Thursday, January 21, 2021

சந்தேகம் வரும் சமயங்களில் என்ன செய்வது?

வாசிக்க: ஆதியாகமம்  41, 42; சங்கீதம் 21; மத்தேயு 11:1-19

வேதவசனம்: மத்தேயு 11:2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து: 3. வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்....6. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.

கவனித்தல்: யோவான்ஸ்நானகன் சிறையில் இருந்த போது, மேசியாவாகிய இயேசு இருக்கும் இக்காலத்தில் நான் ஏன் சிறைச்சாலையில் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்திருக்கக் கூடும். மேசியாவின் வருகையைப் பற்றி எல்லோருக்கும் அறிவித்த காலத்தில் இருந்து, தேவ பயம், பக்தி  இல்லாத ஆட்சியில் இருந்து தேவ ஜனங்களை மேசியா காப்பாற்றுவார் என்று மற்ற யூதர்களைப் போல யோவானும் மேசியாவின் அரசாட்சியைக் குறித்த எதிர்பார்ப்புடன் இருந்திருக்கலாம். ஆகவே, இயேசுவின் ஊழியத்தையும், அவர் ஊழியத்தில் செய்தவைகளையும் பற்றிக் கேள்விப்பட்டபோது, இயேசு உண்மையிலேயே மேசியாதானா என்பதைப் பற்றிய தன் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள அவன் விரும்பி இருக்கக் கூடும். யோவான் ஸ்நானகனுக்கு இயேசு அனுப்பிய பதிலில், தீர்க்கதரிசின வார்த்தைகளின்படி மேசியாவின் உண்மையான ஊழியம் என்ன என்பதை நினைவுபடுத்தி, தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் யோவானுடைய சீடர்கள் கண்டதையும் கேட்டதையும் போய் சொல்லச் சொல்கிறார். யோவான்ஸ்நானகனுக்கு எதிராக அல்லது அவரைப் பற்றி குறைவாக எதுவும் சொல்வதற்குப் பதிலாக, அவனைப் பற்றிய தன் சாட்சியை இயேசு கூறுகிறார், யோவான்ஸ்நானகன் சிறைச்சாலையில் இருந்தாலும், அவர் யார் என்பதை இயேசு அறிந்திருந்தார். 

பயன்பாடு: நான் அநீதியையும், என் எதிர்பார்ப்புகளின் படி அல்லாமல் எனக்கெதிரான காரியங்களால் சூழப்பட்டு கடினமான ஒரு காலத்தை எதிர்கொள்ள நேரிடும்போது,  “ஏன் கர்த்தாவே?” என்று சொல்லும் நேரங்களில், என் மனதில் சந்தேகம் எழும்பி, தேவன் மேல் உள்ள நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் குலைத்துப் போடும் கேள்விகள் எனக்கு வரக் கூடும். ஆயினும், எனக்கு சந்தேகம் வரும் நேரங்களில் நான் யாரிடம் சென்று அதற்கான பதிலைக் கேட்க வேண்டும் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும். என் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் எனில், இயேசுவிடம் கேட்பதே மிகச் சரியான ஒரு வழிமுறை ஆகும். நான் இயேசுவிடம் வரும்போது, என் சந்தேகங்களுக்கு விடைகாண அவர் எனக்கு உதவி செய்வதுடன், என் விசுவாசத்தை அதிகரித்துக் கொள்ளவும் எனக்கு உதவுகிறார். அவர் என்னைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பதால், எனக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் சந்தேகங்களுக்கு விடைகாண நீர் எனக்கு உதவுவதற்காக நன்றி. நான் மனச்சோர்வையும், தோல்விகளையும் சந்திப்பதாக உணரும் நேரங்களில் எல்லாம், நான் என் சூழ்நிலைகளையும், என் இழிவான நிலையையும் பார்ப்பதற்குப் பதிலாக, நான் உம்மையும் உம் கிரியைகளையும் பார்ப்பதற்கு எனக்கு உதவி செய்கிறீர்.  என் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நீர் காண்பிக்கும் உம் அன்பிற்காகவும், கரிசனைக்காகவும் நன்றி. ஆண்டவரே, என் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும். ஆமென்.


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
21 ஜனவரி 2021



No comments: