Wednesday, February 10, 2021

அடிப்படை ஆதாரமற்ற ஒரு சாக்குப்போக்கு

 வாசிக்க: யாத்திராகமம் 31, 32; சங்கீதம் 41; மத்தேயு 21:1-22

வேதவசனம்: யாத்திராகமம் 32: 22. அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர். 23. இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள். 24. அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

கவனித்தல்: பரிசுத்த தேவன் இஸ்ரவேலருக்கான தம் பிரமாணங்களை மோசே மூலமாகக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்ரவேலர்களோ பொறுமையிழந்து, தங்களை வழிநடத்த தெய்வங்களை உண்டுபண்ணும்படி ஆரோனுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆரோன் அவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஜனங்களிடம் இருந்து தங்க நகைகளைக் கேட்டு வாங்கி அதினால் ஒரு கன்றுக் குட்டியை உண்டாக்கி அவர்களை விக்கிரக வணக்கத்திற்கு நேராக வழிநடத்தினான்.  மறுபக்கத்திலோ, இஸ்ரவேலருக்கு எதிரான தேவ கோபம் தணிய தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடிய மோசே, மலையில் இருந்து கீழே இறங்கி வந்த போது, ஆரோனை நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டார். ஆரோன் மோசேக்குக் கொடுத்த பதிலில், அவர் என்ன செய்தார் என்பதை மறைத்து பாதி உண்மையை மட்டும் சொல்வதையும், அக்கினியில் இருந்து அந்த சிலை தானாகவே வந்தது போல ஒரு தவறான அறிக்கையையும் செய்கிறார். தன் தவறுகளையும், தன் பொறுப்பில் இருந்து தவறியதையும் ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அடிப்படை ஆதாரம் கூட இல்லாத தன் நொண்டிச் சாக்குகளால் இஸ்ரவேலர் மீது பழி சுமத்துகிறார். அவர் மக்களைப் பார்த்து பயந்திருக்கலாம், ஜனங்களின் அழுத்தத்திற்கு அவர் கீழ்ப்படியாமல் போனால் நடக்கக் கூடிய பின்விளைவுகளைக் குறித்து ஒருவேளை கவலைப் பட்டிருக்கலாம். இறுதியில், அது ஜனங்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்யும்படி  வழிநடத்தியதுமல்லாமல், தேவனுக்கு அருவருப்பான காரியங்களைச் அவர்கள் செய்யவும் வைத்தது. மோசேயும், கர்த்தருக்காக உறுதியாக நின்ற லேவியர்களும் அங்கில்லை எனில், இஸ்ரவேலர்களின் பயணம் ஒரு வித்தியாசமான முடிவை எட்டியிருந்திருக்கும்.


பயன்பாடு: சில நேரங்களில், தேவனுக்கு விரோதமாக/எதிராக எதையாகிலும் செய்வதற்கான அழுத்தத்தை அல்லது கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நான் பெறலாம். அவை குடும்பத்திற்குள்ளிருந்தோ, வேலை செய்கிற இடத்தில் இருந்தோ, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்தோ வரக் கூடும். இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தன் மனச்சாட்சிக்கு எதிராக செயல்படும் அழுத்தங்களைப் பெறும் ஆபத்துகள் உண்டு. ஆகிலும், அப்படிப்பட்ட தருணங்களில் நான் எப்படி செயல்படுகிறேன் என்பதே எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டும்.  நான் ஒருவேளை மற்றவர்களின் அழுத்தம் அல்லது கட்டாயப்படுத்தல்களுக்கு இணங்கி தேவனுக்கு எதிராக பாவம் செய்து விட்டால், என் தோல்வியை நியாயப்படுத்துவதற்குப் பதிலாக, என்னை மன்னிக்கும்படி நான் தேவனிடம் கேட்பேன். ஒரு கிறிஸ்தவராக,  என்னை பாவத்திற்குள் விழப்பண்ணுகிற எதற்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன். நான் தேவனுக்காக உறுதியாக நிற்கும் ஒரு முடிவை எடுத்து, தேவனை விட்டு விலகி தூரச் செல்லும் நபர்களுக்காகவும் நான் ஜெபிப்பேன். 

ஜெபம்:    தந்தையாகிய தெய்வமே, இந்த உலகத்தின் அழுத்தங்கள் மற்றும் கட்டாயப்படுத்தல்களை நான் எதிர்கொள்ளும் நேரங்களில் எல்லாம், நான் உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க எனக்கு உதவும். மற்றவர்களின் அபத்தமான கோரிக்கைகளுக்கு இடம் கொடுக்காமலிருக்க என்னை பாதுகாத்தருளும். மார்ட்டின் லூத்தர் முன்பு சொன்னது போல, “நான் இங்கு நிற்கிறேன்; இதைத் தவிர வேறு எதையும் நான் செய்ய முடியாது. தேவனே எனக்கு உதவும்.” ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573



No comments: