Thursday, September 21, 2017

இயேசுவுக்காக....விரைவில்


அன்பு நண்பர்களே கடந்த சில ஆண்டுகளாக தேவன் அதிகமதிகமாக புதிய பாடல்களைக் கொடுத்த போது எனக்கு ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. பல நண்பர்கள் அவைகளை ஒரு சிடி ஆக வெளியிட கேட்டு உற்சாகப்படுத்தினர். நீண்ட கால தயக்கத்திற்குப் பின் இந்த வருட துவக்கத்தில் ஒரு பாடல் சிடி வெளியிட ஜெபத்துடன் முடிவெடுத்தோம்.  இதற்கான தேவைகளுக்கு என்ன செய்வது என்று யோசித்தேன். கடன் வாங்கக் கூடாது. கர்த்தருக்குச் சித்தமானால் அவரே இதை வாய்க்கச் செய்வார் என்று தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தோம். நண்பர்கள் சிலர் இதற்கென அவர்களால் இயன்ற தொகையைக் கொடுத்து தாங்க முன் வந்தனர். எவ்வளவு செலவு ஆகும் என்று எனக்கு முழுமையாக தெரியாவிடினும், கர்த்தரை நம்பி இருந்த மூவாயிரம் ரூபாயைக் கொண்டு ஒலிப்பதிவு நிலையம் சென்றோம். இசைத் துறையில் உள்ள நண்பர்கள் சிலர் மிகவும் குறைந்த தொகையில் ஊழியமாக இசை அமைக்க முன் வந்தனர். சிலர் எதுவும் வாங்காமல் உற்சாகமாக ஈடுபட்டு, இந்த பாடல் சிடி மிகவும் தரமாக வரவேண்டும் என்று பிரயாசப்பட்டனர். என் நண்பர் ஜான் பிரகாஷ் மற்றும் கிங்ஸ்லி போன்றவர்கள் என்னை விட அதிகமாக இந்த பாடல் சிடி உருவாக்கத்தில் நேரம் செலவழித்தனர். தேவனுடைய கிருபையால் ஒலிப்பதிவு, மிக்ஸிங் எல்லாம் முடிந்து இப்போது ஒலிப்பதிவு பிரதிகள் எடுக்கப்படுவதற்காக மாஸ்டர் சிடி மும்பைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தேவனுடைய பிள்ளைகளுக்கு அனுப்ப முடியும் என்று நம்புகிறேன். இந்தப் பாடல்கள் சபைக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இப்பாடல் சிடி உருவாக்கத்தில் எனக்குதவிய நண்பர்களின் பெயர்களை எல்லாம் இங்கே எழுது இடம் போதாது. அனைவரின் உதவி, ஜெபம் மற்றும் உற்சாகப்படுத்துதல்களுக்காக தேவனை துதிக்கிறேன். ஆயினும் நான் முன்பே சொன்னது போல, இப்பாடல் சிடிக்கு நான் இதுவரை பெற்ற வரவு செலவு கணக்கை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.  அதை இப்பதிவில் இணைத்திருக்கிறேன்.  மீதம் இன்னும் ஆகவேண்டிய செலவினங்களுக்கும் கர்த்தரையே நம்பி இருக்கிறேன்.

சிடி வெளிவருமளவும் தினமும் ஒரு பதிவு எழுதவும், ஒவ்வொரு பாடல்களும் எழுதப்பட்ட சூழ்நிலையையும் விளக்க விரும்புகிறேன். தேவன் மகிமைப் படுவாராக.


No comments: