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ்சொல்வேன்

தீர்மானங்களை சோதித்துப்பார்க்க - ஒரு செக்போஸ்ட்

சரியான தீர்மானங்களைத்தான் நீங்கள் எடுக்கிறீர்கள்
என்று எப்படி சொல்ல முடியும்?


கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதாகம வழிகாட்டிகள் நமது தெரிந்தெடுப்புகளை சரிபார்க்க உதவும்.


1.இது வேத வசனத்திற்கு முரண்படுகிறதா?
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.... நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.(சங்.119:9- 11)

2. நான் இதற்காக ஜெபித்தேனா?
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி.4:6). யோசபாத்தை தன்னுடன் யுத்தம் பண்ண இஸ்ரவேலின் இராஜ அழைக்கும்போது அவன்,கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான் (1இராஜா22:5). நமக்கும் இது நல்ல ஆலோசனைதானே?

3.இத்தீர்மானத்தினால் நான் யாரைப் பிரியப்படுத்த முயலுகிறேன்?
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே(கலா.1:10).

4.இத்தீர்மானத்தினால் எனது பக்தி இன்னும் விருத்தியடையுமா?
எனது சிந்தை உலகு சார்ந்ததாயிருக்கிறதா? உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினா லுண்டானவைகள். (1யோவான்2:15- 17).

5.இயேசு இதைச் செய்வாரா?
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.(1பேதுரு1:15).

6. நான் இதைச் செய்தது பிறருக்குத் தெரிந்தால் வெட்கமடைவேனா?
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. (எபே.5:11,12)

7. நான் கர்த்தரையே நம்பியிருக்கிறேனா?
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்( நீதி.3:5,6). தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்( நீதி.11:28).

8. சட்டத்தின் முன்னரும் உடன் பணியாளர் முன்னிலையிலும் குற்றமற்றவனாயிருப்பேனா?
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை(ரோமர்13:1).

9. நம்பகமான் ஆலோசனையை நான் நாடியிருக்கிறேனா?
உனது சூழ்நிலையை சரியாய் நிதானிக்க முடியாதபடி ஆன்மீகரீதியிலும் உடலுக்கும் மனதுக்கும் அடுத்தும் சம நிலையை இழந்ததாக உணருகிறாயா? ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்( நீதி.11:14).

10. இத்தீர்மானம் எவ்வாறு பிறரைப் பாதிக்கும்?
மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.7:12).இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்(லூக்கா17:1,2).

11.இதை நிறைவேற்ற மிகைப்படுத்தவோ பொய்சொல்லவோ வேண்டுமா?
ஒரு கருத்துக் கணிப்பின்படி 60சதவீத மக்கள் தங்கள் வேலைகளில் உயர்வதற்கு தொடர்ந்து பொய் சொல்லுகிறார்களாம்.பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்( நீதி.12:22)

12.இதின் நீண்ட கால விளைவு என்னவாயிருக்கும்?
அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்( நீதி.10:2).

13.இது எப்படி என் சாட்சியை பாதிக்கும்?
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் (1பேதுரு.2:12).

By. Jeanette D. Gardener
Source: Blessing

ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டுமா?

கிறிஸ்தவ சிந்தனையில்
ஆணாதிக்கம் VS பெண்ணாதிக்கம்


இன்றைய முன்னேறிய சமுதாயத்தில் அடிக்கடி எழுந்து அடங்கிப் போகிற காரசாரமானதொரு தலைப்பு ஆணாதிக்கமா? அது அடிமைத்தனம் என்று முழங்குகிற, கொடி பிடிக்கிற பெண் இயக்கங்களையும், இவங்களுக்கு வேறு வேலையில்லை என்று புலம்புகிற ஒரு கூட்டத்தையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம். வேதாகமம் இந்த இரு கோஷங்களில் எதற்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது. ஒரு சிறிய அலசல்.


பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.ஆதி.2:18
ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.ஆதி2:20
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.ஆதி2:21௨3
மேற்கண்ட வசனங்களில் இருந்து நாம் ஒரு சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம். எல்லாவிதமான மிருகங்களும் முதலிலேயே ஜோடி ஜோடியாக சிருஷ்டிக்கப்பட்டன, ஆனால் ஆதாமுக்கு ஒரு ஏற்ற துணையின் அவசியமும் அவசரமும் புரியவைக்கப்பட்ட பின் தான் ஏவாள் சிருஷ்டிக்கப்பட்டு ஆதாமிடத்தில் கொண்டுவரப்பட்டாள். கவனிக்கவும். ஏவாள் ஆதாமிலிருந்துதான் சிருஷ்டிக்கப்பட்டாள்(ஏனெனில் சிலர் நாங்கள் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் - நீங்கள் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள். ஆகவே நாங்கள்தான் உங்களைக் காட்டிலும் பெலசாலிகள் என்று கூறுவர்). இருவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்- தேவனுடைய கரத்தினால் உருவாக்கப்பட்டவர்கள்.தேவன் ஏவாளை ஆதாமுக்கு ஏற்ற துணையாக இருக்கும் படி உண்டாக்கினார். இது ஆங்கில வேதாகமத்தில் helpmate என்று உள்ளது(பலருக்கு தங்கள் மனைவிகள் hellmate ஆக இருப்பதாக ஒரு உணர்வு). ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும்படி இருவரும் உண்டாக்கப்பட்டார்கள். மீண்டும் கவனிக்கவும். இருவரை ஒருவர் ஆளுவதற்கல்ல - ஒருவருக்கொருவர் உதவுவதற்காகவே உண்டாக்கப்பட்டார்கள்.ஏவாள் மட்டுமல்ல நாம் எல்லாருமே ஒருவருக்கொருவர் உதவுவதற்குதான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் வேதாகமத்தில் பல இடங்களில் பெண்கள் ஆண்களைக்காட்டிலும் கீழானாவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்களே என்று நீங்கள் நினைக்கக் கூடும். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்து விட முடியாது. ஆதி மனிதன் பாவம் செய்தபோது அவர்கள் சபிக்கப்பட்டார்கள்.அவர்களை தேவன் சபிக்கும் போது வேறு வேறு வார்த்தைகளால் சபித்தார். முதலில் பாவம் செய்தது,ஏமாந்தது ஏவாள்தான் என்பது நாம் எல்லாருக்குமே தெரியும். ஆனால் அப்பாவத்தை ஆண்டவர் ஆதாமிடம்தான் கேட்டார். ஏனெனில் ஆதாமே ஏவாளுக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் ஏவாளுக்கு ஆதாம் தான் பாதுகாப்பு கொடுத்திருக்கவேண்டும். ஏவாள் அவசரப்பட்டு பாவம் செய்தாலும் அவன் அதைக் கண்டிக்காமல் ஏவாளின் மேல் உள்ள பிரியத்தினால் அதை வாங்கிப் புசித்தான் என்று வேதவல்லுனர்கள் கூறுகின்றனர்.
சரி காரியத்திற்கு வருவோம். நான் ஏற்கெனவே கூறியபடி எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்து விட முடியாது. ஆகவே தேவன் பெண்களுக்கு சில காரியங்களை விலக்கிவைத்திருந்தார். மேலும் வேதாகமக் காலத்தில் தேவனை அறியாத புறவினத்தவர் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமல்ல - அவர்களை தங்கள் விருப்பப்படி கிட்டத்தட்ட ஒரு விலங்குபோலத்தான் நடத்தினர்.ஆனால் வேதாகமப்பெண்கள் தங்கள் புருஷர்களால் நேசிக்கப்பட்டனர், அவர்கள் விரும்புவதை செய்யும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அதேவேளையில் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்று பவுல் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்வி பலருக்கு உண்டு.வேதாகமத்தில் மிரியம் தீர்க்கதரிசி முதற்கொண்டு பல பெண் ஊழியர்களை தேவன் அனுமதித்திருக்கிறார். பல பெண்கள் வல்லமையான ஊழியம் செய்திருக்கின்றனர். தேவன் அவற்றையெல்லாம் ஒருபோதும் தடைசெய்யவில்லை. எந்த ஆணும் அதற்கு எதிராகவும் இருக்கவில்லை. இயேசுவுடன் கூட பல பெண்கள் ஊழியம் செய்தனர்(லூக்கா 8:3). புதிய ஏற்பாட்டு சபைகளிலும் பல பெண் ஊழியர்கள் இருந்தனர். இதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. பின்னர் ஏன் பவுல் அவ்வாறு கூறவேண்டும்? பெண்களின் பேச்சு நாம் எல்லாரும் அறிந்ததே. சபையில் பேசும் போது நிதானத்துடன் பேசுவது மிகவும் அவசியமாகும். மிகவும் முதிர்ச்சி பெற்ற பெண்களும் கூட பேசும் போது நிதானம் தவறுகிறதை நான் கண்டிருக்கிறேன். நாம் சபையில் பேசும் போது மனிதர் முன்பு அல்ல - தேவனுக்கு முன்பாக பேசுகிறோம். ஆக்வே அதில் ஒரு ஒழுங்கு இருப்பது நல்லது என்பதற்காக பவுல் அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஆனால் இன்று பின்மாரி அபிசேகத்தில் தேவன் ஜாய்ஸ்மேயர் போன்ற பலரையும் போதிக்கும் ஊழியத்தில் ஆண்களைக் காட்டிலும் சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. பலர் பேசும் வேகத்துக்கு நம்மல் ஈடு கொடுக்க முடிவதில்லை(இது குறையா? அல்லது நிறையா?).வேதாகமம் நமக்கு போதிக்கும் மிகப்பெரிய நடைமுறை உண்மை என்னவெனில்," சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது." காரியம் என்னவெனில் யார் பெரியவர் என்பதல்ல நாம் என்ன செய்கிறோம்,எப்படி செய்கிறோம் என்பதே.
சும்மா வழ வழவென்று பேசாமல் கேள்விக்கு வாங்க என்ற உங்கள் குரல் கேட்கிறது. வேதாகமம் கூறுவது ஆணாதிக்கமா? அல்லது பெண்ணாதிக்கமா? என்று பட்டிமன்ற கேள்வி கேட்டால் உங்கள் கேள்வியே தவறு என்று நான் கூறுவேன். ஏனெனில் வேதாகமத்தில் முழுக்க முழுக்க தேவனுடைய ஆதிக்கமே!வேதாகமத்தில் ஆணாதிக்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது பெண்ணாதிக்கத்திற்கு ஆதரவாகவோ ஒரு இடத்திலும் கூறப்படவில்லை. வேதாகமத்தில் பெண்கள் எல்லா ஆண்களுக்குமல்ல தங்கள் புருஷர்களுக்குத்தான் கீழ்ப்படிந்து(அது அடிமைத்தனமல்ல- அன்பு) இருக்கும் படி போதிக்கப்பட்டனர்(1பேதுரு 3:5 ).ஆண்கள் தங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூறவேண்டுமென (ஆதிக்கம் செலுத்த அல்ல)கட்டளையிடப்பட்டிருந்தனர். தேவன் குடும்பத்தை சபைக்கு ஒப்புமையாக கூறுகிறார். சபைக்கு தலை கிறிஸ்து. அது போல ஒரு குடும்பத்துக்கு தலை புருஷன். நல்ல மனைவி வீட்டை கட்டுகிறாள்.அது கட்டிடம் அல்ல - உறவுகள்.தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்(1கொரிந்தியர்14:33).
இந்த கட்டுரை எழுத உந்துதலாய் இருந்தவர்களுக்காக நன்றி.பிழைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் , திருத்திக் கொள்கிறேன். இது ஒரு முழுமையான கட்டுரை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பயணத்தின் தொடர்ச்சி என்று கூற முடியும் என நினைக்கிறேன். உங்கள் கேள்விகளை கேட்டால் தொடர்ந்து எழுத உதவியாக இருக்கும் என நம்புகிறேன். கர்த்தராகிய இயேசுவின் கிருபை நம்மனைவரோடும் இருப்பதாக.ஆமென


பரலோகத்தில் எந்த சபையினர் அதிகம் இருப்பார்கள்?

இன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்றூ மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுகொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு. ஆலயங்களிலும் சபைகளிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக அதிகம் இருப்பார்கள் ஆனால் பரலோகத்தில் அவர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று வேடிக்கையாக ஒரு போதகர் கூறுவார். சரி கேள்விக்கு வருவோம். எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அல்லது யார் பரலோகத்திற்கு செல்வார்கள்?



இந்த கேள்விக்கு விடை காணுமுன் இங்கிலாந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டவரும் அத்தேசத்தில் ஒரு பெரிய எழுப்புதலுக்கு காரணமாக இருந்தவர் ஜான்வெஸ்லி. இவரின் சீரிய ஊழியத்தின் பயனாக வெஸ்லியன் சபைகள் மலர்ந்தன. ஜான்வெஸ்லிக்கு ஆண்டவர் ஒரு தரிசனம் கொடுத்தார். அத்தரிசனத்தில் ஆண்டவர் வெஸ்லியை பரலோகத்திற்கு எடுத்துச் சென்றார்.
பரலோகத்திற்குச் சென்றவுடனே வெஸ்லியின் மனதில் பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அவர் ஆண்டவரை திரும்பிப் பார்த்தார். ஆண்டவரோ புன்முறுவலுடன் வெஸ்லியைப் பார்த்தபடி நின்றார். பொறுமையிழந்த வெஸ்லி ஆண்டவரை நோக்கி ''ஆண்டவரே! பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் எங்கள் சபையான வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் தானே? "என்று தைரியமாக கேட்டார். ஆண்டவரோ சிரித்த முகத்துடன்," வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்தில் இருக்க மாட்டார்கள்" என்று பதிலுரைத்தார். இதை கேட்ட வெஸ்லிக்கு தூக்கிவாரிபோட்டது. ஏனெனில் அவரது காலத்தில் வெஸ்லியன் சபையினர் மட்டுமே பரிசுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர். வெஸ்லியன் எழுப்புதலுக்கு முன்பு சபையில் பரிசுத்தத்தைக் குறித்த போதனைகள் மிகவும் குறைவு. அக்காலத்தில் புகைப்பது,குடிப்பது போன்றவை பாவமாக கருதப்படவில்லை. ஆகவே அதிர்ச்சியடைந்த வெஸ்லி வெஸ்லியன் சபைகளே பரலோகத்திற்கு வரமுடியாது என்றால் யார் வருவார்? என்று யோசித்தார். வெஸ்லியன் சபைகளுக்கு அடுத்தாற்போல் வசனத்திற்கேற்ப இருந்த சபை லூத்தர் அவரின் சீர்திருத்தத்தினால் பிறந்த புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகும். ஆகவே அந்த சபையை சேர்ந்தவர்களாவது பரலோகத்தில் அதிகம் பேர் இருப்பார்கள் என்றெண்ணியவராக,"ஆண்டவரே அப்படியானால் புராட்டஸ்டாண்டு சபையார் அதிகம் பேர் பரலோகத்தில் இருப்பார்களா?" என்று கேட்டார். ஆண்டவர் மீண்டும் புன்னகை பூத்தவாறு "அவர்களும் ஒருவர் கூட பரலோகத்தில் இருக்கமாட்டார்கள்" என்று சொன்னார். இந்த பதிலை கேட்ட வெஸ்லி மிகவும் நிலைகுலைந்து போனார். வெஸ்லியன் சபைகளுக்கும் பர்லோகத்தில் இடமில்லை, புராட்டஸ்டாண்டு சபைகளுக்கும் பரலோகத்தில் இடமில்லை. கத்தோலிக்க சபைதான் எண்ணிக்கையில் அதிகம். ஆகவே அந்த சபையாராவது சிலர் பரலோகத்தில் இருப்பர்கள் என்று நினைத்து," ஆண்டவரே! கத்தோலிக்க சபை மட்டும் தான் பரலோகத்திற்கு வருமா?" என்று வினவினார். இதற்கும் ஆண்டவர் சிரித்துக் கொண்டே "அவர்களும் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்" என்று பதிலுரைத்தார். இப்பதில் வெஸ்லியை முற்றிலும் அதிச்சியுரச் செய்தது." இந்த உலகத்தில் உள்ள சபைப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்திற்கு வரமாட்டார்களெனில், யார்தான் பரலோகத்திற்கு வர முடியும்?" என்று சோர்வாக வெஸ்லி நம் இயேசுவிடம் கேட்டார்.
அப்போது நம் ஆண்டவராகிய இயேசு வெஸ்லியை நோக்கி," இந்த உலகத்தில் யாரெல்லாம் என்னுடைய இரத்தத்தினால் பாவங்களற கழுவப்பட்டும், மன்னிக்கப்பட்டும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பரலோகத்திற்கு வருவார்கள். எந்த சபைப்பிரிவுகளும் பரலோகத்திற்கு வர முடியாது." (ஏனெனில் பரலோகத்தில் ஒரு சபைதான்.) என்று ஆண்டவர் பதிலுரைத்தார்.ஆண்டவரின் இப்பதில் மூலமாக வெஸ்லி உண்மையை உணர்ந்து கொண்டார்.

இந்த உதாரணத்திற்குப் பிறகும் ஒரு விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் பரலோகத்தில் காணப்படவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். ஏனெனில் அப்பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையெனில் நமக்கான இடம் மிகவும் கொடிய இடமாகும். அவ்விடம் சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த விழுந்துபோன தூதர் கூட்டத்தாருக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலுள்ளது. ஆகவே தைரியமாக முன்னேறிச் செல்வோம். அனேகரை அவ்விடம் கொண்டுவர நம்மாலான எளிய சிறிய பணிகளை ஆண்டவருக்காக செய்வோம்.

கிறிஸ்தவர்கள் பொய் சொல்லலாமா?

இன்றைய காலக் கட்டத்தில் சிறிய சிறிய காரியங்களுக்காவது எல்லரும் பொய் சொல்கிறதை நாம் காண்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பெரிய தேவமனிதர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட பொய் சொல்வதை ஒரு தவறான காரியமாக எடுத்துக் கொள்வதில்லை. உங்களைப் பார்த்து யாராவது," நான் எந்த காலத்திலும் பொய் சொன்னதில்லை, இனிமேலும் ஒருக்காலும் பொய்சொல்ல மாட்டேன்" என்று சொன்னால் ஏற இறங்க அவர்களை பார்ப்போமல்லவா? கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் பேசலாமா? அல்லது பொய் பேசுவதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா?


எனக்கு பிடிக்காத குறள்கள் பல உண்டு. அதில் ஒன்று
பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்
ஒரு பொய்யினால் நன்மை பயக்குமெனில் அந்த பொய் பொய்யல்ல,அது உண்மைதான் என்பது இதன் பொருளாகிறது. கிறிஸ்தவ நோக்கில் இதனை ஏற்றுக் கொள்வது சற்று(எனக்கு மிகவும்) கடினமாக இருக்கிறது. நான் ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்த போது அந்த கம்பெனியின் மேலதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் செய்துமுடிக்க முடியாத ஒரு இலக்கை நிர்ணயித்து அதை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவர். ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் பொய் பேசாமல் அதாவது அந்த இலக்கை ஏற்றுக் கொள்ளாமல் தப்பிப்பது ஒரு தவிப்பு எனக்கு. இது எனக்கு ஒரு பெரிய போராட்டமாகப் பட்டது. ஆகவே இதற்கு ஆலோசனை உதவி வேண்டி பிரபலமான ஒரு ஊழியரிடம் சென்றேன். ஆனால் அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் கூறியதென்னவெனில், " நம் தேவன் சின்ன சின்ன பொய்களையெல்லாம் தவறாக நினைக்க மாட்டார்.ஆகவே வருத்தப்படாதீர்கள்" என்று சொன்னார். இன்றைய கால கட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் பேசாமல் வாழ முடியுமா?
"சின்ன சின்ன தவறுகளும், சின்ன சின்ன பொய்களும் தான் வாழ்க்கையை சுவாராசியமாக்குகின்றன" என்று ஒருவர் சொன்னார். இது எந்தளவுக்கு உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். பல பெரிய பிரச்சனைகளுக்குக் காரணம் சின்ன சின்ன பொய்களும் தவறுகளும் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு பொய் சொன்னால் ஒராயிரம் பொய் சொல்ல வேண்டியதிருக்கும் என்பது நம் முன்னவர் வாக்கு. நாம் மேலே தொடர்ந்து வாசிப்பதற்கு முன் நம் தேவன் இக்காரியத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அறிவது மிக அவசியம். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. -எண்ணாகமம் 23:19
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை - 1 சாமுவேல் 15:29 பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை -சங்கீதம் 101:7
பொய்யுரையாத தேவன் -தீத்து 1:3
எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் -எபிரெயர் 6:18
ஆம் நம்முடைய தேவன் பொய்யுரையாத தேவன். ஆகவேதான் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆகவேதான் தேவன் நமக்கு எழுதிய கடிதமாகிய பரிசுத்த வேதாகமத்திலும் அதை எழுதி வைத்துள்ளார்.
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.-லேவியராகமம் 19:11
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள் -கொலோசெயர் 3:9
இதை வாசிக்கிற நீங்கள் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. இக்காலத்தில் இது சாத்தியமா? அட போங்கையா! என்று கூற நினைக்கலாம். ஆனால் பரிசுத்த வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது: ஆதலால்,அவர்(இயேசு)தாமேசோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்(எபி.2:18).
அவர் நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் என்று எபிரெயர் 4ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் இந்த பொய் ஆகிய சோதனையிலும் சோதிக்கப்பட்டு அதனை ஜெயித்தார். அவர் ஜெயித்தால் நாமும் ஜெயிக்க முடியும். நம்முடைய ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரே! பொய் சிறிதானாலும் அது பாவமே. தேவன் பொய்யை மட்டுமல்ல- பொய் பேசுகிறவர்களையும் வெறுக்கிறார். நாம் பொய் பேசும் போது அவர் மனம் துக்கமடைகிறது.ஆகவே நாம் இந்தக் காரியத்திலும் தேவனைப் போல மாற முயற்சி செய்வோம். தேவன் இப்படிப்பட்ட முயற்சிகளில் பிரியமாயிருக்கிறார்.
பலருக்கு பொய்பேசுவது ஒரு தொற்று நோய்
பொய்பேச தவறாது அவர்கள் வாய்
உண்மையை உணர்ந்திடுவாய்
உலகிற்கு உரைத்திடுவாய்
வாய்மை காத்திடுவாய்
வேதமே மெய்
மற்றதெல்லாம் பொய்
சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் என்று நம் ஆண்டவர் இயேசு கூறினார். நாம் பொய் பேசுவோமாகில் நாம் யாருடைய பிள்ளைகளாக இருப்போம். நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். நாம் பொய் பேசாமலிருப்பதற்கு ஒரு எளிய பார்முலா இருக்கிறது. அது என்ன தெரியுமா? நாம் வழ வழவென்று பேசாமல் நம்முடைய நாவை அடக்கினால் போதும். ஏனெனில் சொற்களின் மிகுதியினால் பாவமில்லாமற் போகாது என்று வேதாகமம் கூறுகிறது.பேசாதிருந்தால் மூடனும் ஞானியென்னப் படுவான் என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. ஆகவே நாம் பொய்பேசுகிற காரியத்தில் குற்ற மனப்பான்மையை நீக்கி குற்றம் களைய முயலுவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
தேவனே! பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்-சங்கீதம் 119:29.

Thursday, August 23, 2007

கிறிஸ்தவம் முட்டாள்களின் மார்க்கமா?

   கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கிறிஸ்தவர்கள் மீது அடிக்கடி கூறப்படும் குற்றச்சாட்டு என்னெவெனில், "உங்களுடைய விசுவாசம் குருட்டு விசுவாசமே(Blind Faith), உங்கள் விசுவாசம் அறிவு சார்ந்தது அல்ல" என்பதாகும். மேலும் ஒருவன் கிறிஸ்தவனாகும் போது தனது ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொலை செய்து விடுகிறான் என்றும் கிறிஸ்தவ விசுவாசம் என்பது ஒரு பகுத்தறிவுப் படுகொலை என்று பறைசாற்றும் பகுத்தறிவு மேதாவிகள் என்றூ தங்களை கூறிக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒருவன் கிறிஸ்தவனாகும் போது இருட்டை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறான் என்று கூறுவோரும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல கிறிஸ்தவர்களால் தங்கள் விசுவாசத்துக்கான சரியான காரணத்தினையும் விளக்கத்தையும் கூற முடிவதில்லை. விசுவாசம் என்றால் விசுவாசம் தான் அதற்கு விளக்கம் கிடையாது என்று எண்ணுவோரும் உண்டு. சரி. நம் கேள்விக்கு வருவோம். கிறிஸ்தவ விசுவாசம் அறிவு சார்ந்ததுதானா? அதற்கு ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் உள்ளதா?
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1பேத்ரு3:15) என்று அபோஸ்தலனாகிய பேதுரு கூறியிருக்கிறார். மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் "எல்லாருக்கும் சொல்லக் கூடிய ஒரு உத்தரவு(பதில்)" உண்டு என்று அறிந்து கொள்ளலாம். அந்த பதில் என்ன?
ஆதிக் கிறிச்தவர்கள் இயேசுதான் தேவனுடைய குமாரனென்பதற்கு சாட்சியாக அவரின் உயிர்த்தெழுதலை சாட்சியாகப் பறைசாறினர். முதன்மை அப்போஸ்தலன் பேதுரு முதல் புறஜாதியாரின் அபோஸ்தலன் பவுல் போன்ற எல்லாருமே தங்கள் பிரசங்கங்களில், நிருபங்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்தே பேசினர்," நீங்கள் அவரை கொலை செய்தீர்கள். தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடே எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள்" என்பதே அவர்களின் அறைகூவலாக இருந்தது. இதனை ஒருவரும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் பிரதான ஆசாரியரும், மூப்பரும் இயேசுவின் கல்லறையைப் பாதுகாத்த காவலர்களுக்கு,அவரின் உயிர்த்தெழுதலை மறைக்க லஞ்சம் கொடுக்க முயல்வதை நாம் மத்தேயு28:11- 15 வசனங்களில் காண்கிறோம். இயேசுவின் கல்லறை இன்றும் காலியாக இருக்கிறது.
வேதாகமத்தில் சொல்லப்படுள்ள சம்பவங்கள் உண்மைதான் என்பதை அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. பூதம் கிணறு வெட்ட கிளம்பிய கதை போல, கிறிஸ்தவத்தை மறுக்க (மறைக்க) அகழ்வாராய்வு செய்ய கிளம்பியவர்கள், தங்கள் ஆராய்வின் பலனாக சான்றுகளைக் கண்டு பிரமிப்படைந்து அவற்றை மறுக்க இயலாமல் வேதாகமத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே என்பவர் ஆவார். கிறிஸ்தவத்தின் வரலாற்றுத்தன்மை, அது வெறும் கட்டுக்கதையல்ல - கட்டுக்கடங்கா வரலாற்று உண்மைகளடங்கியது என்பதைப் பறைசாற்றுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
பழங்கால படைப்புகளின் நம்பகத்தன்மை அதற்குள்ள கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டே மதிப்பிடப் படுகிறது. ஒரு படைப்பு உண்மையானதாக இருக்கவேண்டுமெனில் அதற்கு ஒரு கையெழுத்துப்பிரதியாவது இருக்க வேண்டும். பண்டைக்கால நூல்களில், ஹோமர் என்பவர் எழுதிய இலியட் என்ற காவியத்துக்கு 643 கையெழுத்துப்பிரதிகளும், ஜூலியஸ் சீஸர் எழுதிய யுத்த விளக்கங்கள் என்ற நூலுக்கு 10 கையெழுத்துப்பிரதிகளும், பிளேட்டோவின் டெட்ராலஜிஸ் என்ற நூலுக்கு 7 கையெழுத்துப்பிரதிகளும் கிடைத்துள்ளன. (இது ஒரு சுருக்கமான பட்டியலே). ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு இதுவரைக் கிடைத்துள்ள கையெழுத்துப்பிரதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? லத்தீன், சீரியாக் மொழிகளில் மட்டும் ஏறக்குறைய 20000 கையெழுத்துப்பிரதிகளும், கிரேக்க மொழியில் 5300கையெழுத்துப்பிரதிகளும் இதுவரை கிடைத்துள்ளன. பிளேட்டோவின் ஞானத்தையும் ஹோமரின் இலியட் இதிகாசத்தையும்னம்புவேன் ஆனால் கிறிஸ்தவத்தை மட்டும் புறக்கணிப்பேன் என்று கூறுவோரின் அறிவுக்கூர்மை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா! அவர்களுக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். டாக்டர் புரூஸ் மெர்ஜர் என்பவர் பழங்கால இலக்கியங்களிலுள்ள பிழைகளைக் கண்டறிவதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டார். அவர் தன் ஆராய்ச்சிக்காக,
1.புதிய ஏற்பாடு
2.இலியட்
3.மகாபாரதம் ஆகிய நூல்களை எடுத்துக் கொண்டார். எழுத்துப் பிழை, வார்த்தைகளின் வாக்கிய அமைப்பினால் பொருள் மாறவில்லையெனில் அவற்றை இவர் பிழையாக கருதவில்லை. இவருடைய ஆராய்ச்சியின் படி, இலியட்டில் 15600 வரிகளும், புதிய ஏற்பாட்டில் 20000 வரிகளும், மகாபாரதத்தில் 250000 வரிகளும் மொத்தம் உள்ளன. அவற்றில் இலியட்டில் மொத்தம் 764 வரிகள் பிழையுள்ளவை, அதிலும் ஒவ்வொரு 20 வரியிலும் ஒரு வரியின் பொருள் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பிழைவிகிதம் 4.9% ஆகும். மகாபாரதத்தில் 26000 வரிகள் பிழைய்ள்ளவை ந்று கண்டறியப்பட்டுள்ளது.பிழைவிகிதம்10% ஆகும். ஆனால் புதிய ஏற்பாட்டில் 40 வரிகள் மட்டுமே பிழையுள்ளவை. பிழைவிகிதம் 0.2% மட்டுமே. இப்படியிருக்க நாம் எதை தைரியமாக நம்ப முடியும்? என்னைக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு உடனே பதில் கூரிவிடுவேன்.
கிறிஸ்தவத்தின் உண்மை அதன் வல்லமை ஆகியவை யாராலும் மறு(றை)க்கவியலாததாக உள்ளது. கிறிஸ்தவத்தை எதிர்த்து நின்றவர்களின் பெரும்பாலோனோர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டே மரித்தனர். இதற்கு நல்ல ஒரு உதாரணம், தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் வாலிபன்.
பிரெஞ்சு தத்துவ ஞானி வால்டேர் என்பவர், "இன்னும் சில வருடங்களில் கிறிஸ்தவம் இந்த உலகத்தை விட்டு மறைந்து போய்விடும்" என்று கெக்கரித்தான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அவன் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய அச்சுக்கூடத்திலேயே ஜெனீவா வேதாகமச்சங்கம் அமைந்து உலகமெங்கும் வேதாகம் அச்சடிக்கப் பட்டு வினியோகிக்கப்பட்டது.
சாட்சிகளையும் சான்றுகளையும் எழுத ஆரம்பித்தால் இங்கு இடம் கொள்ளாது.... மன்னிக்கவும் இந்த உலகமே கொள்ளாது. உலகத்திலுள்ள எல்லா வேதாகமங்களையும் அழித்து விட்டாலும் கூட, பல நூல்களில் மேற்கோள்களாக பயன் படுத்தப் பட்டுள்ள வேதாகம மேற்கோள்களை பயன்படுத்தியே ஒரு புதிய வேதாகத்தை மீண்டும் எழுதிவிட முடியும். ஆகவே வேதாகமத்தையோ, கிறிஸ்தவத்தையோ யாரும் நினைத்தால் கூட அழித்துவிட முடியாது.
இதனை வாசிக்கும் நீங்கள் கிறிஸ்தவ விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல என்றும் கிறிஸ்தவம் என்பது கும்மிருட்டில் குதிப்பதல்ல என்றும், அது இருட்டை நோக்கிய ஒரு அடி அல்ல மாறாக வெளிச்சத்தை நோக்கிய ஒரு வெற்றிப்படி என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவ விசுவாசம் பகுத்த்றிவு படுகொலை அல்ல, மாறாக அறிவுப்பூர்வமான, அறிவார்ந்த செயல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். வரலாறு இதனை நமக்கு சான்றாக அறிவிக்கிறது. ஆராய்ச்சிகள் இதனை ஆதரிக்கிறது. " நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற இயேசுவில் இணைந்து நாம் இளைப்பறுவோம்.
 
Source: The Evidence that Demands A New Verdict by Josh Mc Dowell
               Surprised by Faith   by  Dr. Don Bierle

Thursday, August 16, 2007

யார் தெரியுமா?

ஒரு இளம் வாலிபன் ஆண்டவரின் அன்பினால் தொடப்பட்டவனாய் நான் மிஷனெரியாகச் செல்வேன் என்று தீர்மானம் பண்ணினான். அவன் தன் தீர்மானத்தை அடக்கி வைக்க மாட்டாதவனாய் அதை தன் சபையாரிடம் தெரிவித்தான். ''என்னை மிஷனெரியாக அனுப்புங்கள்'' என்று அவர்களிடம் முறையிட்டான். அவன் தீர்மானத்தைக் கேட்ட சபையார்,சிலர் எள்ளி நகையாடினர்,சிலர் உனக்கேன் இந்த வீண் வம்பு என்றனர், சிலர் அது தேவனுடைய சித்தமாயிருக்குமானால் தானாகவே நடக்கும், நீ ஒன்றும் செய்யாதே நீ சின்ன பையன் என்றனர், சிலர் மிஷனெரியாக தூர தேசம் செல்வது சுத்த முட்டாள்தனம், நீ ஏன் இங்கேயே ஊழியம் செய்யக்கூடாது என்றனர், சிலர் ரொம்ப அதிகப் பிரசங்கித்தனமாக பேசாதே என்றனர். மொத்தத்தில் எல்லாரும் அவ்வாலிபனின் தீர்மானத்தை அசட்டை பண்ணினர். ஆனால் அவ்வாலிபன் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். ஆண்டவர் தனக்கு கொடுத்த பாரத்தின் படியும், தரிசனத்தின் படியேயும் ஊழியம் செய்ய கிளம்பிச் சென்றான். நடந்தது என்ன தெரியுமா? துணிச்சலான அவ்வாலிபன் வேதாகமத்தை பல மொழிகளில் மொழிபெயர்த்தான். இன்றுவரையும் அவனுடைய சாதனை முறியடிக்கப்பட முடியவில்லை. பல மொழிகளின் தந்தை என்றழைக்கப்படும் உயரிய இடத்தைப் பெற்றான். சரித்திரம் இன்றும் அவ்வாலிபனின் சாதனைக்கு சான்று பகருகிறது. ஏன் உங்கள் கைகளில் உள்ளவேதாகமத்தில் கூட அவனுடைய பங்கு இருக்கக் கூடும். அவ்வாலிபன் யார் தெரியுமா?


அவன் தான் இங்கிலாந்து தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊழியம் செய்யப் புறப்பட்டு வந்த வில்லியம் கேரி. ஆண்டவரே என்னையும் அந்த வாலிபனைப் போல ஆத்தும பாரமுடையவனாய்,அழிந்துபோகிற அன்பர்களின் ஆத்தும கதறலை கேட்டு அவர்களுக்கு உதவுகிறவனாய் மாற்றும்.

நான்:ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.(எரேமியா1:6,7)

Saturday, August 4, 2007

அன்பு இருந்தா வரும் பண்பு
பண்பு இருந்தா வரும் பணிவு
பணிவு தரும் உயர்வு

உயர்வு தரும் மமதை
மமதை தரும் போதை
மாற்றி விடும் பாதை

பாதைக்கு வழிகாட்டி
வாழ்விற்கு ஒளிகாட்டி
நாள்தோறும் நாட்காட்டி
வசனமே வழிகாட்டி

இத்தோட முடிக்காட்டி
எனக்கு வரலாம் கோட்டி

அப்பாட ஒரு வழியா முடிச்சிட்டேன்

நானுமிருக்கேன்யா ! ! !

ஒரு ஞாயிற்றுகிழமையன்று காலையில்

அம்மா: மகனே சீக்கிரம் எழும்பு ,ஆலயத்துக்கு போக வேண்டும். நேரமாகிவிட்டது.
மகன்: அம்மா நான் ஆலயத்துக்கு வர வில்லை நீ மட்டும் போ.
அம்மா: ஏன்?
மகன்: இரண்டு காரணங்கள். ஒன்று அங்குள்ளவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,இரண்டாவதாக எனக்கு அங்குள்ளவர்கள் யாரையும் பிடிக்க வில்லை.
அம்மா: நீ கண்டிப்பாக போக வேண்டும் என்பதற்கும் இரண்டு காரணங்கள் உள்ளன, ஒன்று இப்போது உனக்கு வயது 54,இரண்டாவதாக, நீ தான் அந்த ஆலயத்தின் போதகர்.

Monday, July 9, 2007

கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? என்ற கேள்வி பகுத்தறிவுள்ள எவருக்கும் எழக்கூடியதே. இப்படிப்பட்ட கேள்விகள்தான் அனேகரை கடவுளைப் பற்றிய அறிவுக்குள் வழி நடத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நான் ஏன் இந்த உலகில் இருக்கிறேன்? என்பன போன்ற கேள்விகளுக்கு தகுந்த பதிலைத் தருவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடமைப் பட்டுள்ளான். அப்போஸ்தலனாகிய பேதுருவின் முதலாம் நிருபம் 3 ம் அதிகாரத்தில் "உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்."என்று கூறுகிறார். ஆனால் நம்மில் எத்தனைபேர் சரியான பதில் (பொறுமையாக) கூறத் தெரிந்தவர்களாக இருக்கிறோம். நான் வாசித்த வரையில் ஜோஷ் மேக்டோவெல் என்பவர் எழுதிய புத்தகங்கள் அனைத்துமே இத்தகைய அறிவை நமக்குத் தர வல்லது. அவருடைய புத்தகங்களை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமே! காம்பஸ் குருசேட் என்ற உலகளாவிய ஊழிய நிறுவனம் அவரது புத்தகங்களை மிக குறைந்த விலையில் அச்சிட்டுள்ளனர்.
ஒன்று நிச்சயம். நீங்கள் என்னதான் சரியான பதிலைக் கூறினாலும் அந்த பதில் அவரை ஆண்டவரை ஏற்றுக் கொள்ளச் செய்யும் என்று கூறி விட முடியாது. நம்முடைய சாட்சியான வாழ்க்கை மட்டுமே கடவுள் இருக்கிறார் என்பதற்கான உயிருள்ள பதிலாக இருக்க முடியும். இயேசு எந்த இடத்திலும் (இந்த உலக ஞானிகளுக்கு) ஒரு அருமையான பதிலைச் சொல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் உலகத்தின் ஞானத்தை பைத்தியமாக்கும் தேவஞானத்தை இயேசு அறிந்திருந்தார். அதையே தம் சீஷர்களுக்கும் போதித்துச் சென்றார். அது என்னவெனில் "நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்" என்பதே. ஆகவே நீங்கள் என்ன பதில் கூறினாலும் மனம் திருந்தாத ஒருவர் மாற்றப் பட்ட வாழ்க்கையைப் பார்க்கும் போது கேள்வியே கேட்காமல் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வார். ஆகவே நண் பர்களே உங்கள் வாழ்க்கை மாற்றப் பட்டு இருக்கிறதா? அது தான் மிகவும் முக்கியம். அதுதான் சரியான பதிலும் கூட. ஆமென்.

உங்களுக்கு கடிதங்கள் (கேள்வி பதிலகள்)

  வாலிபர்களுக்கு நடைமுறையில் கிறிஸ்தவத்தை கைக்கொள்ளுவதில் வரும் பிரச்சனைகள் ஏராளம். அதை உணர்ந்து சகோதரன் ஸ்டான்லி அவர்கள் எழுதிய இந்த புத்தகம் மிக பயனுள்ளதாகையால் இதை உங்களுக்கு வழங்குகிறோம்.

கடிதம் - 1

சோதனை அலைகள்

அன்புள்ளா அண்ணா
வாழ்த்துக்கள்.சமீபத்தில் நீங்கள் நடத்திய மாணவர் மலர்ச்சி முகாமில் பங்கு பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் கல்லூரியில் முதலாண்டு படிக்கிறேன். என்னைப்போன்ற மாணவருக்கு மலர்ச்சி முகாம் மிக பயனுள்ளதாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. நீங்களும் மற்ற அண்ணன்மார் ஆற்றிய சொற்பொழிவுகளும் அன்னை பேரிதும் கவர்ந்துவிட்டன. என்னையே மறந்து நன் நீங்கள் முகாமில் அறிமுகம் செய்த இயேசு நாதருக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன். ஏதோ மேலோகமே இறங்கி வந்து என் இதயத்தை நிரப்பி விட்டது போலிருந்தது.

ஆனால்,

கல்லூரிக்கு திரும்பி வந்ததும் ஒரே பிரச்சனை. இனி நல்வாழ்வு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்துடன் திரும்பிய எனக்கு ஒரே குழப்பம். விடுதியிலுள்ள சோதனைகள் எல்லாம் என்னையே நோக்கிப் பாய்கின்றன போலும்.முகாமில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை.முகாமில் நடந்ததெல்லாம் வெறும் வெத்து வேட்டு,அதை எல்லாம் நம்பாதே என்று யாரோ என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பது போலிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.எனவேதான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உடன் பதில் எழுதுவீர்களா? ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டுமென்று விளக்கமாக எழுதுங்கள்.

இப்படிக்கு உங்கள் தம்பி
மோகன்.


தம்பி மோகனுக்கு,
உனது மடலுக்கு நன்றி. முகாமில் ஒரே குதூகலம்,திரும்பிய பின்னரோ ஒரே குழப்பம் என்று எழுதியிருந்தாய்.இயேசுனாதருக்கு உன்னை நீ அர்ப்பணித்துள்ள்ச்ச்ய் அல்லவா? அப்படியானால் அவர் சொல்வதை கேள்:-
''உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக"
"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."

உனக்கு ஏன் முன்னை விட இப்போது சோதனைகள் அதிகம் தெரியுமா? இயேசுவின் பாத படிக்கு வந்து சேருமுன் நீ சாத்தானுக்கு அடிமையை இருந்தாய். இப்போது நீ இயேசுவின் பிள்ளை ஆனதும் அவனுக்கு உன் மேல் கோபம் வராமல் இருக்குமா? உன்னை எப்படியாவது விழத்தள்ளி மறுபடி உன்னை அவன் பக்கம் இழுத்துவிட அவன் தன்னால் ஆனது அத்தனையும் செய்வான். ஆனால் " உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்"என்று வேதம் கூறுகிறது.
கிறிஸ்தவ வாழ்வு ஒரு போராட்டம்தான்.ஆனால் வெற்றி நமதே. இறைவன் தமது வேதத்தில் கூறியுள்ளதை பார்:

"நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் "
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்."
" நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."

யாரோ உன் மன நிலையை குழப்பி எதையோ சொல்லிகொண்டிருப்பது போலிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தாய். அதுதான் சாத்தானின் சத்தம். அவன் ஒரு வஞ்சகன், அவன் பொய்யன். "அப்பாலே போ சாத்தானே நான் இயேசுவின் வார்த்தைகளையே நம்புவேன் "என்று சொல்லி விடு. நீ எதிர்த்து விட்டால் அவன் ஓடி விடுவான்.கொஞ்சம் இடங்கொடுத்து விட்டாலோ கூடாரம் போட்டு விடுவான். எச்சரிக்கையாயிரு.
காலையும் மலையும் தவறாது வேதம் வாசித்து ஜெபம் பண்ணு. உனக்காக நாங்கள் ஜெபம் பண்ணுகிறொம்.
அன்பின் வாழ்த்துகளுடன்
உன் அண்ணன்

யோவான் 14:1;16:33; 1யோவான்4:4; அப்.14:22; 2தீமோ.3:12; சங்.34:19.

ஏழு எளிது

 ஆவியில் எளிமை

சிந்தனையில் தூய்மை

செயலில் வாய்மை

மொத்தத்தில் உண்மை

இதுவே நம் தேவை

சேர்க்குமே மறுமை

பரிசோதிக்கலாமா நம்மை?

என்ன! ! ! ! ஜாதியை ஒழிக்க வேண்டுமா?

   கிறிஸ்தவத்தில் ஜாதி என்றதுமே எனக்கு சாது சுந்தர்சிங் சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. அது: " நான் இங்கு யானைக்கால் வியாதியினால் பாதிக்கப் பட்ட ஒருவரை பார்த்தேன். அவ்வியாதியினால் அவர் கால்கள் வீங்கி பெரிதாக இருந்தபடியினால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை.
    இந்தியாவை ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். தலை- ஜம்மு காஷ்மீர், வலதுகை-குஜராத், இடது கை-மேற்குவங்காளம், கால்கள்- தென் இந்தியா. ஒரு மனிதன் நன்றாக நடப்பதற்கு கால்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இல்லையேல் அந்த யானைக் கால் வியாதிக்காரனுடைய நிலைதான். இங்கு தென் இந்தியாவில் தான் கிறிஸ்தவம் நன்றாக வேரூன்றியுள்ளது. ஆனால் அவர்களிடையே ஜாதி, இனவெறி ஆகியவை காணப்படுகிறது. இந்த ஜாதி, இனவெறி அவர்கள் சீராக நடப்பதற்கு தடையாக உள்ளது. அது கிறிஸ்தவம் பரவுவதற்கும் பெரிதும் தடையாக உள்ளது. இந்திய கிறிஸ்தவர்களின் கால்களைப் போன்ற தென் இந்திய கிறிஸ்தவர்களின் இக்குறையினால் இந்தியாவில் கிறிஸ்தவம் மற்ற மாநிலத்தவரை தாங்குவதற்குப் பதிலாக தள்ளாடிக்கொண்டு இருக்கிறது." இது அவர் 1916ல் கேரளா வந்திருந்தபோது சொன்ன சம்பவமாகும். இன்று வரை அதே நிலைமை நீடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு அல்லவா?
   ஐயா வேதாகமத்தில் ஜாதிகள் இல்லையா என்று யாரோ முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. வேதாகமத்தில் ஜாதிகள் என்று குறிப்பிடப் பட்டிருப்பவை எல்லாமே அந்த தேசங்களைத் தான் குறிப்பிடுகின்றன. சந்தேகமெனில் உங்களிடம் ஆங்கில வேதாகமம் இருந்தால் அதில் பார்க்கவும். அப்படியெனில் ஆபிரகாம் ஏன் தன் இனத்தாரிடம் சென்று ஈசாக்கிற்கு பெண் பார்க்கும் படி கேட்டுக் கொண்டான். அதன் காரணமென்னவெனில் ஆபிரகாம் வாழ்ந்த கானான் தேசத்தார் கொடிய விக்கிரக வணக்கத்தாராயிருந்தனர் என்பதே.
இந்த தலைப்பு (ஜாதியை ஒழிப்பது)குறித்து ஒரு நல்ல கட்டுரை எழுதவேண்டுமென்று என் நண்பர் பாஸ்டர் இரப்பேல் (இவர் கிறிஸ்தவளாக மாறிய முஸ்லீம் பெண்ணை மணம் புரிந்தவர்) அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு நல்ல கருத்தை முன் வைத்தார்.அது கலப்புத் திருமணம் ஜாதி அரக்கனுக்கு கல்லறை கட்டக் கூடிய வலிய ஆயுதம் என்பதே. அதோடல்லாமல் வேதாகமத்திலிருந்து அவர் கலப்புத்திருமணங்களுக்கான ஆதாரங்கள் பலவற்றைக் கூறினார்.அவை:

1.மோசே -- மீதியானாகிய எத்திரோவின் மகளை மணந்தவர்.
2.சல்மோன் -- எரிகோ பட்டண வேசி ராகாபை மணந்தவர்.
3.போவாஸ் -- மோவாபியப் பெண்ணான ரூத்தை மனத்தவர்.
ஏன் இன்னும் சொல்லப் போனால் இயேசுகூட புற ஜாதியான நம்மைத்தான் தமக்கு மணவாட்டியாக தெரிந்து கொண்டார்.

     பின்னர் ஏன் வேதாகமம் கலப்புத் திருமணங்களை எதிர்க்கிறது என்ற கேள்வி எழுவது நியாயமே. அதேனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதியாரை திருமணம் செய்து அவர்களின் அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்குள் அவர்கள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே. (உ.ம்) எண்ணாகமம்25.
ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும் போது அவன் புது சிருஷ்டியாகிறான். ஆகவே அவர்களிடம் ஜாதி வேறுபாடு இருத்தல் கூடாது. கிறிஸ்தவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத மற்றவர்களை திருமணம் செய்வதில்தான் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். (அதற்காக சபைகளையும் ஆலயங்களையும் காதல் கூடாரங்களாக்கி விடக் கூடாது. ஆனால் நடப்பது என்ன?)
அப்படியென்றால் கலப்புத்திருமணங்கள் தான் இறுதி தீர்வா எனில் இல்லவே இல்லை. கலப்புத்திருமணங்கள் ஒரு துவக்கமே.முடிவு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மற்றும் அவரின் ஆட்சியில் தான் கிட்டும்(ஏசாயா 11ல் கூறியபடி).

   நடைபெறுகிற கலப்புத்திருமணங்களிலும் ஒரு பிரச்சனை பாருங்கள். அது என்ன தெரியுமா? கலப்புத் திருமண தம்பதிகள் ஏதாவது ஒரு ஜாதியை தெரிந்துகொள்ளும் கட்டாயத்தில் அல்லது அதிக பயனடையக்கூடிய ஜாதியை தெரிந்து கொள்கின்றனர். இது மாறுமோ?
தற்போது அனேகம்பேர் அரசாங்கம் சாதி கேட்கும்போது தான் தங்கள் சாதியை அறிந்துகொள்கின்றனர் என்று சமீபத்தில் ஒரு சகோதரர் சொன்ன செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆகவே அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி ஜாதியை ஒழிப்பது எட்டாக்கனிதான்.
ஒரு நற்செய்தி. தற்போது மோகன் சி லாசரஸ் போன்ற தேவ மனிதர்கள் இதுகுறித்து கண்டித்து பேச ஆரம்பித்துள்ளனர். இதுவும் ஒரு நல்ல ஆரம்பமே.

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"
"ஒன்றே குலம்"
"சாதி இரண்டொழிய வேறில்லை" என்று உலக மக்களே பாடி வைத்து சென்றுள்ளனர்.ஆனால் நம் கிறிஸ்தவர்களிடமோ ஜாதி உணர்வு என்பது புரையோடி போயிருக்கிறது. இதில் நம் சிறிய முயற்சி என்ன மாற்றத்தை உண்டுபண்ணிவிடமுடியும் என்று நினைக்காமல் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று உணர்ந்து செயல்படுவோம் வாரீர்.

"மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்"

ஆதியில் இல்லாது
பாதியில் வந்து-மனு
ஜாதிக்கு பீதியை
அளித்த ஜாதியை
அழிக்க வாரீர்

அற்புதம் @ அற்புதராஜ்

தலைவர்கள் வீழ்ச்சி-ஏன்?

பெரிய ஆவிக்குரிய தலைவர்கள், பரிசுத்தவான்கள் என்று கருதப்பட்டவர்கள் கூட திடீரென விழுந்து போவது ஏன்?

மிகப் பெரிய தேவ மனிதர்கள் பலரின் திடீர் விழுகை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. "இப்படிபட்ட ஒரு பெரிய தேவ மனிதன் எப்படி விழக்கூடும்?" என்பதே நம்மை குழப்பமடையச் செய்யும் கேள்வியாயிருக்கிறது.இதற்கான பதில் தனித்தன்மை வாய்ந்தது.


ஒரு மனிதனின் ஆவிக்குரிய பெலன் அவனுடைய மனதின் பெலனைப் பொறுத்ததாகவும், அவனுடைய மனப் பெலத்துடன் நேரடியாக சம்பந்தமுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு நபர் ஊக்கமான ஜெப வீரராகவும் வல்லமையான அற்புதங்களைச் செய்கிறவராகவும் அக்கினிமயமான எழுப்புதலை கொண்டு வருகிறவராகவும், ஆத்துமாவை ஊடுருவிச் செல்லுகிற ஆவிக்குரிய செய்திகளை அளிப்பவராகவும், ஆவிக்குரிய பிரகாரமாக பல தாலந்துகளை உடையவராகவும் இருக்கக் கூடும். ஆனால் அவர் தன்னுடைய மனதை அடக்கி ஆள்க் கற்றிராத பட்சத்தில், சந்தர்ப்பம் எழும்போது அவர் விழுந்து போக ஏதுவுண்டு. ஆகவே உண்மையில் மனதுதான் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ''தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்"( நீதி.25:28) என்று வேத வாக்கியம் கூறுகிறது. இயல்பாக நம்மிலுள்ள திறன்கள் அனைத்தும் நம் மனதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாம் எவ்விதம் இருக்கிறோம் என்பதையும் நம்முடைய மனநிலையே தீர்மானிக்கிறது. இவ்வாறிருக்கிற படியினால் நம்முடைய மனதைக் கைப்பற்றிக் கொள்ள சாத்தான் ஊக்கத்துடனும் விடாப்பிடியாகவும் பிரயாசப்படுகிறான் என்பதில் ஆச்சரியப் படுவதற்கொன்றுமில்லையே! தனக்கொப்புவிக்கப் பட்டிருக்கிற மந்டைக்கு உண்மையான மேய்ப்பனாகத் திகழ்ந்த அப்.பவுல், "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப் படுமோவென்று பயந்திருக்கிறேன்" (2கொரி.11:3)என்று கூறுகிறார். ஒரு தேவ மனிதன் விழுந்து போவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே அவருடைய மனதில் விழுகை சம்பவித்திருக்க வேண்டும் - உலகிலுள்ள ஒருவருமே அதை அறியாதிருக்கக் கூடும். பிரகாசிக்கிற பரிசுத்தவான்கள் ஆகாயமண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பொல இருக்கிறார்கள் என்று தேவ வசனம் கூறுகிறது (தானி.12:3). நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்று நாம் அறிவோம். அவற்றின் ஒளி பூமியை வந்தெட்டுவதற்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஒளி ஆண்டுகள் ஆகும்(ஒளியின் திசை வேகம் 300000 கி.மீ/வினாடி). ஒரு நட்சத்திரம் பூமியிலிருந்து 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்குமாயின், நான்கு வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரம் கொடுத்த ஒளியானது இப்பொழுதுதான் பூமிக்கு வந்து சேரும். பிரகாசிக்கிற பரிசுத்தவான்களும் அவைகளைப் போன்றவர்களே. இன்று வல்லமையாக பிரகாசித்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய பரிசுத்தவான் நான்கு வருடங்களுக்கு முன்பே கிருபையினின்று விழுந்து போயிருக்கக் கூடும். ஒரு நட்சத்திரம் 4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது போல, அவர் ஆவிக்குரிய பிரகாரமாக ஆகாய மண்டலங்களில் அவ்வளவு உயரமான இடத்தில் இருந்தபடியால், அவருடைய ஒளியை நாம் இன்று காண்கிறோம்.ஆனால் நாளைய தினம் திடீரென்று அந்த ஒளி மறைந்து விடுகிறது. ஒரு நட்சத்திரம் நான்கு ஒளியாண்டுகளுக்கு முன் ஒளியிழந்து, கறுத்து போயிறுக்கக் கூடும். ஆனால் இன்று (அதாவது நான்கு ஆண்டுகள் கழித்து) இப்பூமியில் வசிக்கும் ஒருவரும் அதை அறியாமலிருக்கலாம். இன்றுவரை அதின் ஒளி பூமியை வந்தெட்டிக் கொண்டுதான் இருந்திருக்கும்! ஒரு தேவ மனுதன் விழும் போது ஜனங்கள்" அந்த பெரிய ஆவிக்குரிய தலைவருக்கு திடீரென்று என்ன சம்பவித்தது?" என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறார்கள். நிச்சயமாக அது ஒரு திடீர் வீழ்ச்சி அல்ல. ஒரு தேவ மனிதன் விழுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவருடைய மனதில் விழுகை சம்பவித்திருக்கும். இது சரித்திரப் பூர்வமாகவும் இன்று நடைமுறையிலும் மெய்யானதாகவே இருக்கிறது. ஆவிக்குரிய தலைவர்கள் என்று அறியப்பட்டிருந்து, பின்பு கிருபையினின்று விழுந்துபோன பலரும் வெகு காலத்துக்கு முன்னரே தங்கள் வாழ்க்கையில் ஒரு இரகசியமான விழுகை சம்பவித்திருந்தது என்பதைத் தங்களுக்கு வெளியரங்கமான விழுகை சம்பவித்த பின்னர் தெரிவித்திருக்கின்றனர். வல்லமையாக பயன்படுத்தப் படும் தேவ மனிதர்கள் சிலருக்கு ஏற்படும் அபாயம் என்னவெனில், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளுண்டாகும் போது அவறுக்காக சரியாக மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பி அவற்றை அறிக்கை செய்து விட்டு விடாமல், அவற்றை மறைக்க முனைந்து தாங்கள் மேன்மை பொருந்திய தேவ மனிதர் என்றும், ஆதலால் மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்வதும் மனந்திரும்புவதும் தங்கள் கௌரவத்திற்கு தாழ்வானது என்று நினைப்பதேயாகும். அதைத் தொடர்ந்து, தவறான நோக்கத்தோடு ஒருவரைத் தொடுதல், அருவருக்கத்தக்க படங்களை ஒரு நிமிடம் பார்த்தல் போன்ற இன்னுமதிகமான சிறிய இரகசிய பாவங்கள் அவர்களுடைய வாழ்க்கயைப் பற்றி பிடித்துக் கொள்கின்றன. இவை ஆரம்பத்தில் ஒரு நபரின் ஊழியத்தை உடனடியாக பாதிக்காமலிருக்கலாம். ஆனால் இவை பிற்பாடு அவனவனுடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் அழித்து விடும். ஒரு நபர் மீது நீங்கள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம்; அது அவரை கொன்று போடுவதில்லை. நீங்கல் அவர் மீது கொஞ்சம் வைக்கோலை வீசலாம்; அதுவுங்கூட அவரைக் கொல்லாது. அவர் மீது கொஞ்சம் மணலை நீங்கள் எறியக் கூடும்; அதுவுங்கூட அவரை கொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் மணலையும், வைக்கோலையும், தண்ணீரையும் ஒன்றாக உபயோகித்து ஒரு செங்கல் செய்து,அதை ஒரு நபரின் மீது எறிந்தால், அது அவரை கொன்று போடக் கூடும். நம்முடைய மிகச் சிறிய, சொற்பமான இரகசிய பாவங்களும் அப்படியே இருக்கின்றன. நாம் கவனமாயிருப்போமாக! களங்கமற்றது போல் தொனிக்கும் சாத்தானின் சத்தத்தை நாம் சந்தேகப் படாமல் கேட்க ஆரம்பிக்கும்போது, அவன் நம்முடைய வாழ்க்கையில் புக, அடியெடுத்து வைக்க நாம் இடமளிக்கிறோம். அவன் முதலாவது நம்மை வஞ்சித்து, பின்பு நம்முடைய மனதைக் கெடுத்து, தீட்டுப் படுத்தி, முடிவாக அதைக் குருடாக்குகிறான்(2கொரி.4:4). அதற்குப் பின் நாம் எந்தவொரு பாவத்தையும் செய்ய தைரியமுள்ளவர்களாகிறோம். இதுவே கபடமற்ற ஏவாளுக்கு அவன் வைத்த கண்ணியாகும். விலக்கப் பட்ட விருட்சத்தின் கனி உண்மையிலேயே புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமானதும், அவளுடைய புத்தியை தெளிவிக்கிறதுமான ஒன்று என்று சிந்திக்கும் வகையில் அவள் முதலாவது வஞ்சிக்கப்பட்டாள்(ஆதி.3:6). பின்பு, தங்களை நேசித்து, தங்களோடு ஒவ்வொரு நாளும் நடந்து சம்பாஷித்து வந்த தேவன் தங்களுக்கு நல்லதும் விரும்பப் படத்தக்கதுமான ஏதோ ஒன்றை வேண்டுமென்றே கொடாமல் விலக்கிவைத்துக் கொண்டதாக எளிதாக நம்பும் படி அவள் வழி நடத்தப் பட்டாள். தன் தேவன் மே அவள் கொண்டிருந்த மாயமற்ற அன்பு போய்விட்டது- அவளுடைய மனது கெடுக்கப் பட்டு விட்டது. அதற்குப் பின், கனியைப் புசிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரடியான கீழ்ப்படியாமையினால் உண்டாகக் கூடிய பின்விளைவுகளைக் குறித்து அவள் பயப்படவில்லை. அந்த அளவுக்கு அவளுடைய மனது குருடாக்கப் பட்டிருந்தது. நாம் இப்பட்ப்பட்ட மன நிலையை அடையும் போது, எவ்வளவதிகமான ஆலோசனைகளும், ஊக்குவிப்புகளும், புத்திமதிகளும், சிட்சைகளும் அளிக்கப்பட்டாலும் அவற்றுள் யாதொன்றினாலும் நம்முடைய உணர்ச்சியற்ற, மரத்துப் போன நிலையினின்று நம்மை தூக்கியெடுக்க முடியாது; நம்முடைய அன்புள்ள கர்த்தரால் நமக்கென்று ஆயத்தமாக்கப் பட்டுள்ள மகிமையானவைகளோ அல்லது முரட்டாட்டம்பண்ணுகிறவர்களுக்காக வைக்கப் பட்டுள்ள வரப் போகும் நியாயத்தீர்ப்பையோ நம்மால் காணக் கூடாமற் போகக்கூடும்.


 
இந்தக் கட்டுரை விழுந்து போனவர்களுக்கு மட்டுமல்ல, இதை வாசிக்கிறவர்களுக்கும் கூட ஒரு எச்சரிக்கையாக இருக்கக் கூடும்.
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
I தெசலோனிக்கேயர் 4:3

Thursday, June 14, 2007

மரம் ஏறிய குள்ளன்

"இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று, அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்." (வெளி.3:20)
" உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (எரே.29:13)




(வரி பிரிக்கும் அதிகாரி சகேயு தன் உதவியாளன் பாரூக்கிடம் பேசிகின்றான்.)

சகேயு: வரி கொடிப்போர் யாரும் வரவில்லை இன்று
ஆகவே
அலுவலகம் தனை நீ கவனித்துக்கொள். நான் போகிறேன்.
பாரூக்: எங்கே செல்கிறீர்கள்?
இறைவாக்கினர் உரையைக் கேட்டிடவா?
சகேயு: இறைவாக்கினரா? யாரைச் சொல்கிறாய், பாரூக்?
பாரூக்: நசரேத்தூர் இயேசு எரிகோ வருகிறாராம்.
சகேயு: நல்ல செய்தி சொன்னாய்.
அடைத்துவிடு அலுவலகத்தை;
செல்வோம் அவரை பார்க்க.
இப்போழுது புரிகிறது,
இவ்விடம் மக்கள் வராதது
ஏனென்று.
பாரூக்: இயேசு புதுமைகள் செய்வாரோ?
சகேயு: அது தெரியாதெனக்கு,
ஆனால் ஒன்று தெரியும்:
கப்பர் நகூம் மத்தேயு
வரி பிரிப்பதை விடுத்து
அவர் பின் செல்கின்றார்;
அதுவே பெரும் புதுமை.

( கூட்டத்தில் மக்கள் சகேயுவை நெருக்குகின்றனர்; கேலி செய்கின்றனர்.)

ஒருவன்: வரி பிரிக்க வந்தாயா
எங்கள் இயேசுவிடம்?
சுங்க வரி பிரிக்கும்
இடம் அல்ல இது.

இன்னொருவன்: உன்னிடம் இயேசு சொல்வார்:
"இறக்கும் போது உன் பணம்
உன்னுடன் வராது" என்று.
மற்றொருவன்: வரிப்பணம் கேட்டு
ஆண்டு முழுவதும்
நெருக்குவான் நம்மை!
குள்ளன் இவனை இன்று
நெருக்கிடுவோம் நாம்.

(கூட்டத்திலிருந்து விலகி ஓடி, காட்டு அத்தி மரத்தில் ஏறி கொள்கிறான் சகேயு.)
(மக்கள் புடை சூழ வருகிறார் இயேசு.)

சகேயு: அதோ வருகிறார் இயேசு.
என்ன?....
திசை திரும்பி,.....
என் மரத்தை நோக்கியா?
நின்றுவிடும் என் இதயம்
இயேசு: சகேயுவே, சீக்கிரம் இறங்கி வா!
(சகேயு கீழே குதிக்கிறான்.)
சகேயு, இன்று நான்
தங்குவேன் உன் வீட்டில்!
சகேயு: நீர்,... என் வீட்டில்?
ஒருவன்: ஐயா, இவன் ஆயக்காரன்!
இன்னொருவன்: இவருக்கு விருந்திட
உனக்கில்லை தகுதி!
ஒப்புக்கொள் அவரிடம்!
சகேயு: ஆண்டவரே,
இவர் சொல்வது யாவும்
உண்மையே,
உமக்கு விருந்திட நான்
அருகதை அற்றவன்!
ஆயினும் நீர் வந்தால்,
வரவேற்பேன்
என் இல்லத்திலும்
இதயத்திலும்!

இயேசு: சகேயு, உன் வீடு செல்வோம்!
பரிசேயன்: சொன்னேன் அல்லவா நான்?
இயேசு மீட்பர் அல்ல,
பாவிகளைச் சேர்ந்தவன்!
அநியாயம் செய்வோரை
ஆதரிப்பவன்!
சகேயு: (வீட்டினுள் வந்த இயேசுவின் காலடிகளில் வீழ்ந்து)
ஆண்டவரே, என்னை மன்னியும்;
என் உடமைகளில் பாதியை
ஏழைகட்குக் கொடுக்கிறேன்!
அநியாயமாய் எவரிடமும்
அதிகம் வரி பிரித்திருந்தால், நான்
திருப்பி கொடுப்பேன்
நான்கு மடங்கு!
இயேசு: இன்றே மீட்பு வந்தது
உன் இல்லத்திற்கு!
நீதிமான் ஆபிரகாமிற்குப்
பிள்ளையாவாய் நீயும்?
(அலுவலகத்தில் சகேயுவும் பாரூக்கும் உரையாடுகின்றனர்)
பாரூக்: இன்று
வேறு வ்ழியாக வருகின்றீர்களே!
யாரையாவது பார்க்கச் சென்றீர்களோ?
சகேயு: ஆம்,
இருவர் இல்லம் சென்றேன், பாரூக்.
பாரூக்: வரி தராதவர் வீடா?
சகேயு: இல்லை --
இன்று நான் சென்று வந்தது
கூடுதல் வரி தந்தவர் வீடு.
பாரூக்: ஏன்?... எதற்கு?
சகேயு: இயேசுவிடம் சொன்னது போல்
அதைத் திரும்பக் கொடுத்தேன்.
பாரூக்: நாலு மடங்கு?
சகேயு: ஆம், நம் மதச் சட்டப் படி,
அநியாயம் செய்தால்
சரி செய்வது அப்படியே!
பாரூக்: இயேசுவைச் சந்தித்ததால்
இழப்பு மிகுதியோ?
சகேயு: முன்பு பணம் இருந்தது,
மகிழ்ச்சியோ ச்றிதுமில்லை!
இப்போது செலவுண்டு,
மகிழ்ச்சியும் மிக உண்டு.
பாரூக்: இயேசுவைத் தேடிச் சென்றது
சரியே என்கிறீர்கள்!
சகேயு: நான் தேடிச் சென்றேனா,
அல்லது
பாவியாம் என்னை
அவர் தேடி வந்தாரா?
எரிகோ வந்தது அவர்;
நான் ஏறிய அத்திமரம்
அருகில் வந்தவர் அவர்;
என் பெயரைச் சொல்லி
அழைத்தவரும் அவரே;
"இறங்கி வா" எனக் கூறி,
பாவியாம் என் இல்லத்திலும்
எழுந்தருளிய இறைவன் அவர்!
பாரூக்: இருப்பினும்,
இவ்வயதில் நீங்கள்
இம்மரம் ஏறியதும்
இறங்கிட்டதும்
அதிசயம்!
சகேயு: அத்திமரம் ஏறுகின்ற
(புன்னகையுடன்) அத்தியாயம் முடிந்தது, பாரூக்.
அவசியமில்லையே இனிமேல்!



Note: இந்த கவிதை நடை உரையாடல் "நற்செய்தி காவியம்" என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டதாகும்.இந்நூலாசிரியரான பேராசிரியர் அருளானந்தம் பாளை.தூய யோவான் கல்லுரியில் ஆங்கில துறை தலைவராகவும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தேர்வுத் துறை கட்டுப்பாடு அதிகாரியாகவும் (controller of examinations)இருந்தவர்.

Tuesday, April 10, 2007

ஒரு உண்மைச் சம்பவம்

ஒருவர் : பாஸ்டர் ஒரு சந்தேகம். கிறிஸ்தவர்கள் மூளைச் சலவை பண்ணிடுவாங்க என்று என் அண்ணன் சொல்வது உண்மையா?
பாஸ்டர்: அது உண்மைதான். நாங்கள் மூளையிலுள்ள அழுக்கை நீக்க வழி சொல்லி தருகிறோம். ஆனால் யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவது இல்லை.