யுமராலஜி பார்ப்பவர்கள் மட்டும்தான் எண்களைக் குறித்து கவலைப்படுவார்கள் என்று நினைக்கவேண்டாம். நாங்களும் அக்கூட்டத்தில் உண்டு என்று சத்தமின்ன்றி உரைக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமுண்டு. சோதிடம், எண்ணியல் போன்றவற்றில் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களைப் பற்றி நான் கூறவில்லை. ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களிடையே இருக்கும் ஒரு காரியம்தான் கட்டுரைக்கான கரு. இராசிபலன், அதிர்ஷ்டம் போன்றவற்றில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களிடம் சென்று உங்களுக்கு பிடித்த (அதிர்ஷ்ட அல்லது இராசியான) எண் எது என்று கேட்டால் (பெரும்பாலும்) உடனே வரும் பதில் : 7, 3 அல்லது 777 , 333 . மேற்கண்ட எண்களில் ஏதாவது ஒன்றைத்தான் கிறிஸ்தவர்கள் கூறுவர். சமீபத்தில் நான் எனது ந்ண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு குட்டி புத்தகம் வாசிக்க கிடைத்தது. எனக்கு குட்டிப் புத்தகங்கள் என்றால் தனியார்வமுண்டு. என் வாசிப்பில் அனேக குட்டி புத்தகங்கள் பல பெரிய குண்டு புத்தகங்களை விட சிறந்தனவாகவும் சீக்கிரம் வாசிக்க ஏதுவாகவும் இருந்திருக்கிற படியால் அவற்றின் மீது தனிப்பாசம். சரி கதைக்கு வருவோம். என் கையில் கிடைத்த அந்த புத்தகம் எதைப் பற்றிய புத்தகம் என்பதற்காக முன்அட்டையை பார்த்த எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அப்புத்தகம் இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஒரு வேத வல்லுநர் எழுதியது. அப்புத்தகத்தில் இல்லை இல்லை அதன் அட்டையில் நான் கண்டது இதுதான் 333 பிதாவின் பரிபூரணம் 444 ஆவியின் பரிபூரணம் 555 குமாரனின் பரிபூரணம் 666 பிசாசின் பரிபூரணம் 777 தேவனின் பரிபூரணம் இதைப் பார்த்த உடனேயே அப்புத்தகத்த வாசிக்கும் ஆர்வம் தொலைந்து என் மனதில் ஆயிரம் கேள்விகள்தான் எழும்பியது. வேதத்தில் எங்கேயாகிலும் மேற்கூறிய எண்கள் கூறப்பட்டிருக்கிறதா? 666 என்ற இலக்கத்தை மட்டும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் காண்கிறோம். அங்கும் அதுதான் பிசாசின் பரிபூரணம் என்று சொல்லப்படவே இல்லை. எதையாவது வித்தியாசமாக சொல்லவேண்டும் என்று ஏன் இப்படியெலாம் யோசிக்கின்றனர் என்பதுதான் எனது பெரும் யோசனையாக இருந்தது. வேதத்தில் தேவன் எங்கேயாகிலும் இந்த எண் தான் எனக்கு பிடித்தமான எண். ஆகவே அதை கணக்கிட்டு எனக்கு அதைச் செய் இதைச் செய் என்று கூறினாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. தேவன் நேரடியாக கூறவில்லை ஆனால் சில இடங்களில் ”ஏழுமுறை சுற்றி வா மூன்று மூன்றாகச் செய் எதைச் செய்தாலும், மூன்று சாட்சி, மூன்று நாள், மூன்று காளை, மூன்று தூதர் மூன்று மூன்று என்று வரும் காரியங்கள் பைபிளில் எவ்வளவு இருக்கு தெரியுமா என்று” அடுக்கும் ஐயாமார்கள் அனேகர் உண்டு. ஆனால் இவை எல்லாமே வேதத்தில் இருந்தாலும் அவை நமக்கு இராசியான எண்களோ அல்லது அதிர்ஷ்ட எண்களோ அல்ல. நம் விசுவாசம் எண்களில் அல்ல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்காக பட்ட எண்ணற்ற பாடுகள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் உள்ளது. (அதிலும் கூட ஆண்டவர் அடைந்த ஏழு பாடுகள் என்று புலம்பல் பாடுபவர்கள் உண்டு. ) இப்படி எண்களை வைத்து பிரசங்கம் பண்ணுதல் அல்லது புத்தகம் எழுதுதல் மக்களுக்கு கவர்ச்சியாகவும் புதுமையாகவும் தோன்றலாம். இன்னும் சொல்லப் போனால் வேதாகமத்தை வைத்து காணிக்கை பார்க்கும் சில ஊழியர்களுக்கு சொல்ல சூப்பரா இருக்கும். ஒரு கிறிஸ்தவ தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் எங்களுடன் சேர்ந்து மூன்று முறை சொல்லுங்கள் ஏழு முறை சொல்லுங்கள் ஆசீர்வாதத்தை அள்ளுங்கள் என்பன போன்ற இடிமுழக்கங்களை சகிக்கவே முடியவில்லை. நாம் எவ்வளவுதான் தேறினவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட கிறிஸ்தவ அசட்டுத்தனங்களிலிருந்து விலகி மற்றவரையும் விலக்க முயற்சிப்போமாக. இயேசு சீக்கிரத்தில் வரப் போகிறார். அவர் வரும் போது நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? என்றும் நம்மிடம் விசுவாசம் இருக்கிறதா என்றும் தான் பார்ப்பாரே அன்றி நம்ம விசுவாசி இன்னைக்கு மூன்று முறை தொழுதாரா? ஏழுமுறை தோத்திரம் சொன்னாரா என்பதை ஏறிட்டு கூட பார்க்க மாட்டார். ஆயிரம் தோத்திர பலிக்கு பலியாகி இந்துமத ஆசாரங்கள் போன்று அதை பின்பற்றும் அல்லது மந்திரமென விடாது கூறும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. ஆகவே விழித்திருங்கள்; உலகிற்கு விலகியிருங்கள் எச்சரிக்கையாயிருங்கள் எதிர்த்து நில்லுங்கள் எதிரியை என்றும் வென்றிடுங்கள். |
|
Saturday, March 20, 2010
கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைக்கும் எண்கள்
Wednesday, November 25, 2009
இயேசுவுடன் ஒரு உலா

மனதில் உள்ளவற்றை மறைக்காமல் மவுனமாக ஒரு மறைவெளிப்பாட்டைப் பெற யான் பெற்ற ஒரு அருமையான சுற்றுலாவே இந்த பதிவு.... என் உள்ளம் கிறிஸ்துவின் இல்லம்......
ஒரு மாலையில் நான் கிறிஸ்துவை என் உள்ளத்தில் வரும்படி அழைத்தேன். அது என்னே ஒரு அற்புதமான வருகையாக இருந்தது. அவ்வருகை கிளர்ச்சியூட்டுவதாகவும் உணர்ச்சி நிறைந்ததாகவும் மட்டும் இல்லாமல் உண்மையானதாகவும் இருந்தது. என் வாழ்வின் மையத்தில் ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் என் உள்ளத்தின் இருண்ட பகுதிக்குள் வந்து ஒளியை வீசச்செய்தார். அனல் மூட்டி குளிரை விரட்டினார். எந்த சலனமும் இல்லாத இடத்தில் பாடல் தொடங்கி வெறுமையை அவருடைய அன்பான ஐக்கியத்தால் நிரப்பினார். நான் இயேசுவுக்கு கதவை திறந்ததற்காக வருந்தவில்லை. இனியும் ஒருக்காலும் வருந்தப் போவதுமில்லை.
இந்தப் புதிய உறவில் சந்தோசத்துடன் இயேசுவிடம் சொன்னேன், “ஆண்டவரே, என்னுடைய இந்த இருதயம் உம்முடையதாக வேண்டும். நீர் இதில் தங்கி உம்முடைய வாசஸ்தலமாக்கிக் கொள்ளும். எனக்குள்ளதெல்லாம் உமக்கே சொந்தம். நான் எல்லாவற்றையும் உமக்கு காட்டுகிறேன்.”
படிப்பறை
முதல் அறை நான் படிக்கும் இடமாகிய நூலகமே. என் இல்லத்தில் என் சிந்தனையின் கனத்த சுவர்கள் அடங்கிய மிகவும் சிறிய இடம். ஆனால் இது மிகவும் முக்கியமான அறை. பார்க்கப்போனால் அது இல்லத்தின் கட்டுப்பாட்டு அறை எனலாம். அவர் என்னுடன் நுழைந்து புத்தக அலமாரியிலுள்ள புத்தகங்கள், மேஜை மீது கிடக்கும் மாத இதழ்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தார். அவரைப் பின் தொடர்ந்த எனக்கு அவருடைய பார்வை விசனத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன் நான் இதைக் குறித்து தவறாக நினைத்தது இல்லை. ஆனால் அவர் அந்தக் காரியங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் திக்குமுக்காடிப் போனேன். சில புத்தகங்களை அவர் பார்க்கக் கூடாதபடிக்கு அவர் கண்கள் மிகவும் பரிசுத்தக் கண்களாக இருந்தன. எந்த ஒரு கிறிஸ்தவனும் படிக்கவேண்டாத சில மாத இதழ்கள் இருந்தன. சுவர் மீது சில படங்கள் நினைவிலும் சிந்தனையிலும் வெட்கத்தை உண்டு பண்ணின. வெட்க முகத்துடன் நான் அவரைப் பார்த்து, “ஐயா இந்த அறை சுத்தமாக்கப்பட்டு சரி செய்யப்படவேண்டும் என எனக்கு தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறி எனக்குதவுவீர்களா?” எனக் கேட்டேன்.
“நிச்சயமாக” என்று சொன்னவர் “உனக்கு உதவி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் நீ படிக்கிறவைகளில் உனக்கு உதவாத அசுத்தமான, நல்லதல்லாத உண்மையற்றவிகளை எடுத்து தூற எறி! இப்பொழுது காலியான அலமாரியில் வேதாகம புத்தகங்களை வை. உன் நூலகம் முழுவதும் வேதாகமம் வைத்து இரவும் பகலும் தியானம் செய். சுவரில் உள்ள படங்கள் மூலம் உன் நினைவுகளை கட்டுப்படுத்துவதில் கஷ்டம் இருக்கும். ஆனால் உனக்கு உதவும்படி ஒன்று தருகிறேன் என்று கூறி அவர் தம்முடைய ஒரு பெரிய உருவப் படத்தைக் கொடுத்து சுவரில் நடுவாக தொங்கவிடு, அதாவது சிந்தனை சுவரில்” என்று சொன்னார்.
நான் அப்படியே செய்தேன். மேலும் வருடங்கள் செல்ல செல்ல என் எண்ணங்கள் கிறிஸ்துவை மையப்படுத்தும் போது அவருடைய பரிசுத்தம் அவ் அருடைய வல்லமை ஆகியவை என்னுடைய கெட்ட எண்ணங்களி பின்னாக் விரட்டியடிக்கும். இப்படியாக என் எண்ணங்களை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவி செய்தார்.
உணவு அறைபடிக்கும் அறையில் இருந்து உணவு அறைக்கு சென்றோம். அந்த அறைதான் பசி, ஆசை ஆகியவை அடங்கியவை.நான் இங்குதான் எனது அதிக நேரத்தையும் கடின முயற்சியையும் என் தேவைகளை திருப்ப்திப்படுத்தவும் செலவழித்தேன்.
“இது எனக்கு மிகவும் பிடித்தமான அறை. நான் உங்களுக்கு பரிமாறும் உணவில் பிரியப்படுவீர்கள் என்ற நிச்சயம் எனக்கு உண்டு” என்று அவரிடம் சொன்னேன். அவர் என்னுடன் மேஜையில் அமர்ந்து ”எப்படிப்பட்ட உணவு வகைகள் உண்டு?” என்று கேட்டார். “எனக்கு பிடித்த உணவு வகைகள்: பணம் பட்டப்படிப்புகள், கையிருப்புகள் அத்துடன் செய்தித்தாளில் புகழ் செல்வம் பெறுதல் பற்றிய கட்டுரைகளை எழுதுவது” ஆகியவற்றைச் சொன்னேன். உணவு அவர் முன் வைக்கப்பட்ட போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் அதை சாப்பிடவில்லை என்பதை கவனித்தேன். நான் அவரிடம், ஐயா! இந்த உணவு பிடிக்கவில்லையா? என்ன பிரச்சனை?” என்று கேட்டேன். அவர் “நான் சாப்பிடவேண்டிய உணவு ஒன்றுண்டு. அது நீ அறியாதது. உணக்கு உண்மையாகவே திருப்தியளிக்கும் உணவு வேண்டுமானால் அது பிதாவின் சித்தத்தைச் செய்வதே. உன் சுயத்தை திருப்திப்படுத்துகிற சொந்தக் களியாட்டுகள் ஆசைகள் ஆகியவற்றை தேடுவதை நிறுத்திவிட்டு தேவனை திருப்திப்படுத்துகின்றவற்றை தேடு. அதுதான் உன்னை திருப்திப்படுத்தும்” என்று பதிலளித்தார். சாப்பாட்டு மேஜையில் “தேவ சித்தம் செய்தலின்” ருசியைக் காட்டினார். என்ன மணம்! அதைப் போல வேறு எந்த உணவும் உலகில் கிடையாது. அது ஒன்றுதான் திருப்தியைக் கொடுக்கும்.
பொது அறை
உணவு அறையில் இருந்து பொது அறைக்கு நடந்து சென்றோம். இந்த அறை அதிக பிணைப்பானதும் வசதியானதுமாக இருந்தது. நான் அதை விரும்பினேன். அதில் ஒரு குளிர்காயும் அடுப்பு, குஷன் நாற்காலிகள், ஒரு மெத்தையான இருக்கை ஆகியவையனைத்தும் அமைதியான சூழ்நிலையில் இருந்தன.“இது உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுக்கும் அறை. இங்கு நாம் அடிக்கடி வருவோம். இது தனியாக அமைதியாக இருக்கிறதால் நாம் இருவரும் இங்கு ஐக்கியம் கொள்வோம்” என்று அவர் சொன்னார். ஆம். இளம் கிறிஸ்தவனாகிய எனக்கு இதைக் கேட்டு மெய்சிலிர்த்தது. க்றிஸ்துவுடன் சில நிமிடங்கள் தனிப்பட்ட சினேகத்தில் தங்கியிருப்பதைக்காட்டிலும் மேலானதாக நான் செய்யக்கூடிய காரியத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் வாக்களைத்தது என்னவென்றால் “ நான் இங்கு ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் இருப்பேன். என்னை இங்கு வந்து சந்தி. அந்த நாலை நாம் ஒன்றாக தொடங்குவோம்” என்பதே. ஆகையால் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் மாடியில் இருந்து கீழே இறங்கி அந்த பொது அறைக்கு வருவேன். அங்கு அலமாரியில் இருந்து எடுத்த வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை எடுப்பார். நாங்கள் அதைத் திறந்து ஒன்றாக வாசிப்போம். அவர் எனக்கு தேவனின் அற்புதமான இரட்சிப்பின் உண்மைகளை விவரித்து காண்பிப்பார். அவர் தன் அன்பையும் கிருபையையும் பகிர்ந்து கொண்ட போது என் இருதயம் பாடலால் நிறைந்தது. அந்த நேரங்கள் அற்புதமான நேரங்கள். நாள் செல்ல செல்ல அனேக வேலைப்பளுவினால் இந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறுகினது. ஏன் என்று தெரியவில்லை? கிறிஸ்துவுடன் நேரம் செலவழிக்க ரொம்ப கடினமாக இருந்தது. வேண்டுமென்றே நான் அவ்விதம் செய்யவில்லை. அது உங்களுக்குப் புரியும். அது அவ்விதமாகவே நடந்தது. கடைசியாக நேரம் குறுகினது மட்டுமல்ல, நான் சில நாட்களை அங்கும் இங்குமாக கடத்தினேன். அவசர காரியங்கள் இயேசுவுடன் அமைதி நேர உரையாடலை தடை செய்தன. எனக்கு ஞாபகம் வருகிறது, ஒரு நாள் காலை என் வேலையினிமித்தமாக படியிறங்கி கீழே வேகமாக வந்தேன். நான் பொது அறையை கடந்தபோது கதவு திறந்து இருப்பதைப் பார்த்தேன். உள்ளே பார்த்த போது கணப்பில் தீ எறிந்து கொண்டிருந்ததுமல்லாமல் இயேசு அங்கே உட்கார்ந்திருந்தார். துக்கத்துடன் எனக்குள் இப்படியாய் சிந்த்தித்தேன்,” அவர் என் விருந்தாளி. நான் அவரை என் உள்ளத்தில் வரும்படி அழைத்தேன்! அவர் என் இரட்சகராகவும் என் நண்பராகவும் வந்தார். ஆனால் நான் அவரை அசட்டை செய்கிறேன்.” நான் நின்று திரும்பி தயக்கமாக உள்ளே சென்றேன். தலை குனிந்த பார்வையுடன், “ஐயா என்னை மன்னியுங்கள். இங்குதால் எல்லா நாளும் காலைவேளைகளில் இருக்கிறீர்களா? என்று கேட்டேன். “ ஆம்” என்று அவர் சொன்னார் “நான் இங்கு எல்லா காலைகளிலும் உன்னை சந்திப்பேன் என்று உனக்கு சொன்னேனே” நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைத்துக் கொள். உன்னை அதிக விலை கொடுத்து விடுவித்திருக்கிறேன். உன் ஐக்கியத்தை நான் மதிக்கிறேன். உனக்காக அமைதிநேரத்தை உன்னால் கடைபிடிக்கமுடியாவிடினும் எனக்காகவாவது செய்”
கிறிஸ்து என் ஐக்கியத்தை விரும்புகிறார், எனக்காக காத்திருந்து, நான் அவ் அவருடன் இருப்பதை அவர் விரும்புகிறார் என்கிற உண்மை மற்ற எந்தவொரு காரியத்தையும்விட அதிகமாக தேவனோடு கொண்டுள்ள அமைதிவேளையை மறுரூபப்படுத்தியுள்ளது. கிறிஸ்து உங்கள் இருதயத்தின் பொது அறையில் தனியாக காத்திருக்கும்படிச் செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கவும் வேதம் வாசிக்கவும் நேரத்தை கண்டுபிடிக்கவும்.
பணிஅறை
அதிக நேரமாவதற்கு முன்பே உன் வீட்டில் நீ வேலை செய்யும் அறை உண்டா? என்று கேட்டார். என் இதய வீட்டில் வெளியில் கார் நிறுத்தும் இடத்தில் சில கருவிகளும் மேஜையும் உண்டு. நான் அதில் ஒன்றும் அதிக வேலை செய்வது இல்லை. எப்பொழுதாவது சில கருவிகளை வைத்து விளையாடினாலும் சிறப்பாக எதையும் உருவாக்குவதில்லை. அங்கு அவரை அழைத்துச் சென்றேன். மேஜையை நோக்கிப் பார்த்து நன்றாக செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி “தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக என்ன செய்கிறாய் என்று கேட்டார். அங்கு கிடந்த ஒன்றிரண்டு பொம்மைகளை பார்த்து ஒன்றை எடுத்து “உன் கிறிஸ்தவ வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இதைப் போன்றதைத்தான் செய்கிறாயா?” என்று கேட்டார்.
“நான் அதிகம் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு சக்தியும் திறமையும் கிடையாது” என்றேன்.
“நீ சிறந்த ஒன்றை செய்ய ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக” என்று பதிலளித்தேன். சரி உன் கைகளைக் கொடு. என் ஆவி உன்னில் கிரியை செய்யும்படி என்னில் ஓய்ந்திரு. நீ திறமையற்றவன், அவலட்சணமானவன் என்பது எனக்கு தெரியும். ஆனால் தேவ ஆவியானவர்தான் சிறப்பாக சிறந்த பணிசெய்பவர். அவர் உன் கைகள், இருதயம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் போது உன் மூலம் கிரியை செய்வார்” என்றார். என் பின்னால் அவர் நின்று அவருடைய பலத்த கரங்களை என் கரங்களின் கீழாக வைத்து கருவிகளைக் கொண்டு வேலைப்பாடு தெரிந்த அவர் விரல்களில் வைத்து என் மூலம் வேலை செய்தார். நான் எந்த அளவுக்கு அவரில் சார்ந்து அவரில் நம்பிக்கை வைத்தேனோ அந்தளவுக்கு அவர் என் வாழ்க்கையில் கிரியை செய்ய முடிந்தது.
பொழுதுபோக்கு அறை
வேடிக்கைக்கும் ஐக்கியத்துக்குமாக ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அறை உண்டா என்று கேட்டார். நான் அவர் தை கேட்க மாட்டார் என்று நம்பியிருந்தேன். எனக்காக என்று சில ஐக்கியங்களையும் செயல்பாடுகளையும் நான் வைத்திருந்தேன்.நான் ஒரு நாள் மாலை என் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அவர் என்னை இந்றுத்தி என்னைப் பார்த்து ,”வெளியில் செல்கிறாயா?” என்று கேட்டார். நான் ஆம் என்று பதிலளித்தேன். “நல்லது நான் உன்னுடன் வரவிரும்புகிறேன்” என்றார். “அப்படியா” என்று நான் மனக்குழப்பத்துடன் பதில் அளித்தேன். “ நாங்கள் செல்லும் இடத்திற்கு நீங்கள் வர விரும்ப மாட்டீர்கள். நாளை இரவு நாம் இருவரும் செல்வோம். நாளை இரவு ஒரு ஆலயத்தில் நடக்கும் வேதபாட வகுப்பிற்கு செல்வோம். ஆனால் இன்று இரவு இன்னொரு நிகழ்ச்சி எனக்கிருக்கிறது” என்றேன். ஆனால் அவர் “ நான் வருத்தப்படுகிறேன். உன் வீட்டில் வந்தபோது நாம் இருவருமே எல்லாவற்றையும் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து செய்வோம் என்று நினைத்தேன். நான் உன்னுடன் சேர்ந்து வர விரும்புகிறேன் என்பதை நீ அறிவாயாக” என்றார். ஆனால் நான் நாளை இரவு ஏதாவதொரிடத்திற்கு நாம் சேர்ந்து செல்வோம் ” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினேன். அன்று மாலை சில துயரமான மணித்துளிகளை சந்தித்தேன். நான் கெட்டுப்போவதாக உணர்ந்தேன். இயேசுவுக்கு என்னவிதமான நண்பன் நான். என் வாழ்க்கையை விட்டு அவரை வெளியே அனுப்பி விட்டு அவர் விரும்பமாட்டார் என்று அறிந்தும் பல இடங்களுக்கு சென்று பல வேளைகளை செய்கிறேன் என்று நினைத்தேன்.
அன்று மாலை திரும்பி வந்த போதி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவரிடம் இதைப் பற்றி பேச விரும்பினேன். நான் அவரிடம் “நீங்கள் இல்லாமல் எனக்கு நல்ல நேரம் எதுவும் இல்லை. ஒரு நல்ல பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.இப்போதிலிருந்து நாம் சேர்ந்தே எல்லாவற்றையும் செய்வோம் ” என்று சொன்னேன்.
பின்பு பொழுது போக்கும் அறைக்குள் நாங்கள் போனோம். அவர் அவ்வறையை மாற்றினார். அவர் புதிய நண்பர்கள் புதிய ஆச்சரியமான சம்பவங்கள் மற்றும் புதிய சந்தோசங்களை அங்கு கொண்டு வந்தார். சிரிப்பும் இசையும் அந்நேரமுதல் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தனி அறை
ஒரு நாள் கதவருகில் அவர் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். என்னை தடுத்து நிறுத்தும் ஒரு பார்வை அவர் கண்ணில் இருந்தது. நுலையும் போது அவர் சொன்னார், “வீட்டில் ஏதோ ஒரு வகையான நாற்றம் வருகிறது. ஏதோ இங்கு செத்து கிடக்கிறது. அது மாடியிலுள்ள தனியறையில் இருந்துதான் வருகிறது” என்றார். அவர் இப்படிச் சொன்னவுடன் அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது. தனி அறையின் முடிவில் ஒரு சிறிய உள்ளறை. அது சில அடிகள் சதுரமானது. அது பூட்டப்பட்டிருந்தது. அவ்வறையில் என் சொந்தமான சில தனிப்பட்ட பொருட்களை நான் யாருமே அறியாதவகையில் வைந்த்திருந்தேன். நிச்சயமாக இயேசுவும் கூட அதைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அவைகள் என் பழைய வாழ்க்கையின் செத்து நாற்றமெடுக்கிற சில காரியங்கள். அவைகள் எனக்கு வேண்டுமென விரும்பி அவைகளை அறிக்கையிட பயந்தேன்.
தயக்கத்துடன் அவருடன் சென்றேன். போகப் போகப் நாற்றம் அதிகரித்தது. அவர் அக்கதவை சுட்டிக் காட்டினார். நான் கோபமடைந்தேன். அப்படித்தான் நான் சொல்லமுடியும். நான் எனது நூலகம், உணவு அறை, பொது அறை, வேலை செய்யும் அறை, பொழுதுபோக்கு அறை ஆகியவற்றை விட்டுக் கொடுத்தேன். ஆனால் இப்பொழுது எனது சிறிய இந்த தனியறையையும் கேட்கிறார். “இது மிகவும் அதிகம். நான் சாவியைக் கொடுக்கப் போவதில்லை” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். என் சிந்தனைய அறிந்தவராய் “நாற்றத்துடன் உள்ள இரண்டாம் தளத்திலே நான் தங்குவேன் என்று நீ நினைத்தால் அது உன் தவறு. நான் வெளியில் தங்குவேன்” என்று சொல்லி படி இறங்கினார்.
ஒருவர் கிறிஸ்துவை நேசிக்க அறிந்தபின் அவருடைய ஐக்கியத்தை விட்டு விலகுவது துக்ககரமானது. நான் அவரை உள்ளே விட வேண்டியதாயிற்று.
“நான் சாவியை தருகிறேன்” என்று சோகமாகச் சொன்னேன். “எனக்கு அதை சுத்தம் செய்ய பெலன் இல்லை. நீங்கள்தான் அதை திறந்து சுத்தம் செய்யவேண்டும். “சாவியைக் கொடு; நான் அவ்வறையை சுத்திகரிக்க அங்கீகாரம் கொடு. நான் அதைச் செய்வேன்” என்றார். நடுங்கும் விரல்களுடன் சாவியை அவரிடம் நான் கொடுத்தேன். அவர் அதை வாங்கி கதவருகில் சென்று திறந்து உள்ளே நுழைந்தார். சுத்திகரித்தார். அவ்வறையினுள் உள்ள எல்லா அழுகக் கூடிய நாற்றமடித்த பொருட்களை வெளியில் எடுத்து எறிந்தார். அவ்வறையை சுத்திகரித்து அதற்கு வர்ணம் பூசினார். இவை எல்லாம் ஒரு சில கணங்களில் நடந்தது. அந்த செத்தப் பொருட்கள் என் வாழ்வை விட்டு வெளியேறியதால் எவ்வளவு வெற்றி! என்ன விடுதலை!
தலைப்பு மாற்றம்
எனக்குள் ஒரு எண்ணம் “ ஆண்டவரே அந்த தனி அறையை நீர் சுத்திகரித்தது போலவே இவ்வீட்டில் முழு நிர்வாகத்தையும் நீர் எடுத்து எனக்காக இந்த முழு வீட்டையும் இயக்க வாய்ப்புண்டா? என் வாழ்க்கை எப்படியிருக்கவேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படியாக அதை மாற்றிக்கொள்ளும் பொறுப்பை நீர் ஏற்றுக்கொள்வீரா?” அவர் பதிலளித்தபோது முகம் ஒளிர்ந்தது. “அப்படிச் செய்வதைத்தான் நான் விரும்புகிறேன்! உன் சுயபலத்தில் நீ வெற்றியுள்ள வாழ்வுவாழ முடியாது. உன் மூலமாக உனக்காக நான் அதை வாழவிரும்புகிறேன்” என்றார். அதுதான் வழி. ஆனால் “ நான் ஒரு விருந்தாளி, எனக்கு அங்கீகாரமில்லை, உரிமையுமில்லை” என்றார். நான் முழங்காலில் நின்று “ஆண்டவரே நீர் விருந்தாளியாக இருந்தீர். நான்விருந்தளிப்பவனாக இருந்தேன். ஆனால் இப்பொழுதிருந்தே நான் உமது வேலைக்காரன். நீர்தான் என் சொந்தக் காரரும் எஜமானரும் என்றேன்.
நான் வேகமாக பொக்கிஷ பெட்டிக்கு ஓடி என் ஆஸ்திகள், பொறுப்புகள், இருப்பிடன், சூழ்நிலை ஆகியவை அடங்கிய வீட்டின் பத்திரத்தை எடுத்து அவருக்கே அவ்வீட்டை நித்திய காலத்துக்குமாக எழுதிக் கொடுத்தேன். “இதோ, இங்கே நானும் என்னுடையவைகள் அனைத்தும், எனறென்றைக்குமாக உமக்கே. நீர் இவ்வில்லத்தை நடத்தும். நான் உமது அடிமையும் நண்பனுமே” என்றேன். என் உள்ளத்தில் இயேசு வீடமைத்து தங்கியபின் காரியங்கள் மாறின.
என் உள்ளம் கிறிஸ்துவின் இல்லம்
Sunday, November 15, 2009
Teen Questions : என் கேள்விகளை தருகிறேன். உங்கள் பதில் என்ன? 1

நான் கிறிஸ்துவுக்காக வாழ போராடிக் கொண்டிருக்கும் கோடிகளில் ஒரு சிறு போராளி. ஆனால் என் மனதில் அவ்வப்போது எழும்பும் கேள்விகளும், வாழ்க்கையில் வரும் தோல்விகளும் துவளச் செய்கின்றன. என் கேள்விகளை தருகிறேன். உங்கள் பதில் என்ன?
கேள்வி 1: கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்ற தீர்மானத்தை நான் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னால் அவருக்காக வாழவேண்டும் என்ற தீர்மானத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை? ஒவ்வொருமுறையும் நான் தோற்றுவிடுகிறேன். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்று ஒன்று உண்டா? அதை வாழ என்ன செய்யவேண்டும்? எனக்குத்தெரிந்து வெற்றியுள்ள கிறிஸ்தவர்கள் எவரும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாருமே(ஊழியர்களையும் சேர்த்துத்தான்) போலி வேஷம் போடுவதாகவே தோன்றுகிறது. ஏன்?
ஹலோ! ஸ்வீட் டீன் ! உன் கேள்வி உன் எண்ண அலைகளை கரைக்கு கொண்டுசேர்த்துள்ளது. உன் போல் போராடிக் கொண்டிருக்கும் பலருக்கு இப்பதில் பிரயொஜனமாயிருக்கும்.
முதலாவதாக நீ அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இன்றும் வெற்றியுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் அனேகம் உண்டு. எலியா தீர்க்கதரிசி தன் காலத்தில் தேவனுக்காய் வாழ எவரும் இல்லை என்று எண்ணினான். ஆனால் தேவன் அவனுக்கு அளித்த பதில் என்ன? 7000 பேர் இருக்கிறார்கள் என்றார்(1இராஜாக்கள்.19:18). அன்றே 7000 பேர்கள் இருந்திருந்தால் இன்று குறைந்தது ஒரு 70கோடி பேராவது நிச்சயமாக இருப்பார்கள். ஆகவே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நிச்சயமாகவே (அவ்வாறு வாழ விரும்பும் எவருக்கும்) உண்டு. போலிகளைக் கண்டு நீ ஏமாற வேண்டாம். அவர்களைக் குறித்து பேசுவது வீண்.
கிறிஸ்தவ வாழ்வில் தோல்விகள் வரலாம். ஆனால் கிறிஸ்தவம் ஒரு போதும் தோற்காது. தோல்விகள் ஏன் வருகின்றன என்று சற்று உற்று நோக்கினால் அவை நமக்கு வரும் சோதனைகளினாலேயே(Temptations) என்பதை விளங்கிக் கொள்ளலாம். நாம் இவ்வுலகத்திலிருக்கிற படியால் உலகக் காரியங்கள் பல விதத்தில் நம்மை பின் நோக்கி இழுக்கின்றன. நாம் இவ்வுலகத்தில் இருக்கும் காலமட்டும் சோதனைகள் வரத்தான் செய்யும். சோதனைகளே வரக்கூடாது என்பது அல்ல வெற்றிக் கிறிஸ்தவம். சோதனைகளை ஜெயிப்பதுதான் வெற்றிக் கிறிஸ்தவம்.
நமக்கு வரும் சோதனைகளை நாம் எவ்வாறு ஜெயிக்கலாம்?
இயேசுக்கிறிஸ்துவினால்: ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்(எபிரெயர்.2:18). இயேசு சொன்னார்: திடன்கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்(யோவான்16:33).
விசுவாசத்தினால்: தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1யோவான்.5:4). தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், வசனத்தினாலும் : மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
மேலே நீ கண்டபடி உன் வெற்றி கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உதவ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவரை விசுவாசி, அவர் உனக்காக செய்து முடித்தவைகளை விசுவாசி. சோதனைகளினால் நீ தாக்கப் படாமல் இருக்க நினைத்தால் விசுவாசம் என்னும் கேடகத்தை பயன்படுத்து. தேவனுடைய பட்டயமாகிய ஆவியின் பட்டயத்தை சரியாகப் பயன் படுத்து. வெற்றி உனக்குத்தான். உனக்கு வரும் சோதனைகள் மட்டுமல்ல உன்னை தாக்க வரும் பிசாசும் கூட உன்னை விட்டு ஓடிப் போவான். சோதனையையும் பிசாசையும் நீ எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.(எபேசியர்:6)
வெற்றி பெற வேறு வழி இல்லை. குறுக்கு வழி நாடாதே! சிலர் ஜெபமே ஜெயம் என்று சொல்வார்கள். அதற்கு வேத வசன ஆதாரம் கிடையாது. விசுவாசம் இல்லை எனில் ஜெபம் சுபம் ஜெயம் தராது. நீ இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவன். இவை உனக்கு புரிந்திருக்கும். சாத்தான் உன்னை தொடமுடியாது. உனக்கும் தேவனுக்கும் ஏதாவது இடைவெளி இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக உன் தவறுகளை அவரிடம் அறிக்கையிட்டுவிடு. வெற்றி என்றுமே உன் பக்கம்தான். உன் சாட்சியை கேட்க ஆவலாக இருக்கிறேன்.
கேள்வி 2: பருவ மாறுதலில் பல எண்ணங்கள் மனதில் சிறகடிக்கிறது. முக்கியமாக ஒரு விசயத்தில் என்னால் கன்ட்ரோலாகவே இருக்க முடியவில்லை. மனது அலைபாய்கிறது. என்ன விசயம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்? நான் என்ன செய்ய வேண்டும்?
முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்து அத உன் வாழ்க்கையில் செயல்படுத்து. சிறிது நாட்கள் கழித்து வா. அப்போதும் இந்த கேள்வி உன்னிடம் இருந்தால்........ பதில் சொல்கிறேன். அதுவரை பொறுத்திரு.
- S.Arputharaj
Wednesday, November 4, 2009
பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?
இயேசு கிறிஸ்து மரித்து பின்பு உயிர்த்து மகிமையாக பரமேறின பின் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸுக்குப் பதிலாக வேறொருவரை சீட்டு போட்டு எடுத்தனர். அது யூத வழக்கம்.
ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த ஒரு மனிதனே இந்த பவுல் ஆவார். அவர் எந்தளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ அதை விட அதிக வைராக்கியத்துடன் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்க கிளம்பினார். அவர் மூலமாகவே அனேக தேவ இரகசியங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ள பெரும்பாலான புத்தகங்களும் தேவ ஏவுதலால் எழுதப்பட்டன.
கிறிஸ்தவர்களை துன்புறுத்தப் புறப்பட்ட பவுலை இயேசு தமஸ்குவில் சந்தித்தார், தன்னை வெளிப்படுத்தினார். அத்தோடு சவுல் எனப்பட்ட இந்த பவுலைக் குறீத்தும் அங்கு வெளிப்படுத்துகிறதை காணலாம்: "அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான் "(அப்போஸ்தலர் 9).
ஆகவே பவுல் மனுசரால் ஏற்படுத்தப் பட்ட ஒரு அப்போஸ்தலனாயிருக்கவில்லை. தேவனே அவரை தெரிந்தெடுத்தார், வழி நடத்தி போதித்தார். இதையே பின்பு பவுல் பின்வருமாறு கூறுகிறார்: "மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்" என்று கூறுகிறார்.
மேலும் தான் அறிவித்த சுவிசேசத்தைக் குறித்து சொல்லுகையில் "நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். ஆகவே பவுல் எப்படி அப்போஸ்தலரானார் என்று நாம் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. தனக்குத்தானே அப்போஸ்தலர் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் இக்கால அப்போஸ்தலர் அல்ல அவர். தேவன் அவரை அப்போஸ்தலராக அழைத்தார். அதையே அவர் மக்களுக்கு எழுதும் போது அழைக்கப்பட்டவனாக அப்போஸ்தலனாக எழுதினார். இதில் இரகசியமொன்றுமில்லை. அப்போஸ்தலன் என்றால் "அழைக்கப்பட்டவன்" "அனுப்பப்பட்டவன்" என்பதுதான் பொருள். இக்காலத்தில் அப்போஸ்தலன் என்றால் ஏதோ பெரிய பட்டமாக கருதப்படுகிறது. அதுவுமல்லாமல் பிஷப் என்றால் பெரிய இராஜா என்கிற எண்ணம். அதனால் இப்போது பிஷப்கள் பெருத்துவருகிறார்கள். பிஷப் பட்டம் விற்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பட்டங்களால் நாம் அறியப்படுவதை விட "ஒரு நல்ல கிறிஸ்தவன்" என்கிற பேரைப் பெற்று தேவனுக்கு சாட்சியாக வாழ்வது எவ்வளவு மேலானது!
Wednesday, April 22, 2009
நீங்க என்ன ஜாதி?
இதை எழுதுவது என் கடமை
வாசிப்பது உங்கள் பொறுமை.
விசயத்தை தெரிந்து கொள்ள உடனே உள்ள வாங்க
நீங்கள் தென் தமிழகத்தில் உள்ள ஒரு காரியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதுதான் எனது முழு அவா. ஆகவே தயவு செய்து பொறுமையுடன் இரசித்து ருசித்து வாசிக்கும்படியாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எங்க ஊர்ப்பக்கங்களில் ஒருவரை முதலில் சந்திக்கும் போது பெரும்பாலும் எல்லாரும் அறிந்து கொள்ளவிரும்புகிற காரியம் அவர் என்ன ஜாதி என்பதாகத்தான் இருக்கும். ஒருவேளை அவர்கள் வாயை திறந்து நேரடியாக கேட்காவிடினும் உள்மனதில் அதுதான் ஓடிக்கொண்டு இருக்கும். ஆகவே முதலில் பெயரைக் கேட்பார்கள். கேட்டபின்பு நைசாக ஊர்பெயரைக் கேட்பார்கள். அதிலேயே ஓரளவுக்கு என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும் சந்தேகம் இருக்குமெனில் அந்த ஊரில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். இப்படியாக எங்க மக்கள் ஜாதியைக் கண்டுபிடிப்பதில் பயங்கரமான புத்திசாலிகள். இன்னும் சில கரை கண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப் பார்த்து அவரைன் பார்வை மற்றும் தோற்றத்தைவைத்தே அவர் என்ன ஜாதி என்பதை கணித்துவிடுவார்கள். இங்கேபோய் இதைச் சொல்வதற்கு என்ன அவசரம் வந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ...........இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு வட தமிழகத்தில் சாதியை மையமாக வைத்து பாரம்பரிய கிறிஸ்தவ சபை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியினால் வேதனைப்பட்டவர்களில் நானுமொருவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல கிறிஸ்துவுக்குள் இருப்பதுதான் முக்கியம், ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் என்ன சபையிலிருந்தாலும் நாமெல்லாரும் ஒரே சரீரமே என்பதை நான் முழுமையாக நம்புபவன். இதற்கு சபைப் பிரிவுகள் தடையாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கும் படசத்தைல் பல காரியங்களை சபைப் பாரம்பரியங்கள் மற்றும் உலகப் பாரம்பரியங்களின் படி செய்ய முடியாதல்லவா? ஆம்.
எங்கள் ஊரில் உள்ள ஒரு பழக்கத்தை நான் முன்பு சொன்னேன். இப்போது ஆவிக்குரிய வட்டாரத்தில் காணும் மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். முன்பு ஆவிக்குரிய சபைகளுக்கு செல்வதையே மற்ற கிறிஸ்தவர்கள் கூட வெறுத்தனர். ஒருவன் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்றால் அவனை மிகவும் கீழ்த்தரமானவனாக நினைப்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றும் கூட சில இடங்களில் உள்ளது. ஆனால் இன்று ஆவிகுரிய சபைகளுக்கு செல்வது கிட்டதட்ட ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. எதுவும் சீர்கெட்டும்போது எல்லாமே தலைகீழாக மாறிவிடுமல்லவா. அதேபோலத்தான் இன்று ஆவிகுரிய சபைகளிலும் சாதி என்ற பேச்சு எழும்பி விட்டது. முன்பு பாரம்பரிய சபைகள் மட்டுமே சாதியின் அடிப்படையில் இருந்துவந்தன. இன்று ஆவிக்குரிய சபைக்கு செல்லும் ஒருவரை அவர் செல்லும் சபையைவைத்தே அவர் என்ன ஜாதி என்று கூறுமளவுக்கு நிலைமை மலிந்துவிட்டது. அதாவது பாஸ்டர் என்ன ஜாதி என்று பார்த்து செல்லுமளவுக்கு நிலைமை என்ன செய்ய? இதைக் குறிது எழுதுவதற்கே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் உண்மை எழுதுவது நன்மைக்கே!
இதை எழுதுவதற்கு எனக்கு ஒன்றும் பெரிதாக தகுதியில்லை. ஏனெனில் நானும் ஒருகாலத்தில் குட்டையில் ஊறின மட்டையாக எங்க ஊர் மக்களில் ஒருவனாகவே இருந்துவந்தேன் என்பதை வெட்கத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் வசனத்தின் வெளிச்சம் எனக்கு உண்டானபோதுதான் ஜாதியைக் குறீத்து ஒரு சரியான உணர்வு வந்து சாதியுணர்வு நீங்கிற்று.
வேதம் ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
வேதாகமத்தில் பலவிதமான ஜாதிகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உண்மைதான். ஆனால் நாம் ஒருவிசயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். வேதாகம காலத்தில் ஒரு நாட்டு மக்களைக் குறிக்கும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களையே அவாறு குறிப்பிட்டனர். இன்று உள்ளதுபோலல்ல. ஆகவே யாராவது வேதாகமத்திலேயே ஆண்டவர் பல ஜாதிகளைக் குறீத்து எழுதிவைத்துள்ளார் அல்லவா? என்று யாராவது சொன்னால் உடனே நம்பிவிடாதீர்கள். இன்னும் சில ஜாதிப் பிரசங்கியார்கள் இப்படியாக சொல்வார்கள்," பாருங்க ஆபிரகாமே என்ன செய்தான்? தன் சொந்த இனத்தாரிடம் தன் மகனுக்கு பெண்கொள்ளும்படி எலயேசரை அனுப்பவில்லையா? ஆகவே ஜாக்கிரதையாயிருங்கள். அதுவும் திருமண காரியத்தில் ரொம்ப ஜாக்கிரதை என்பார்கள். உடனே ஏமாந்துவிடாதீர்கள். ஏனெனில் ஆபிரகாம் வாழ்ந்துவந்த பகுதி மக்கள் சபிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல கொடிய விக்கிரகவணக்க்த்தாராகவும் இருந்துவந்தனர். ஆகவே தான் ஆபிரகாம் தனக்கு நன்றாக தெரிந்த தன் குடும்பத்தினரிடம் தன் ஊழியக்காரனை அனுப்பினான். இன்று ஊழியக்காரர்களே ஜாதி பார்ப்பது மட்டுமல்லாது ஜாதியக்குறித்து முழக்கமான பிரசங்கங்கள் வேறு. கர்த்தாவே! எங்க மக்களை இரட்சியும்.
புதிய ஏற்பாடு ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
இயேசு ஜாதி பார்த்தாரா? அவர் ஜாதி பார்த்திருந்தால் நமக்கு அதாவது வேதாகமத்தின்படி புறஜாதிகளுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்திருக்கும். தேவனின் பார்வையில் எல்லா மனிதரும் ஒரே ஜாதியே அது மனித ஜாதி. தேவன் நேசிப்பது மனிதனையே, அவன் எந்த ஜாதி என்று அவர் பார்ப்பதில்லை.
புதிதாக திருமணம் முடித்த ஒருவனிடம் தெற்கத்திப் பயல் ஒருவன் அண்ணே உங்க மனைவி என்ன ஜாதி என்று கேட்டான்? அதற்கு பதிலளித்த அந்த புதுமாப்பிள்ளை அடேய் அவள் பென் ஜாதி நான் ஆண் ஜாதி ஆகவே இப்போ அவள் என் பொஞ்சாதி ஆகவே உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று பதிலளித்தானாம்.
அப்போஸ்தல கால சபையில் ஜாதியை( நாம் பார்க்கிற ஜாதி அல்ல, வேறு நாட்டு மக்கள்) மையமாக வைத்து பிரச்சனை வந்ததா? ஆம். வந்தது. வேதாகமத்தில் அதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் அதில் அப்போஸ்தலர்கள் தலையிடவில்லை, அதை விரும்பக் கூட செய்யவில்லை. அவர்களின் பதில் இன்று மட்டுமல்ல என்றுமே ஒவ்வொரு ஊழியனும் பின்பற்றவேண்டிய காரியமும் ஆகும் (அப்.6:2- 4).
மிகவும் இன வைராக்கியம் மிகுந்தவர்களும் மற்ற மக்களுடன் கலப்பதை தீட்டாக கருதின யூதமக்களுக்கு யூதரல்லாதவருடன் பேசுவது என்பதே மிகவும் கீழ்த்தரமானது ஆகும். அப்படிப்பட்ட யூதகுலத்தில் பிறந்து வளந்த பேதுருவுக்கு தேவன் காண்பித்த தரிசனம் என்ன்? இன்று அடிக்கடி தரிசனம் காண்பவர்கள் அதயே மேடைக்கு மேடை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாது பேசுபவர்கள் இதை சற்று வாசித்து சிந்திக்கவேண்டும் (அப்.10). நாம் யாராக இருந்தாலும் யூதனானாலும் கிரேக்கனானாலும் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆகவே யாவரும் ஒன்றே. இன்னும் சொல்லப் போனால் யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை புது சிருஷ்டியே காரியம் என்று வேதம் கூறவில்லையா? இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள 1கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் வரங்களைக் குறித்து சொல்கிற தேவன் அதைத் தொடர்ந்து உடனே கூறுகிற காரியமும் இதுதான். சற்று நிதானமாக உங்கள் வேதாகமத்தை எடுத்து அந்த அதிகாரத்தை வாசித்து தியானியுங்கள். மிகவும் பிரயஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாமெல்லாரும் ஒரே ஜாதி என்றால் என்ன ஜாதி?
நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம் என்பதினால் நமக்குள்ளே எவ்வித பிரிவினைகளும் இருக்கக் கூடாது. இருக்காது. நாமெல்லாரும் வசனத்தின்படி விசுவாசத்தினால் ஆபிரகாமின் சந்த்ததியினராகவும் இருக்கிறோம். நாம் இஸ்ரவேலர்கள். தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். உள்ளத்தில் யூதனானவே யூதன் என்று ஒரு இடத்தில் அப்.பவுல் கூறினார். ஆம் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று அர்த்தமாம். நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நாம் எந்த நாடு எந்த மொழி எந்த பகுதி எந்த சபைப் பிரிவு என்றாலும் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் ஒரே சரீரம். நாம் பிரிந்திருக்க முடியாது.
ஜாதி யார் பார்ப்பார்?
ஒரு பிரசங்கியார் வேடிக்கையாக தன் பிரசங்கத்தில் பின்வருமாறு சொன்னார். இயேசு ஒரு இடத்தில் இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி வேறெவ்விதத்தினாலும் போகாது என்று சொன்னார் அல்லவா? ஆகவே இந்த ஜாதி என்பதெல்லாம் பிசாசுகளுக்குத்தான். இரட்சிக்கப்பட்ட நமக்கு அல்ல என்றார். இதற்கு மேல் இதைக் குறித்து நான் கூற விரும்புவதற்கொன்றுமில்லை.
திருமணத்தின் போதாவது ஜாதி பார்க்கலாமா என்று கேட்டால் நான் பொதுவாக என் நண்பர்களிடம் கூறுகிற காரியம் என்னவெனில் திருமணத்தில் தேவ சித்தம்தான் முக்கியம். ஜாதி அல்ல. ஆகவே தேவ சித்தத்திற்கு தடையாக எந்தக் காரியத்தையும் வைக்காதீர்கள். தேவன் கண்டிப்பாக வேறுஜாதியைத்தான் நீ மணமுடிக்கவேண்டும் என்று சொல்ல மாட்டார். ஆனால் அதுவே அவரது சித்தமாக இருகும் போது நம் விருப்பமும் ஆசையும் அதை நம் வாழ்வில் நிறைவேறாமல் செய்துவிடும். விளைவு திருமண தோல்விகள். ஆகவே ஜாதியை மட்டுமல்ல - படிப்பு, அழகு, வரதட்சணை(வாங்கினால் வெட்கம்) குடும்ப அந்தஸ்து என எதையும் முன்வைக்காமல் ஆண்டவரே உம் சித்தமே என் பாக்கியம் என்று சொல்ல மட்டும் செய்யாமல் அதின்படி நடக்கவும் செய்யுங்கள். தேவன் நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டார். நீங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிச் செய்வார்.அதுவே அவரது விருப்பமும் கூட. மறந்துவிடாதீற்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள். மறக்காமல்........
சாதி சாதி என்று பலர் ஏத்திக் கூறுவர்
சாதியொன்றுமில்லை எல்லாம் பாதியில் வந்தது
சாதியொன்றுண்டு (உள்ளத்தின்படி) யூத இஸ்ரவேல் சாதி
எல்லாரும் வாழ்ந்து சுகிக்கவே
தேவனை மதிக்கவே
சாத்தானை மிதிக்கவே
உலகத்தை ஜெயிக்கவே
ஜெய் ஜெய் ஜெய்
கடிசியாக ஒருமுறை உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்க என்ன ஜாதி? (எல்லாம் பழக தோஷம்)
நான் யூத ஜாதி. அப்ப நீங்க?
இந்தக் கட்டுரை எழுத மிகவும் உந்துதலாக இருந்த ஜஸ்டின் பிரபாகரன் அவர்கலின் ஒரு பாடல் வரிகளுடன் கீழே கொடுகப்பட்டுள்ளது. கேட்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
Caste ல Caste நாங்க Holy Caste
Caste ல Caste நீங்க என்ன Caste
Caste ல Caste நாங்க Pentecost
யுதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே
ஆணென்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை
கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை
அனைவரும் சரிசமமே
Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்த்வனுக்கு நியாயம் இல்லையே
தாலி கயிறு கட்டுகிற வேலையில்லையே
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
ஜாதி Dowry ஒழித்து கட்டி நிவிர்த்தி செய்வோமே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே - ஜாதியிலே
புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு
கல்யாணம் என்பது கனமுள்ளதாகும்
சந்தையாக மாற்றவேண்டாம்
நியாயத்துக்கும் அநீதிக்கும்
வெளிச்சத்த்துக்கும் இருளுக்கும்
கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்
சம்பந்தமில்ல தெரிஞ்சுகோங்க
நேரம் காலம் பார்த்து இராகுகாலம் கேட்டு
நல்ல நாளும் வைத்து சகுனமெல்லாம் பார்த்து
கல்யாணத்தை நடத்துறாங்க
கர்த்தருடன் இருக்கையிலே காலம் நேரம் ஒன்றுமில்லை
நாளும் நேரம் பார்ப்பதுமே கர்த்தருக்கே கோபமாமே
தெரிஞ்சுக்காம செய்யுறாங்க