Sunday, October 31, 2021

Sola gratia (கிருபையினால் மட்டுமே)

வாசிக்க: எரேமியா 49,50; சங்கீதம் 119:89-176; 2 தீமோத்தேயு 1

வேத வசனம்  2 தீமோத்தேயு 1: 9. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

கவனித்தல்:  இரட்சிப்பைப் பற்றிய கொள்கை எல்லா மதங்களிலுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கைக்கு எதிரான பவுத்த மதம் உட்பட, பெரும்பாலான மதங்கள் ஒருவர் தன் ஆன்மீக வாழ்வின் இறுதியில் அல்லது மரணத்திற்குப் பின்பு அவர் செய்த செயல்கள்/கர்மா அடிப்படையில் இரட்சிப்பை அடைவார் என போதிக்கின்றன. இரட்சிப்பைப் பற்றிய புரிதலானது மதத்திற்கு மதம் வேறுபடுகிறது.  இரட்சிப்பைப் பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டமானது மற்ற எல்லா மதஙகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும்.  நாம் உயிரோடிருக்கும்போதே நம் ஆவிக்குரிய வாழ்க்கையானது நம் இரட்சிப்பின் அனுபவத்துடன் ஒரு தொடக்கத்தைக் காண்கிறது.  நம் இரட்சிப்பு தேவனுடைய ஈவு என்று வேதம் போதிக்கிறது. நாம் தேவனுடைய கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறோமேயன்றி, நம் தகுதியினாலேயோ அல்லது நம் கிரியைகளின் அடிப்படையிலோ இரட்சிப்படைவதில்லை. ”தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” என்று எபேசியர் 2:4-5 இல் பவுல் கூறுகிறார். நம் இரட்சிப்பு என்பது கிறிஸ்துவுடன் வாழ்கிற அனுபவம் ஆகும்.

 தேவனே முதலாவது நம்மைக் கண்டு, நம்மை இரட்சித்தார். அவருடைய அன்பின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, நாம் நன் அனுதின ஆழ்வில் அவருடைய இரட்சிப்பை பெற்றனுபவிக்கிறோம். தேவன் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். நாம் நம் இரட்சிப்பைப் பெற்ற பின்பு, நம் வாழ்க்கை முன்பு போல இருப்பதில்லை/ இருக்கக் கூடாது. தேவனுடைய அழைப்பிற்கு ஒரு நோக்கம் உண்டு. நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பி, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ அவர் அழைக்கிறார் (எபே.1:4; 1 தெச.4:7). தேவன் எப்பொழுதுமே பலவீனமான மனிதரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கிறிஸ்துவில் பலப்படுத்தி அவருக்காக பரிசுத்தமாக வாழப் பண்ணுகிறார். இது தேவனுடைய ஈவு ஆகும். ”இரட்சிப்பைப் பெறுவதற்கு தகுதியான மனிதர்களை தேவனுடைய கிருபை கண்டுபிடிப்பதில்லை, மாறாக அது அவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது” என பரிசுத்த அகஸ்டின் சொல்கிறார்.  “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5).  நாம் முதல்முறை கிறிஸ்தவரான போது, நாம் தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொண்டோம் என நாம் நினைக்கிறோம். ஆனால் ”உலகத்தோற்றத்துக்கு முன்னே” தேவன் நமக்கு கிருபையை கிடைக்கக் கூடியதாக மாற்றி இருக்கிறார் (3பே.1:4; 1பேதுரு 1:20). தேவனுடைய அறிவு நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது ஆகும்.  தேவனுடைய இரட்சிப்பின் செயலுக்கு தேவன் நம் மீது கொண்ட அன்பை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியும். நான் தற்செயலாகவோ அல்லது ஏதோ விபத்தில் கிறிஸ்தவராக வில்லை. நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர் நமக்கு கிருபையைத் தருவதற்கு ஒரு நோக்கம் உண்டு. பரிசுத்தமாக வாழ்வதே அவருடைய நோக்கம். கிறிஸ்துவுக்காக வாழ்வது என்பது ஒரு ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும். அது நாம் விரும்பினால் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு அல்ல, நாம் பரிசுத்தமாக வாழ்வதற்காகவே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகும். நாம் தேவனுக்காக வாழ்வதற்கான பலத்தை தேவனுடைய கிருபை நமக்குத் தருகிறது.

பயன்பாடு:  தேவன் முந்தி என்னில் அன்பு கூர்ந்தபடியால், நான் அவரை நேசிக்கிறேன் (1 யோவான் 4:19). எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத நேரத்தில் அவர் என்னைக் கண்டுகொண்டார். நான் பரிசுத்தமாக வாழ என்னை அழைத்தும், தெரிந்து கொண்டும் இருக்கிறார். என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர். என் வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற நான் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என்னை இரட்சித்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, என்னைக் கண்டுகொண்டு, காப்பாற்றிய உம் அன்புக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருக்காகா பரிசுத்தமாக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 302

Sola gratia (by grace alone)

READ: Jeremiah 49,50; Psalms 119:89-176; 2 Timothy 1

SCRIPTURE: 2 Timothy 1: 9 He has saved us and called us to a holy life—not because of anything we have done but because of his own purpose and grace. This grace was given us in Christ Jesus before the beginning of time.

OBSERVATION: The concept of salvation is a common theme in all religions. Most religions, even atheistic Buddhism, teach that a person will attain salvation at the end of his/her physical/spiritual life or afterlife, based on his works/karma. The understanding of salvation varies from religion to religion. The Christian view of salvation is different from all other religions. Our spiritual journey begins with the experience of salvation while we are still alive. The bible teaches us that our salvation is the gift of God. We are saved by God’s grace, not based on our merits or any works. In Eph.2:4-5, Paul says, “But because of his great love for us, God, who is rich in mercy, made us alive with Christ even when we were dead in transgressions—it is by grace you have been saved.” Our salvation is a living experience with Christ.

It is God who first found us and saved us. In obedience to his loving call, we start to experience his salvation in our daily life. God has called us to a holy life. After we receive our salvation, our life will/should not be the same. God has the purpose in his call. He wants us “to be holy” and calls us “to live a holy life” (Eph.1:4; 1 Thes.4:7). God always chooses weak people and makes them strong in Christ to be holy for him. It is the grace of God. St. Augustine says, “The grace of God does not find men fit for salvation, but makes them so.” Titus 3:5 says, “He saved us, not because of righteous things we had done, but because of his mercy.” We think we received God’s grace when we first became Christian. But God made it available for us even “before the creation of the world” (Eph.1:4, 1 Pet.1:20). God’s knowledge is beyond our understanding. God’s love for us is the only explanation we can attribute to God’s saving acts. We do not become Christians by chance or coincidently. We are God’s chosen people. He has a purpose in giving us his grace. Living a holy life is his purpose. It is our privileged responsibility to live for Christ. It is not an option to choose, but we are chosen to live it. God’s grace gives us the strength to live for him.

APPLICATION: I love God because he first loved me (1 Jn.4:19). He found me when there was no hope for me. God has called me and chosen me to a holy life. The one who called me is faithful. I must be faithful to God to fulfill his purposes in my life.

PRAYER: Father God, thank you for your grace that saved me. Jesus, thank you for your love that found and saved me. Holy Spirit, help me to live holy for the Lord. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 302

Saturday, October 30, 2021

பணம் எல்லா தீமைக்கும் வேர் ஆக இருக்கிறதா?

வாசிக்க: எரேமியா 47,48; சங்கீதம் 119:1-88; 1 தீமோத்தேயு 6

வேத வசனம் 1 தீமோத்தேயு 6: 10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கவனித்தல்: ”பணம் பத்தும் செய்யும்” என்பது நன்கறியப்பட்ட ஒரு பழமொழி. பணத்தினால் எதையும் வாங்கிவிடமுடியும் என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில கிறிஸ்தவர்கள் பணம் ஒரு தீய காரியம் (அ) பொருள் என்று தவறான புரிதல் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இங்கே, ”கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற” தவறான போதகர்களுக்கு எதிராக பவுல் எழுதுகிறார் (வ.3-5). கள்ளப் போதகர்கள் தீய நோக்கங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் சத்தியத்தை திரித்துக் கூறி, தங்கள் ஆதாயத்துக்காக எதையும் செய்யத் துணிகிறார்கள். பண ஆசையினால் பணத்தின் பின் செல்லுபவர்களும் அப்படியே இருக்கிறார்கள். “பணம் ஒரு நல்ல சேவகன், ஆனால் மோசமான எஜமானன்” என்று ஒரு தத்துவ ஞானி சொல்கிறார். பணம் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும்போது, பண ஆசை நம்மை இயக்கும்போது, அது எல்லா விதமான தீமைகளுக்கும் ஒரு வேராக மாறிவிடுகிறது. ”பண ஆசைக்காக செய்யப்படாத ஒரு பாவத்தை நினைத்துப் பார்ப்பதே கடினமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஆசையானது ஜனங்களை தற்பெருமை அடைந்து கொள்ள, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எதையாகிலும் செய்ய, நீதியை சிதைக்க, ஏழைகளை தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள, பொய் சொல்ல, ஏமாற்ற, திருட, மற்றும் கொலை செய்ய தூண்டுகிறது” என்று ஜான் மெக்ஆர்தர் என்ற தேவ மனிதர் விளக்குகிறார். இயேசு தன் மலைப்பிரசங்கத்தில், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாதுதேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” என்று நமக்குப் போதித்திருக்கிறார் (மத்.6:24).

பண ஆசையானது ஜனங்களை பொருளாசைக்கு நேராக வழிநடத்துகிறது. அது அவர்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ” சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பவுல் கூறுகிறார். 9ஆம் வசனத்தில் ஐசுவரியம் மற்றும் பணத்தின் பின் செல்கிற ஒருவரின் படிப்படியான வீழ்ச்சி மற்றும் அழிவு பற்றிய ஒரு காட்சியை பவுல் நமக்குத் தருகிறார். பொருளாசிக்காரர் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்று வேதம் கூறுகிறது (1 கொரி.6:10; எபே.5:5). கிறிஸ்தவர்களாகிய நாம் தேவபக்திக்கு எதிராக இருப்பவைகளை விட்டு விலகி ஓடி, நமக்கு ஏற்புடையவைகளைப் பின்பற்ற வேண்டும் (வ.11).  வேசித்தனம், விக்கிரகாராதனை, மற்றும் பாலியல் இச்சை ஆகியவைகளை விட்டு விலகி ஓடவேண்டும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது (1 கொரி.6:18; 10:14; 1 தீமோ.6:10; 2 தீமோ.2:22). நமக்கோ, “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (வ.6).

பயன்பாடு: பரிசுத்த வேதாகமம் பண ஆசைக்கு எதிராக போதிக்கிறதேயன்றி, பணத்துக்கு எதிராக அல்ல. ஒரு கிறிஸ்தவர் ஒரே நேரத்தில் தேவனுக்கும் உலகப்பொருளாகிய பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது. நான் பணத்தை பின் தொடர்ந்து செல்லும்போது, நான் கிறிஸ்துவை பின்பற்றுவதையும், அவருடைய வார்த்தையின்படி வாழ்வதையும் நிறுத்திவிடுகிறேன்.  ஒரு கிறிஸ்தவராக, நான் பண ஆசையை விட்டு விலகி ஓட வேண்டும்.  நான் “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி” நாட வேண்டும். தேவன் எனக்குப் பணத்தை மட்டுமல்ல, எனக்குத் தேவையானது அனைத்தையும் தருகிறார் (சங்.23:1). ஐசுவரியம் சம்பாதிக்க எனக்கு பெலன் தருகிற தேவனை நான் நினைவுகூர வேண்டும் (உபா.8:18).  பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும்படி அதை ஞானமாக பயன்படுத்த வேண்டும்.(1 தீமோ.6:17-19).

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என் அனுதின உணவை எனக்குத் தருகிறதற்காகவும், உம் மகிமையின் ஐசுவரியத்தின்படி என் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கிறதற்காகவும் உமக்கு நன்றி. கர்த்தாவே, பண விஷயஙகளில் ஞானமாக நடந்து கொள்ள உம் ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 301

Is money a root of all evil?

READ: Jeremiah 47,48; Psalms 119:1-88; 1 Timothy 6

SCRIPTURE:  1 Timothy 6: 10 For the love of money is a root of all kinds of evil. Some people, eager for money, have wandered from the faith and pierced themselves with many griefs.

OBSERVATION:  “Money makes many things” is a popular saying. Some people wrongly think that they can buy anything with money. Some Christians misunderstand money itself as an evil thing. Here, Paul writes against false teachers who are “people of corrupt mind, who have been robbed of the truth and think that godliness is a means to financial gain” (v.3-5). False teachers have false motives; they will twist the truth and do anything for their gain. It is so with those who go after money, with the love of money. A philosopher says, “Money is a great servant but a bad master.” When money starts to control our lives, when the love of money drives us, it becomes a root of all kinds of evil. John MacArthur explains, “It is hard to imagine a sin that has not been committed for love of money. Such love causes people to indulge themselves, show off, distort justice, take advantage of the poor, lie, cheat, steal, and murder.”  In his Sermon on the Mount, Jesus taught us, “No one can serve two masters… You cannot serve both God and money” (Mt.6:24).

The love of money leads people to material greed. It never allows them to be happy with what they have. Paul says, “Some people, eager for money, have wandered from the faith and pierced themselves with many griefs.” In verse 9, Paul gives us a picture of the gradual decline and destruction of a person who goes after wealth.  The bible says a greedy person will not inherit the kingdom of God ( 1 Cor.6:10, Eph.5:5). We Christians should flee from ungodliness and pursue what is appropriate for us (v.11). The Bible warns us to flee from idolatry, sexual immorality, love of money, and youthful lusts (1 Cor.6. 18; 10:14; 1 Tim.6:10;  2 Tim.2:22). For us, “godliness with contentment is great gain” (v.6).

APPLICATION: The Bible teaches against the love of money, not against money. A Christian cannot serve God and money simultaneously. When I go after money, I stop following Christ and living by his word. As a Christian, I must flee from the love of money. I should pursue “righteousness, godliness, faith, love, endurance, and gentleness,” for they have eternal value. God gives me all that I need, not just money (Ps.23:1). I should remember the God who gives me the ability to produce wealth (Deut.8:18).  I should use it wisely to store treasures in heaven (1 Tim.6:17-19).

PRAYER: Father God, thank you for giving my daily bread and providing for all my needs according to the richness of your glory. Lord, give me your wisdom to be wise in money matters. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 301

Friday, October 29, 2021

கர்த்தரை நம்புவது நமக்கு நல்லது

வாசிக்க: எரேமியா 45,46; சங்கீதம் 118; 1 தீமோத்தேயு 5

வேத வசனம் சங்கீதம் 118: 8. மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

கவனித்தல்:  ”ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்” என்பது பழமொழி.  ஆயினும், ஒருவர் உதவி தேடும்போது அல்லது அவசரமான உதவி தேவைப்படுகிற நிலையில் இருக்கும்போது, நாம் காண்பது என்ன? சங்கீதம் 118இல், தேவனுடைய உதவியைத் தேடியது பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து சங்கீதக்காரன் பேசுகிறார். ”மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்பதை அவர் கற்றுக் கொண்டார். சங்கீதம் 118 எதிரிகளிடம் இருந்து பெற்ற விடுதலைக்கான துதி மற்றும் நன்றியறிதலின் பாடல் ஆகும். சங்கீதம் 118இல் 8 ஆ வசனம் வேதாகமத்தின் மத்திய அல்லது மைய வசனம் என பலர் கருதுகின்றனர். பரிசுத்த வேதாகமத்தில் மிகவும் சிறிய அதிகாரமான சங்கீதம் 117க்கும் மிகவும் நீண்ட பெரிய அதிகாரமான சங்கீதம் 119க்கும் இடையில் சங்கீதம் 118 வருவது சுவராசியமான ஒன்றாகும். தேவனை நம்பி, அவருடைய உதவியை எப்பொழுதும் தேடும்படி வேதாகமம்  நமக்குப் போதிக்கிறது.

மனிதரின் உதவியை நம்புவதை விட தேவனுடைய உதவியைத் தேடுவது ஏன் சிறந்தது என்று நாம் கேட்கலாம்.  மனிதனுடைய சக்தியானது ஒரு வரையறைக்குட்பட்டது என்பதையும், ஆனால் தேவனோ சர்வ வல்லவர், அனைத்தும் அவருக்கு சாத்தியம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். மனித அன்பு பலவீனமானதும், பெரும்பாலும் சுயநல தன்மை உடையதாகவும் இருக்கிறது. ஆனால் தேவன் தம் நிபந்தனையற்ற அன்பை நமக்கு அருளுகிறார். சங்கீதக்காரன் பாடுவது போல, தேவனுடைய ”கிருபை என்றுமுள்ளது.”  உதவ விரும்புவர்கள் கூட உதவி செய்ய முடியாத நேரங்கள் உண்டு. ”இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” என்று வேதம் சொல்கிறது (சங்.121:4). நாம் உதவி வேண்டி தேவனை எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் இருந்து கூப்பிடலாம். ”தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என்று சங்கீதம் 145:18 கூறுகிறது. ”இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று இயேசு நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார் (மத்.28:20). நமக்கு உதவுகிற, நம்முடனே கூட எப்போதும் இருக்கிற பரிசுத்த ஆவியானவரை தேவன் நமக்குத் தந்திருக்கிறார் (யோவான் 14:16).  தேவனையும் அவருடைய உதவியையும் தேடுவதற்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தாம். தேவன் நமக்கு உதவும்படி கேட்பதற்கு நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவனை நான் இன்றைய தினமே தேடும்படிக்கும், ஒவ்வொரு நாளும் அவரில் மகிழ்ந்து களிகூரவும் சங்கீதம் 118 நமக்கு அறைகூவல் விடுக்கிறது. ”கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்று சங்,32:10 கூறுகிறது. ”நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்” என்று நாம் அனைவரும் கர்த்தரை நோக்கிச் சொல்ல முடியும் (சங்.91:2).

பயன்பாடு:  நான் எந்த மனிதர்கள் மீதும் என் நம்பிக்கையை வைக்கக் கூடாது. தேவன் எனக்குக் கொடுத்திருக்கிற என் மேல் கரிசனையுள்ள நல்ல மற்றும் அன்பான நண்பர்கள், உறவினர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். தேவன் மனிதர்கள் மூலமாகவே தம் உதவியை அனுப்புகிறார் என்பது உண்மைதான். ஆணால் என் கண்கள் தேவன் மீதே இருக்க வேண்டும், தேவன் பயன்படுத்தும் எந்த மனிதன் மீதும் இருக்கக் கூடாது. சில சமயங்களில் மனிதர்கள் நமக்கு உதவி செய்ய தவறலாம், ஆனால் தேவன் ஒருபோதும் தவறுவதில்லை. ”எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” (சங்.73:28).

ஜெபம்:  அன்பின் தேவனே, என் ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் உண்மையாக பதிலளிப்பதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம்மை எப்பொழுதும் நம்பவும், உமக்காக வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 300

It is better to trust the Lord

READ: Jeremiah 45,46; Psalms 118; 1 Timothy 5

SCRIPTURE:  Psalms 118: 8 It is better to take refuge in the Lord than to trust in humans.

OBSERVATION:  People say, “a friend in need is a friend indeed.” However, when a person seeks help or is in dire need, what do we see? In Psalm 118, the psalmist speaks from his personal experience of seeking God’s help. He learned, “It is better to take refuge in the Lord than to trust in humans.” Psalm 118 is a praise and thanksgiving song for the deliverance from enemies. Many consider Psalm 118:8 as the central or middle verse of the Bible. Interestingly, Psalm 118 comes between the shortest chapter (Ps.117) and the longest chapter (Ps.119) of the bible. The Bible teaches us to trust God and seek his help always.

We may ask why it is better to seek God’s help than trust any human’s help. We all know human resources are limited, but God is all-powerful, and all things are possible for him. Human love is weak and often selfish in nature. But God offers his unconditional love. As the psalmist sings, “His love endures forever.” There are times even people who want to help cannot help us. The bible says, “he who watches over Israel will neither slumber nor sleep” (Ps.121:4). We can call for God’s help anytime and from anywhere. Ps.145:18 says, “The Lord is near to all who call on him, to all who call on him in truth.” Jesus promised us, “surely I am with you always, to the very end of the age (Mt.28:20). God has given us his Holy Spirit, who helps us and be with us forever (Jn.14:16). All days are good days to seek God and his help. We do not need to wait to ask God to help us. Psalm 118 invites us to seek God TODAY and rejoice in him EVERY DAY. Ps.32:10 reminds us that “the Lord’s unfailing love surrounds the one who trusts in him.” We all can say of the Lord, “He is my refuge and my fortress, my God, in whom I trust” (Ps.91:2).

APPLICATION:  I should not put my hope and trust in any humans. I thank God for the good and kind friends, relatives, and family members who are concerned about me. Of course, God sends his help through humans. But my eyes should be on God, not on humans whom God uses. At times, humans may fail to help us; God never fails. “But as for me, it is good to be near God. I have made the Sovereign Lord my refuge” (Ps.73:28).

PRAYER: Loving God,  thank you for faithfully answering my every prayer. Lord, help me to trust you always and live for you. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 300

Thursday, October 28, 2021

தேவபக்தியில் பயிற்சி பெறுதல்

வாசிக்க: எரேமியா 43,44; சங்கீதம் 117; 1 தீமோத்தேயு 4

வேத வசனம் 1 தீமோத்தேயு 4: 7. சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
8. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

கவனித்தல்:  ”உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே” என்று ஒரு பழங்கால தமிழ் புலவர் பாடுகிறார். இப்பாடல் வரியில் பொருள் என்னவெனில், நான் என் உடம்பை போஷித்து வளர்க்கும்போது, அது என் உயிருக்கு (உயிர் தரும் சக்தி, மூச்சுக்கு) உதவுகிறது. இந்நாட்களில், ஜனங்கள் தங்கள் ஆரோக்கியம் பற்றி அதிக கரிசனை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உடற்பயிற்சி நிகழ்வுகள் அல்லது உடற்பயிற்சி நிலையங்களில் சேருகிறார்கள். ஆயினும்,  தங்கள் சரீர உடற்பயிற்சியை தொடர்ந்து முறையாக செய்பவர்கள் மட்டுமே தங்கள் சரீரங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறார்கள். இங்கே, பவுல் சரீரப்பிரகாரமான பயிற்சியைப் பற்றிக் குறைவாக பவுல் எதுவும் சொல்லவில்லை. மாறாக, தேவபக்தியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு இன்னதென்று காண அவர் நம் கவனத்தை திருப்புகிறார். அவர் தன் ஆவிக்குரிய மகனும் மாணவருமாகிய தீமோத்தேயுவிடம், “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” என்று கட்டளையிடுகிறார். தேவபக்திக்கேதுவாக பயிற்சி பெறுவதில் முதலாவது படி என்னவெனில்,  ” சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதை”களை உறுதியாக புறக்கணித்து ஏற்றுக்கொள்ள மறுத்து, கவனிக்காமல் இருக்க வேண்டும். கட்டுக்கதைகள் என்பது பொய்யான ஆனால் பரவலாக நம்பப்படுகிற பிரபல கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளைக் குறிக்கிறது. கிழவிகள் பேச்சு என்பது மூட நம்பிக்கை நிறைந்த, நம்ப முடியாத ஆனால் உண்மை என்று பலராலும் நம்பப்படுகிற கருத்துக்களைக் குறிக்கிறது. அவை சீர்கேடானவை என்று பவுல் கூறுகிறார். அப்படியானால், அவைகளைக் கேட்பதில் எந்தவித பயனும் இல்லை. 1-3 வரையிலான வசனங்களில், மக்களின் விசுவாசத்தைப் பாதிக்கிற, அவர்களை தவறாக வழிநடத்துகிற வஞ்சிக்கும் பொய்கள் மற்றும் வேதாகமம் சொல்லாத கடுமையான துறவறம் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். எல்லா கலாச்சாரங்களிலும் கட்டுக்கதைகளும், மூட நம்பிக்கைகளும், தவறாக வழிநடத்தும் கதைகளும் உண்டு. நாம் அவைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீர்கேடான எந்த கட்டுக்கதைகள் மற்றும் பேச்சுகளுக்கு நாம் எதிர்த்து நிற்க வேண்டும். நம் கவனமானது தேவன் மீதும், தேவனுடைய வார்த்தை மீதும் இருக்க வேண்டும். மனித வார்த்தைகள் மற்றும் கருத்துக்கள் மீது அல்ல.

தேவபக்தி என்றால் உண்மையில் என்ன அர்த்தம் என்று நாம் யோசிக்கக் கூடும்.  “தேவபக்தி என்பது…தேவனுடைய காரியங்களை நேசிப்பதும், தேவனுடைய வழிகளில் நடப்பதையும் குறிக்கிறது” என்று ஜான் பைபர் கூறுகிறார்.  வேறு விதமாகச் சொல்வதானால், நாம் தேவனுக்காக வாழும் விதத்தை இது குறிக்கிறது. தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த கட்டளையானது, நாம் தேவ பக்தியாக இருக்கும்படி,  நம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள அல்லது சுயக் கட்டுப்பாட்டை பயிற்சி செய்ய வேண்டும். எந்த பயிற்சியையும் செய்ய அதை உண்மையுடன் செய்வதற்கான அர்ப்பணிப்பு தேவைப்படும். நம்மனைவருக்கும் அனுதினம் அனுதினமும் தேவனுடைய வார்த்தையை வாசித்து ஜெபித்தல் என்பது அடிப்படையான ஒரு ஆவிக்குரிய ஒழுங்குகள் ஆகும். நாம் விசுவாச வார்த்தையிலும் சத்தியத்திலும் நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேவபக்தியானது இந்த உலக வாழ்க்கை மற்றும் நித்தியத்திற்கும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. நாம் கர்த்தரில் வளர்ந்து, சாட்சி பகர ஆவிக்குரிய ஒழுங்குகளை அனுதினமும் பயிற்சி செய்வதை நாம் அசட்டை செய்யக் கூடாது. அழிந்து போகக்கூடிய மற்றும் தற்காலிகமான காரியங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாம் நித்தியமான காரியங்களுக்கு நாம் எவ்வளவு அதிகமாகச் செய்ய வேண்டும்? ”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று இயேசு கேட்கிறார் (மத்.16:26).  தேவபக்திக்கேதுவாக வளரும்படி, நாம்  நம்மில் சிறப்பானதை நம் அதிக கவனத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். ”பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” என நம் மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் (கொலோ.3:2). நாம் நித்தியத்தின் மீது நம் கண்களை வைக்க வேண்டும், அநித்தியமான, மற்றும் தற்காலிகமானவைகள் மீது அல்ல (2 கொரி.4.17).

பயன்பாடு:  வேத வாசிப்பு, ஜெபம் மற்றும் மற்ற கிறிஸ்தவர்களுடனான ஐக்கியம் மூலமாக நான் தேவகத்திக்கேதுவாக முயற்சி செய்ய வேண்டும். நான் சரீர மற்றும் ஆவிக்குரிய பயிற்சிகளை அசட்டை செய்யக் கூடாது. அவை இரண்டுமே பயனுள்ளவை என்றாலும், என் ஆவிக்குரிய பயிற்சியானது என்னை தேவனுக்கருகில் நெருக்கமாக்க கொண்டு வந்து, நித்தியத்தில் அவருடன் இணைந்து வாழ என்னைப் பலப்படுத்துகிறது. நித்திய வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையையும் வாக்குத்தத்தத்தையும் தேவன் எனக்குத் தந்திருக்கிறார். அவருடன் என்றென்றும் வாழும்படியாக நித்தியத்திற்காக நான் வாழ வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தேவனே, தேவபக்திக்கேதுவாக இருக்கும்படி ஆவிக்குரிய பயிற்சிகளைச் செய்ய நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வசனத்தினாலே என்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தாவே, பரிசுத்தமாகவும் தேவ பக்தியாகவும் வாழ்வதற்கு உம் பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

-
அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 299

Training in godliness

READ: Jeremiah 43,44; Psalms 117; 1 Timothy 4

SCRIPTURE:  1 Timothy 4: 7 Have nothing to do with godless myths and old wives’ tales; rather, train yourself to be godly.
8 For physical training is of some value, but godliness has value for all things, holding promise for both the present life and the life to come.

OBSERVATION:  An ancient Tamil poet sings, “uṭampai vaḷartēṉ uyirai vaḷartēṉē,” which means I nurtured my body, it helped to my prana (life-giving force, breath) or life. Nowadays people are so concerned about their health and join in fitness programs or gyms. However, only those who are continually doing their physical exercises keep their bodies fit. Here, Paul does not undermine the value of physical training. Instead, he draws our attention to see the importance and value of godliness. He commands his protégé and spiritual son Timothy, “train yourself to be godly.” The first step for training in godliness is strictly rejecting, refusing, not paying any attention to “godless myths and old wives’ tales.” Myths refer to popular beliefs or opinions which are not true. Old wives’ tales mean superstitious and unreliable stories which are believed by many as true. Paul says they are godless, so listening to them is of no use. In verses 1-3, Paul mentions about deceiving lies and unbiblical asceticism which would affect people’s faith and mislead them. Every culture has myths and misleading tales. We should be careful about them; We have nothing to do with any godless myths and fables. Instead, our focus should be on God and his word, not on any human words and opinions.

We may wonder what the actual meaning of godliness is. John Piper explains, “godliness…. which means a love for the things of God and a walk in the ways of God.” In other words, it refers to the way we live for God. Paul’s command to Timothy implies that we need to discipline ourselves or exercise self-control to be godly. Any training requires a commitment to do it sincerely. Reading the Word of God and prayer are essential spiritual disciplines for all of us. We need to nourish ourselves in the truths of God by obeying the word of God because godliness has value both on this earth and in eternity. We should not neglect our everyday spiritual disciplines to grow and to witness for the Lord. When we give excessive importance to perishable and temporary things, how much more value should we give to eternal things? Jesus asks, “What good will it be for someone to gain the whole world, yet forfeit their soul? (Mat.16:26). We should give our utmost care to train ourselves in godliness. We should set our mind “on things above, not on earthly things” (Col.3:2). We must fix our eyes on eternity, not on temporal things (2 Cor.4:17).

APPLICATION:  I should train myself in godliness through reading the scripture, prayer, and fellowship with other Christians. I should not neglect both physical and spiritual exercises. Though they both are useful, but my spiritual training brings me close to God and enables me to live with him in eternity. God has given me the hope and promise for eternal life. I should live for eternity to be with him forever.

PRAYER: Father God, thank you for reminding me about the spiritual exercises to be godly. Jesus, sanctify me with your word. Lord, give me your strength to live holy and godly. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 299

Wednesday, October 27, 2021

ஆதித் திருச்சபையின் விசுவாச அறிக்கைப் பாடல்

வாசிக்க: எரேமியா 41,42; சங்கீதம் 116; 1 தீமோத்தேயு 3

வேத வசனம் 1 தீமோத்தேயு 3: 16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

கவனித்தல்:  ”கிறிஸ்தவர்கள் பொய் சொல்வதில்லை—அவர்கள் சபைக்குச் சென்று பொய்களைப் பாடல்களாகப் பாடுகிறார்கள்” என்று அருமையான தேவ மனிதர் A.W. டோசர் என்பவர் ஒரு முறை கூறினார். எல்லா கிறிஸ்தவர்களையும், ஆராதனைப் பாடல்களையும் குறைசொல்வது அவருடைய நோக்கம் அல்ல. அனேக கிறிஸ்தவர்கள் தாங்கள் நம்பாத அல்லது நடைமுறையில் கைக்கொள்ளாதவைகளை பாடல்களில் பாடுகிறார்கள். வேத வசன அடிப்படையினாலான, உந்துதலைத் தருகிற, மற்றும் அர்த்தம் பொதிந்த ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்ற போது, சில பிரபலமான ஆராதனைப் பாடல்கள் மக்கள் தங்கள் விசுவாசத்தையும் தேவன் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்த உதவுவதற்குப் பதிலாக, அவை அவர்களின் உணர்ச்சிகளை எழுப்பு, உணர்ச்சி வசப்படச் செய்வதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை. 1 தீமோ.3:16 இல் ஆதித் திருச்சபையின் விசுவாச அறிக்கை பற்றி நமக்குச் சொல்லும் ஆதிச்சபைப் பாடலின் ஒரு பாடலின் சில வரிகளை பவுல் நமக்குத் தருகிறார். தேவபக்தியின் இரகசியம் பற்றி பவுல் பேசுகிறார். இரகசியம் என்பது அறிந்துக் கொள்ளக் கடினமானது என்பதைக் குறிக்காமல், ஆண்டாண்டு காலமாக மறைபொருளாக இருந்து, இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் முக்கியத்துவம் பற்றி நமக்குக் கூறுகிறது. தேவ பக்தியானது உலகப் பிரகாரமான மக்களுக்கு ஒரு மறைபொருளாக இருந்து வருகிறது. ஏனெனில், மனித அறிவில் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.  ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒருவர் சபையில் விசுவாசத்தின் இரகசியத்தை  கற்றுக் கொண்டு புரிந்து கொள்கிறார் (1 தீமோ.3:9).  தேவ பக்தியின் இரகசியம் அல்லது மறைபொருள் இயேசுவே ஆவார் (ரோமர் 11:25; கொலோ.1:26). தேவபக்தியின் இரகசியம் மகா பெரிது என்று பவுல் சொல்கிறார். பவுலைப் பொறுத்த வரையில், தேவபக்தியின் இரகசியமாக இருக்கிற இயேசுவைப் பற்றி எந்த சந்தேகமும், கேள்வியும் இருக்கக் கூடாது.

16ஆம் வசனத்தில் பவுல் குறிப்பிடும் ஆறு வரிகள் கிறிஸ்துவைப் பற்றிய ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இயேசு கிறிஸ்துவின் மனித அவதாரப் பிறப்பு முதற்கொண்டு அவருடைய பரமேறுதல் வரையிலுமான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முக்கியமான விவரங்களை அவை சுருக்கமாகக் கூறுகின்றன. இந்தப் பாடல் இயேசுவின் தெய்வீகத்தைப் பற்றிக் கூறுகிறது. அது மட்டுமல்ல, மனிதனாகப் பிறந்த, பாடுபட்ட மற்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாடுகளில் பிரசங்கிக்கப்படுகிறார்; இலட்சக்கணக்கான மக்கள் அவரை விசுவாசிக்கிறார்கள். கிறிஸ்துவின் மனு அவதாரம் தேவன் நம் மீது கொண்ட அன்பை விளக்குகிறது. அவருடைய பரமேறுதல் நம் எதிர்காலத்தைப் பற்றிய நித்தியத்தைப் பற்றிய நம்பிக்கையை நமக்குத் தருகிறது. ”கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” என்று பவுல் அப்போஸ்தலன் கொலோ.1:27இல் கூறுகிறார். நாம் மகிமையின் இராஜாவைப் பாடுவோம், அறிக்கை செய்வோம், அவரையே அறிவிப்போம்.  

பயன்பாடு:  நான் இயேசுவைப் பற்றிப் பேசும்போதும் பாடும்போதும், என் வார்த்தைகள் என் விசுவாசத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும். நான் தேவனை உதட்டளவில் சேவை செய்யாமல், என் முழு இருதயத்தோடும் உண்மையாக நான் தேவனை சேவிக்க வேண்டும். கிறிஸ்துவின் மீதான என் விசுவாசத்திற்கும் கிறிஸ்துவுடனான என் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது, அவை ஒன்றாக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, வேதாகமத்தின் மூலமாக உம் குமாரன் இயேசு கிறிஸ்துவை நீர் எனக்கு வெளிப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எவ்வித மாய்மாலமும் இன்றி, தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்யவும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அன்புடன் அறிவிக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 298

A credal song of the early church

READ: Jeremiah 41,42; Psalms 116; 1 Timothy 3

SCRIPTURE:  1 Timothy 3: 16 Beyond all question, the mystery from which true godliness springs is great: He appeared in the flesh, was vindicated by the Spirit, as seen by angels, was preached among the nations, was believed on in the world, was taken up in glory.

OBSERVATION: A.W. Tozer, a great man of God, once said, “Christians don’t tell lies – they just go to church and sing them.” His intention was not to criticize all the Christians and worship songs. Many Christians sing the lyrics of the songs without even believing or practicing them. While there are thousands of scripture-based, inspirational, and meaningful songs, some popular worship songs merely stir the emotions of worshippers instead of helping people to express their faith and convictions about God. In 1 Timothy 3:16, Paul gives us a few lines of a song of the early church that tells us of their faith confession. Paul speaks about the mystery of godliness. Here the word mystery does not mean that it would be difficult to know but tells us the importance of the truth revealed in Jesus Christ, which was hidden for ages. Godliness is a mystery to worldly people, for they cannot understand it with their human wisdom. But, a follower of Christ learns and understands “the deep truths of the faith” in the church (1 Tim.3:9). The mystery or secret of godliness is Jesus Christ (Rom.11:25; Col.1:26). Paul affirms that the mystery of godliness is great. For Paul, there should be no doubt or question about Jesus, the mystery of godliness. 

The six lines that Paul refers to in verse 16 express profound truths about Christ. They succinctly tell us important details about Jesus Christ, from his incarnation to ascension. This song says the divinity of Jesus Christ. Not only that, the incarnated, crucified, and the resurrected Christ is preached among the nations; millions of people believe in him. Christ’s incarnation explains God’s love for us. His ascension gives us hope for the future and eternity. Apostle Paul says, “Christ in you, the hope of glory” (Col.1:27). Let us sing, confess and proclaim the King of glory.

APPLICATION: When I speak and sing about Jesus, my words should reflect what I believe about him. I should not do lip service to God but serve him faithfully with all of my heart. My faith in Christ should conform with my life in Christ.

PRAYER:  Father God, thank you for revealing to me your son Jesus Christ through the Bible. Holy Spirit, help me to serve God faithfully without any hypocrisy and proclaim the Gospel of Jesus Christ with love. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 298

Tuesday, October 26, 2021

ஜெபத்தைப் பற்றிய ஒரு குறிப்பு

வாசிக்க: எரேமியா 39,40; சங்கீதம் 115; 1 தீமோத்தேயு 2

வேத வசனம்1 தீமோத்தேயு 2: 1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2.
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

கவனித்தல்:  கிறிஸ்தவ ஜெபக் கூடுகைகளில் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும் வேதப் பகுதிகளில் 1 தீமோத்தேயு 2:1-2 ஆகும். அனேக கிறிஸ்தவர்களுக்கு இந்த வேதப்பகுதி மிகவும் பயனுள்ளதாக, குறிப்பாக ஜெப வேளைகளில் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாத போது மிகவும் உதவியாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நாம் நேசிக்கிற மற்றும் நம்மை அன்பு செய்கிற, ஆதரிக்கிறவர்களுக்காக மற்றும் நம் மீது கரிசனை உள்ளவர்களுக்காக ஜெபிக்கிறோம்.  கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்று நாம் கருதுபவர்களுக்காக, நாம் எப்படி ஜெபிக்கிறோம்? நாம் அவர்களுக்காக ஜெபிக்கிறோமா அல்லது அவர்களுக்கு எதிராக ஜெபிக்கிறோமா? இங்கே, எல்லா மனிதருக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும் என்று பவுல் நம்மை வலியுறுத்துகிறார். எல்லாருக்காகவும் ஜெபிப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உள்ள பாக்கியம் நிறைந்த பொறுப்பு ஆகும். பவுல் பயன்படுத்தி இருக்கிற “பிரதானமாய்” என்பது அப்படிப்பட்ட ஜெபங்களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. எல்லா மனிதருக்கும் ஜெபம் அவசியமானதாக இருக்கிறது. மற்றவர்களின் ஜெபம் தேவைப்படாத ஒரு உயிருள்ள நபரைப் பார்ப்பது சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும்.

ஜெபம் என்பதைக் குறிப்பிட பவுல் நான்கு கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்:  Deēseis (விண்ணப்பங்கள்), proseuchas (ஜெபங்கள்), enteuxeis (வேண்டுதல்கள் அல்லது பரிந்துரை ஜெபங்கள்), and eucharistias (ஸ்தோத்திரங்கள்). இந்த வார்த்தைகள் நாம் அனைவருக்காகவும் எல்லாவித ஜெபங்களையும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நாம் எல்லாருக்காகவும் ஜெபிக்கும்போது, ராஜாக்களை அல்லது ஆளுகை செய்கிறவர்களை மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக ஜெபிக்காமல் விட்டுவிடக் கூடாது. நம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக, அவர்களின் மத, அரசியல் மற்றும் சமுதாய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், நாம் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் நடைமுறைக்கு எதிரான கருத்தை உடையவர்களுக்காக நாம் எப்படி ஜெபிக்க முடியும்? என்று சிலர் கேட்கலாம். ரோம சக்கரவர்த்தி கொடுகோலனான நீரோ ஆட்சி செய்த போது பவுல் இதை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் நம் ஆட்சியாளர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஏனெனில், தேவன் அனைவர் மீதும் ஆளுகை செய்கிறவராக மாட்சிமை பொருந்தியவராக இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். ரோமர் 13:1இல், “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று பவுல் கூறுகிறார். பக்தியுள்ள பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ உதவும் அமைதியான ஒரு வாழ்க்கையை நாம் அனைவரும் விரும்புகிறோம். பிரதானமாக, நாம் எல்லா மனுஷருக்காகவும் ஜெபிக்கும்போது,  நம் விசுவாசத்தை நடைமுறைப்படுத்தும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நாம் உடையவர்களாக இருப்போம். நம் ஜெபத்திற்கான நோக்கம் இத்துடன் முடிந்து விடுவதில்லை.  தேவன் இத்தகைய ஜெபங்களில் விருப்பம் உள்ளவராக இருக்கிறார். ”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” அவர் விரும்புகிறார். எனவே, எல்லா மனுஷருக்குமான நம் ஜெபமானது ஒரு அமைதியான வாழ்க்கையை மட்டும் நமக்குத் தருவதில்லை, அத்துடன் மக்கள் இரட்சகராகிய தேவனிடம் வரும்படி சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான சாதகமான சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்கிறது. ”நாம் சந்திக்கவே முடியாத தலைவர்கள் மீதும் முழங்கால் ஜெபத்தின் மூலம் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண முடியும்” என்று  எல்லாவற்றிலும் எனக்கு அவரே (My all in all) என்ற நூலின் ஆசிரியர் ராபர்ட் ஜே மார்கன் சொல்கிறார். நம் ஜெபங்கள் வல்லமையுள்ளவை என்று நாம் நம்புகிறோம். நாம் விரும்பும் மாற்றத்தை உண்டாக்க அவைகளை நாம் பயன்படுத்தலாம்.

பயன்பாடு:  என் ஜெபங்களில் நான் குறுகிய மனப்பான்மை உடையவனாக நான் இருக்கக் கூடாது. நான் எல்லோருக்காகவும் ஜெபிக்க வேண்டும்; இதில் எனக்கும் என் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரானவர்களும் அடங்குவர். என் தேவன் ஆளுகை செய்கிறார்’ அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை (எரே.32:17). இறுதி அதிகாரம் மற்றும் வல்லமையானது என் தேவனின் கரங்களில் இருக்கிறது. நான் எல்லா மனிதருக்காகவும் ஜெபிக்கும்போது, எல்லா மனிதரையும் பற்றிய தேவனுடைய சித்தத்தை நான் நினைவில் கொள்ள வேண்டும். . ”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” நான் ஜெபிப்பேன்.

ஜெபம்:  இரட்சகராகிய தேவனே, எங்கள் நாட்டில் உள்ள அனைத்து ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, ஜனங்களை ஆளுகை செய்ய அவர்களுக்கு ஞானத்தையும் புத்தியையும் கொடுத்தருளும்.  பக்தியுள்ள மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ ஏற்ற ஒரு நாடாக என் நாடு இருக்க நான் ஜெபிக்கிறேன். கர்த்தர் என் நாட்டிற்காக பெரிய காரியங்களைச் செய்வார். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 297

A reference to prayer

READ: Jeremiah 39,40; Psalms 115; 1 Timothy 2

SCRIPTURE: 1 Timothy 2:  I urge, then, first of all, that petitions, prayers, intercession and thanksgiving be made for all people—
2 for kings and all those in authority, that we may live peaceful and quiet lives in all godliness and holiness.
3 This is good, and pleases God our Savior,
4 who wants all people to be saved and to come to a knowledge of the truth.

OBSERVATION: 1 Timothy 2:1-2 is one of the frequently used passages of the bible in Christian prayer meetings. Many Christians find this passage very helpful, especially when they do not know what to pray for in prayer times.  Many of us pray for those we love and those who love and support us and are concerned for us. For those we deem as not favorable to Christianity and Christians, how do we pray? Do we pray for them or against them? Here, Paul urges us to pray FOR all people. Praying for all people is a privileged responsibility of every Christian. Paul’s use of  “first of all” refers to the significance of such prayers. Every human needs prayer. It is impossible to see a living person who does not need others’ prayer.

Paul uses four different Greek words for prayer: Deēseis (supplications or petitions), proseuchas (prayers), enteuxeis (intercessions), and eucharistias (thanksgivings). These words emphasize that we must pray for all in all aspects. When we pray for all, we should not neglect the kings or rulers and those in authority. We must pray for our rulers and officers, regardless of their religious, political, and social stand. Some may ask, how could we pray for those who have views against Christian faith and practice?  Remember: Paul wrote these words when the cruel Roman emperor Nero was in power. We should pray for the rulers because we believe in GOD’S SOVEREIGNTY over all people. In Romans 13:1, Paul says, “The authorities that exist have been established by God.” We all desire to have “peaceful and quiet lives” that help us live godly and holy. First of all, when we pray for all, we will have such an atmosphere to practice our faith. Our purpose of prayer does not end with it. God is pleased with such prayers. He “wants all people to be saved and to come to a knowledge of the truth.” So, our prayers for all not only would give us a peaceful living but also create a favorable situation to proclaim the Gospel so that people may come to God the savior. Robert J Morgan, the author of “My all in all,” writes, “We can exercise knee-based influence over leaders whom we may never meet.” We believe our prayers are powerful. We can use it to make the change we desire.

APPLICATION:  I should not be narrow-minded in my prayers.  I should pray for all; this includes people who are against me and my Christian faith. My God sovereigns; Nothing is too hard for him (Jer.32:17). The ultimate power and authority are in God’s hands. As I pray for all, I should remember God’s will for all people. I will pray that “all people to be saved and to come to a knowledge of the truth.”

PRAYER:  Saviour God, I pray for all the rulers and officers of my country. Lord, give them wisdom and understanding to rule the people. I pray that my country should be a place for a godly and holy life. The Lord will do great things for my country. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 297

Sunday, October 24, 2021

விசுவாச கப்பல்

வாசிக்க: எரேமியா 37,38; சங்கீதம் 114; 1 தீமோத்தேயு 1

வேத வசனம் 1 தீமோத்தேயு 1: 18. குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
19. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.

கவனித்தல்:  ஒரு பெரிய படகில் உள்ள மீனவர்கள்  மீன்பிடிப்பதில் மும்முரமாக இருக்கையில் திடீரென அவர்கள் இருந்த படகு மூழ்கியது பற்றி சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். அவர்கள் படகு விபத்தை ஏற்படுத்திய ஒரு ஓட்டையை கவனிக்க முடியாத அளவுக்கு தங்கள் வேலையில் மிகவும் தீவிரமாக இருந்தார்கள். மரணத்தின் விளிம்பில் இருந்த அம்மீனவர்கள் அருகில் உள்ள படகுகளில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டனர். பண்டைய எபேசு நகரம் ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு துறைமுகப் பட்டணமாம் ஆகும். பவுல் பயன்படுத்தும் ”போராட்டம் செய்தல்” மற்றும் ”கப்பல் சேதம்” ஆகிய வார்த்தைகள் தீமோத்தேயு ஊழியம் செய்த எபேசுவின் கலாச்சார சூழலுக்கு தொடர்புடையதாக இருக்கிறது. எபேசு சபையில் இருந்த பிரச்சனைகளில் ஒன்று என்னவெனில், அங்கிருந்தவர்களில் சிலர் தவறான வேற்றுமையான உபதேசங்களைப் போதித்தார்கள் (வ.3). தீமோத்தேயுவைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை நினைவுகூர்ந்து போராட்டம் பண்ணும்படியாகவும், விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உள்ளாவராக இருக்கும்படி பவுல் அவருக்கு கட்டளை கொடுக்கிறார். 5ஆம் வசனத்தில், கற்பனையின் பொருள் என்ன என்று சொல்லும்போதும் விசுவாசம் மற்றும் நல்மனச்சாட்சி பற்றி பவுல் கூறுகிறார். விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உள்ளவர்களாக இருப்பது தவறான போதனைகளுக்கு எதிரான நம் போராட்டத்திற்கும், நம் அனுதின கிறிஸ்தவ வாழ்விற்கும் மிகவும் முக்கியமானது ஆகும்.

பிசாசுக்கு எதிரான நம் ஆவிக்குரிய யுத்தத்தில் விசுவாசம் என்பது ஒரு முக்கியமான ஆயுதம் ஆகும். விசுவாசம் கேடகமாக இருந்து நம்மைப் பாதுகாத்து, ”பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போட” உதவுகிறது (எபே.6:16). தவறான உபதேசங்கள் மற்றும் நியாயப்பிரமாணத்திற்கு ஆதரவான சட்டநெறிவாதம் ஆகியவற்றிற்கு எதிர்த்து நிற்க, நாம் இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள நம் விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். நல்மனச்சாட்சி என்பது நல்ல நடக்கையை, பரிசுத்தமாக வாழ்வதைக் குறிக்கிறது. விசுவாசம் மற்றும் நல்மனச்சாட்சியை ஒன்றாக சேர்த்து சொல்வதன் மூலம்,  ஒருவரின் வாழ்க்கையில் விசுவாசமும் நல்மனச்சாட்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்று பவுல் சொல்கிறார்.  சிலர் “வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்” என்று பவுல் கூறுகிறார் (வ.6). இங்கு சிலர் என்பது, தவறான உபதேசங்களைப் போதித்தவர்களையும், நியாயப்பிரமாண போதகர்களையும் குறிக்கிறது. 19ஆம் வசனத்தில், ”நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” என்று பவுல் கூறுகிறார். ஒரு கப்பல் பயணியாக, கப்பல் சேதத்தினால் உண்டாகும் வேதனையை பவுல் நன்கறிந்திருந்தார். விசுவாசத்தையும் நல்மனச்சாட்சியையும் வேண்டாமென்று தள்ளிவிடுகிறவர்கள் தங்களுக்குத் தாங்களே கடுமையான சேதத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள். ”ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற” (வ.11) அனேக நவீன போதனைகள், தவறாக வழிநடத்தும் செய்கைகள், மற்றும் பாவங்களைக் குறித்து இந்நாட்களில் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம். உலகப் பிரகாரமான வாழ்க்கை மற்றும் தவறான போதனைகளுக்கு எதிரான நம் ஆவிக்குரிய யுத்தத்தில், நாம் விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவர்களாக இருக்க எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.

பயன்பாடு:  சுவிசேஷத்திற்கு ஆதரவாக மற்றும் எந்த தவறான போதனைக்கும் எதிர்த்து நிற்கையில் நான் விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரானதாக அல்லது முரணானதாக இருப்பவைகளுக்கு நான் செவிசாய்க்க மாட்டேன். மாறாக, தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து கீழ்ப்படிவதன் மூலம் விசுவாசத்தில் வளர கவனம் செலுத்துவேன். என் விசுவாசக் கப்பலை சேதப்படுத்த நான் பிசாசுக்கு இடம் கொடுக்க மாட்டேன்.

ஜெபம்:  நித்திய தேவனே, என்னை எச்சரித்து சரிசெய்கிற உம் வார்த்தைகளுக்காக நன்றி. இயேசுவே, என்னை இரட்சிக்கும் உம் அன்புக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, என் விசுவாசத்தைக் காத்துக் கொண்டு உம் மகிமைக்காக பரிசுத்தமாக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 296