Tuesday, July 27, 2021

தேவனே, என் கைகளைத் திடப்படுத்தியருளும்

வாசிக்க: நெகேமியா 5, 6; சங்கீதம் 25; அப்போஸ்தலர் 18

வேத வசனம்நெகேமியா 6: 8. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
9. அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

கவனித்தல்: நெகேமியாவின் புத்தகமானது புத்தக ஆசிரியரே நேரடியாக தன்னிலை ஒருமையில் எழுதுவதாக அமைந்திருக்கிறபடியினால் “நெகேமியாவின் நினைவுக் குறிப்புகள்” என்று சிலரால் அழைக்கப்படுகிறது.  நெகேமியாவினுடைய தலைமைத்துவக் கொள்கைகள், சுருக்கமான ஜெபங்கள், தன் வேலையைத் தொடர்ந்து விடா முயற்சியுடன் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் செய்தல், மற்றும் தேவனுடைய பெலனை நம்பியிருத்தல் போன்ற பல காரணங்களுக்காக நெகேமியா இன்றும் நினைவுகூரப்படுகிறார்.  எருசலேமின் இடிபட்டுப் பாழான அலங்கத்தை நெகேமியா எடுத்து திரும்பக் கட்டத் துவங்கியபோது, எதிரிகள் யூதர்களை நிந்தித்து, அவமரியாதை செய்து, மனமடிவை உண்டாக்கி, தைரியம் இழந்து பயப்படச் செய்வதன் மூலமாக கட்டிட வேலையை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள் (நெகே.2:19; 4:2-7). சன்பல்லாத்தும் அவனைச் சேர்ந்த மனிதர்களும் நெகேமியாவுக்கு எதிரான அவர்களுடைய அச்சுறுத்தல்கள் மற்றும் தீய திட்டங்களைத் தொடர்ந்து செய்து வந்தாலும் கூட, அலங்கத்தை மறுபடியும் கட்டும் பணியில் இருந்து தன் கவனத்தைத் திருப்பாமல் நெகேமியா தன் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தான். நெகேமியா 6ம் அதிகாரத்தில், நெகேமியாவுக்கு எதிராக சன்பல்லாத்தும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த தந்திரமான ஏற்பாடுகள் சிலவற்றைக் குறித்து வாசிக்கிறோம். அவர்கள் நெகேமியாவைக் கொல்லவும், ராஜாவின் கோபத்தை அவனுக்கு எதிராக திருப்பவும், அவனுடைய தலைமைத்துவத்தை இழிவு படுத்தவும் விரும்பினர். சன்பல்லாத்தின் ஆட்களையும், அவனுடைய பொல்லாத திட்டங்களையும் எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும், ”நான் அந்த (அலங்கத்தைக் கட்டும்) வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் (தடைபடுமே)” என்று பதில் சொன்னான் (வ.3). முழுதும் பொய்கள் நிறைந்த “முத்திரைபோடாத ஒரு கடிதத்தை” சன்பல்லாத் அனுப்பிய போது, தன் எதிரியின் வஞ்சகமான பொய்களுக்கு பதில் சொல்லி அதை தவறு என்று நிரூபிக்க தன் நேரத்தை வீணடிக்க வில்லை. தவறான தகவலைப் பரப்பி வேலையாட்களிடையே பயத்தையும் அவர்களை சோர்ந்து போகப் பண்ணுவதுமே அந்த கடிதத்தின் நோக்கம் என்பதை உணர்ந்து கொண்டார். ஆண்டவரே, எதிரியின் கொடுந் தாக்குதலை தடுத்து நிறுத்தும் என்று நெகேமியா ஜெபிக்கவில்லை. ஆனால், தன் எதிரிகளின் சவால்களை எதிர்கொள்ள இன்னும் அதிக பலத்தைத் தாரும் என்று அவன் ஜெபித்தான். தன் பொறுப்பில் இருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, தன் வேலையை செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை நெகேமியாவின் ஜெபம் வெளிப்படுத்தியது.  நெகேமியா தேவனையும் அவருடைய பலத்தையும் நம்பினார்; தன் வேலையைத் தொடர்ந்து செய்வதில் உறுதியாக இருந்தார்.

நாம் செய்ய விரும்புகிற நல்ல வேலையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அவமரியாதைகள், அச்சுறுத்தல்கள், இழிசொல், பழிச்சொல் மற்றும் தீய திட்டங்கள் போன்றவைகளை நாம் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வோம்? நம் பொறுப்பில் இருந்து விலகி ஓடுதல் நம் பிரச்சனைகளை தீர்த்து விடுமா? நெகேமியாவின் காலத்தில், அவன் எருசலேமின் பாழான சுவர்களை எடுத்து திரும்பவும் கட்ட வேண்டியதாக இருந்தது.  நம் காலத்தில், இப்பொழுது இருக்கக் கூடிய சூழ்நிலையானது நெகேமியாவின் காலத்தை விட கொடியதாக இருக்கிறபடியினால் நம் பொறுப்பு  மிகவும் அதிகம் ஆகும். இப்பொழுது ஒருவேளை நாம் பாழான சுவர்களைக் காணாமல் இருக்கலாம். ஆனால், அனுதினமும் உடைந்த இதயங்கள் மற்றும் உறவுகளை உடைய மனிதர்களை நாம் எதிர்கொள்கிறோம். அனேகருக்கு தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை எதுவும் இல்லாமல், எல்லா இடங்களிலும் கஷ்டப்படுகின்றனர். இந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டும் என தேவன் வைத்திருக்கிற வேலையைச் செய்வதற்கு நம் கைகளை அவர் திடப்படுத்தியருள வேண்டும் என நாம் ஜெபிக்கலாம்.

பயன்பாடு: தேவையற்ற காரியங்களுக்குப் பதில் சொல்லி நான் என் நேரத்தை  வீணாக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, என் வேலையில் நாம் மிகவும் கவனமாக இருந்து, என் வாழ்க்கையில் உள்ள சவால்களை மேற்கொள்ள தேவனுடைய பலத்தை நான் தேட வேண்டும். என் கவனமெல்லாம் தேவன் மீதே இருக்க வேண்டும், என் எதிரிகளின் மீது அல்ல. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங்.56:4; 118:6).

ஜெபம்:  என் தேவனே, என் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்து, என் வேலைகளை செய்யவும் செய்து முடிக்கவும் எனக்கு பலம் தருகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, எக்காலத்திலும் உம் மீது நம்பிக்கை வைத்து, உம்மைத் தேட எனக்கு உதவியருளும். ஆமென்

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 207

No comments: