Saturday, December 29, 2018

திருமணம் உனக்கானது அல்ல - Marriage is not for you

எனக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் - திருமணம் எனக்காக அல்ல.
இப்பொழுது எதையாவது மனதில் யோசித்து தவறாகப் புரிந்து கொள்வதற்கு முன் தொடர்ந்து வாசியுங்கள்.

நானும் என் மனைவியும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தோம். ஆயினும் திருமணம் என்று வந்த போது, சில பயங்கள் மற்றும் கவலைகளை என்னால் தவிர்க்க முடியவில்லை. எங்கள் திருமண நாள் நெருங்க நெருங்க என்னுள் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது. நான் ஆயத்தமா? நான் சரியான முடிவை எடுத்த்திருக்கிறேனா? இவள் நான் மணம் புரிய சரியான நபரா? இவள் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருபாளா? என எனக்குள் பல கேள்விகள்.

இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில், என் எண்ணங்கள் மற்றும் கவலைகளை என் தந்தையுடன் பகிர்ந்து கொண்டேன். கடிகாரம் மிகவும் மெதுவாக சுற்றுவது போல, அல்லது காற்று நின்று போனது போலவும் நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும் நம்மை நோக்கி வருவது போலவும் உள்ள தருணங்களை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் பெற்றிருக்கிறோம். நாம் அப்படிப்பட்ட நேரங்களை ஒருபோதும் மறக்க முடியாததாகக் குறித்துக் கொள்வோம்.

என் தந்தை என் கேள்விகள் மற்றும் கவலைகளுக்குப் பதில் கொடுத்த நேரம் அப்படிப்பட்ட ஒரு நேரமாக எனக்கு இருந்தது. அவர் சிரித்துக் கொண்டே, 'மகனே, நீ மிகவும் சுயநலமுள்ளவனாக இருக்கிறாய். ஆகவே நான் இதை மிகவும் எளிமையானதாக இதை மாற்றுகிறேன்: திருமணம் உனக்கானது அல்ல. உன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக நீ திருமணம் செய்து கொள்ளவில்லை, மாறாக வேறு ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக திருமணம் செய்கிறாய். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், உன் திருமணம் உனக்காக மட்டும் அல்ல, நீ ஒரு குடும்பத்திற்காக திருமணம் செய்கிறாய். திருமணத்தினால் உருவாகும் புது உறவுகளுக்காக மட்டுமல்ல, உன் எதிர்கால குழந்தைகளுக்காக நீ திருமணம் செய்கிறாய். அவர்களை வளர்க்க உனக்கு உதவி செய்ய எவர் விரும்புவார்? அவர்களை சரியான விதத்தில் உருவாக்க எவர் விரும்புவார்? திருமணம் உனக்காக அல்ல. அது உன்னைப் பற்றியது அல்ல. திருமணம் என்பது நீ திருமணம் செய்யப் போகிற நபரைப் பற்றியது."

அந்த தருணத்தில் தான் எனக்கான சரியான வாழ்க்கைத் துணையாக நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண் அமைய முடியும் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அனுதினமும் அவள் முகத்தில் புன்னகையைக் காண, நன்றாக சிரித்து மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.  நான்      அவளுடைய ஒரு குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், அவள்; என் குடும்பத்தில் ஒரு அங்கமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

    என் தகப்பனின் ஆலோசனையானது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் அதே வேளையில் வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. இன்று பரவலாக காணப்படும் சிந்தனையான, 'ஒன்று உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வில்லை எனில், அதை விட்டுவிட்டு புதிய ஒன்றை எடுத்துக் கொள்" என்பதற்கு       எதிரானதாக இருந்தது.

உண்மையான திருமண வாழ்வு என்பது ஒருபோதும் உன்னைப் பற்றியது அல்ல. அது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது -   அவர்களின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கனவுகள் ஆகும். 'எனக்கு என்ன கிடைக்கும்?" என சுயநலம் எதிர்பார்க்கிறது.    அதேவேளையில், அன்போ, 'நான் என்ன கொடுக்க முடியும்?" என கேட்கிறது.
சில காலத்திற்கு முன்பு, சுயநலமின்றி நேசித்தல் என்றால் என்ன என்பதை என் மனைவி எனக்குக் காண்பித்தாள். அனேக மாதங்களாக, என் இருதயமானது பயம் மற்றும் குழப்பம் ஆகியவை கலந்து கடினமாகிக் கொண்டிருந்தது. பின்னர் தாங்கமுடியாமல் உணர்ச்சிப் பிழம்பாக வெளிவந்து இருவரும் தாங்கமுடியாததாக இருந்தது. நான் அவளைப் பற்றிய கரிசனை அற்றவனாகவும், சுயநலமுள்ளவனாகவும் இருந்தேன்.

ஆனால், என் சுயநல நோக்கின்படி அவள் இல்லை, மாறாக என் மனைவி மிகவும் ஆச்சரியமானதொன்றைச் செய்தாள் - அவள் அன்பு மழை பொழிந்தாள். நான் அவளுக்கு உண்டாக்கிய அனைத்து வேதனை மற்றும் கவலைகளைப் புறம்பே தள்ளி வைத்து விட்டு, அவர் நேசத்துடன் என்னை எடுத்து, என் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் சுகத்தைத் தந்தாள்.

நான் என் தகப்பனின் ஆலோசனையை மறந்து  போனதை உணர்ந்தேன். என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னை நேசிப்பதே திருமணம் என இருந்த நேரத்தில், என் பக்கத்தில் திருமணம் என்பது முழுவதும் என்னைச் சுற்றியதும், பற்றியதுமாகவே இருந்தது. இந்த பயங்கரமான உணர்வு என்னுள் கண்ணீரை வரவழைத்தது. நான் என்னால் இயன்றதைச் செய்வேன் என என் மனைவியிடம் உறுதி கூறினேன்.

இந்தக் கட்டுரையை வாசிக்கிற அனைவருக்கும் - நீங்கள் திருமணமானவரோ, திருமணமாகப் போகிறவரோ, அல்லது திருமணமே செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டவரோ- நீங்கள் யாராக இருந்தாலும், திருமணம் என்பது உங்களுக்கானது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான எந்த அன்பின் உறவும் உனக்கானது அல்ல. அன்பு என்பது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது ஆகும்.

இதில் உள்ள முரண்பாடான ஒரு விசயம் என்னவெனில், நீங்கள் எவ்வளவு அதிகமாக அந்த நபரை உண்மையாக நேசிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அன்பை நீங்கள்; பெறுவீர்கள். நீங்கள் நேசிக்கிற அந்த நபரிடம் இருந்து மட்டுமல்ல, மாறாக அவ்ர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஆயிரக்கணக்கானவர்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களுடைய அன்பு சுயநலமுள்ளதாக இருந்திருந்தால் இவைகளை எல்லாம் நீங்கள் பெற மாட்டீர்கள்.

மெய்யாகவே, அன்பு மற்றும் திருமணம் என்பது உனக்கானது அல்ல, அது மற்றவர்களுக்கானதாகும்.

- சேத் ஆடம் ஸ்மித்

(இந்த ‘‘Marriage isn’t for you” கட்டுரை உலகம் முழுவதிலும் மூன்று கோடிக்கும் அதிகமானவர்களால் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கப் பட்ட கட்டுரை  ஆகும். தமிழில் மொழிபெயர்த்து  வெளியிட அனுமதி கொடுத்த ஆசிரியருக்கு நன்றி. இக்கட்டுரை  “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது)

Friday, December 28, 2018

திருமணத்திற்கு முன்... (A Christian premarital counseling article)


திருமணம் குறித்து அனேக தவறான புரிதல்கள் இன்று மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில்; பரவி வருகிறது. திருமணம் முடிந்தால்....அவ்வளவுதான் என்ற கருத்தை உருவாக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் முறைப்படுத்தப்படாத குப்பைத் தகவல்களை எங்கும்        காணலாம். இதினிமித்தம் அனேக வாலிபர்கள் திருமண உறவில் நுழையவே பயப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட திருமணம் பற்றிய புரிதல் குறைவினால், சரியான தெளிவு இல்லை. ஆகவே திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு ஆலோசனை இருந்தால், சரியான துணையைத் தேர்ந்தெடுக்கவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் அது மிகவும் பிரயோஜனமாயிருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

திருமணம் என்பது என்ன?
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆணும் பெண்ணும் முறையான குடும்ப வாழ்வில் நுழைய வழிகோலும் வாசலாக திருமணம் இருக்கிறது. திருமணம் மூலமாக ஒரு ஆணும், பெண்ணும் வெளிப்படையாக, சட்டப்பூர்வமான மற்றும் நிரந்தரமான திருமண உறவில் இணைகின்றனர். இந்த திருமண உறவு அவ்விருவரையும் மரணம் மட்டும் ஒன்றாக வாழ்வதற்கு ஏதுவாக இணைக்கிறது. திருமணம் என்பது குழந்தைகளைப் பெற்று அவர்களை ஒன்றாக வளர்ப்பதன் மூலமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நிரந்தரமான அர்ப்பணிப்புடன் இணைவதே திருமணம் என ஒருவர் வரையறுக்கிறார்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
ஒருவர் திருமணம் செய்வதற்கான அவசியத்தை பரிசுத்த வேதாகமத்தில் மற்றும் கிறிஸ்தவத்தின் பார்வையில் நாம் சில முக்கியமான காரியங்களைப் பார்க்கலாம்.
1. குடும்பம் வாழையடி வாழையாக வளர்ந்துப் பெருக முறையான திருமண உறவு அவசியம். பலுகிப் பெருகவேண்டும் என்பது இறைவனின் கட்டளை ஆகும் (ஆதி.1:28).
2. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது என்றும் விவாக மஞ்சம் அசுசிப் படாததாகவும் இருக்க வேண்டும் என்று கூறும் பரிசுத்த வேதம், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் என வேதம் தெளிவாகக் கூறுகிறது (எபிரேயர் 13:4, 1 கொரி.7:4)
3. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருடைய பரஸ்பர தேவைகளை நிறைவு செய்து நிறைவான வாழ்வு வாழ திருமணம் தேவை. திருமண உறவில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாக இருக்கிற படியால், இருவரும் சேர்ந்து வாழ, இணைந்து அனேக காரியங்களைச் செய்ய ஏதுவுண்டாகிறது.
4. கிறிஸ்துவானவர் தம் சபையுடன் கொண்டுள்ள உறவு திருமண உறவுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறதை நாம் வேதத்தில் காணலாம் (எபேசியர் 5: 22-33)
5. ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களை கர்த்தருக்குள் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ள திருமண வாழ்வு உதவுகிறது (1 கொரி.7:2)

சரியான வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதற்கு முன்...
1. சரியான வாழ்க்கத் துணை வேண்டும் என்று எதிர்பார்க்கிற அல்லது ஜெபிக்கிற அனேகர் சரியான வாழ்க்கைத் துணை யாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது முயற்சி இன்றி உள்ளனர். தேவனுக்குக் கீழ்ப்படியாமலும், ஜெப வாழ்வு இன்றியும், தேவனுடனான ஆவிக்குரிய வாழ்வில் தொடர்பின்றி காணப்படுகின்றனர்.
2. அனேகர் தங்களுடைய சொந்த அளவுகோல்களின் படி, சரீர தோற்றம் மற்றும் நம்பிக்கையின் படியான ஒருவரே சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும் என்று எண்ணி   தவறான நபரை எதிர்பார்க்கின்றனர்.


சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வது எப்படி?
1. தெரிந்தெடு - ஒரு கிறிஸ்தவ ஆண் அல்லது பெண் கிறிஸ்துவையும் வேதாகமத்தையும் நம்புகிற விசுவாச வாழ்வில் உள்ள ஒருவரையே திருமணம் செய்ய வேண்டும்.              அவிசுவாசியான ஒருவரை திருமணம் செய்யக் கூடாது என வேதம் தெளிவாக எச்சரிக்கிறது (2 கொரி.6: 14-15).
2. தேவனை நம்பு - தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் தர விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு உண்மையாக இருப்பதும், அவரை முழுமையாகச் சார்ந்திருப்பதும் அவசியம் ஆகும். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கிறபடியால், நமக்கு கடவுளின் உதவி தேவை. அவருடைய சித்தத்தை நாம் அறிந்து கொள்ள அவர் நம் மனதில் பேசுவதன் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மூலமாகவும் நமக்குதவுகிறார்.
3. குணநலன் நாடு - மனத் தாழ்மை, எளிமை, கிறிஸ்துவுக்கு அர்ப்பணம், சரியான முன்னுரிமைகள் மற்றும் நம்பிக்கைகள், அன்பான நடக்கை, சுய கட்டுப்பாடு, மற்றவர்களுடன் பொறுப்பாக பழகுதல் மற்றும் கிறிஸ்தவ சபையுடனான தொடர்பு ஆகியவைகளை கவனிக்க வேண்டும்.
4. ஞானம் தேவை - கர்த்தர் அருளுகிற ஞானத்தில் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அவசர முடிவுகள் அவசியமா என்று ஆராய்ந்து தேவ துணை நாட வேண்டும்.

அன்பான தேவனுடைய பிள்ளைகளே ஒருவர் திருமணம் செய்வதற்கு முன், சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேதாகம ஒளியில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்களை மட்டுமே இங்கு கொடுத்திருக்கிறேன். இவை சரியாகப் பின்பற்றப் பட்டால் சரியான வாழ்க்கைத் துணை கண்டடைவதில் தேவையற்ற சிக்கல்களை எளிதாக தவிர்க்கலாம்.
 - அற்புதராஜ்
 +91 9538328573
(இக்கட்டுரை என் இறையியல் கல்வியின் ஒரு பகுதியாக முதலில் தயாரிக்கப்பட்டு, பின் “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது).

Wednesday, October 31, 2018

சகோ. சாம் ஜெபத்துரை - மறைவும் மறவா நினைவுகளும்

நாம் வாழ்கிற காலத்தில் வாழ்ந்த தேவ மனிதர்களில் மறைந்த சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தில் இருந்து பல நல்ல பிரசங்கிகள் எழும்பியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவராலும் கர்த்தருக்காக எழுதுவதில் பிரகாசிக்க முடியவில்லை.

கர்த்தரின் எழுத்தாணி என அவரைப் பற்றி சொல்வது  மிகைப்படுத்தப்பட்ட ஒரு வாசகம் என்றாலும், கர்த்தருக்காக எழுதுவதில் ஒய்வறியாதவர். உருப்படியாக, பக்திவிருத்திக்கேதுவாக தொடர்ந்து எழுதுவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்பது உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ந்தேர்ச்சியான உழைப்பும் வாசிப்பும் இல்லையேல் தொடர்ந்து எழுதுவது மிகவும் சிரமம். சகோ. சாம் ஜெபத்துரை அவர்கள் அனேக நற்காரியங்களை எழுதியும், மொழிபெயர்த்தும் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு ஒரு அரும்பெரும் பங்காற்றியிருக்கிறார் என்பது கொஞ்சமும் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை.

ஒரு நற்செய்தியாளராக தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து அனேக வாலிபர்களை கிறிஸ்துவுக்காக எழுப்பி இருக்கிறார். சுவிசேஷகர்களாக கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்பும் எவரும், இவரின் ஜெபம் மற்றும் வைராக்கியம் ஆகியவற்றை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மலையில் தினந்தோறும் சென்று இராமுழுதும் ஜெபிக்கிற வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். நண்பர்களே! ஜெபிக்கிறவர்கள் என்றைக்குமே தேவனால் பயன்படுத்தப்படாமல் போவதில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

இவர் தன்னை ஒரு எழுத்தாளராகவோ, நற்செய்தியாளராகவோ சுருக்கிக் கொள்ளாமல், எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை தயங்காது செய்தார். ஒரு காலத்தில் இவரின் பாடல் கேசட்டுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. நல்ல மலையாளப் பாடல்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததுடன், இவரே நல்ல பாடல்களை எழுதவும் செய்தார். வேளை வந்த போது, தன் பயணங்களைக் குறைத்துக் கொண்டு சபை ஊழியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

பொதுவாக ஒருவரின் மறைவின் போது, அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையே சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். என்னளவில் சில் விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது உண்மைதான். மணிபர்சில் அபிசேகம் போன்ற சில காரியங்களைச் சொல்வதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. இவர் தவறே செய்யாதவர் என்றும் நான் சொல்ல வில்லை. ஆனால் தவறே செய்யாதவர் எவர்தான் உண்டு. அவைகளின் மத்தியிலும் இவர்  மீண்டும் எழுந்து தேவனுக்காக இறுதி வரை ஓடியமைக்காக தேவனை துதிக்கிறேன். இவர் உண்டாக்கிய நல்ல விளைவுகள் மற்றும் எண்ண மாற்றங்களுக்காக தேவனை நன்றியோடு நினைக்கிறேன். கடைசியாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஞாயிறு அன்று ஆராதனை துவங்குவதற்கு சற்று முன்பு இவருடைய மனைவி மரித்து விட்டார்கள். அன்று ஞாயிறு ஆராதனைக்கு எந்த பங்கமும் வரக் கூடாதென, அவர் ஆராதனைக்கு முன்னரோ அல்லது ஆராதனை வேளையிலோ சொல்லாமல், அன்றும் வழக்கம் போல கர்த்தருடைய செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்து ஆராதனை முடிந்த பின் அனைவரையும் அமரச் செய்து, கண்ணீருடன் தன் மனைவியின் மறைவைச் சொல்லி இருக்கிறார். இது அவருடைய சபையில் ஊழியம் செய்கிற என் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி. அவர் மறைந்தாலும், அவர் ஆரம்பித்த ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை மற்றும் ஜெபமாக இருக்கும். அதுதான் நமது விருப்பமும் கூட!
தேவனுடைய சமூக இளைப்பாறுதலில் பிரவேசித்திருக்கும் அருமை சகோதரன் சாம் ஜெபத்துரை அவர்களுக்காக தேவனை துதிக்கிறேன்!

Arputharaj
Bangalore
+91 9538328573

Saturday, September 1, 2018

ஞானஸ்நானம் - அறிய,புரிய,தெரிய வேண்டிய 10 காரியங்கள்

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும். என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின் கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல் வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

ஞானஸ்நானம் என்றால் என்ன?
ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும் தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம் பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம் பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல் செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to explain,I think.

இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல் ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும் உயர்வானது.
(source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0 )
(இன்னுமதிகமாக அறிந்து கொள்ள:http://en.wikipedia.org/wiki/Baptism

ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 காரியங்கள் எவை?

ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?

1.தேவ நீதியை நிறைவேற்ற

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)

2.இரட்சிக்கப்ப
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)

3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)

4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)

5.பரலோகத்திற்குப் போக
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)

6.பாவ மன்னிப்பு பெற
நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)

7.கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்பட
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)

8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)

9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)

10. நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை
ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)

மேலே கண்ட பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பரமேறிய பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.

நீங்கள் மறுபடி பிறந்தவரா? ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவரா?


Also posted in:http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0

Wednesday, August 22, 2018

நல்ல மேய்ப்பன் சொன்ன நல்ல சமாரியன் கதை

ஆண்டவராகிய இயேசு சொன்ன உவமைகள் அனைத்தையும் கவிதை நடையில் எழுத வேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ள, அதன் முதல் முயற்சியாக நல்ல சமாரியன் கதையை கவிதையாக படைத்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நல்ல மேய்ப்பன் சொன்ன நல்ல சமாரியன் கதை

திருடர்கள் குறித்த பயம் இன்றி
பயணம் செய்தவன் ஒருவன்
குற்றுயிரும் குலையுயிருமாக
மரத்திலிருந்து விழுந்த இலையைப் போல்
அடிபட்டு, அனைத்தையும் இழந்து
அலங்கோலமாய் வழியருகே வீழ்ந்த
உதவி செய்வார் யாரென ஏங்கி
வழிமேல் விழிவைத்தான்

அவசரமாய் ஒரு மனிதன்
அருகில் வந்து பார்த்தான்
ஐயோ பூசைக்கு நேரமாகிவிட்டதேயென
ஓசையின்றி அவ்விடமிட்டகன்றான்
ஆசாரியன் எனும் பூசாரி அவனை தடுத்தது
ஆசாரமோ - யாருக்குத் தெரியும்!

அடுத்து வந்தவன் அங்கி தரித்தவன்
அருகில் கூட வராமல்  கொஞ்சமும் இரக்கமின்றி
அப்படியே வழியை விட்டு விலகிப் போனான்
முன்னவர்க்கு இல்லாத அக்கறை எனக்கெதுக்கு என
முன்பை விட வேகமாய் நடந்து, முந்த முயன்றான்
பண்பிலான் அன்பிலான்  என்ற லேவியன்

ஒதுக்கப்பட்டவன் ஒருவன் வழியில்
ஓரமாய் விழுந்து கிடந்தவனைப் பார்த்ததும்
இறங்கி அவன் அருகே சென்று பதைபதைத்து
ஐயோ என்றிரங்கி காயம் கட்டி மருந்து வைத்து
நொடியும் தாமதியாமல் வாகனத்திலேற்றி
பத்திரமாய் பார்த்துக்கொள்ளவே
சத்திரம் சென்று சேர்த்தான் சீக்கிரமாய்
பையில் இருப்பதை எல்லாம் எடுத்து
கையில் கொடுத்து, இது போதாதெனில் – அடுத்து
வருகையில் இன்னமும் தரத் தயார்
இவனை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்வாயாயென
அடிபட்டவனை சத்திரத் தலைவனிடம் விட்டுச் சென்றவன்
தன்னலமற்ற அன்புடன் மாபெரும் சேவை செய்தவன்
சமாரியன் – அவனுக்குத் தெரிந்தது வலி மாற்றும் வழி

நித்திய வாழ்க்கைக்கு வழி கேட்ட
நியாய சாஸ்திரிக்கு வழிகாட்ட
இயேசு சொன்ன கதையிதின் செய்தி
இறைவனை நேசிப்பது என்பது கோவிலில் மட்டுமல்ல
மற்ற(எ)வரையும் உன்னை நேசிப்பது போல நேசி
இதுவே இறைவன் காட்டிய வழி
இதுவே இறைவனைக் காட்டும் வழி
இதுவே திருமறையின் திவ்யவாசகம்
                                                          -    Arputharaj
                                                              9538318573
                                                          

Wednesday, July 25, 2018

ஏசுவைப் பாடுவேன் ஏனென்று கேட்காதீர்கள்

ஏசுவைப் பாடுவேன்
ஏனென்று கேட்காதீர்கள்
ஏழை என் மனதிலுள்ள
ஏக்கங்கள் அனைத்திலும்
ஏமாற்றாமலெனை மாற்றினார்
ஏசியவர்கள் மத்தியில்
ஏளனம் செய்தவர் காண
ஏற்றமுறச் செய்தாரவர்

ஏன் என்ற கேள்விகள்
ஏராளம் இருந்தன
ஏதேதோ குழப்பங்கள்
ஏவினவன் மகிழ்ந்தான்
ஏதேனினின் தொடர்ச்சி என
ஏகடியம் செய்து வீழ்த்தப் பார்த்தான்

ஏந்தினார் தம் கரங்களில்
ஏதுக்கழுகிறாய் நான் இருக்கிறேன்
ஏகாதிபதி, என் கைகளில் அதிகாரம்
ஏசாயா முதலிய தீர்க்கருரைத்தபடி
ஏறினேன், கொல்கதாவில் பாவத்தை கொன்றுபோட்டேன்
ஏனெனில் நீ என் பிள்ளை, உனக்காகவே உயிர்கொடுத்தேன்
ஏற்பாட்டில் உள்ள படி உயிர்த்தெழுந்தேன்
ஏற்ற தந்தை நானிருக்க கலங்காதே
ஏக மனதோடு என்னிடம் வா என்றவர்
ஏனையோர் விலகினாலும், எப்போதும் உடன் இருப்பேன்
ஏசுவே என்றழைத்தால், நான் பேசுவேன்
ஏன் என்ற கேள்விக்கு பதில் தருவேன்
ஏனெனில் நானே உன் பதில் என்றார், இயேசு.

- அற்புதராஜ்
#Tamil_Christian_poem
#தமிழ்_கிறிஸ்தவ_கவிதை

Monday, July 23, 2018

கீர்த்தனைப் பாடல்களின் காலம் முடிந்து விட்டதா? – ஒரு சிறிய அலசல்

Old Tamil Christians Keerthanai songs - Outdated or Outstanding!

தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றாலே, சிலருக்கு அர்த்தம் புரியாத அவைகளை ஏன் பாட வேண்டும் என ஒதுக்கி விடுகின்றனர்.  தூய தமிழில் தன் பெயர் இருக்குமாறு மாற்றிக் கொண்டு, சிரிப்புக் காட்டிக் கொண்டு இருக்கும் சில பிரபலங்கள் கூட செந்தமிழ் கீர்த்தனைகளுக்கு எதிராக எதையாவது சொல்லி வைத்து, அனேகர் அதுவும் உண்மைதானோ என்று நம்பும்படி செய்து விடுகின்றனர். Old is Gold  என்று சொல்வார்கள். இது தமிழ் கிறிஸ்தவ சபைகளில், குறிப்பாக பாடல்களைப் பொறுத்தவரையில் அப்படி சொல்ல முடியுமா என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். சமீபத்தில் நிகழ்ந்த ஒரு உரையாடலில் இருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

அதென்ன அந்தர… சுந்தர?
சில நாட்களுக்கு முன் ஒரு தம்பியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, கீர்த்தனைப் பாடல்கள் பற்றி பேச்சு திரும்பியது. அர்த்தம் புரியாத கீர்த்தனைப் பாடல்களை, இப்போது எப்படி பாடுவது என்று அந்த தம்பி வாதாடினார். அர்த்தம் புரியாத ஒரு பாடலைச் சொல்லுங்கள் நாம் என்ன வென்று பார்ப்போம் என்றதற்கு, உடனே அவர் சொன்னது தான் இந்த பத்தியின் தலைப்பு. அந்தர சுந்தர மந்தர என்றால் என்ன?, யாருக்காவது புரியுமா என்று கேட்டார். நான் இந்த பாடலின் துவக்கம் தெரியுமா என்று கேட்ட போது, உடனே தெரியாமல் தடுமாறினாலும், சுதாரித்துக் கொண்டு, “ஏசுவையே துதி செய்” என்று என்னுடன் சேர்ந்து பாடத் துவங்கினார்.
உடனே கீர்த்தனைப் புத்தகத்தை தேடி எடுத்து அந்த குறிப்பிட்ட பத்தியின் வரிகளை அவருக்கு வாசித்துக் காண்பித்தேன்.

அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா ந்தன் – ஏசுவையே துதி செய்

இந்தப் பாடல் வரிகளை கொஞ்சம் நிதானமாக, வாசித்தால் எளிதில் பொருள் கொள்ளலாம் என்று சொல்லியும் அவர் நம்ப வில்லை. அந்தர வான் தரையும் தரு தந்தன் சுந்தரம் மிகுந்த சௌந்தர்ய அனந்தன் என்று சொல்லியும் தம்பிக்கு பிடிபடவில்லை. நான் எனக்குத் தெரிந்த தமிழில் பின்வருமாறு மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று.

அந்தரம் என்றால் மேலே இருக்கிற என்றும், வான் என்றால் வானம் என்றும்,  தரு தந்தன் என்றால் நன்மைகளைத் தருகிறவன் என்றும் சொல்லி, மேலே உள்ள வானத்திலும், பூமியிலும் உள்ள நன்மைகளைத் தருகிறவர் என்று பொருள் சொன்னேன்.
இரண்டாவது வரி மிகவும் எளிமையானது, சுந்தரம் மிகுந்த என்றால், அழகு நிறைந்த, முடிவிலா சௌந்தரியமுடைய இறைவன் என்பது அதன் பொருள் என்றேன். இந்தப் பாடல் எவ்வளவு பொருள் நிறைந்தது என்பதைச் சொல்லி, இந்தப் பாடல் பிறந்த கதையை அவருக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் அரசவைக் கவிஞராக இருந்த போது, அரசர் அவர்கள் தன் கடவுளைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அது அரசக் கட்டளையானது. மிகுந்த குழப்பத்துடன் வீடு வந்த சாஸ்திரியார் அவர்கள், தீர்க்கமாக அரசரிடம் அவருடைய வேளை வந்த போது, என்னால் இதைத் தான் பாட முடியும் எனக் கூறி, “ஏசுவையே துதி செய்” பாடலைப் பாடினார் என்பது வரலாறு. இதைப் பற்றி முன்னமே பாடல் பிறந்த கதை தொடரில் எழுதி இருக்கிறேன்.

இன்று எத்தனை கிறிஸ்தவர்கள், போதகர்கள் தாங்கள் சொல்கிற வார்த்தையின் அர்த்தம் புரிந்து அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அல்லேலூயா என்பதன் முழுமையான அர்த்தம் தெரியாமல் மூச்சுக்கு முன்னூறு தடவை எப்போதெல்லாம் இடைவெளி தேவையோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்துகிற போதகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் எனக் கேட்டேன். ஒரு பாடலைப் பற்றி யாராவது ஒருவர் சொன்னார் என்பதற்காக அப்படியே அதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.

“ஏசுவையே துதி செய்” பாடல் ஒரு உதாரணம் மட்டுமே. அக்காலத்திலும், இக்காலத்திலும் ஏன் எக்காலத்திலும் இறைவன் அருளும் பாடல்கள் அனைத்திற்கும் பின் ஒரு கதை இருக்கும். எனக்குத் தெரிய, முன்பெல்லாம் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில் கடினமான வார்த்தைகளின் பொருள் இன்னவென்று கீழே போட்டிருப்பார்கள். அது போக அனேக கீர்த்தனைப் பாடல்களில் உள்ள வார்த்தைகள் அன்று பயன்பாட்டில் இருந்தவையும் கூட. தமிழ்நாட்டில் தமிழில் தான் மாணவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் காலகட்டத்தில், இனிமேல் இது போன்ற கருத்துச் செறிவுள்ள பாடல்களின் கடினமான வார்த்தைகளை பொருளுடன் அச்சிட்டால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். ஒரேயடியாக ஒரு பாடலை ஒதுக்கிவிடாமல், அதன் பொருளை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயற்சிக்கலாம் அல்லவா.

இன்று பல பாரம்பரிய சபைகளிலும் இந்த நிலைதான் காணப்படுகிறது. சபையின், பாடல்களின் வரலாறு தெரியாமல், பக்தியில்லாமல் பாடல்கள் பாடப்படும்போது அது மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்ப்படுத்தாது. அனேக பெந்தெகோஸ்தே சபைகளில் புதிதாக எதாவது பாடல் அறிமுகம் செய்து மக்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நினைத்துக் கொண்டு பல நல்ல பழைய பாடல்களை அப்படியே ஓரமாக பரணில் தூக்கி வைத்து விட்டனர். முறையான உபதேசம் என்பது இன்று சபைகளில் காண்பதரிதாக இருப்பது உள்ளபடியே வருத்தமே. நிற்க. கட்டுரையின் நோக்கத்தை விட்டு நான் வழிவிலக வில்லை.

பழைய பாடல்களை மட்டுமே பாடவேண்டும் என்று சொன்னால் அது கண்டிப்பாக தவறு. அது போலவே, புதிய பாடல்கள் விஷயத்திலும். நாம் நல்ல பழைய கீர்த்தனைப் பாடல்களை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அவர்கள் இசையில் மட்டுமல்ல, தேவனை அறிகிற அறிவிலும் வளர்வர். வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள், கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படுபவர்களின் சமகாலத்தவர். அன்றும் இசை உலகில் அவருக்கான இடம் முறையே கொடுக்கப்படவில்லை. இன்று கிறிஸ்தவர்கள் அவர் பற்றி அறிந்திருப்பதே அரிது என்றாகிவிட்டது. ”பழையன கழிதலும் புதியன புகுதலும்” என நாம்  சொல்லலாகாது. இப்படிச் சொல்லிதான் சிலர் மூல உபதேசத்தையே விட்டு விலகிச் சென்று விட்டனர்.  புதிய பாடல்களில் இருக்கும் எளிமையை வரவேற்க வேண்டும், அதே சமயத்தில் பழைய பாட்ல்களில் இருக்கும் கருத்தாழமிக்க வேத சத்தியங்களை மறந்துவிடாமல், அதை பாடி நினைவுபடுத்திக் கொள்வது என்றுமே பயன் தரும். அனேக கீர்த்தனைப் பாடல்கள் எழுதப்பட்ட சூழ்நிலைகளை வாசித்தால், மிகவும் பிரமிப்பாகவும், தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் நாம் அனேக நல்ல விஷயங்களை, இக்காலத்திற்கு உதவாது என ஒதுக்கிவைத்ததினால் இழந்துவிட்டோம். வசனத்திற்கு முரண்படாத எதுவும் வழக்கொழிந்து போவதில்லை. தேவனை மகிமைப்படுத்துகிற எதுவும் அதன் அழகை இழந்துவிடுவதுமில்லை.  நல்ல புதிய பாடல்களை கைதட்டி வரவேற்கிற நாம், இசையிலும், பொருளிலும் மிகவும் குறிப்பிடத்தகுந்த  கீர்த்தனைப் பாடல்களை புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, அதன் மேன்மை இன்னதென்று உணர்ந்து, காலங்களைக் கடந்தும் அதன் outstanding quality ஐ நினைத்து இறைவனுக்கு நாம் நன்றி சொல்லி அவரை துதிப்போம்.

ஏசு
வையே துதிசெய்  நீ மனமே
ஏசு
வையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

மாசணுகாத பராபர வஸ்து
,
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந் தரு தந்தன்

சுந்தர மிகுந்த சவுந்தரா ந்தன்

எண்ணின காரியம் யாவு முகிக்க

மண்னிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Tuesday, March 13, 2018

ஆண்டுகள் கடந்தும் காட்சிகள் மாறவில்லை

சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளைக் கண்டு பாரதத் தாய் வேதனையுடன் பாடுவதாக  சந்தியாகு ஐயர் அவர்கள் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலைப் படிக்கும்போது அதில் சொல்லப்பட்டிருப்பவைகள் இன்றும் உண்மையாக இருப்பதை அறியலாம்.

பல்லவி
எந்தன் நிர்ப்பந்தம் பாரும் என் மக்களே!
இரங்க மனமில்லையோ
அனுபல்லவி
இந்து மா சமுத்ரம் தொடங்கி
இமய மலை வரைக்கும்- ஐயோ!
1
பஞ்சம் பசியுற்றோரைப் பார்க்கப்
பதறுதே என் உள்ளம்! – யாரும்
அஞ்சும் பாழ் கொள்ளை நோயின்வாளினால்
அறுப்புண்டவர் எத்தனை பேர்!
2
கண்மணிகளில் கணக்கற்ற பேர்கள்
கல்வி யாதும் அறியார்!-பலர்
விண்ணோளியற்று வீண்பக்தியினில்
வீழ்ந்து கிடக்கின்றாரே! – ஐயோ!
3
சாதி என்னும் பேயும் நுழைந்து
சகலரையும் கலைத்தான்! – அவன்
வாதினால் பல சாதிகள் எழ
வம்புகள் மிக வந்ததே! – ஐயோ!
4
ஏசு என்னும் உலக ரட்சகர்
எனக்காகவும் மரித்தார்! – பல
தேசம் அவரைப் பெற்றிருக்க, அந்த
நேசர் எனக்கு இல்லையோ? – ஐயோ!

34 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட “கிறிஸ்தவ அருட்கவிஞர்கள்” எனும் நூலில், இப்பாடல் கிறிஸ்தவ கீர்த்தனைகள் நூலில் சேர்க்கப்படாதப் பாடல் எனக் கூறும் தயானந்தன் பிரான்சிஸ் அவர்கள் இப்பாடலின் அடியொற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “ அறுபதாண்டுகளுக்கு முன்பு இருந்த இழிநிலைகளும் கொடுமைகளும் எந்த அளவுக்கு மறைந்திருக்கின்றன, இன்று? பட்டினிக் கொடுமைகள் – கல்வியில்லாமை- மூடப் பழக்க வழக்கங்கள் – சாதி வெறி ஆகியவை புதுப் புது வடிவம் பெற்று மக்களை இன்றும் வதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் தாயின் புலம்பல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.”


சந்தியாகு ஐயர் அவர்கள் பல ஆங்கிலப் பாமாலைகளை அதன் பொருள் மாறாமல் நம் தேச மொழியிலும், இசையிலும் யாவரும் பொருளுணர்ந்துப் பாட வழி செய்தவர். “விந்தைக் கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை” என்ற பாடல் ஒரு உதாரணம்.

இதை வாசிக்கையில், கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கிருக்கும் பொறுப்பையும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும் இருப்பதை மறந்து “மற்ற” விசயங்களில் கவனம் செலுத்துதல் முறையாகாது என்று நான் உணர்கிறேன். நீங்கள்!