Saturday, February 6, 2021

எரிச்சல் அடைய வேண்டாம்

 வாசிக்க: யாத்திராகமம் 23, 24; சங்கீதம் 37; மத்தேயு 19:1-15

வேதவசனம்: சங்கீதம் 37: 3. கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 4. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 5. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். 6. உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். 7. கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

கவனித்தல்: துன்மார்க்கர் தங்களுடைய பொல்லாத திட்டங்கள் எல்லாவற்றிலும் வெற்றிபெறுவதைக் காணும்போது, நாம் கடுப்படைந்து கோபம் கொள்கிறோம். குறுக்கு வழிகளைப் பயன்படுத்தாமல், தீய வழிகளில் செல்லாமல் எல்லாவற்றையும் முறையாக நேர்வழியில் செய்கிற ஒரு நல்ல நபராக பக்தியுள்ள கிறிஸ்தவராக வாழ்வதில் ஒரு பயனும் இல்லை என சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். துன்மார்க்கனுக்கு என்ன நேரிடும் என்பதையும், கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு அவர் என்னென்ன செய்வார் என்பதையும், தேவபக்தியுள்ள ஒருவர் செய்ய வேண்டியது என்ன என்பதையும் பற்றிய  ஒரு வரைபடத்தை சங்கீதம் 37 தருகிறது. துன்மார்க்கன் சில காலத்திற்கு வெற்றிகளைக் காணலாம். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல, தற்காலிகமானவை. மாறாக, தேசத்தின் ஆசீர்வாதம் தேவனை நம்புகிற நீதிமான்களுக்கு சொந்தமானது ஆகும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், துன்மார்க்கரின் வெற்றி என்று சொல்லப்படுகிறவைகளைப் பார்த்துக் கடுப்படையாமல், தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து அதையே செய்ய வேண்டும்.

பயன்பாடு:  நான் தேவனை நம்பி, என் வாழ்வில் தேவனுடைய இடைபடுதலுக்காகக் காத்திருக்கும்போது, வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, என் முழு கவனமும்  தேவன் மீதே இருக்கும்படி நான் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையான, நித்தியமான ஆசீர்வாதம் கர்த்தரிடம் இருந்தே வருகிறது. ஆனாலும், நான் பெறும் ஆசீர்வாதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை, மாறாக கர்த்தரே என் மனமகிழ்ச்சி.  அவ்ர் என் இதயத்தையும் என் வழிகளையும் அறிந்திருக்கிறார். நான் அவரை எக்காலத்திலும் நம்ப முடியும்.


ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,  இன்று நீர் தருகிற அறிவுறுத்தும் வழிகாட்டுதல்களுக்காக உமக்கு நன்றி. இந்த வார்த்தைகளை நான் என் இருதயத்தில் வைத்து,  வேறு எவரையும் பார்த்துக் கொண்டிராமல், நான் உம்மை மட்டுமே எப்பொழுதும் பார்க்க எனக்கு உதவும். ஆண்டவரே,  உமக்கு முன்பாக அமர்ந்து, உமக்காகக் காத்திருக்கும்,இருதயத்தையும், உம் வழியில் நடக்க  உம் பலத்தையும்  எனக்குத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573



No comments: