Thursday, August 16, 2007

யார் தெரியுமா?

ஒரு இளம் வாலிபன் ஆண்டவரின் அன்பினால் தொடப்பட்டவனாய் நான் மிஷனெரியாகச் செல்வேன் என்று தீர்மானம் பண்ணினான். அவன் தன் தீர்மானத்தை அடக்கி வைக்க மாட்டாதவனாய் அதை தன் சபையாரிடம் தெரிவித்தான். ''என்னை மிஷனெரியாக அனுப்புங்கள்'' என்று அவர்களிடம் முறையிட்டான். அவன் தீர்மானத்தைக் கேட்ட சபையார்,சிலர் எள்ளி நகையாடினர்,சிலர் உனக்கேன் இந்த வீண் வம்பு என்றனர், சிலர் அது தேவனுடைய சித்தமாயிருக்குமானால் தானாகவே நடக்கும், நீ ஒன்றும் செய்யாதே நீ சின்ன பையன் என்றனர், சிலர் மிஷனெரியாக தூர தேசம் செல்வது சுத்த முட்டாள்தனம், நீ ஏன் இங்கேயே ஊழியம் செய்யக்கூடாது என்றனர், சிலர் ரொம்ப அதிகப் பிரசங்கித்தனமாக பேசாதே என்றனர். மொத்தத்தில் எல்லாரும் அவ்வாலிபனின் தீர்மானத்தை அசட்டை பண்ணினர். ஆனால் அவ்வாலிபன் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். ஆண்டவர் தனக்கு கொடுத்த பாரத்தின் படியும், தரிசனத்தின் படியேயும் ஊழியம் செய்ய கிளம்பிச் சென்றான். நடந்தது என்ன தெரியுமா? துணிச்சலான அவ்வாலிபன் வேதாகமத்தை பல மொழிகளில் மொழிபெயர்த்தான். இன்றுவரையும் அவனுடைய சாதனை முறியடிக்கப்பட முடியவில்லை. பல மொழிகளின் தந்தை என்றழைக்கப்படும் உயரிய இடத்தைப் பெற்றான். சரித்திரம் இன்றும் அவ்வாலிபனின் சாதனைக்கு சான்று பகருகிறது. ஏன் உங்கள் கைகளில் உள்ளவேதாகமத்தில் கூட அவனுடைய பங்கு இருக்கக் கூடும். அவ்வாலிபன் யார் தெரியுமா?


அவன் தான் இங்கிலாந்து தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊழியம் செய்யப் புறப்பட்டு வந்த வில்லியம் கேரி. ஆண்டவரே என்னையும் அந்த வாலிபனைப் போல ஆத்தும பாரமுடையவனாய்,அழிந்துபோகிற அன்பர்களின் ஆத்தும கதறலை கேட்டு அவர்களுக்கு உதவுகிறவனாய் மாற்றும்.

நான்:ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.(எரேமியா1:6,7)

No comments: