Wednesday, November 3, 2021

உமது உண்மை பெரிது

வாசிக்க: புலம்பல் 3-5; சங்கீதம் 122; 2 தீமோத்தேயு 4

வேத வசனம்  புலம்பல் 3:  22. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

கவனித்தல்:  ஒருவர் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்போது, பிரியமானவர்களின் இழப்பு, பிரிவு, மற்றும் சாவு குறித்து துக்கம் அனுசரிக்கும்போது, அல்லது தன்னைச் சுற்றி நடந்த பயங்கரமான நிகழ்வுகளைக் கண்டு ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலத்தைப் பார்க்கையில், எதிர்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்கும்படி அந்த பயங்கர அனுபவத்தில் இருந்து அவர் வெளிவந்து இயல்புநிலைக்கு வருவது கடினமானதாக இருக்கும்.  அவருடைய கண்ணீர் நிரம்பிய கண்களும் கனத்த இருதயமும் எதையும் சரிவரப் பார்க்க, மதிப்பிட முடியாதபடி தடுத்து விடுகின்றன. அப்படிப்பட்ட நேரங்களில், தன் வாழ்க்கையின் இருண்ட காலத்தை எதிர்கொள்கிற ஒருவரை ஆறுதல் படுத்தி அமைதிப்படுத்துவது என்பது எவராலும் எந்த வார்த்தையாலும் செய்வது கடினம். புலம்பல் புத்தகத்தின் ஆசிரியரும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். எருசலேமின் அழிவு, தன் ஜனங்களின் கொடுமையான மரணங்கள், மற்றும் போரின் பின்விளைவுகளினால் உண்டான பாதிப்புகள் ஆகியவற்றைக் கண்ட பின் எரேமியாவே இந்த புத்தகத்தை எழுதினார் என்று பாரம்பரியமாக ஜனங்கள் நம்புகின்றனர். நடைபெற்ற அனைத்து துரதிர்ஷ்டமான நிகழ்வுகளினிமித்தம் அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஒரு நம்பிக்கையற்ற மற்றும் வேதனைக்குரிய சூழ்நிலையில், தன் பாடுகள் மற்றும் உபத்திரவங்களை நினைவு கூர்வதற்குப் பதிலாக தேவனை நினைவு கூரும்போது இந்த புத்தகத்தின் ஆசிரியர் நம்பிக்கையை கண்டு கொள்கிறார்.

இந்நூலாசிரியர் தேவனை நோக்கி தன் கண்களை திருப்பின போது, அவருக்கு நம்பிக்கையை அளித்த மற்றும் மீந்திருப்பவர்கள் இன்னமும் அழிந்து போகாமல் இருப்பது தேவனுடைய கிருபையே என்பன போன்ற முக்கியமான இறையியல் சத்தியங்களை, கண்டு கொள்கிறார். கர்த்தருடைய கிருபை என்பது தேவனுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் அவருடைய உண்மையை குறிக்கிறது. அதன் பின், முடிவில்லாத இரக்கங்களைக் குறித்து ஆசிரியர் பேசுகிறார்.  தேவனுடைய அன்பு மற்றும் கிருபையைப் பற்றி நாம் உணர்ந்து கொள்ளும்போது,  கர்த்தருடைய கிருபையானது காலை தோறும் புதிதானவைகளாக இருக்கின்றன என்பதைக் காண அது உதவி செய்கிறது.  தன் ஜனங்களிடையே இத்தகைய பயங்கரங்களை தேவன் ஏன் அனுமதித்தார்? தன் அன்பை ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவன் ஏன் தருகிறார்? எவ்விதக் கவலையும் இல்லாமல் தொடர்ந்து ஊழியம் செய்யவும் எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதை ஒரே நேரத்தில் அவரால் கொடுக்க முடியாதா என்றும் சிலர் கேட்க கூடும்.  ஆனால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமையின் நிமித்தம் தேவன் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை என்பதை ஜனங்கள் அறிந்திருக்கின்றனர்.  ஆகவே அவர்கள் அப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்க வில்லை.  மேலும் தேவன் நம்முடன் அனுதினமும் தொடர்ந்து உறவாட வேண்டும் என்று விரும்புகிறார். தேவனுடைய அன்பும் கிருபையும் காலைதோறும் புதிதானவைகளாக இருக்கிறது.  அது பகற்காலத்தில் நமக்குத் தேவையான வெளிச்சத்தைத் தந்து, இருளை நம்மை விட்டு அகற்றுகிறது. நாம் அனுதினமும் தேவனுடைய அன்பை ருசிபார்க்கும்போது, நாமும் கூட மிகவும் மகிழ்ச்சியுடன் தேவனுடைய உண்மை பெரிதாக இருக்கிறது என்று மகிழ்ச்சியாக அறிக்கை செய்வோம்.  நம் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், நாம் தேவனை நோக்கிப் பார்க்கும்போது, எதிர்காலத்திற்கு நம்பிக்கையைத் தரும் நம்பிக்கை கீற்றை நாம் காண்கிறோம். நம் கேள்விகளுக்கு எந்த பதில்களையும் தராத நிச்சயமற்ற உலகில், நாம் தேவனுடைய உண்மையின் காரணமாக மட்டுமே நாம் இன்றும் உயிரோடிருக்கிறோம்.   ”இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

பயன்பாடு:  என் தேவன் கொடுத்த அனைத்து வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்ற உண்மை உள்ளவராக இருக்கிறார்.  “அவருடைய அன்புக்கு எல்லை இல்லை, அவருடைய கிருபைக்கு அளவே இல்லை” நான் அவைகளை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க முடியும். தேவன் என்னை நேசிப்பது போல நானும் மற்றவர்களை நேசிக்க வேண்டும்.  நான் தேவனுடைய உண்மையை ருசிபார்க்கையில், நான் தேவனுக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, கர்த்தாவே , நீர் எங்களுக்கு தந்திருக்கிற உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் அனைத்திற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவே, உம் மாபெரும் அன்பு மற்றும் இரக்கங்களுக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, தேவனையும் அவருடைய உண்மையையும் ஒவ்வொரு நாளும் பெற்று அனுபவிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 305

No comments: