Friday, February 5, 2021

அன்பின் சட்டம்

வாசிக்க: யாத்திராகமம் 21, 22; சங்கீதம் 36; மத்தேயு 18:21-35

வேதவசனம்: மத்தேயு 18:21. அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்...35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

கவனித்தல்: இந்த நபரிடம் நான் எவ்வளவுகாலம் தான் சகித்துக் கொண்டிருப்பது , எத்தனை முறை நான் இவருடன் பொறுமையாயிருக்க வேண்டும் என  நாம் நினைக்கிறோம். இதுவரை பொறுத்தது போதும் என நினைக்கிறோம்.  நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை அல்லது எதாவது செய்பவர்களை சகித்துக் கொள்ள, மன்னிக்க ஒரு எல்லை இருக்கிறது என நாம் நினைக்கிறோம். இங்கே, வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, இதயத்திலிருந்து  முழுமையாக மனப்பூர்வமாய் மன்னிப்பது பற்றி இயேசு  பேசுகிறார். சிலர் தாங்கள் அனுபவித்த வெறுப்பு மற்றும் வேதனையின் அளவை நினைத்து மற்றவர்களை மன்னிப்பது மிகக் கடினம் என நினைக்கக் கூடும். இயேசு வாழ்ந்த நாட்களில், மோசேயின் நியாயப்பிரணாமத்தின்படி, மக்கள் “பழிக்குப் பழி வாங்கும் சட்டம்” பற்றி அறிந்திருந்தனர். அதன்படி, பழிவாங்குவதுதான் சரியான செயல் என அவர்கள் கருதினர் (யாத்.21:23-25). ஆனால், இயேசுவோ மன்னிப்பைப் பற்றி பேசினார். நம்மை மன்னிக்கும் பரலோக தகப்பனாகிய தேவன் நாம் மன்னிக்கப்பட்ட அதே அளவின்படி, மற்றவர்களையும் நாம் மன்னிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். 

பயன்பாடு: சில நேரங்களில், மற்றவர்களை மன்னிப்பது அவ்வளவு எளிதானதாக எனக்கு இருப்பதில்லை. தவறு செய்தவர்கள் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டு என நான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு தேவனுடைய மன்னிப்பு தேவைப்படும் நேரத்தில், தேவனுடைய இரக்கத்திற்காகவும் அன்பிற்காகவும் ஜெபித்து, ஒரு முழுமையான மன்னிப்பு தாரும் என நான் வேண்டுகிறேன். அன்புநிறைந்த தேவன் என்னை மன்னித்து, நானும் அதே பிரகாரம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நான் மற்றவர்களை மன்னிக்க முடியாது என சொல்வதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் அன்பிற்காகவும், மன்னிப்பிற்காகவும் நன்றி. நான் யாரையாகிலும் மன்னிப்பது கடினமாக இருப்பதாக உணரும் நேரத்தில், நான் உம் மன்னிக்கும் அன்பை எனக்கு நினைவுபடுத்திக் கொள்ள உதவும். இன் இதயத்தில் இருந்து நான் மற்றவர்களை மனப்பூர்வமாய் மன்னிக்கவும், நான் மன்னிக்கும் நபரிடம் உம் அன்பைக் காண்பிக்கவும் அவர்கள் எனக்கு எதிராகச் செய்தவைகளை மறக்கவும் உம் பலத்தை எனக்குத் தாரும்.  ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: