Wednesday, April 22, 2009

ஒரு மழலையின் ஜெபம்

பகைஞனையும் அடக்கிப் போட தேவரீர் உமது சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர் என்று தாவீது சங்கீதம் 8ல் கூறுகிறார். இங்கே ஒரு மழலை குழந்தையின் ஜெபம் உண்மையில் உள்ளத்தை உருக்குகிறது. பெலனையும் அளிக்கிறது.




அன்புள்ள இயேசப்பா,
சிறுபிள்ளையான என்னை நேசிப்பதற்காக உமக்கு நன்றி. அப்புறம் எனக்கு நீங்க பல தடவை நான் கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கீங்க. இப்போதும் நான் கேட்கப்போறதையும் தருவீங்கல்ல. எனக்கு என்ன சொல்லி உங்க கிட்ட கேட்கிறதுன்னே தெரிய லை. நான் நேத்திக்கு எங்க பாஸ்டர் மாமா வீட்டிற்கு போனப்போ அங்கே ஒரிசான்னு ஒரு இடத்தில கிறிஸ்தவர்கள் தாக்கப்படுறது பத்தி சொல்லிகிட்டு அதுபத்திய படங்களையெல்லாம் காட்டிகிட்டு இருந்தாங்க. நானும் படம்னதும் ஆசையா எட்டிப் பார்த்தேன். நான் ஒருபோதும் அதுமாதிரி படங்கள பார்த்ததில்லை. அப்பப்பா திகில் படங்களில் வருகிறதை விட பயங்கரமா இருந்துச்சு. நான் அத பார்த்த உடனே பயந்துட்டேன். நான் உடனே பாஸ்டர் மாமாகிட்டே என்னது மாமா இதுன்னு கேட்டேன். அவர் சொல்ல சொல்ல என்னால அழுகைய அடக்கவே முடியலை. அங்கே இருந்தவங்களும் அழுதாங்க. அதுக்கப்புறம் நான் எங்க வீட்டுக்கு திரும்பி வந்துட்டேன். நேற்று நைட்டு முழுக்க அந்தப் படங்கள்தான் என் முன்னால தெரிஞ்சது. என்னைப் போல பல பிள்ளைங்க அழுதுகிட்டே இருக்க இடம் இல்லாம தவிப்புடன் பார்த்ததை என்னால மறக்கவே முடியல. அப்புறம் ஏன் அவுங்கல்லாம் வீட்டுல இல்லாம காட்டுல இருக்கணும். அவுங்களுக்கும் உதவுங்க இயேசப்பா. எனக்காகவாவது அவங்களுக்கு உதவி செய்யுங்க. எனக்கு இப்போ கண்ணை மூடவே முடியல. ஏன் தெரியுமா. நான் கண்ணை மூடினா அந்த சிஸ்டர் ஆன்டியை எரித்த படத்தையும் மாமா காட்டினார். நான் ஒரு தடவை தெரியாம அடுப்புல கை வைச்சுட்டேன். அதுவே எனக்கு பல நாள் வலிச்சிகிட்டே இருந்தது. ஆனா இயேசப்பா அந்த ஆன்டியையே அடுப்புக்குள்ள வச்ச மாதிரியில்ல இருக்கு. அந்த ஆன்டிக்கு எவ்வளவு வலிச்சிருக்கும். எனக்கு அடுப்புல கை வச்சி வலிச்ச போது எங்கம்மா எப்படி அழுதாங்க தெரியுமா? நானும்தான். எனக்கு இப்போ அதை நினைக்கும்போதெல்லாம் அந்த ஆன்டி எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சே எனக்கு அழுகை அழுகையா வருது. எப்படி இயேசப்பா அது அந்த ஆன்டிக்கு நடந்தது. இனிமே யாருக்கும் அப்படி நடக்கக் கூடாது. அவங்களுக்கெல்லாம் வலிக்குமே. நான் உங்க பிள்ளையா இருக்குற மாதிரிதானே அவங்களும் உங்க பிள்ளைதானே. தய்வு செய்து அவங்களுக்கு ஏதாவது செய்யுங்க. அப்புறம் அங்கே ஒரிசாவில் இருக்குற எல்லாரும் உங்க பிள்ளையாக மாறனும். எனக்கு நல்லா தெரியும். அங்கே சீக்கிரம் அது நடக்கும்னு. எங்க சண்டே ஸ்கூல் டீச்சர் போன வாரம் பாடம் நடத்தும் போது நீங்க எருசலேமில் மரித்த பிறகு எருசலேமில் ஏராளமானவங்க உங்க பிள்ளைகளாக மாறினாங்களாமே. அது போல இப்பவும் நிறைய பேர அங்க கொன்னுட்டாங்கன்னு மாமா சொன்னாங்க. அப்படின்னா அங்கேயும் நிறைய பேர் உங்க பிள்ளையாக மாறப் போறாங்கதானே. எனக்கு ஒரு விஷியம் மட்டும் புரியல இயேசப்பா. அவங்கல்லாம் எதுக்கு சர்ச் எல்லாத்தையும் எரிக்கிறாங்க இடிக்கிறாங்க. என்ட்ட இருந்து யாராவது எதையாவது பிடுங்கினால் எங்கப்பா அதுபோல பல மடங்கு வாங்கிதந்து என்னை சமாதானப்படுத்துவாங்க. அதுபோல இயேசப்பா இப்போதும் நீங்க எனக்கு செய்யுங்க. எனக்கு இதுக்கு மேல என்ன கேட்கன்னு தெரியல. திரும்ப திரும்ப அந்த படங்கள் தான் என் கண் முன்னால. பாருங்க என் கண்ணுல கண்ணீர் வந்துட்டு. நான் அழுதா எங்கம்மா ஏதாவது செய்து என்னை சிரிக்க வைப்பாங்க. அது போல நீங்களும் செய்யணும்னு ஆசை. செய்வீங்களாப்பா. PLeeeeash!



(தூரத்தில் ஒலிபெருக்கியிலிருந்து மெல்லிய பாடல் சத்தம் கேட்கிறது)

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

ஆட்டுக்குட்டிதான் இவர் கண்ணீரை
அற அகற்றி துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப்பருக இயேசுதாமே...........

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

No comments: