Wednesday, April 26, 2017

4. தமிழ் டேவிட் - பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற அனுபவம்



நான் செய்து வந்த ஊழியத்தின் முடிவுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. நான் பிரசங்கம் பண்ணும்போது திரளான ஜனங்கள் கூடினர். என் வார்த்தைகள் அவர்களின் மூளையைத் தொட்டது, அவர்களின் இருதயத்தைத் தொடவில்லை.  என் பிரசங்கங்கள் ஒரு ஆவிக்குரிய சுற்றுலா போல அனேகரால் ரசித்து கேட்கப்பட்டது.  தற்காலிகமான மாற்றங்களே உண்டாயின. உண்மை என்னவெனில், ஆத்துமாக்கள் அந்த இடத்திலேயே இரட்சிக்கப்படுவதைப் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லாதிருந்தது. எனது நோக்கமெல்லாம், பிரசங்கித்து விட்டு அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. இன்னுமதிக ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்ற தாகம் எனக்குள் எழுவதை நான் அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் எதையும் தேடாமல் இருந்தேன். எனக்கு உள்ள குறை  என்ன என்பதை நான் அறியாதிருந்தேன்.  நான் சுயாதீனமான ஊழியம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே நான் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு, பணம் சம்பாதித்து, பிரசங்க ஊழியம் செய்தேன். அதன் பின் புத்தகம் பைண்டிங்க் செய்யும் வேலையை முயற்சித்துப் பார்த்தேன்.  நான் பெரிய பெரிய காரியங்களைச் செய்வேன் என என்னைப் பற்றி நினைத்துக் கொண்டேன்.  இப்படியாக வேலை செய்து கொண்டே நான் சில காலம் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் சில ஆத்துமாக்களே ஆதாயம் செய்யப்பட்டது. நான் அடிக்கடி மன திருப்தியின்றி சோர்வடைந்தேன்.

இரட்சண்ய சேனையைச் சேர்ந்த கேப்டன் ஒருவர் என்னிடம் நான் தேவனுக்கு என்னை அர்ப்பணிக்க வேண்டும் என அன்புடன் ஒரு நாள் கேட்டுக் கொண்டார்.  நான் அதை ஏற்கனவே செய்து விட்டேன் என பதில் சொன்னேன். இல்லை, நீ தவறாக் புரிந்து கொண்டிருக்கிறாய் என அவர் சொன்னார்.  நீ பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது.  நீ முற்றிலும் கர்த்தருடையவனானால், அவருடைய ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு கர்த்தரால் மிகவும் ஆச்சரியமான விதத்தில் பயன்படுத்தப்படுவாய் என்றார். அவருடைய வார்த்தைகள் என் மனதைத் தொட்டன. அவர் சொல்வது சரி என்பதை நான் அறிந்திருந்தேன்.  முற்றிலும் என்னை ஒப்புக்கொடுப்பது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.  அழிந்து போகிற ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு தேவன் என்னிடம் எதிர்பார்க்கிற எதையும் செய்வதற்கு நான் தயாராக இருந்தேன். என் விருப்பங்களை செயல்படுத்த, அவருடன் நான் கொழும்பில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு இரவு  11 மணிக்குச் சென்றேன். அங்கே நான் ஆண்டவருடன் தனித்திருக்கும்படி என்னை விட்டுவிட்டு அவர் புறப்பட்டுவிட்டார்.

அர்ப்பணித்தல் என்ற பதத்தின் பொருளை நான் அறியாதிருந்தேன்.

நான் முற்றிலும் தேவனுக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். நான் முழுவதுமாக தேவனிடம் சரணடைந்தேன், எதையும் விட்டுவைக்க வில்லை.

இதோ, ஆண்டவரே, என் சரீரம், ஆத்துமா, உடைமைகள் மற்றும் என் விருப்பங்கள் அனைத்தையும் நான் உம் பாதத்தில் உம் கன மகிமைக்காக படைக்கிறேன். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு, உம்முடைய நாமம் மகிமையடைய நான் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன், எந்த மாற்றத்திற்கும் தயாராக இருக்கிறேன், பூமியின் கடையாந்தரமான பகுதிகளுக்கும் செல்ல நான் ஆயத்தம், என் உறவுகளை நண்பர்களை மற்றூம் என் மனைவியைக் கூட  மறந்து அவர்களைப் பிரியவும் நான் ஆயத்தம். இதோ நான் என்னைப் படைக்கிறேன், என்னை எடுத்துக் கொண்டு நீர் விரும்புகிறபடி என்னை மாற்றும். அந்த இரவு நான் தேவனிடம் ஏறெடுத்த ஜெபத்தின்  சாராம்சம் இதுதான். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நான் தேவனுக்கு முன்பாக சகலத்தையும் முன்வைத்து ஒரு முடிவுக்கு வந்தேன். அதன் பின் என்னால் ஜெபிக்க முடியவில்லை. அவருக்கு படைப்பதற்கென்றோ அல்லது விட்டுவிடவோ என்னிடம் எதுவும் மிச்சம் இருக்கவில்லை.

நான் முற்றிலும் வெறுமையாக்கப்பட்டேன். கடைசியாக நான் சொன்னது, “ஆண்டவரே, நான் உம்முடையவன், நீர் என்னுடையவர்.”  ஏதாகிலும் உடனடி மாற்றம் நடக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை.  என் தலைக்கு மேல் அக்கினி ஜூவாலைகள் எதையும் நான் காணவில்லை.  நான் முற்றிலும் நம்பி உணர்ந்திருந்த ஒரு உண்மை என்னவெனில் - நான் முழுவதுமாக கர்த்தருடையவன் – நான் கர்த்தரை முற்றிலும் எனக்கு சொந்தமானவராக எடுத்துக் கொண்டேன்.  நான் முழங்காலில் இருந்து எழுந்து, கிறிதுவுக்காக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட தேவைப்பட்டால்  தலைகீழாக  நடந்து செல்லவும் ஆயத்தமாக இருந்தேன். இதை முற்றிலும் உணர்ந்தவனாக, அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்குச் சென்றேன். என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பி, நடந்த அனைத்தையும் நான் அவளிடம் சொன்னேன். அவள் ஆச்சரியப்பட்டாள். நான் ஏற்கனவே தேவனுக்கு என்னை அர்ப்பணித்தவன் தானே என அவள் நினைத்தாள். அந்த இரவு நான் அர்ப்பணித்திருந்ததைப் பற்றி அவள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. 

ஆண்டவருக்காக என் வேலை, குடும்பம், மனைவி, வீடு மற்றும் அனைத்தையும் இழக்க ஆயத்தம் என்பதை அவளிடன் நான் சொன்னேன். இது அவளை இன்னும் அதிக ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அவள் எதுவும் சொல்ல வில்லை.

அடுத்த நாள் ஞாயிற்ற்குக்கிழமையாதலால், நான் சி.எம்.எஸ் சபையில் கலந்து கொண்டேன்.  ஆராதனை முடிந்த பின்,  நான் கேட்ட பிரசங்கம் பற்றி பிரசங்கித்தவரிடம் போய் பேசவேண்டும் என்ற ஆண்டவரின் உணர்த்துதலைப் பெற்றேன்.  நான் மன உண்மையுடன் ஆவியானவரின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தேன்.  நான் கீழ்ப்படிந்த உடனேயே அனைத்தையும் மறந்தேன், நான் என்ன சொன்னேன் என்பதையோ அல்லது எங்கிருக்கிறேன் என்பதையோ  மறந்தேன்.  நான்  அற்புதமான ஒரு அனுபவத்தை, வல்லமை என்னை நிரப்பின அனுபவத்தைப் பெற்றேன். அதன் பின்பு நான் வீட்டிற்குச் சென்று, ஒரு கூட்டத்தை நடத்தினேன். ஆனால், தேவனுக்கு மகிமையுண்டாவதாக, என்ன ஒரு வித்தியாசமான முடிவுகள், ஆத்துமாக்கள் மனமாற்றம் பெற்றார்கள். பாவிகள் சத்தமிட்டு இரக்கம் பெற கதறி அழுதார்கள்.  நான் மிகவும் மகிழ்ந்து, சந்தோசத்தில் சத்தமிட்டு அழுதேன். நான் வெளியே சென்ற சற்று நேரத்தில், ஆவியானவர் என்னை சி.எம்.எஸ் பள்ளிகூடம் ஒன்றிற்குச் செல்ல வழிநடத்தினார். கர்த்தர் தான் என்னை நடத்தினார் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

நான் பேச ஆரம்பித்த அந்த நேரத்திலேயே அனேகர் கர்த்தருக்கு தங்கள் இருதயங்களை ஒப்புக் கொடுத்தார்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம்.
பின்னர் சில ஆத்துமாக்கள் மரத்தினடியில் இருக்கையில் மனமாற்றம் அடைந்தார்கள். சிலர் சாலையில் அனைவரும் காண முழங்கால் படியிட்டு, ஜெபித்து மனமாற்றம் பெற்றனர்.  கர்த்தர் எனக்காக பெரிய காரியங்களைச் செய்தார். உதவாக்கரையாக இருந்த நான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்ற பின் பயன்படுத்தப்பட்டேன்.  உன்னதத்திலிருந்து வந்த வல்லமையே அந்த வேலைக்காக என்னை பலப்படுத்தினது. அந்த நாட்களில் இருந்து கர்த்தருக்காக ஊழியம் செய்வது எவ்வளவு மகிமையான பாக்கியம் என்பதை அனுபவித்து வருகிறேன். முன்பு, கொஞ்ச நேரம் பேசினாலே நான் சோர்வடைந்து விடுவேன். இப்போது எனக்குள் இருக்கும் வல்லமை  என்னைப் பேச வைக்கிறது, தேவைப்பட்டால் ஒரே நாளில் எட்டு அல்லது ஒன்பது கூட்டங்களில் கலந்து கொள்ளவும், தேவையான அளவு பேசவும்  பெலனை தருகிறது.

முன்பு நான் மிகக் கவனமாக பிரசங்கங்களை ஆயத்தம் செய்வேன்.  இப்போது ஆண்டவர் என் வாயில் அவர் வார்த்தைகளை வைக்கிறார்.  முன்பு என் வார்த்தைகள் கேட்பவர்களுக்கு சலிப்பை உண்டாக்கியது. இப்போது அவர்கள் மணிக்கணக்கில் நான் பேசுவதைக் கேட்கிறார்கள். நான் சந்திக்கிற ஒவ்வொரு பாவியையும் முத்தம் செய்து அவருடன் கூட  அழ முடியும் என்பது போல நான் உணர்ந்தேன்.

எல்லா புகழும், கனமும், மற்றும் மகிமையும் உன்னதத்தில் இருந்து வந்த வல்லமைக்கே.

கிறிஸ்தவனே – கர்த்தருடைய கரத்தில் நீ பயனுள்ள பாத்திரமாக இருக்க விரும்புகிறாயா? நீங்கள் ஒரு பயனுள்ள தாயாராக, சகோதரனாக, எஜமான் அல்லது வேலைக்காரராக, ஊழியராக, அல்லது உபதேசியாக இருக்க விரும்பினால், இப்போது இந்த வல்லமையை உரிமை பாராட்டி பெற்றுக் கொள்ளுங்கள். ஆனா நிபந்தனைகளை நிறைவேற்றுங்கள், செலுத்த வேண்டிய கிரயத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்ய வேண்டியது மிக முக்கியம்.

இந்த வல்லமையை உரிமை பாராட்டவோ, பெற்றுக்கொள்ளவோ நீங்கள் விருப்பம் இல்லாதிருந்தால், நீங்கள் உங்கள் வேதாகமத்தை ஓரமாக தூர வைத்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம். நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால், கடவுள் அவர் செய்ய வேண்டியதைச் செய்ய தயாராக இருக்கிறார்.  ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. பிசாசு மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்.  உங்களால் சும்மா இருக்க முடியுமா, எதுவும் செய்யாமல் இருப்பீர்களா? அன்பான கிறிஸ்தவனே, நீ என்ன செய்யப் போகிறாய்? நான் ஒன்று சொல்லட்டுமா?  முழுவதுமாக தேவனிடம் ஒப்புக்கொடு – இயேசுவுக்காக எதையும் செய்வதற்கும்,  எங்கும் செல்வதற்கும் விருப்பமுள்ளவராகும்படி அர்ப்பணியுங்கள். இந்த வல்லமையை விசுவாசத்தினால் உன்னதத்திலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். கலாத்தியர் 3:14. பின்பு அனைவரும் அறிய அதை சாட்சி பகருங்கள்.

பின்பு, அதன் பின்பு மாத்திரமே, பலவீனமான, உபயோகமற்ற மனிதராக இருக்கும் நீங்கள் பெலப்படுத்தப்பட்டு, உபயோகமானதும், மதிப்புள்ளதுமானவராக உங்களுக்குள்ளும், உங்கள் மூலமாகவும் கிரியை செய்கிற வல்லமையின் மூலமாக மாற்றப்படுவீர்கள். அல்லேலூயா.

நான் வெறுமையிலும் வெறுமையானவன். ஏசாயா 41:24. அவரே எல்லாமுமாக இருக்கிறார்.




முந்தய கட்டுரைகள்

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் – 1. தமிழ் டேவிட் - ஒரு அறிமுகம்

நாம் மறந்த சிறந்த தேவ மனிதர்கள் - 2 தமிழ் டேவிட் (இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கதை)

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் தொடர் கட்டுரை 3 - தமிழ் டேவிட் பரிசுத்தமாக்கப்பட்டது எப்படி?

No comments: