Wednesday, December 5, 2007

இயேசு நேசிக்கிறார்

 இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?



இந்த பாடலின் வரலாற்றை சில வருடங்களுக்கு முன்பாக நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவின் வாலிபர் கூட்டம் ஒன்றில் அறிந்து கொண்டேன். குறு நாடகமாக நடித்துக் காட்டப்பட்ட அந்த காட்சி இன்றும் என்னகத்தே பசுமையாக உள்ளது.

19ம் நூற்றாண்டில் இலங்கை, யாழ்ப்பாணத்தில் கொலைக்குற்றத்திற்காக தூக்குத்தண்டணை பெற்ற கைதி ஒருவர் சிறையில் இருந்தார். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்தியாளர் ஒருவர் அவரை சந்தித்து அன்பாக பேசி "இயேசு உங்களை நேசிக்கிறார் " என்று கூறினார். கொலைக் குற்றவாளியான தன்னையும் நேசிக்க ஒருவர் உண்டா என்று வியந்த அவர், அதை நம்ப மறுத்து "உண்மையாகவே இயேசு என்ன நேசிக்கிறாரா" என்று வினவினார். அப்போது அந்த நற்செய்திப் பணியாளர் தன் கையிலிருந்த வேதாகமத்தை காட்டி "இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே" எனப் பகர்ந்தர்.
அதன்பின்பு பலவாரங்கள் தொடர்ந்து அவர்கள் இருவரும் வேதாகமத்தை சேர்ந்து வாசித்து இயேசுவின் அன்பைக் குறித்து சிந்தித்தனர். தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர் அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.
அவரை தூக்கிலிட்டபின் அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல அவரது உறவினர் வந்தனர். அப்போது அவரது தலையணைக்குக் கீழே ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.
இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்வின் அனுபவ வரியாக, சாட்சியாக பிரிக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரின் இறுதி நாட்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு நம்பிக்கையுடன் கழிந்தது.

ஓ இயேசுவே நீர் என்னை நேசிக்க என்னிடம் ஒன்றுமில்லையே!

Link to hear this song:
http://www.manavai.com/songs/trad5_3.ra

இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன் தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிழல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து நார்கழிந் துலைந்தும்
நீதன் இயேசென்னை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை அன்பாஇ நேசிக்கிறார்
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய் பறப்ப்பேன்

5. ராசன் இயேசுவின்மேல் இன்பக் கீதஞ்சொலில்
ஈசன் இயேசெனை தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ்சொல்வேன்

தீர்மானங்களை சோதித்துப்பார்க்க - ஒரு செக்போஸ்ட்

சரியான தீர்மானங்களைத்தான் நீங்கள் எடுக்கிறீர்கள்
என்று எப்படி சொல்ல முடியும்?


கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதாகம வழிகாட்டிகள் நமது தெரிந்தெடுப்புகளை சரிபார்க்க உதவும்.


1.இது வேத வசனத்திற்கு முரண்படுகிறதா?
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.... நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.(சங்.119:9- 11)

2. நான் இதற்காக ஜெபித்தேனா?
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி.4:6). யோசபாத்தை தன்னுடன் யுத்தம் பண்ண இஸ்ரவேலின் இராஜ அழைக்கும்போது அவன்,கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான் (1இராஜா22:5). நமக்கும் இது நல்ல ஆலோசனைதானே?

3.இத்தீர்மானத்தினால் நான் யாரைப் பிரியப்படுத்த முயலுகிறேன்?
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே(கலா.1:10).

4.இத்தீர்மானத்தினால் எனது பக்தி இன்னும் விருத்தியடையுமா?
எனது சிந்தை உலகு சார்ந்ததாயிருக்கிறதா? உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினா லுண்டானவைகள். (1யோவான்2:15- 17).

5.இயேசு இதைச் செய்வாரா?
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.(1பேதுரு1:15).

6. நான் இதைச் செய்தது பிறருக்குத் தெரிந்தால் வெட்கமடைவேனா?
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. (எபே.5:11,12)

7. நான் கர்த்தரையே நம்பியிருக்கிறேனா?
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்( நீதி.3:5,6). தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்( நீதி.11:28).

8. சட்டத்தின் முன்னரும் உடன் பணியாளர் முன்னிலையிலும் குற்றமற்றவனாயிருப்பேனா?
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை(ரோமர்13:1).

9. நம்பகமான் ஆலோசனையை நான் நாடியிருக்கிறேனா?
உனது சூழ்நிலையை சரியாய் நிதானிக்க முடியாதபடி ஆன்மீகரீதியிலும் உடலுக்கும் மனதுக்கும் அடுத்தும் சம நிலையை இழந்ததாக உணருகிறாயா? ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்( நீதி.11:14).

10. இத்தீர்மானம் எவ்வாறு பிறரைப் பாதிக்கும்?
மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.7:12).இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்(லூக்கா17:1,2).

11.இதை நிறைவேற்ற மிகைப்படுத்தவோ பொய்சொல்லவோ வேண்டுமா?
ஒரு கருத்துக் கணிப்பின்படி 60சதவீத மக்கள் தங்கள் வேலைகளில் உயர்வதற்கு தொடர்ந்து பொய் சொல்லுகிறார்களாம்.பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்( நீதி.12:22)

12.இதின் நீண்ட கால விளைவு என்னவாயிருக்கும்?
அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்( நீதி.10:2).

13.இது எப்படி என் சாட்சியை பாதிக்கும்?
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் (1பேதுரு.2:12).

By. Jeanette D. Gardener
Source: Blessing

ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டுமா?

கிறிஸ்தவ சிந்தனையில்
ஆணாதிக்கம் VS பெண்ணாதிக்கம்


இன்றைய முன்னேறிய சமுதாயத்தில் அடிக்கடி எழுந்து அடங்கிப் போகிற காரசாரமானதொரு தலைப்பு ஆணாதிக்கமா? அது அடிமைத்தனம் என்று முழங்குகிற, கொடி பிடிக்கிற பெண் இயக்கங்களையும், இவங்களுக்கு வேறு வேலையில்லை என்று புலம்புகிற ஒரு கூட்டத்தையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம். வேதாகமம் இந்த இரு கோஷங்களில் எதற்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது. ஒரு சிறிய அலசல்.


பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.ஆதி.2:18
ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.ஆதி2:20
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.ஆதி2:21௨3
மேற்கண்ட வசனங்களில் இருந்து நாம் ஒரு சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம். எல்லாவிதமான மிருகங்களும் முதலிலேயே ஜோடி ஜோடியாக சிருஷ்டிக்கப்பட்டன, ஆனால் ஆதாமுக்கு ஒரு ஏற்ற துணையின் அவசியமும் அவசரமும் புரியவைக்கப்பட்ட பின் தான் ஏவாள் சிருஷ்டிக்கப்பட்டு ஆதாமிடத்தில் கொண்டுவரப்பட்டாள். கவனிக்கவும். ஏவாள் ஆதாமிலிருந்துதான் சிருஷ்டிக்கப்பட்டாள்(ஏனெனில் சிலர் நாங்கள் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் - நீங்கள் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள். ஆகவே நாங்கள்தான் உங்களைக் காட்டிலும் பெலசாலிகள் என்று கூறுவர்). இருவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்- தேவனுடைய கரத்தினால் உருவாக்கப்பட்டவர்கள்.தேவன் ஏவாளை ஆதாமுக்கு ஏற்ற துணையாக இருக்கும் படி உண்டாக்கினார். இது ஆங்கில வேதாகமத்தில் helpmate என்று உள்ளது(பலருக்கு தங்கள் மனைவிகள் hellmate ஆக இருப்பதாக ஒரு உணர்வு). ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும்படி இருவரும் உண்டாக்கப்பட்டார்கள். மீண்டும் கவனிக்கவும். இருவரை ஒருவர் ஆளுவதற்கல்ல - ஒருவருக்கொருவர் உதவுவதற்காகவே உண்டாக்கப்பட்டார்கள்.ஏவாள் மட்டுமல்ல நாம் எல்லாருமே ஒருவருக்கொருவர் உதவுவதற்குதான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் வேதாகமத்தில் பல இடங்களில் பெண்கள் ஆண்களைக்காட்டிலும் கீழானாவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்களே என்று நீங்கள் நினைக்கக் கூடும். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்து விட முடியாது. ஆதி மனிதன் பாவம் செய்தபோது அவர்கள் சபிக்கப்பட்டார்கள்.அவர்களை தேவன் சபிக்கும் போது வேறு வேறு வார்த்தைகளால் சபித்தார். முதலில் பாவம் செய்தது,ஏமாந்தது ஏவாள்தான் என்பது நாம் எல்லாருக்குமே தெரியும். ஆனால் அப்பாவத்தை ஆண்டவர் ஆதாமிடம்தான் கேட்டார். ஏனெனில் ஆதாமே ஏவாளுக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் ஏவாளுக்கு ஆதாம் தான் பாதுகாப்பு கொடுத்திருக்கவேண்டும். ஏவாள் அவசரப்பட்டு பாவம் செய்தாலும் அவன் அதைக் கண்டிக்காமல் ஏவாளின் மேல் உள்ள பிரியத்தினால் அதை வாங்கிப் புசித்தான் என்று வேதவல்லுனர்கள் கூறுகின்றனர்.
சரி காரியத்திற்கு வருவோம். நான் ஏற்கெனவே கூறியபடி எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்து விட முடியாது. ஆகவே தேவன் பெண்களுக்கு சில காரியங்களை விலக்கிவைத்திருந்தார். மேலும் வேதாகமக் காலத்தில் தேவனை அறியாத புறவினத்தவர் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமல்ல - அவர்களை தங்கள் விருப்பப்படி கிட்டத்தட்ட ஒரு விலங்குபோலத்தான் நடத்தினர்.ஆனால் வேதாகமப்பெண்கள் தங்கள் புருஷர்களால் நேசிக்கப்பட்டனர், அவர்கள் விரும்புவதை செய்யும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அதேவேளையில் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்று பவுல் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்வி பலருக்கு உண்டு.வேதாகமத்தில் மிரியம் தீர்க்கதரிசி முதற்கொண்டு பல பெண் ஊழியர்களை தேவன் அனுமதித்திருக்கிறார். பல பெண்கள் வல்லமையான ஊழியம் செய்திருக்கின்றனர். தேவன் அவற்றையெல்லாம் ஒருபோதும் தடைசெய்யவில்லை. எந்த ஆணும் அதற்கு எதிராகவும் இருக்கவில்லை. இயேசுவுடன் கூட பல பெண்கள் ஊழியம் செய்தனர்(லூக்கா 8:3). புதிய ஏற்பாட்டு சபைகளிலும் பல பெண் ஊழியர்கள் இருந்தனர். இதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. பின்னர் ஏன் பவுல் அவ்வாறு கூறவேண்டும்? பெண்களின் பேச்சு நாம் எல்லாரும் அறிந்ததே. சபையில் பேசும் போது நிதானத்துடன் பேசுவது மிகவும் அவசியமாகும். மிகவும் முதிர்ச்சி பெற்ற பெண்களும் கூட பேசும் போது நிதானம் தவறுகிறதை நான் கண்டிருக்கிறேன். நாம் சபையில் பேசும் போது மனிதர் முன்பு அல்ல - தேவனுக்கு முன்பாக பேசுகிறோம். ஆக்வே அதில் ஒரு ஒழுங்கு இருப்பது நல்லது என்பதற்காக பவுல் அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஆனால் இன்று பின்மாரி அபிசேகத்தில் தேவன் ஜாய்ஸ்மேயர் போன்ற பலரையும் போதிக்கும் ஊழியத்தில் ஆண்களைக் காட்டிலும் சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. பலர் பேசும் வேகத்துக்கு நம்மல் ஈடு கொடுக்க முடிவதில்லை(இது குறையா? அல்லது நிறையா?).வேதாகமம் நமக்கு போதிக்கும் மிகப்பெரிய நடைமுறை உண்மை என்னவெனில்," சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது." காரியம் என்னவெனில் யார் பெரியவர் என்பதல்ல நாம் என்ன செய்கிறோம்,எப்படி செய்கிறோம் என்பதே.
சும்மா வழ வழவென்று பேசாமல் கேள்விக்கு வாங்க என்ற உங்கள் குரல் கேட்கிறது. வேதாகமம் கூறுவது ஆணாதிக்கமா? அல்லது பெண்ணாதிக்கமா? என்று பட்டிமன்ற கேள்வி கேட்டால் உங்கள் கேள்வியே தவறு என்று நான் கூறுவேன். ஏனெனில் வேதாகமத்தில் முழுக்க முழுக்க தேவனுடைய ஆதிக்கமே!வேதாகமத்தில் ஆணாதிக்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது பெண்ணாதிக்கத்திற்கு ஆதரவாகவோ ஒரு இடத்திலும் கூறப்படவில்லை. வேதாகமத்தில் பெண்கள் எல்லா ஆண்களுக்குமல்ல தங்கள் புருஷர்களுக்குத்தான் கீழ்ப்படிந்து(அது அடிமைத்தனமல்ல- அன்பு) இருக்கும் படி போதிக்கப்பட்டனர்(1பேதுரு 3:5 ).ஆண்கள் தங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூறவேண்டுமென (ஆதிக்கம் செலுத்த அல்ல)கட்டளையிடப்பட்டிருந்தனர். தேவன் குடும்பத்தை சபைக்கு ஒப்புமையாக கூறுகிறார். சபைக்கு தலை கிறிஸ்து. அது போல ஒரு குடும்பத்துக்கு தலை புருஷன். நல்ல மனைவி வீட்டை கட்டுகிறாள்.அது கட்டிடம் அல்ல - உறவுகள்.தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்(1கொரிந்தியர்14:33).
இந்த கட்டுரை எழுத உந்துதலாய் இருந்தவர்களுக்காக நன்றி.பிழைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் , திருத்திக் கொள்கிறேன். இது ஒரு முழுமையான கட்டுரை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பயணத்தின் தொடர்ச்சி என்று கூற முடியும் என நினைக்கிறேன். உங்கள் கேள்விகளை கேட்டால் தொடர்ந்து எழுத உதவியாக இருக்கும் என நம்புகிறேன். கர்த்தராகிய இயேசுவின் கிருபை நம்மனைவரோடும் இருப்பதாக.ஆமென


பரலோகத்தில் எந்த சபையினர் அதிகம் இருப்பார்கள்?

இன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்றூ மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுகொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு. ஆலயங்களிலும் சபைகளிலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக அதிகம் இருப்பார்கள் ஆனால் பரலோகத்தில் அவர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று வேடிக்கையாக ஒரு போதகர் கூறுவார். சரி கேள்விக்கு வருவோம். எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அல்லது யார் பரலோகத்திற்கு செல்வார்கள்?



இந்த கேள்விக்கு விடை காணுமுன் இங்கிலாந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டவரும் அத்தேசத்தில் ஒரு பெரிய எழுப்புதலுக்கு காரணமாக இருந்தவர் ஜான்வெஸ்லி. இவரின் சீரிய ஊழியத்தின் பயனாக வெஸ்லியன் சபைகள் மலர்ந்தன. ஜான்வெஸ்லிக்கு ஆண்டவர் ஒரு தரிசனம் கொடுத்தார். அத்தரிசனத்தில் ஆண்டவர் வெஸ்லியை பரலோகத்திற்கு எடுத்துச் சென்றார்.
பரலோகத்திற்குச் சென்றவுடனே வெஸ்லியின் மனதில் பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அவர் ஆண்டவரை திரும்பிப் பார்த்தார். ஆண்டவரோ புன்முறுவலுடன் வெஸ்லியைப் பார்த்தபடி நின்றார். பொறுமையிழந்த வெஸ்லி ஆண்டவரை நோக்கி ''ஆண்டவரே! பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் எங்கள் சபையான வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் தானே? "என்று தைரியமாக கேட்டார். ஆண்டவரோ சிரித்த முகத்துடன்," வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்தில் இருக்க மாட்டார்கள்" என்று பதிலுரைத்தார். இதை கேட்ட வெஸ்லிக்கு தூக்கிவாரிபோட்டது. ஏனெனில் அவரது காலத்தில் வெஸ்லியன் சபையினர் மட்டுமே பரிசுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர். வெஸ்லியன் எழுப்புதலுக்கு முன்பு சபையில் பரிசுத்தத்தைக் குறித்த போதனைகள் மிகவும் குறைவு. அக்காலத்தில் புகைப்பது,குடிப்பது போன்றவை பாவமாக கருதப்படவில்லை. ஆகவே அதிர்ச்சியடைந்த வெஸ்லி வெஸ்லியன் சபைகளே பரலோகத்திற்கு வரமுடியாது என்றால் யார் வருவார்? என்று யோசித்தார். வெஸ்லியன் சபைகளுக்கு அடுத்தாற்போல் வசனத்திற்கேற்ப இருந்த சபை லூத்தர் அவரின் சீர்திருத்தத்தினால் பிறந்த புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகும். ஆகவே அந்த சபையை சேர்ந்தவர்களாவது பரலோகத்தில் அதிகம் பேர் இருப்பார்கள் என்றெண்ணியவராக,"ஆண்டவரே அப்படியானால் புராட்டஸ்டாண்டு சபையார் அதிகம் பேர் பரலோகத்தில் இருப்பார்களா?" என்று கேட்டார். ஆண்டவர் மீண்டும் புன்னகை பூத்தவாறு "அவர்களும் ஒருவர் கூட பரலோகத்தில் இருக்கமாட்டார்கள்" என்று சொன்னார். இந்த பதிலை கேட்ட வெஸ்லி மிகவும் நிலைகுலைந்து போனார். வெஸ்லியன் சபைகளுக்கும் பர்லோகத்தில் இடமில்லை, புராட்டஸ்டாண்டு சபைகளுக்கும் பரலோகத்தில் இடமில்லை. கத்தோலிக்க சபைதான் எண்ணிக்கையில் அதிகம். ஆகவே அந்த சபையாராவது சிலர் பரலோகத்தில் இருப்பர்கள் என்று நினைத்து," ஆண்டவரே! கத்தோலிக்க சபை மட்டும் தான் பரலோகத்திற்கு வருமா?" என்று வினவினார். இதற்கும் ஆண்டவர் சிரித்துக் கொண்டே "அவர்களும் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்" என்று பதிலுரைத்தார். இப்பதில் வெஸ்லியை முற்றிலும் அதிச்சியுரச் செய்தது." இந்த உலகத்தில் உள்ள சபைப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்திற்கு வரமாட்டார்களெனில், யார்தான் பரலோகத்திற்கு வர முடியும்?" என்று சோர்வாக வெஸ்லி நம் இயேசுவிடம் கேட்டார்.
அப்போது நம் ஆண்டவராகிய இயேசு வெஸ்லியை நோக்கி," இந்த உலகத்தில் யாரெல்லாம் என்னுடைய இரத்தத்தினால் பாவங்களற கழுவப்பட்டும், மன்னிக்கப்பட்டும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பரலோகத்திற்கு வருவார்கள். எந்த சபைப்பிரிவுகளும் பரலோகத்திற்கு வர முடியாது." (ஏனெனில் பரலோகத்தில் ஒரு சபைதான்.) என்று ஆண்டவர் பதிலுரைத்தார்.ஆண்டவரின் இப்பதில் மூலமாக வெஸ்லி உண்மையை உணர்ந்து கொண்டார்.

இந்த உதாரணத்திற்குப் பிறகும் ஒரு விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் பரலோகத்தில் காணப்படவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். ஏனெனில் அப்பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையெனில் நமக்கான இடம் மிகவும் கொடிய இடமாகும். அவ்விடம் சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த விழுந்துபோன தூதர் கூட்டத்தாருக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலுள்ளது. ஆகவே தைரியமாக முன்னேறிச் செல்வோம். அனேகரை அவ்விடம் கொண்டுவர நம்மாலான எளிய சிறிய பணிகளை ஆண்டவருக்காக செய்வோம்.

கிறிஸ்தவர்கள் பொய் சொல்லலாமா?

இன்றைய காலக் கட்டத்தில் சிறிய சிறிய காரியங்களுக்காவது எல்லரும் பொய் சொல்கிறதை நாம் காண்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பெரிய தேவமனிதர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட பொய் சொல்வதை ஒரு தவறான காரியமாக எடுத்துக் கொள்வதில்லை. உங்களைப் பார்த்து யாராவது," நான் எந்த காலத்திலும் பொய் சொன்னதில்லை, இனிமேலும் ஒருக்காலும் பொய்சொல்ல மாட்டேன்" என்று சொன்னால் ஏற இறங்க அவர்களை பார்ப்போமல்லவா? கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் பேசலாமா? அல்லது பொய் பேசுவதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா?


எனக்கு பிடிக்காத குறள்கள் பல உண்டு. அதில் ஒன்று
பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்
ஒரு பொய்யினால் நன்மை பயக்குமெனில் அந்த பொய் பொய்யல்ல,அது உண்மைதான் என்பது இதன் பொருளாகிறது. கிறிஸ்தவ நோக்கில் இதனை ஏற்றுக் கொள்வது சற்று(எனக்கு மிகவும்) கடினமாக இருக்கிறது. நான் ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்த போது அந்த கம்பெனியின் மேலதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் செய்துமுடிக்க முடியாத ஒரு இலக்கை நிர்ணயித்து அதை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவர். ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் பொய் பேசாமல் அதாவது அந்த இலக்கை ஏற்றுக் கொள்ளாமல் தப்பிப்பது ஒரு தவிப்பு எனக்கு. இது எனக்கு ஒரு பெரிய போராட்டமாகப் பட்டது. ஆகவே இதற்கு ஆலோசனை உதவி வேண்டி பிரபலமான ஒரு ஊழியரிடம் சென்றேன். ஆனால் அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் கூறியதென்னவெனில், " நம் தேவன் சின்ன சின்ன பொய்களையெல்லாம் தவறாக நினைக்க மாட்டார்.ஆகவே வருத்தப்படாதீர்கள்" என்று சொன்னார். இன்றைய கால கட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் பொய் பேசாமல் வாழ முடியுமா?
"சின்ன சின்ன தவறுகளும், சின்ன சின்ன பொய்களும் தான் வாழ்க்கையை சுவாராசியமாக்குகின்றன" என்று ஒருவர் சொன்னார். இது எந்தளவுக்கு உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். பல பெரிய பிரச்சனைகளுக்குக் காரணம் சின்ன சின்ன பொய்களும் தவறுகளும் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு பொய் சொன்னால் ஒராயிரம் பொய் சொல்ல வேண்டியதிருக்கும் என்பது நம் முன்னவர் வாக்கு. நாம் மேலே தொடர்ந்து வாசிப்பதற்கு முன் நம் தேவன் இக்காரியத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அறிவது மிக அவசியம். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. -எண்ணாகமம் 23:19
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை - 1 சாமுவேல் 15:29 பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை -சங்கீதம் 101:7
பொய்யுரையாத தேவன் -தீத்து 1:3
எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் -எபிரெயர் 6:18
ஆம் நம்முடைய தேவன் பொய்யுரையாத தேவன். ஆகவேதான் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆகவேதான் தேவன் நமக்கு எழுதிய கடிதமாகிய பரிசுத்த வேதாகமத்திலும் அதை எழுதி வைத்துள்ளார்.
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.-லேவியராகமம் 19:11
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள் -கொலோசெயர் 3:9
இதை வாசிக்கிற நீங்கள் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. இக்காலத்தில் இது சாத்தியமா? அட போங்கையா! என்று கூற நினைக்கலாம். ஆனால் பரிசுத்த வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது: ஆதலால்,அவர்(இயேசு)தாமேசோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்(எபி.2:18).
அவர் நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் என்று எபிரெயர் 4ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் இந்த பொய் ஆகிய சோதனையிலும் சோதிக்கப்பட்டு அதனை ஜெயித்தார். அவர் ஜெயித்தால் நாமும் ஜெயிக்க முடியும். நம்முடைய ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரே! பொய் சிறிதானாலும் அது பாவமே. தேவன் பொய்யை மட்டுமல்ல- பொய் பேசுகிறவர்களையும் வெறுக்கிறார். நாம் பொய் பேசும் போது அவர் மனம் துக்கமடைகிறது.ஆகவே நாம் இந்தக் காரியத்திலும் தேவனைப் போல மாற முயற்சி செய்வோம். தேவன் இப்படிப்பட்ட முயற்சிகளில் பிரியமாயிருக்கிறார்.
பலருக்கு பொய்பேசுவது ஒரு தொற்று நோய்
பொய்பேச தவறாது அவர்கள் வாய்
உண்மையை உணர்ந்திடுவாய்
உலகிற்கு உரைத்திடுவாய்
வாய்மை காத்திடுவாய்
வேதமே மெய்
மற்றதெல்லாம் பொய்
சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் என்று நம் ஆண்டவர் இயேசு கூறினார். நாம் பொய் பேசுவோமாகில் நாம் யாருடைய பிள்ளைகளாக இருப்போம். நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். நாம் பொய் பேசாமலிருப்பதற்கு ஒரு எளிய பார்முலா இருக்கிறது. அது என்ன தெரியுமா? நாம் வழ வழவென்று பேசாமல் நம்முடைய நாவை அடக்கினால் போதும். ஏனெனில் சொற்களின் மிகுதியினால் பாவமில்லாமற் போகாது என்று வேதாகமம் கூறுகிறது.பேசாதிருந்தால் மூடனும் ஞானியென்னப் படுவான் என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. ஆகவே நாம் பொய்பேசுகிற காரியத்தில் குற்ற மனப்பான்மையை நீக்கி குற்றம் களைய முயலுவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
தேவனே! பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்-சங்கீதம் 119:29.