Wednesday, October 27, 2021

ஆதித் திருச்சபையின் விசுவாச அறிக்கைப் பாடல்

வாசிக்க: எரேமியா 41,42; சங்கீதம் 116; 1 தீமோத்தேயு 3

வேத வசனம் 1 தீமோத்தேயு 3: 16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

கவனித்தல்:  ”கிறிஸ்தவர்கள் பொய் சொல்வதில்லை—அவர்கள் சபைக்குச் சென்று பொய்களைப் பாடல்களாகப் பாடுகிறார்கள்” என்று அருமையான தேவ மனிதர் A.W. டோசர் என்பவர் ஒரு முறை கூறினார். எல்லா கிறிஸ்தவர்களையும், ஆராதனைப் பாடல்களையும் குறைசொல்வது அவருடைய நோக்கம் அல்ல. அனேக கிறிஸ்தவர்கள் தாங்கள் நம்பாத அல்லது நடைமுறையில் கைக்கொள்ளாதவைகளை பாடல்களில் பாடுகிறார்கள். வேத வசன அடிப்படையினாலான, உந்துதலைத் தருகிற, மற்றும் அர்த்தம் பொதிந்த ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்ற போது, சில பிரபலமான ஆராதனைப் பாடல்கள் மக்கள் தங்கள் விசுவாசத்தையும் தேவன் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்த உதவுவதற்குப் பதிலாக, அவை அவர்களின் உணர்ச்சிகளை எழுப்பு, உணர்ச்சி வசப்படச் செய்வதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை. 1 தீமோ.3:16 இல் ஆதித் திருச்சபையின் விசுவாச அறிக்கை பற்றி நமக்குச் சொல்லும் ஆதிச்சபைப் பாடலின் ஒரு பாடலின் சில வரிகளை பவுல் நமக்குத் தருகிறார். தேவபக்தியின் இரகசியம் பற்றி பவுல் பேசுகிறார். இரகசியம் என்பது அறிந்துக் கொள்ளக் கடினமானது என்பதைக் குறிக்காமல், ஆண்டாண்டு காலமாக மறைபொருளாக இருந்து, இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் முக்கியத்துவம் பற்றி நமக்குக் கூறுகிறது. தேவ பக்தியானது உலகப் பிரகாரமான மக்களுக்கு ஒரு மறைபொருளாக இருந்து வருகிறது. ஏனெனில், மனித அறிவில் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.  ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒருவர் சபையில் விசுவாசத்தின் இரகசியத்தை  கற்றுக் கொண்டு புரிந்து கொள்கிறார் (1 தீமோ.3:9).  தேவ பக்தியின் இரகசியம் அல்லது மறைபொருள் இயேசுவே ஆவார் (ரோமர் 11:25; கொலோ.1:26). தேவபக்தியின் இரகசியம் மகா பெரிது என்று பவுல் சொல்கிறார். பவுலைப் பொறுத்த வரையில், தேவபக்தியின் இரகசியமாக இருக்கிற இயேசுவைப் பற்றி எந்த சந்தேகமும், கேள்வியும் இருக்கக் கூடாது.

16ஆம் வசனத்தில் பவுல் குறிப்பிடும் ஆறு வரிகள் கிறிஸ்துவைப் பற்றிய ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இயேசு கிறிஸ்துவின் மனித அவதாரப் பிறப்பு முதற்கொண்டு அவருடைய பரமேறுதல் வரையிலுமான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முக்கியமான விவரங்களை அவை சுருக்கமாகக் கூறுகின்றன. இந்தப் பாடல் இயேசுவின் தெய்வீகத்தைப் பற்றிக் கூறுகிறது. அது மட்டுமல்ல, மனிதனாகப் பிறந்த, பாடுபட்ட மற்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாடுகளில் பிரசங்கிக்கப்படுகிறார்; இலட்சக்கணக்கான மக்கள் அவரை விசுவாசிக்கிறார்கள். கிறிஸ்துவின் மனு அவதாரம் தேவன் நம் மீது கொண்ட அன்பை விளக்குகிறது. அவருடைய பரமேறுதல் நம் எதிர்காலத்தைப் பற்றிய நித்தியத்தைப் பற்றிய நம்பிக்கையை நமக்குத் தருகிறது. ”கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” என்று பவுல் அப்போஸ்தலன் கொலோ.1:27இல் கூறுகிறார். நாம் மகிமையின் இராஜாவைப் பாடுவோம், அறிக்கை செய்வோம், அவரையே அறிவிப்போம்.  

பயன்பாடு:  நான் இயேசுவைப் பற்றிப் பேசும்போதும் பாடும்போதும், என் வார்த்தைகள் என் விசுவாசத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும். நான் தேவனை உதட்டளவில் சேவை செய்யாமல், என் முழு இருதயத்தோடும் உண்மையாக நான் தேவனை சேவிக்க வேண்டும். கிறிஸ்துவின் மீதான என் விசுவாசத்திற்கும் கிறிஸ்துவுடனான என் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது, அவை ஒன்றாக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, வேதாகமத்தின் மூலமாக உம் குமாரன் இயேசு கிறிஸ்துவை நீர் எனக்கு வெளிப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எவ்வித மாய்மாலமும் இன்றி, தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்யவும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அன்புடன் அறிவிக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 298

No comments: