Tuesday, February 16, 2021

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

  வாசிக்க: லேவியராகமம் 3,4; சங்கீதம் 47; மத்தேயு 24:1-28

வேதவசனம்:மத்தேயு 24: 4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்...25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

கவனித்தல்: கடைசி நாட்களைப் பற்றிய அடையாளம் என்ன என்று இயேசுவிடம் அவருடைய சீடர்கள் கேட்டபோது,  கடைசிநாட்களின் வஞ்சகங்களைப் பற்றிய ஆபத்துகளைக் குறித்து இயேசு எச்சரித்தார். மத்தேயு 24:4ல் வருகிற  “எச்சரிக்கையாயிருங்கள்” என்கிற  இயேசுவின் வார்த்தை   எந்த வஞ்சகத்தில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்வதற்காக எது சரி அல்லது தவறு என்பதை அறியும்படி, கவனிக்கவும், உணர்ந்து கொள்ளவும், நிதானிக்கவும் நம்மை அழைக்கிறது. ஒலிவ மலையில் கடைசி நாட்களைப் பற்றிப் பேசிய தன் உரையில், ஒரு விசுவாசிக்கு வரப் போகிற உள்ளான மற்றும் வெளியில் இருந்து வரக் கூடிய போராட்டங்கள் அல்லது கஷ்டங்கள் பற்றி இயேசு பேசினார். அவைகளில், இயேசு குறிப்பிட்ட மற்ற எந்த பேரழிவுகள், நிகழ்வுகளைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுபவரை ஏமாற்ற/வஞ்சிக்க நடக்கும் முயற்சிகள் அதிக ஆபத்துகளை உண்டாக்கும். ஏனெனில் அது ஒருவரை தேவனிடம் இருந்து பிரித்துவிடக் கூடும். எதையும் ஆராய்ந்து பார்க்காமல் நம்புவதற்குப் பதிலாக, பல பிரச்சாரங்கள் நம் கவனத்தைத் திருப்பும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டு ஒருவர் வந்தாலும், அவர் தேவனிடம் இருந்து வந்தவரா இல்லையா என்பதை நிதானித்து அறியவேண்டியது ஒவ்வொரு விசுவாசியின் பொறுப்பு ஆகும். இவ்வகையான வருகின்ற, வரப்போகின்ற ஆபத்துகளைப் பற்றி இயேசு முன்னமே சொல்லி இருக்கிறார். நாம் விழிப்புடனும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும் இருக் வேண்டும். 

பயன்பாடு:  ஒரு கிறிஸ்தவனாக, எனக்கெதிராக வரும் எதையும் சந்திக்க நான் என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி நாட்களில் என்ன நடக்கும் என இயேசு கிறிஸ்து முன்னமே சொல்லி இருக்கிறார்.  இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் கவனித்துப் பார்க்கும் போது, இயேசுவின் வார்த்தைகள் உண்மை என்று அறிந்து கொள்கிறேன். என் ஆத்துமப் பசியை நீக்கவும், எந்த ஆபத்துகளில் இருந்தும் என்னை எச்சரித்துப் பாதுகாக்கவும் இயேசுவின்  வார்த்தைகள் போதுமானவை. இந்த உலகத்தின் ஆபத்துகளில் இருந்து என்னைக் காத்துக்கொள்ள இயேசு மற்றும் அவருடைய வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தேவை இல்லை. என்னை வஞ்சிக்கும், தவறாக வழிநடத்தும் எதையும் நான் நிராகரிக்க நான் திறந்த கண்களையும், செவிகளையும் மற்றும் நிதானித்து அறியும் இருதயத்தையும் உடையவனாக இருக்க வேண்டும். .

ஜெபம்:  இயேசுவே, கடைசி நாட்களைப் பற்றிய உம் தீர்க்கதரிசனத்திற்காகவும், எச்சரிப்புக்காகவும் உமக்கு நன்றி. நான் சத்தியத்தில் உறுதியாக நிற்கவும், எந்த வஞ்சகத்திலும் விழாமல் உம் மீது நான் வைத்திருக்கும் என் விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும் எனக்கு உதவும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: