Thursday, September 28, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 1


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று சொல்லும் நாம், நமக்கு மிகப் பெரிய, மற்றும் தாங்க முடியாத பிரச்சனைகள் வரும்போது, அவை நம் எதிரிக்குக் கூட வரக் கூடாது என்று மனதார விரும்புகிறோம், பேசுகிறோம். ஏனெனில் துன்பங்கள், துயரங்கள் மற்றும் பிரச்சனைகள் மனிதனை அப்படியே அமிழ்த்தி கண்ணீரில் மூழ்கடித்து அவனை வீழ்த்தத் துடிக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது, அவன் வீழ்ந்து விடுவதில்லை, ஏனெனில் அவனைத் தூக்கித் தாங்க ஒருவர் உண்டு. இந்த “இயேசுவுக்காக…” பாடல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் பின் ஒரு கதை உண்டு. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியே.
1.     1. என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
2012ம் வருடத்தில் என் வாழ்க்கையில் கடும் புயல் போன்ற வேகத்தில் பெரிதான பிரச்சனைகள் என்னைத் தாக்கியது. ஜெபிப்பதற்கும் திராணியற்றுப் போயிருந்தேன். இனிமேல் அவ்வளவுதான் நீ எழுந்திருக்க முடியாது, உன் ஊழியம், உன் வாழ்க்கை எல்லாமே தோல்வியே என்று எதிரியானவன் புதிராடிச் சதிராடிக் கொண்டிருந்தான்.  தேவ நடத்துதலினால் நான் உபவாசமிருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.

முதல் சில நாட்களில் ஜெபிப்பதற்கே கஷ்டமாயிருந்தாலும், விடாமல் ஜெபிக்க உறுதியாயிருந்து ஜெபித்தேன்.  ஒரு பக்கம் சத்துருவின் தாக்குதல்களும், அவமானக் குற்றச்சாட்டுகளும், ஏளனமான பரிகாசமும் இருந்தன, மறுபக்கம் நான் தைரியமிழந்து ஆண்டவரே பேசும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். உன் வாழ்க்கை இருள் விலகுவதில்லை என்று சொல்லி பிசாசானவன் போராடிக் கொண்டிருந்த அந்நேரத்தில், நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது என்னையும் அறியாமல் பாட ஆரம்பிக்கிறேன். பாடல் வாயில் வந்த உடனேயே கிதாரை எடுத்து இசைத்துப் பாடவும் ஆரம்பித்து விட்டேன். என் சூழ்நிலையை மறந்து, கவலை துறந்து சங்கீதம் 27:1 ஐ சொல்கிறேன், “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?"

இதைச் சொல்லும்போதே என் கவனம் முழுவதும் அப்படியே வேதாகமத்திற்குத் திரும்புகிறது. வேதாகமத்தை எனக்கு முன்பாக வைத்துக் கொண்டு அப்படியே பாடல் வரிகளை சங்கீதம் 27ல் உள்ளவாறே, பாடலுக்கேற்றவாறு பொருள் மாறாமல் எழுதிக் கொண்டு வந்தேன். ஒரு சில நிமிடங்களில் பாடல் தயார். என் மனதும் தேவனுடனான ஒரு சந்திப்புக்குத் தயாரானது.

பாடலை எழுதி முடித்ததும், நான் எப்போதும் செய்வது போல நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களுக்கு அனுப்புகிறேன். அப்போதே என் கருத்தாக இந்தப் பாடலை நண்பர் கிங்ஸ்லியில் கிதார் பிண்ணனியில் ஒரு வெஸ்டெர்ன் பாணி இசையில் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி வைத்தேன். நான் ஆசைப்பட்டபடி முழுமையும் நண்பர் கிங்ஸ்லியின் இசையில் இப்போது இசைப்பதிவு செய்யப்படவில்லை எனினும், அவரின் கைவண்ணத்தை நீங்கள்  சிடியில் கேட்கும்போது உணர முடியும்.
ஜான் அண்ணனும் பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்ற விமர்சனத்தைத் தந்தார்.

அச்சூழ்நிலையில் கர்த்தரே என்னுடன் பேசி, என் இருளான சூழ்நிலையிலும் அவரே வெளிச்சம் என்பதை உணர்த்தி, அவர்பக்கமாக என்னை இழுத்துக் கொண்டார் என்று நம்புகிறேன். உயிருள்ள வேதாகம வார்த்தைகள் என் சூழ்நிலையை மேற்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.  சத்துருவாகிய பிசாசானவன் வெட்கப்பட்டு ஓடிப் போனான்.  அடுத்து என்னென்ன நடக்கப் போகிறது என்பதை தேவன் வெளிப்படுத்தி என்னை அனைத்துத் தீங்குக்கும் விலக்கிக் காத்தார்.
இதோ உங்களுக்காக அந்தப் பாடலின் வரிகள்

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்

அல்லேலூயா (4)

பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க
என்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரே

அல்லேலூயா (4)

எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும்
யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன்

அல்லேலூயா (4)

ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனே
உம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம்

அல்லேலூயா (4)

தீங்கு நாளில் கூடாரத்தில் மறைப்பாரே
கன்மலையின் மேல் என்னை உயர்த்துவார் ஆனந்தம் பாடுவேன்

அல்லேலூயா (4)


என் ஜெபத்தை கேட்டிரங்கி பதில் கொடும்
உம் முகத்தைத் தேடிடுவேன் இரட்சிப்பின் தேவனே

அல்லேலூயா (4)

 - Arputharaj
+91 9379168300

Add caption


No comments: