Monday, January 25, 2021

பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியம்

 வாசிக்க: ஆதியாகமம்  49, 50; சங்கீதம் 25; மத்தேயு 13:1-30

வேதவசனம்:  மத்தேயு 13:10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை....16. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.

கவனித்தல்: பரலோக ராஜ்ஜியம் பற்றிய மறைவான உண்மைகளைப் பற்றி விளக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயங்களைத்தான் இயேசு தன் உவமைகளில் பயன்படுத்தினார் என்றாலும், அவற்றின் அர்த்தமானது மறைவானதாக இருந்தது. ஆகவே, இயேசுவின் உவமைகளைக் கேட்டவர்கள் எல்லோரும் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வில்லை. தேவனுடைய வார்த்தையின் பொருளை புரிந்துகொள்ள மறுப்பவர்கள் இருந்தார்கள். மாறாக, தேவனுடைய வார்த்தையை தங்களுடைய வாழ்நாளில் கேட்கவும் காணவும் விரும்பி, அதைப் பெற முடியாமல் போன அனேக தீர்க்கதரிசிகளும் உண்டு. இங்கே இயேசு தன் சீடர்களிடம் “உங்களுக்குக் அது கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்வதைப் பார்க்கிறோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் மறைபொருளைப் பற்றி  இயேசுவின் சீடர்கள் அறிந்து புரிந்து கொள்ள முடியும். அவர்கள் தேவனுடைய குமாரனையும் அவருடைய வார்த்தையையும் தங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்வதன் மூலம் மறைக்கப்பட்ட அவ்வுண்மைகளைப் புரிந்து கொள்கிறார்கள். அதன் பின்பு, அவர்கள் ஏற்றுக் கொண்ட தேவ வார்த்தையானது அவர்களுக்குள்ளும், அவர்கள் மூலமாகவும் தன் வேலையைச் செய்து, மிகுந்த பலனளிக்கிறது. தேவனுடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட இரகசியம் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும் போது,  “கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” என்று சொல்கிறார் (கொலோ.1:27).

பயன்பாடு: நான் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, தேவன் என்னிடம் என்ன பேச விரும்புகிறார் என்பதைக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நான் திறந்த மனதுடையவனாக இருக்க வேண்டும். அனேகருக்கு மறைபொருளாக இருந்த இரகசியங்களைப் பற்றி அறிந்து புரிந்து கொள்கிற பாக்கியத்தை தேவன் எனக்குத் தந்திருக்கிறார். ஆயினும், நான் அதைப் புரிந்துகொண்டு, என் வாழ்வில் அதைப் பயன்படுத்த வேண்டும்.  தேவனுடைய வார்த்தையானது என்னில் செயல்பட நான் அனுமதிக்கும் போது, நான் மிகுந்த பலன் கொடுக்கிறவனாக இருப்பேன்.

ஜெபம்: இயேசுவே, உம்மை என் ஆண்டவராக அறிந்து கொள்ளவும், உம் வார்த்தையைப் புரிந்து கொள்ளவும் நீர் எனக்குக் கொடுத்திருக்கிற பாக்கியத்திற்காக நன்றி. நீர் இன்று என்னுடன் பேசுகிறதற்காக நன்றி.  நான் உம் வார்த்தையைக் கேட்டுக் கீழ்ப்படிய எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
25 ஜனவரி 2021

No comments: