Thursday, March 17, 2016

நீங்க என்ன ஜாதி?



 உங்களைப் பார்த்து யாராவது நீங்க என்ன ஜாதி? என்று கேட்டால் உங்கள் ரெஸ்பான்ஸ் என்னவாக இருக்கும்? உடனே முறைத்துப் பார்ப்பீர்கள்தானே! உங்க பகுதியில் எப்படியோ எனக்கு தெரியாது. ஜாதிச் சண்டைகளுகு பெயர்போன தென் தமிழகத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயமாக யாராவது உங்களைப் பார்த்து இக்க்கேள்வியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டிருப்பார். நானும் ஒரு தென் தமிழக கிறிஸ்தவன் என்பதால்தான் இந்தக் கட்டுரை………. இதை எழுதுவது என் கடமை
வாசிப்பது உங்கள் பொறுமை. விசயத்தை தெரிந்து கொள்ள உடனே உள்ள வாங்க
நீங்கள் தென் தமிழகத்தில் உள்ள ஒரு காரியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதுதான் எனது முழு அவா. ஆகவே தயவு செய்து பொறுமையுடன் இரசித்து ருசித்து வாசிக்கும்படியாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எங்க ஊர்ப்பக்கங்களில் ஒருவரை முதலில் சந்திக்கும் போது பெரும்பாலும் எல்லாரும் அறிந்து கொள்ளவிரும்புகிற காரியம் அவர் என்ன ஜாதி என்பதாகத்தான் இருக்கும். ஒருவேளை அவர்கள் வாயை திறந்து நேரடியாக கேட்காவிடினும் உள்மனதில் அதுதான் ஓடிக்கொண்டு இருக்கும். ஆகவே முதலில் பெயரைக் கேட்பார்கள். கேட்டபின்பு நைசாக ஊர்பெயரைக் கேட்பார்கள். அதிலேயே ஓரளவுக்கு என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும் சந்தேகம் இருக்குமெனில் அந்த ஊரில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். இப்படியாக எங்க மக்கள் ஜாதியைக் கண்டுபிடிப்பதில் பயங்கரமான புத்திசாலிகள். இன்னும் சில கரை கண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப் பார்த்து அவரைன் பார்வை மற்றும் தோற்றத்தைவைத்தே அவர் என்ன ஜாதி என்பதை கணித்துவிடுவார்கள். இங்கேபோய் இதைச் சொல்வதற்கு என்ன அவசரம் வந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ...........இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு வட தமிழகத்தில் சாதியை மையமாக வைத்து பாரம்பரிய கிறிஸ்தவ சபை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியினால் வேதனைப்பட்டவர்களில் நானுமொருவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல கிறிஸ்துவுக்குள் இருப்பதுதான் முக்கியம், ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் என்ன சபையிலிருந்தாலும் நாமெல்லாரும் ஒரே சரீரமே என்பதை நான் முழுமையாக நம்புபவன். இதற்கு சபைப் பிரிவுகள் தடையாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கும் படசத்தில் பல காரியங்களை சபைப் பாரம்பரியங்கள் மற்றும் உலகப் பாரம்பரியங்களின் படி செய்ய முடியாதல்லவா? ஆம்.
எங்கள் ஊரில் உள்ள ஒரு பழக்கத்தை நான் முன்பு சொன்னேன். இப்போது ஆவிக்குரிய வட்டாரத்தில் காணும் மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். முன்பு ஆவிக்குரிய சபைகளுக்கு செல்வதையே மற்ற கிறிஸ்தவர்கள் கூட வெறுத்தனர். ஒருவன் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்றால் அவனை மிகவும் கீழ்த்தரமானவனாக நினைப்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றும் கூட சில இடங்களில் உள்ளது. ஆனால் இன்று ஆவிகுரிய சபைகளுக்கு செல்வது கிட்டதட்ட ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. எதுவும் சீர்கெடும்போது எல்லாமே தலைகீழாக மாறிவிடுமல்லவா. அதேபோலத்தான் இன்று ஆவிகுரிய சபைகளிலும் சாதி என்ற பேச்சு எழும்பி விட்டது. முன்பு பாரம்பரிய சபைகள் மட்டுமே சாதியின் அடிப்படையில் இருந்துவந்தன. இன்று ஆவிக்குரிய சபைக்கு செல்லும் ஒருவரை அவர் செல்லும் சபையைவைத்தே அவர் என்ன ஜாதி என்று கூறுமளவுக்கு நிலைமை மலிந்துவிட்டது. அதாவது பாஸ்டர் என்ன ஜாதி என்று பார்த்து செல்லுமளவுக்கு நிலைமை என்ன செய்ய? இதைக் குறிது எழுதுவதற்கே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் உண்மை எழுதுவது நன்மைக்கே!
இதை எழுதுவதற்கு எனக்கு ஒன்றும் பெரிதாக தகுதியில்லை. ஏனெனில் நானும் ஒருகாலத்தில் குட்டையில் ஊறின மட்டையாக எங்க ஊர் மக்களில் ஒருவனாகவே இருந்துவந்தேன் என்பதை வெட்கத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் வசனத்தின் வெளிச்சம் எனக்கு உண்டானபோதுதான் ஜாதியைக் குறித்து ஒரு சரியான உணர்வு வந்து சாதியுணர்வு நீங்கிற்று.
வேதம் ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
வேதாகமத்தில் பலவிதமான ஜாதிகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உண்மைதான். ஆனால் நாம் ஒருவிசயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். வேதாகம காலத்தில் ஒரு நாட்டு மக்களைக் குறிக்கும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களையே அவாறு குறிப்பிட்டனர். இன்று உள்ளதுபோலல்ல. ஆகவே யாராவது வேதாகமத்திலேயே ஆண்டவர் பல ஜாதிகளைக் குறீத்து எழுதிவைத்துள்ளார் அல்லவா? என்று யாராவது சொன்னால் உடனே நம்பிவிடாதீர்கள். இன்னும் சில ஜாதிப் பிரசங்கியார்கள் இப்படியாக சொல்வார்கள்," பாருங்க ஆபிரகாமே என்ன செய்தான்? தன் சொந்த இனத்தாரிடம் தன் மகனுக்கு பெண்கொள்ளும்படி எலயேசரை அனுப்பவில்லையா? ஆகவே ஜாக்கிரதையாயிருங்கள். அதுவும் திருமண காரியத்தில் ரொம்ப ஜாக்கிரதை என்பார்கள். உடனே ஏமாந்துவிடாதீர்கள். ஏனெனில் ஆபிரகாம் வாழ்ந்துவந்த பகுதி மக்கள் சபிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல கொடிய விக்கிரகவணக்க்த்தாராகவும் இருந்துவந்தனர். ஆகவே தான் ஆபிரகாம் தனக்கு நன்றாக தெரிந்த  தன் குடும்பத்தினரிடம் தன் ஊழியக்காரனை அனுப்பினான். இன்று ஊழியக்காரர்களே ஜாதி பார்ப்பது மட்டுமல்லாது ஜாதியைக் குறித்து முழக்கமான பிரசங்கங்கள் வேறு. கர்த்தாவே! எங்கள் மக்களை இரட்சியும்.
புதிய ஏற்பாடு ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
 இயேசு ஜாதி பார்த்தாரா? அவர் ஜாதி பார்த்திருந்தால் நமக்கு அதாவது வேதாகமத்தின்படி புறஜாதிகளுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்திருக்கும். தேவனின் பார்வையில் எல்லா மனிதரும் ஒரே ஜாதியே அது மனித ஜாதி. தேவன் நேசிப்பது மனிதனையே, அவன் எந்த ஜாதி என்று அவர் பார்ப்பதில்லை.
 புதிதாக திருமணம் முடித்த ஒருவனிடம் தெற்கத்திப் பயல் ஒருவன் அண்ணே உங்க மனைவி என்ன ஜாதி என்று கேட்டான்? அதற்கு பதிலளித்த அந்த புதுமாப்பிள்ளை அடேய் அவள் பெண் ஜாதி, நான் ஆண் ஜாதி ஆகவே இப்போ அவள் என் பொஞ்சாதி ஆகவே உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று பதிலளித்தானாம்.
அப்போஸ்தல கால சபையில் ஜாதியை (நாம் பார்க்கிற ஜாதி அல்ல, வேறு நாட்டு மக்கள்) மையமாக வைத்து பிரச்சனை வந்ததா? ஆம். வந்தது. வேதாகமத்தில் அதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் அதில் அப்போஸ்தலர்கள் தலையிடவில்லை, அதை விரும்பக் கூட செய்யவில்லை. அவர்களின் பதில் இன்று மட்டுமல்ல என்றுமே ஒவ்வொரு ஊழியனும் பின்பற்றவேண்டிய காரியமும் ஆகும் (அப்.6:2- 4).
மிகவும் இன வைராக்கியம் மிகுந்தவர்களும் மற்ற மக்களுடன் கலப்பதை தீட்டாக கருதின யூதமக்களுக்கு யூதரல்லாதவருடன் பேசுவது என்பதே மிகவும் கீழ்த்தரமானது ஆகும். அப்படிப்பட்ட யூதகுலத்தில் பிறந்து வளந்த பேதுருவுக்கு தேவன் காண்பித்த தரிசனம் என்ன்? இன்று அடிக்கடி தரிசனம் காண்பவர்கள் அதையே மேடைக்கு மேடை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாது  பேசுபவர்கள் இதை சற்று வாசித்து சிந்திக்கவேண்டும் (அப்.10). நாம் யாராக இருந்தாலும் யூதனானாலும் கிரேக்கனானாலும் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆகவே யாவரும் ஒன்றே. இன்னும் சொல்லப் போனால் யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை புது சிருஷ்டியே காரியம் என்று வேதம் கூறவில்லையா? இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள 1கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் வரங்களைக் குறித்து சொல்கிற தேவன் அதைத் தொடர்ந்து உடனே கூறுகிற காரியமும் இதுதான். சற்று நிதானமாக உங்கள் வேதாகமத்தை எடுத்து அந்த அதிகாரத்தை வாசித்து தியானியுங்கள். மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாமெல்லாரும் ஒரே ஜாதி என்றால் என்ன ஜாதி?
நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம் என்பதினால் நமக்குள்ளே எவ்வித பிரிவினைகளும் இருக்கக் கூடாது. இருக்காது. நாமெல்லாரும் வசனத்தின்படி விசுவாசத்தினால் ஆபிரகாமின் சந்த்ததியினராகவும் இருக்கிறோம். நாம் இஸ்ரவேலர்கள். தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். உள்ளத்தில் யூதனானனவே யூதன் என்று ஒரு இடத்தில் அப்.பவுல் கூறினார். ஆம் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று அர்த்தமாம். நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நாம் எந்த நாடு எந்த மொழி எந்த பகுதி எந்த சபைப் பிரிவு என்றாலும் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் ஒரே சரீரம். நாம் பிரிந்திருக்க முடியாது.
ஜாதி யார் பார்ப்பார்?
ஒரு பிரசங்கியார் வேடிக்கையாக தன் பிரசங்கத்தில் பின்வருமாறு சொன்னார். இயேசு ஒரு இடத்தில் இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி வேறெவ்விதத்தினாலும் போகாது என்று சொன்னார் அல்லவா? ஆகவே இந்த ஜாதி என்பதெல்லாம் பிசாசுகளுக்குத்தான். இரட்சிக்கப்பட்ட நமக்கு அல்ல என்றார். இதற்கு மேல் இதைக் குறித்து நான் கூற விரும்புவதற்கொன்றுமில்லை.
திருமணத்தின் போதாவது ஜாதி பார்க்கலாமா என்று கேட்டால் நான் பொதுவாக என் நண்பர்களிடம் கூறுகிற காரியம் என்னவெனில் திருமணத்தில் தேவ சித்தம்தான் முக்கியம். ஜாதி அல்ல. ஆகவே தேவ சித்தத்திற்கு தடையாக எந்தக் காரியத்தையும் வைக்காதீர்கள். தேவன் கண்டிப்பாக வேறுஜாதியைத்தான் நீ மணமுடிக்கவேண்டும் என்று சொல்ல மாட்டார். ஆனால் அதுவே அவரது சித்தமாக இருகும் போது நம் விருப்பமும் ஆசையும் அதை நம் வாழ்வில் நிறைவேறாமல் செய்துவிடும். விளைவு திருமண தோல்விகள். ஆகவே ஜாதியை மட்டுமல்ல - படிப்பு, அழகு, வரதட்சணை(வாங்கினால் வெட்கம்) குடும்ப அந்தஸ்து என எதையும் முன்வைக்காமல் ஆண்டவரே உம் சித்தமே என் பாக்கியம் என்று சொல்ல மட்டும் செய்யாமல் அதின்படி நடக்கவும் செய்யுங்கள். தேவன் நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டார். நீங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிச் செய்வார்.அதுவே அவரது விருப்பமும் கூட. மறந்துவிடாதீற்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள். மறக்காமல்........
சாதி சாதி என்று பலர் ஏத்திக் கூறுவர்
சாதியொன்றுமில்லை எல்லாம் பாதியில் வந்தது
சாதியொன்றுண்டு (உள்ளத்தின்படி) யூத இஸ்ரவேல் சாதி
எல்லாரும் வாழ்ந்து சுகிக்கவே
தேவனை மதிக்கவே
சாத்தானை மிதிக்கவே
உலகத்தை ஜெயிக்கவே
ஜெய் ஜெய் ஜெய்
கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்க என்ன ஜாதி? (எல்லாம் பழக்க தோஷம்)

நான் யூத ஜாதி. அப்ப நீங்க?
இந்தக் கட்டுரை எழுத மிகவும் உந்துதலாக இருந்த ஜஸ்டின் பிரபாகரன் அவர்கலின் ஒரு பாடல் வரிகளுடன் கீழே கொடுகப்பட்டுள்ளது. கேட்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். (பாடல் இணையத்தில் கிடைக்க வில்லை எனில் சொல்லுங்கள், லின்க் கொடுக்கிறேன்)
அதிரவைக்கும் பாடலின் பிண்ணனியில் வாசியுங்கள்.
ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
Caste caste நாங்க -ஹோலி Caste
|Caste
caste நீங்க என்ன Caste
Caste
Caste நாங்க Pentecost
யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே

ஆணென்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை

கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை

அனைவரும் சரிசமமே
Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு நியாயம் இல்லையே

தாலி கயிறு  கட்டுகிற வேலையில்லையே

நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே

ஜாதி
Dowry ஒழித்து கட்டி நிவிர்த்தி செய்வோமே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே - ஜாதியிலே ஜாதி
புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு
கல்யாணம் என்பது கனமுள்ளதாகும்
சந்தையாக மாற்றவேண்டாம்

நியாயத்துக்கும் அநீதிக்கும்

வெளிச்சத்த்துக்கும் இருளுக்கும்

கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்

சம்பந்தமில்ல தெரிஞ்சுகோங்க
 
நேரம் காலம் பார்த்து இராகுகாலம் கேட்டு
நல்ல நாளும் வைத்து சகுனமெல்லாம்  பார்த்து

கல்யாணத்தை நடத்துறாங்க

கர்த்தருடன் இருக்கையிலே காலம் நேரம் ஒன்றுமில்லை

நாளும் நேரம் பார்ப்பதுமே கர்த்தருக்கே கோபமாமே

தெரிஞ்சுக்காம செய்யுறாங்க
(இக்கட்டுரை 2008 ல் தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக எழுதியது)

No comments: