Saturday, March 9, 2019

2. லெந்து காலம் வேதாகம அடிப்படையில் சரியா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

எனது முந்தைய பதிவில்  “லெந்து காலம்” பற்றிய ஒரு சிறிய குறிப்பை உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.  பொதுவாகவே, கிறிஸ்தவ சபைகளிலும், கிறிஸ்தவர்களிடையேயும், “பரிசுத்த வேதாகமத்தில் லெந்து காலம் பற்றி இருக்கிறதா?” என்றும்,  “ஆதிக் கிறிஸ்தவ சபையில் கிறிஸ்தவர்கள் லெந்து காலம் என்ற ஒன்றை ஆசரித்தனரா?” என்றும் கேட்பதுண்டு. இது மிகவும் நல்ல கேள்வி ஆகும். எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் முறையானதாக இருக்காது. ஆகவே, இக்கட்டுரையில் லெந்து காலத்துக்கும், வேதாகமத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று ஆராய விரும்புகிறேன்.

இத்தொடரின் முதல் கட்டுரையில், லெந்து காலம் என்பது ஈஸ்டருக்கு முந்தின நாற்பது நாட்களைக் குறிக்கிறது என்றும், பரிசுத்த வேதாகமத்தில் “நாற்பது நாட்கள்” என்பது பல முக்கியமான வேதாகம நபர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததையும் கோடிட்டு காண்பித்திருந்தேன். ஆனாலும் அதை வைத்து லெந்து காலத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா என எனக்கு நானே நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். வேதாகமத்தில் லெந்து காலம் என்ற ஒன்றை எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று அனேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன். முதலில் நாம் சில அடிப்படையான விசயங்களை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மூல பரிசுத்த வேதாகமம் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டது. வேதத்தின் அடிப்படையில்,தேவனுடைய ஆள்தத்துவம், அன்பு மற்றும் அதன் வெளிப்பாடு ஆகியவைகளே கிறிஸ்தவ உபதேசத்தின் அஸ்திபாரம் ஆகும்.  லெந்து காலம் என்பது ஆதிச் சபையில் இருந்து, ரோமக் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டாண்டு சபைகளுக்குள் வந்த நல்ல ஒரு பாரம்பரியமாகும். ஆயினும் எதையும் பொருளுணராமல் கடமைக்குச் செய்யும்போது அதன் பொருளும் அர்த்தமற்றதாகி விடும், அது மட்டுமல்லாது அதைச் செய்பவர்களும் அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு எதிரானவர்களின் எளிய இலக்காக மாறிவிடுவார்கள். லெந்து காலத்தைப் பொறுத்த வரையிலும் அது தான் நடந்தது, நடக்கிறது. பெந்தெகோஸ்தே சபைகள் பெருகின வேளையில், ரோமக் கத்தோலிக்க சபை மற்றும் பாரம்பரிய சபைகளின் பண்டிகைகள் பெந்தெகோஸ்தே சபையினரால் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கேள்விகள் முன் வைக்கப் பட்டன. அவைகளில் ஒன்றுதான் லெந்து காலம் பற்றியதும் ஆகும்.  

என்னைப் பொறுத்தவரையில், லெந்து காலம் என்ற ஒன்றை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்று கேட்பதும், திரித்துவம் என்ற வார்த்தையை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்பதும் ஒன்றுதான். வேதாகமத்தைப் பற்றியும், வேதாகம தேவனைப் பற்றியும் சரியான புரிதலில்லாமல் இருந்தால்தான் இப்படிப் பட்ட கேள்விகள் வரும். நான் இதைக் குறையாக சொல்ல வில்லை, ஒரு சுய பரிசோதனைக்காகவே சொல்கிறேன். லெந்து காலத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களில் பெரும்பாலானோர், லெந்து காலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்களாகவும், லெந்து காலம் பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லத் தயங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். அதிக பட்சமாக, ரோமர் 14:5,6 வசனங்களைக் காண்பித்து, “நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்” என்று வாதிடுகிறார்கள். லெந்து காலம் என்பது ஒரு விசேஷமான ஒன்று என்பதுடன் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். ஏன் விசேஷம், என்ன செய்ய வேண்டும் என்பதில் எல்லாம் அதிக அக்கறை கிடையாது. இப்படியாக, லெந்து காலத்தை ஏற்றுக் கொள்கிறவர்களையும், நிராகரிக்கிறவர்களையும் நான் ஒரே அளவுகோலுடன் காண முயற்சிக்கிறேன்.

 லெந்து காலம் என்பது இடையில் திணிக்கப்பட்ட ஒரு நடைமுறை அல்ல. இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஓய்வு நாளுக்கு (ஈஸ்டருக்கு) முந்தைய நாற்பது நாட்களை பக்தியுடன் ஆசரிப்பது என்பது ஆதிச் சபைகளில் இருந்து வந்த பழக்கம், நிசேயா கவுன்சிலில் முறைப்படுத்தப் பட்டு, பின்னர் வந்த காலங்களில் இச்சையடக்கம் சம்பந்தப் பட்டவைகளும் சேர்ந்து நாம் இன்று காண்பது போல இருக்கிறது. நாற்பது நாட்கள் மட்டும் கட்டுப்பாடாக இருந்து விட்டு மற்ற நாட்கள் எல்லாம் இஷ்டம் போல வாழ்வதைத் தான் வேதாகமம் போதிக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு முறையான பதிலை முன் வைக்க வேண்டும். அதே நேரத்தில் இப்படி கேள்வி கேட்பவர்கள் வருடத்தின் எல்லா நாட்களும் வேதாகமத்தின் படி வாழ்கிறார்களா என்றும் கேள்வி கேட்க விரும்புகிறேன். எல்லாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது என் நோக்கமன்று. மாறாக கேள்வி கேட்பவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கேட்கிறேன்.

ஆம் உண்மைதான், வெறும் நாற்பது நாட்கள் மட்டும் கறி சாப்பிடாமல், பூ வைக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துக்க வீட்டில் இருப்பது போல சோகமாக இருந்துவிடுவதினால் தேவனை பிரியப்படுத்தி விட முடியும் என்றால் அதை விட முட்டாள்தனமான ஒன்று வேறேதுவும் இருக்க முடியாது. சபை ஒழுங்கில் இருப்பதற்காக லெந்து காலத்தை ஆசரிக்காமல், நமக்காக வந்து மரித்துயிர்த்த இயேசுவைப் பற்றிய சிந்தனைக்கு அதிக இடம் கொடுத்து, மனதையும் செயலையும் இயேசு காண்பித்த மாதிரிக்கு நேராக ஒருமுகப்படுத்துவது நலம். இதை வாசிக்கும் நண்பர்களே,  நம்மில் எவருமே 100 சதவீதம் பரிசுத்தவான்கள் அல்ல, அதற்காக, நாம்  பரிசுத்த அழைப்பினால் நம்மை அழைத்த பரிசுத்த தேவனை நோக்கிப் பார்ப்பதை விட்டு விடுவதில்லை. நம் பலவீனத்தின் மத்தியிலும் அவரை நோக்கிப் பார்த்து, நம்மை சுத்திகரித்துக் கொள்கிறோம். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வின் அன்றாட அனுபவமாக இதைச் சொல்வார்கள்.
லெந்து காலத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒருவரையொருவர் கடித்து பட்சிப்பதற்குப் பதிலாக, வேதாகம அடிப்படையில், பயனுள்ள எதாவது ஒன்றைச் செய்யலாம் என்றால் பின் வரும் யோசனையை முயற்சித்துப் பாருங்கள்.
1. உங்களை அடிக்கடி சோதனைக்குட்படுத்தும் எதாவது ஒரு காரியத்தைப் பற்றி தீர்மானமாக முடிவெடுத்து, இந்த நாற்பது நாட்களில் அதை செயல்படுத்த கர்த்தருக்குள் முடிவெடுத்து செயல்படுங்கள். வருடத்தின் எல்லா நாட்களும் நாம் கர்த்தருக்குள், கர்த்தருக்கேற்றபடி வாழ்வது தான் இலக்கு. அதை ஜெபத்துடன் இந்நாட்களில் துவங்கலாம். சிறிய இலக்குகள் பெரிய சாதனைகளுக்குள் நம்மை வழிநடத்தும். நானும் இந்த வருடம் அப்படி ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன். (குறிப்பாக வாலிபப் பிள்ளைகள், உங்களை தொந்தரவு படுத்தும் பாவச் சோதனைகளுக்கு எதிராக ஒரு உறுதியான முடிவெடுங்கள்).
2. ”நானல்ல, கிறிஸ்துவே” என்பது தான் ஒவ்வொரு கிறிஸ்தவரின் இருதய விருப்பம். ஆனால் எல்லாருக்கும் நடைமுறையில் அது சாத்தியப்படுவதில்லை. ஆகவே, இயேசுவுடன் கூட இருப்பதுதான் இதற்கு உதவும். அனுதினமும் வேதம் வாசித்து, குறைந்தது ஒரு மணிநேரமாவது ஜெபத்தில் தரித்திருங்கள். ஜெபத்தில், நீங்கள் எதையாவது பேசிக்கொண்டே இருக்காமல், நீங்கள் வாசித்த வேத பகுதியில் இருந்து தேவனுடைய தன்மை மற்றும் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை தனிமையில் தேவனுடன் கேளுங்கள். எதுவும் கடினமல்ல.
3. குறைந்தது ஒருவரிடமாவது இயேசுவைப் பற்றி பேசுங்கள். கிறிஸ்தவரல்லாதோர் என்றல்ல, உங்கள் வீட்டில் உள்ள சின்ன பிள்ளைகளிடம் கூட இதை நீங்கள் செய்யலாம் ( நாம் தான் இதில் expert ஆச்சுதே!).

மேலே நான் கூறிய மூன்று காரியங்களும் வாசிக்க, கேட்க மிக எளிதானதாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் செயல்படுத்துவது என்பது சவாலானதாகும். லெந்து காலத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் எவரையும் இந்த சவாலுக்கு அழைக்கிறேன். கர்த்தரை முன் வைத்து, அவருக்காக வாழ விரும்பும் எவருக்கும் இந்த மூன்று காரியங்களும் இடறலாக இருக்காது என்று விசுவாசிக்கிறேன். லெந்து காலத்தில், வேதாகம அடிப்படையில் வாழ்கிறேனா, வாழ முயற்சிக்கிறேனா என்று அதை ஆதரிப்பவர்களும், அப்படி வாழ முயற்சிப்பது தவறாகுமா என்று எதிர்ப்பவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்
+91 9538328573

No comments: