Friday, March 5, 2021

மோசே - எங்கும் உண்மையுள்ளவன்

 வாசிக்க: எண்ணாகமம் 11, 12; சங்கீதம் 64;  மாற்கு 4:21-41

வேதவசனம்: எண்ணாகமம் 12:  6. அப்பொழுது அவர் (கர்த்தர்): என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். 7. என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். 8. நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.

கவனித்தல்: எண்ணாகமம் புத்தகத்தில் இருந்து இன்று  வாசித்த வேத பகுதியில் மோசேயின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுவராசியமான நிகழ்வுகளைப் பற்றியும் மோசேயின் இரண்டு குணநலன்களைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். முதலாவதாக, பாளையத்தில் இரண்டு மூப்பர்கள் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்த போது யோசுவா அவர்களைத் தடை பண்ணும் என மோசேயிடம் கேட்டபோது, கர்த்தருடைய ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய ஆவிப் பெறவேண்டும், தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று தான் விரும்புவதாக மோசே தன் இருதய விருப்பத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவதாக, மோசேயின் உடன் பிறந்தவர்களான ஆரோனும், மிரியாமும் மோசேக்கு எதிராகவும், அவர் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருப்பதற்கு எதிராகவும் (அவதூறாக) பேசியபோது, ஆச்சரியப்படத்தக்க விதமாக, வேதம் சொல்வது போல, “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” (எண்.12:3). இந்த இரண்டு சம்பவங்களிலும், நாம் காணும் இரண்டு நபர்களுக்கும் எதிராக மோசே எதாகிலும் சொல்லிருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் அவர்களைத் தடுத்திருக்கவாவது செய்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை. மாறாக, அவர்கள் மீது பொறாமைப் பட்டு, கோபப்படுவதற்குப் பதிலாக, மோசே தன் தெய்வீக குணநலன்களையும் விருப்பங்களையும் வெளிப்படுத்தினார். அந்த மாபெரும் வேலைக்கு தன்னை அழைத்த தேவனை அவர் நம்பி, அவருக்கு உண்மையுள்ளவராக மோசே இருந்தார். ஆகவே, கர்த்தர் மோசேக்காகப் பேசினார்.  தேவன் உடனடியாக மோசேக்காக இடைபட்டு, ஆரோனையும் மிரியாமையும் கடிந்து கொண்டார். மேலும், தேவனே மோசேக்கு நற்சாட்சி வழங்கி, மோசே யார் என்பதை அனைவருக்கும் தெரியப்பண்ணினார். 

பயன்பாடு: தேவன் தமக்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களை எப்போதும் கனப்படுத்துகிறார். மற்றவர்கள் தங்கள் அபிசேகத்திலும், பரிசுத்த ஆவியின் வரங்களிலும் பெருகும்போது, நான் அவர்களின் ஆவிக்குரிய வரங்களைக் குறித்து பொறாமைப் படாமல்,  நான் அவர்களைப் பாராட்ட மனதுள்ளவனாக இருக்கவேண்டும். மேலும், தேவ ஜனங்கள் அனைவரும் தேவ ஆவியைப் பெறுவதைக் காண திறந்த மனதுள்ளவனாக இருக்க வேண்டும். நான் தேவனுடைய கண்ணோட்டத்தில் காரியங்களைக் காண வேண்டும். என்னை அழைத்தவர் மிகுந்த உண்மையுள்ளவர். தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகள் (ரோமர் 11:29). நான் எல்லாவற்றிலும், எங்கிலும்  தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம் உண்மையுள்ள ஊழியக்காரனாக இருப்பதற்கான ஒரு முக்கியமான பாடத்தை நீர் எனக்கு நினைவுபடுத்துவதற்காக நன்றி. உமக்கு உண்மையாக இருப்பவர்களை நீர் ஒருபோதும் கைவிடுகிறதில்லை. என் தேவனே, சோதனையான நேரங்களில் தெய்வீக குணநலன்களை வெளிப்படுத்த என்னை உம் ஆவியால் அபிசேகியும்.  ஆமென்.    

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: