Wednesday, March 2, 2016

இது ச(ஷ)ரியா!!!??? - மன்னிப்பு



தூக்கம் வராமல் படித்து தூக்கத்தை தொலைக்க வைத்த கதை

நேற்றிரவு தூக்கம் வராமல் பிரபல முஸ்லீம் அறிஞர் எழுதிய “தவ்ஹீத் புத்தகம்” ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு முஸ்லீம் அறிஞரிடம் விபச்சார பாவம் செய்த ஒரு பெண் மனம் திரும்பி தன்னை சுத்திகரித்துக் கொள்வதற்காக வருகிறாள். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவளா என்றும், ஏதேனும் கட்டாயத்தின் பேரில், சூழ்நிலை அழுத்தம் காரணமாக வந்திருக்கிறாளா அல்லது அவளாக மனமுவந்து வந்திருக்கிறாளா என்று ஆராய விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. அவள் மனமுவந்து சுத்திகரிப்புக்காக அவளாகத்தான் வந்திருக்கிறாள் என்று உறுதிப் படுத்தப்பட்ட பின்பு, அவளுக்குக் கிடைத்தது என்ன தெரியுமா?... அவள் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. வாசித்த எனக்கு இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பாவம் செய்த ஒரு பெண் மனமுவந்து தன்னை சுத்திகரிக்க விரும்பினதற்குக் கிடைத்த பரிசு இப்படிப்பட்ட ஒரு கொடுரமான தண்டனையா என புலம்பிய என் மனதில் தோன்றிய காட்சி, இயேசுவுக்கு முன் விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த பெண் மற்றும் அவளைச் சுற்றிலும் ஏராள (பரிசுத்த???) மானவர்கள் இயேசு என்ன சொல்கிறார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த காட்சி தெளிவாக தெரிந்தது (யோவான் 8). அங்கே அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்பது, ஆனால் கிடைத்ததோ மன்னிப்பு.

இந்த இரு சம்பவங்களும் என் மனதில் கிளறிய உணர்ச்சிகளை கருத்துக்களை வார்த்தைகளில் வடிப்பது மிகக் கடினம். நானும் எத்தனையோ முறை என் ஆண்டவருக்கு முன் மனமுவந்து மனங்கசந்து நின்றிருக்கிறேனே, ஒரு முறைகூட அவர் என்னிடம் கோபப்படாமல், அதே அன்புடன் அரவணைத்து மன்னித்து மறுபடியும் என்னை அவர் பக்கம் வைத்து பாதுகாத்து பரிசுத்தப் படுத்தி இருக்கிறாரே என்று நினைத்து அழுகையை அடக்கி, ஆண்டவருக்கு நன்றி சொல்வதை மிகவும் பெருமையாக நினைத்த தருணமாக இருந்தது. அதுமாத்திரமல்ல, கிறிஸ்தவத்தில் மன்னிப்பு என்பது எவ்வளவு மகத்துவமானதாக இருக்கிறது என்பதையும், நிபந்தனையற்ற அன்பு (unconditional love) மட்டுமே அங்கே ஆட்சி செய்வதையும், மன்னிப்பின் மேன்மையை உணரவும் முடிந்தது.

நான் பெற்றதை நினைக்கையில், நான் கொடுத்ததையும், அதாவது நான் எந்தளவுக்கு மற்றவர்களை மன்னித்து இருக்கிறேன் என்பதை நினைக்கத் தொடங்கினேன். மிகவும் வெட்கமாக இருந்தது. நான் பெற்றதற்கும் நான் கொடுத்ததற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு சிலரை மன்னிக்க முடியாமல், மறக்க முடியாமல் நான் எவ்வளவு போராடி இளைத்து, களைத்து மனம் கனத்துப் போயிருக்கிறேன். நான் ஏன் அவர்களிடம் கிறிஸ்துவை காட்ட வேண்டும் என்று நினைத்தும், முடியவில்லை. யோசிக்கத் துவங்கினேன்.
நான் கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்கையில் அவரிடம் நான் எப்படி முழுமையாக என்னை ஒப்புக் கொடுக்கிறேன் என்பதையும், மற்றவர்களை மன்னிக்க முடியாமல் போராடுகையில் எப்படி என் சுயத்திற்கு இடம் கொடுக்கிறேன் என்பதையும் தெளிவாக காணமுடிந்தது. மேலும் தேவன் என்னை மன்னிக்கும்போது, அதை முழுமையாக மறந்தும் விடுகிறார் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் பிறர் எனக்குச் செய்தவைகள் மறக்க முடியவில்லையே எனச் சொல்வதா அல்லது மறக்க மனம் இல்லை எனச் சொல்வதா தெரியவில்லையே!

இன்னமும் முழுமையாக நான் என்னை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே தீர்வு என்பது மட்டும் கண்ணுக்குப் புலனாக ஆரம்பித்தது. நான் எந்தளவுக்கு என்னை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்க நினைத்த மாத்திரத்தில், “நான் எந்தளவுக்கு செய்தேனோ, அந்தளவுக்கு” என என் ஆண்டவர் சொல்வது மனதில் உரைத்தது, மனதை உடைத்தது.
நான் பெற வேண்டிய தண்டனையை, அவர் தாமே சுமந்து மன்னிப்பின் வழியைத் திறந்தாரே! இது சரியா அல்லது மனமுவந்து வந்தவரின் உயிரை கல்லெறிந்து கொல்ல தண்டனை கொடுக்கப்பட்டதே அது ஷரியா??? என ஆயிரம் கேள்விகள், கிடைத்ததோ ஒரே பதில். அழிக்க முடியா நறுமணம் பூக்க வைத்த பூ அது, தேவ அன்பினால் விளைந்த மன்னிப்பு!!!

No comments: