Monday, July 9, 2007

கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? என்ற கேள்வி பகுத்தறிவுள்ள எவருக்கும் எழக்கூடியதே. இப்படிப்பட்ட கேள்விகள்தான் அனேகரை கடவுளைப் பற்றிய அறிவுக்குள் வழி நடத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நான் ஏன் இந்த உலகில் இருக்கிறேன்? என்பன போன்ற கேள்விகளுக்கு தகுந்த பதிலைத் தருவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடமைப் பட்டுள்ளான். அப்போஸ்தலனாகிய பேதுருவின் முதலாம் நிருபம் 3 ம் அதிகாரத்தில் "உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்."என்று கூறுகிறார். ஆனால் நம்மில் எத்தனைபேர் சரியான பதில் (பொறுமையாக) கூறத் தெரிந்தவர்களாக இருக்கிறோம். நான் வாசித்த வரையில் ஜோஷ் மேக்டோவெல் என்பவர் எழுதிய புத்தகங்கள் அனைத்துமே இத்தகைய அறிவை நமக்குத் தர வல்லது. அவருடைய புத்தகங்களை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமே! காம்பஸ் குருசேட் என்ற உலகளாவிய ஊழிய நிறுவனம் அவரது புத்தகங்களை மிக குறைந்த விலையில் அச்சிட்டுள்ளனர்.
ஒன்று நிச்சயம். நீங்கள் என்னதான் சரியான பதிலைக் கூறினாலும் அந்த பதில் அவரை ஆண்டவரை ஏற்றுக் கொள்ளச் செய்யும் என்று கூறி விட முடியாது. நம்முடைய சாட்சியான வாழ்க்கை மட்டுமே கடவுள் இருக்கிறார் என்பதற்கான உயிருள்ள பதிலாக இருக்க முடியும். இயேசு எந்த இடத்திலும் (இந்த உலக ஞானிகளுக்கு) ஒரு அருமையான பதிலைச் சொல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் உலகத்தின் ஞானத்தை பைத்தியமாக்கும் தேவஞானத்தை இயேசு அறிந்திருந்தார். அதையே தம் சீஷர்களுக்கும் போதித்துச் சென்றார். அது என்னவெனில் "நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்" என்பதே. ஆகவே நீங்கள் என்ன பதில் கூறினாலும் மனம் திருந்தாத ஒருவர் மாற்றப் பட்ட வாழ்க்கையைப் பார்க்கும் போது கேள்வியே கேட்காமல் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வார். ஆகவே நண் பர்களே உங்கள் வாழ்க்கை மாற்றப் பட்டு இருக்கிறதா? அது தான் மிகவும் முக்கியம். அதுதான் சரியான பதிலும் கூட. ஆமென்.

No comments: