Wednesday, December 5, 2007

இயேசு நேசிக்கிறார்

 இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?



இந்த பாடலின் வரலாற்றை சில வருடங்களுக்கு முன்பாக நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவின் வாலிபர் கூட்டம் ஒன்றில் அறிந்து கொண்டேன். குறு நாடகமாக நடித்துக் காட்டப்பட்ட அந்த காட்சி இன்றும் என்னகத்தே பசுமையாக உள்ளது.

19ம் நூற்றாண்டில் இலங்கை, யாழ்ப்பாணத்தில் கொலைக்குற்றத்திற்காக தூக்குத்தண்டணை பெற்ற கைதி ஒருவர் சிறையில் இருந்தார். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்தியாளர் ஒருவர் அவரை சந்தித்து அன்பாக பேசி "இயேசு உங்களை நேசிக்கிறார் " என்று கூறினார். கொலைக் குற்றவாளியான தன்னையும் நேசிக்க ஒருவர் உண்டா என்று வியந்த அவர், அதை நம்ப மறுத்து "உண்மையாகவே இயேசு என்ன நேசிக்கிறாரா" என்று வினவினார். அப்போது அந்த நற்செய்திப் பணியாளர் தன் கையிலிருந்த வேதாகமத்தை காட்டி "இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே" எனப் பகர்ந்தர்.
அதன்பின்பு பலவாரங்கள் தொடர்ந்து அவர்கள் இருவரும் வேதாகமத்தை சேர்ந்து வாசித்து இயேசுவின் அன்பைக் குறித்து சிந்தித்தனர். தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர் அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.
அவரை தூக்கிலிட்டபின் அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல அவரது உறவினர் வந்தனர். அப்போது அவரது தலையணைக்குக் கீழே ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.
இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்வின் அனுபவ வரியாக, சாட்சியாக பிரிக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரின் இறுதி நாட்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு நம்பிக்கையுடன் கழிந்தது.

ஓ இயேசுவே நீர் என்னை நேசிக்க என்னிடம் ஒன்றுமில்லையே!

Link to hear this song:
http://www.manavai.com/songs/trad5_3.ra

இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன் தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிழல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து நார்கழிந் துலைந்தும்
நீதன் இயேசென்னை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை அன்பாஇ நேசிக்கிறார்
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய் பறப்ப்பேன்

5. ராசன் இயேசுவின்மேல் இன்பக் கீதஞ்சொலில்
ஈசன் இயேசெனை தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ்சொல்வேன்

No comments: