Sunday, February 14, 2021

கீழ்ப்படிதலின் பலன்

வாசிக்க: யாத்திராகமம் 39, 40; சங்கீதம் 45; மத்தேயு 23:1-22

வேதவசனம்:யாத்திராகமம் 39:42. கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள். 43. மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
யாத்திராகமம் 40:34. அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. 35. மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதின(து)38. இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது.

கவனித்தல்: இன்றைய வேதவாசிப்புப் பகுதியில், நாம் இரண்டுவிதமான ஜனங்களைப் பற்றி வாசிக்கிறோம். முதலாவது, "கர்த்தர் கட்டளையிட்டபடி" காரியங்களைச் செய்வதில் முனைப்பு காட்டியவர்கள். இரண்டாவதாக, தேவன் எதிர்பார்க்கிறபடி செய்யாமல் தங்களுக்குப் பிரியமான வழிகளில் சுயநலமாக செயல்பட்டதினால் இயேசு எச்சரிக்கை செய்த மாய்மாலக்காரர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். தேவனுடைய ஜனங்கள் “கர்த்தர் கற்பித்தபடி” தங்கள் ஆசரிப்புக் கூடார வேலையை செய்து முடித்த போது, அவர்கள் ஆசீர்வாதத்தையும், கானான் தேசத்துக்குச் செல்கிற பயணத்திற்குத் தேவையான வழிகாட்டுதலை உடனிருந்துத் தரும் கர்த்தருடைய மகிமையையும் அவர்களால் காண முடிந்தது. மறுபக்கத்திலோ, தேவனைப் புறந்தள்ளின மாய்மாலக்காரர்களுக்கு எதிரான இயேசுவின் எச்சரிக்கைகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிதல் எப்பொழுதும் ஆசீர்வாதங்களையும், நம் வாழ்க்கையில் தேவ வழிநடத்துதலையும் காண உதவுகிறது. 

பயன்பாடு: தேவன் கற்பித்தபடி நான் காரியங்களைச் செய்யும்போது, தேவன் என் கீழ்ப்படிதலை கனப்படுத்துகிறார். அதே வேளையில், என் வாழ்க்கையில் நான் மாய்மாலம் அல்லது பாசாங்குத்தனம் செய்கிறவனாக இருந்தால், அவர் அதை எச்சரிக்கிறார். நான் தேவனிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது.  மாய்மாலமான என்னுடைய செயல்களைக் காட்டிலும், கீழ்ப்படிகிற என் இருதயத்தை தேவன் காண்கிறார். நான் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, நான் தேவனை உயர்த்தி கனப்படுத்துகிறேன். மேலும், என் வாழ்க்கைக்குத் தேவையான தேவனுடைய ஆசீர்வாதங்களையும், அவருடைய வழிநடத்துதலையும் நான் பெறுகிறேன். ஆகவே, எப்பொழுதும் கர்த்தர் கற்பித்தபடியே அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நான் வாழ்வேன். 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என் கீழ்ப்படிதலின் மூலமாக இன்று நான் உம் மகிமையையும் வழிகாட்டுதலையும் காண எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, என் பலவீனங்களை மேற்கொள்ள எனக்கு உதவும், அன்புடன் நான் தேவனுக்குக் கீழ்ப்படிய என்னை பெலப்படுத்தும், எந்தவிதமான மாய்மாலங்களையும் செய்வதில் இருந்து என்னை விலக்கிக் காத்தருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்|
+91 9538328573

No comments: