Saturday, December 29, 2018

திருமணம் உனக்கானது அல்ல - Marriage is not for you

எனக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் - திருமணம் எனக்காக அல்ல.
இப்பொழுது எதையாவது மனதில் யோசித்து தவறாகப் புரிந்து கொள்வதற்கு முன் தொடர்ந்து வாசியுங்கள்.

நானும் என் மனைவியும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தோம். ஆயினும் திருமணம் என்று வந்த போது, சில பயங்கள் மற்றும் கவலைகளை என்னால் தவிர்க்க முடியவில்லை. எங்கள் திருமண நாள் நெருங்க நெருங்க என்னுள் பயம் அதிகரித்துக் கொண்டே சென்றது. நான் ஆயத்தமா? நான் சரியான முடிவை எடுத்த்திருக்கிறேனா? இவள் நான் மணம் புரிய சரியான நபரா? இவள் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருபாளா? என எனக்குள் பல கேள்விகள்.

இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில், என் எண்ணங்கள் மற்றும் கவலைகளை என் தந்தையுடன் பகிர்ந்து கொண்டேன். கடிகாரம் மிகவும் மெதுவாக சுற்றுவது போல, அல்லது காற்று நின்று போனது போலவும் நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும் நம்மை நோக்கி வருவது போலவும் உள்ள தருணங்களை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் பெற்றிருக்கிறோம். நாம் அப்படிப்பட்ட நேரங்களை ஒருபோதும் மறக்க முடியாததாகக் குறித்துக் கொள்வோம்.

என் தந்தை என் கேள்விகள் மற்றும் கவலைகளுக்குப் பதில் கொடுத்த நேரம் அப்படிப்பட்ட ஒரு நேரமாக எனக்கு இருந்தது. அவர் சிரித்துக் கொண்டே, 'மகனே, நீ மிகவும் சுயநலமுள்ளவனாக இருக்கிறாய். ஆகவே நான் இதை மிகவும் எளிமையானதாக இதை மாற்றுகிறேன்: திருமணம் உனக்கானது அல்ல. உன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக நீ திருமணம் செய்து கொள்ளவில்லை, மாறாக வேறு ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக திருமணம் செய்கிறாய். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், உன் திருமணம் உனக்காக மட்டும் அல்ல, நீ ஒரு குடும்பத்திற்காக திருமணம் செய்கிறாய். திருமணத்தினால் உருவாகும் புது உறவுகளுக்காக மட்டுமல்ல, உன் எதிர்கால குழந்தைகளுக்காக நீ திருமணம் செய்கிறாய். அவர்களை வளர்க்க உனக்கு உதவி செய்ய எவர் விரும்புவார்? அவர்களை சரியான விதத்தில் உருவாக்க எவர் விரும்புவார்? திருமணம் உனக்காக அல்ல. அது உன்னைப் பற்றியது அல்ல. திருமணம் என்பது நீ திருமணம் செய்யப் போகிற நபரைப் பற்றியது."

அந்த தருணத்தில் தான் எனக்கான சரியான வாழ்க்கைத் துணையாக நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண் அமைய முடியும் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க, அனுதினமும் அவள் முகத்தில் புன்னகையைக் காண, நன்றாக சிரித்து மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.  நான்      அவளுடைய ஒரு குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், அவள்; என் குடும்பத்தில் ஒரு அங்கமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

    என் தகப்பனின் ஆலோசனையானது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் அதே வேளையில் வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. இன்று பரவலாக காணப்படும் சிந்தனையான, 'ஒன்று உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வில்லை எனில், அதை விட்டுவிட்டு புதிய ஒன்றை எடுத்துக் கொள்" என்பதற்கு       எதிரானதாக இருந்தது.

உண்மையான திருமண வாழ்வு என்பது ஒருபோதும் உன்னைப் பற்றியது அல்ல. அது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது -   அவர்களின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கனவுகள் ஆகும். 'எனக்கு என்ன கிடைக்கும்?" என சுயநலம் எதிர்பார்க்கிறது.    அதேவேளையில், அன்போ, 'நான் என்ன கொடுக்க முடியும்?" என கேட்கிறது.
சில காலத்திற்கு முன்பு, சுயநலமின்றி நேசித்தல் என்றால் என்ன என்பதை என் மனைவி எனக்குக் காண்பித்தாள். அனேக மாதங்களாக, என் இருதயமானது பயம் மற்றும் குழப்பம் ஆகியவை கலந்து கடினமாகிக் கொண்டிருந்தது. பின்னர் தாங்கமுடியாமல் உணர்ச்சிப் பிழம்பாக வெளிவந்து இருவரும் தாங்கமுடியாததாக இருந்தது. நான் அவளைப் பற்றிய கரிசனை அற்றவனாகவும், சுயநலமுள்ளவனாகவும் இருந்தேன்.

ஆனால், என் சுயநல நோக்கின்படி அவள் இல்லை, மாறாக என் மனைவி மிகவும் ஆச்சரியமானதொன்றைச் செய்தாள் - அவள் அன்பு மழை பொழிந்தாள். நான் அவளுக்கு உண்டாக்கிய அனைத்து வேதனை மற்றும் கவலைகளைப் புறம்பே தள்ளி வைத்து விட்டு, அவர் நேசத்துடன் என்னை எடுத்து, என் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் சுகத்தைத் தந்தாள்.

நான் என் தகப்பனின் ஆலோசனையை மறந்து  போனதை உணர்ந்தேன். என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னை நேசிப்பதே திருமணம் என இருந்த நேரத்தில், என் பக்கத்தில் திருமணம் என்பது முழுவதும் என்னைச் சுற்றியதும், பற்றியதுமாகவே இருந்தது. இந்த பயங்கரமான உணர்வு என்னுள் கண்ணீரை வரவழைத்தது. நான் என்னால் இயன்றதைச் செய்வேன் என என் மனைவியிடம் உறுதி கூறினேன்.

இந்தக் கட்டுரையை வாசிக்கிற அனைவருக்கும் - நீங்கள் திருமணமானவரோ, திருமணமாகப் போகிறவரோ, அல்லது திருமணமே செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டவரோ- நீங்கள் யாராக இருந்தாலும், திருமணம் என்பது உங்களுக்கானது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான எந்த அன்பின் உறவும் உனக்கானது அல்ல. அன்பு என்பது நீங்கள் நேசிக்கிற நபரைப் பற்றியது ஆகும்.

இதில் உள்ள முரண்பாடான ஒரு விசயம் என்னவெனில், நீங்கள் எவ்வளவு அதிகமாக அந்த நபரை உண்மையாக நேசிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அன்பை நீங்கள்; பெறுவீர்கள். நீங்கள் நேசிக்கிற அந்த நபரிடம் இருந்து மட்டுமல்ல, மாறாக அவ்ர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீங்கள் ஒருபோதும் சந்தித்திராத ஆயிரக்கணக்கானவர்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களுடைய அன்பு சுயநலமுள்ளதாக இருந்திருந்தால் இவைகளை எல்லாம் நீங்கள் பெற மாட்டீர்கள்.

மெய்யாகவே, அன்பு மற்றும் திருமணம் என்பது உனக்கானது அல்ல, அது மற்றவர்களுக்கானதாகும்.

- சேத் ஆடம் ஸ்மித்

(இந்த ‘‘Marriage isn’t for you” கட்டுரை உலகம் முழுவதிலும் மூன்று கோடிக்கும் அதிகமானவர்களால் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கப் பட்ட கட்டுரை  ஆகும். தமிழில் மொழிபெயர்த்து  வெளியிட அனுமதி கொடுத்த ஆசிரியருக்கு நன்றி. இக்கட்டுரை  “அமைதி நேர நண்பன்” 2016 பிப்ரவரி மாத இதழில் வெளியானது)

No comments: