Sunday, August 15, 2021

யார் என்னை விடுதலையாக்குவார்?

வாசிக்க: யோபு 27,28; சங்கீதம் 45; ரோமர் 7

வேத வசனம் ரோமர் 7: 24. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
25.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

கவனித்தல்:  ரோமர் 7ஆம் அதிகாரத்தில் உள்ள வசனங்கள் பாவ சுபாவத்திற்கு எதிராக பரிசுத்தமாக வாழ்வதற்கான தங்களுடைய உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது என அனேக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். ரோமர் 7:21-25ல், நம் உள்ளான போராட்டங்கள் மற்றும் சிந்தனைகளின் இருமுகத் தன்மை பற்றி நான்கு விதங்களில் பவுல் குறிப்பிடுகிறார்: நன்மை vs. தீமை (வ.21), தேவனுடைய நியாயப்பிரமாணம் vs. பாவப் பிரமாணம் (வ.22,23), சுய பரிதாபத்தின் கூக்குரல் vs. விடுதலையின் மகிழ்ச்சி (வ.24, 25), மற்றும் நியாயப்பிரமாணத்திற்கு ஊழியம் செய்தல் vs. பாவப் பிரமாணத்திற்கு ஊழியம் செய்தல் (வ.25). ஒரு விசுவாசியின் உள்மனப் போராட்டங்கள் மற்றும் நிர்ப்பந்தமான நிலைமையைப் பற்றிய பவுலின் குறிப்பானது, ஒருவர் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாது என்பதைக் காட்டுகிறது. அதற்கு ஒரு மீட்பர்/இரட்சகர் தேவை. பவுல் தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் துயரம், மன அழுத்தம், ஏமாற்றம், மற்றும் தோல்விகளை வெளிப்படுத்துகிறார். ஆனால், இயேசுவை பார்க்க ஆரம்பித்த உடனேயே, அவர் தேவனுக்கு நன்றி செலுத்துவதை நாம் காண்கிறோம். பவுல் தன் நிர்ப்பந்தமான நிலைமைக்கு தேவையான பதிலைக் கண்டு கொள்கிறார். தேவனே தன்னை விடுவிப்பவர் என்பதை அவர் கண்டுகொள்கிறார்.

நாம் அனைவருமே தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சை நம்மிடம் உண்டு. ஆயினும், நம் சுய நீதி, நியாயப்பிரமாணம், மற்றும் சொந்த முயற்சிகளின் மூலமாக அதை நாம் செய்ய/சாதிக்க முடியாது. இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நம் சரீரத்தின் பாவ சுபாவத்தில் இருந்து நாம் விடுவிக்கப்பட முடியும். நாம் நம்மை நாமே பார்த்துக் கொண்டு, தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கையை வாழாமல் இருக்கலாம், அல்லது இயேசு கிறிஸ்துவின் மீது நம் கண்களை வைத்து நம் வாழ்வில் பாவத்தில் இருந்து விடுதலை மற்றும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற உரிமை நம் கைகளில் இருக்கிறது!

பயன்பாடு: இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நான் வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியும். அவரே என் அனைத்து உள்மனப் போராட்டங்களுக்குமான பதில் ஆவார்; பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து இயேசு என்னை விடுதலை செய்கிறார். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை” (அப்.4:12). இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நான் உண்மையான சுதந்திரத்தை பெற்று அனுபவிக்க முடியும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, இயேசுவின் மூலமாக நீர் தருகிற விடுதலை மற்றும் இரட்சிப்புக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எல்லாவிதமான அடிமைத்தனத்தில் இருந்தும் என்னை விடுவிக்கிற ஆன்மீக/ஆவிக்குரிய சுதந்திரத்தின் மகிழ்ச்சியை பெற்று மகிழும்படி, எப்பொழுதும்   நான் இயேசுவின் மீது என் கண்களை வைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 227

No comments: