Tuesday, April 13, 2021

எதுவும் இரகசியம் இல்லை!

 வாசிக்க: யோசுவா 19, 20; சங்கீதம் 103, லூக்கா 8: 1-25

வேதவசனம்: லூக்கா 8: 17. வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18. ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

கவனித்தல்: சில கிறிஸ்தவர்கள் இந்த வேதப்பகுதியை தவறாகப் புரிந்து கொண்டு, நம்மிடம் இருப்பதை தேவன் எடுத்துக் கொள்வாரா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்த வேதப்பகுதியை அது சொல்லப்பட்ட சூழ்நிலையில் வைத்து வாசிக்கும்போது, இயேசு நமக்கு என்ன சொல்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். லூக்கா 8ம் அதிகாரத்தில், விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கத்தை இயேசு தம் சீடர்களுக்கு எடுத்துக் கூறியதை நாம் வாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தையைக் கேட்கிற நான்கு விதமான மக்களைக் குறித்து இயேசு அவர்களிடம் சொன்னார். இயேசுவின் நற்செய்தியில் புரிந்து கொள்ள முடியாத மறைபொருள் என்று எதுவும் இல்லை. தேவனுடைய ராஜ்ஜியத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தி, அதை அனைவரும் அறியச் செய்ய வேண்டும்  என இயேசு விரும்புகிறார். சத்தியத்தை ஒரு பாத்திரத்தில் மறைத்து ஒளித்து வைக்க முடியாது. சத்தியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ஒளியைக் கண்டுகொள்வதுடன், அவர்கள் உலகின் இருளை அகற்றும் ஒளியாக மாறுகிறார்கள். சத்தியமானது அதைத் தேடி வருகிற அனைவரும் பலனடையும்படியாக விளக்குத்தண்டில் வைக்கப்படவேண்டும். 17ம் வசனத்தில், அனைத்து இரகசியங்களும் வெளியரங்கமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறதை நாம் பார்க்கிறோம்.

 இந்த வேதபகுதியில் முக்கியமான திறவுகோல் வசனம் என்னவெனில், “
ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்” என்பதாகும்.  நாம் தேவ வார்த்தையை எப்படிக் கேட்கிறோம் என்பதை தேவன் பார்க்கிறார். விதைக்கிறவனைப் பற்றிய உவமையானது பலவிதமான நிலங்களில் விழுந்த விதைகளைப் பற்றியது மட்டுமல்ல. அது தேவனுடைய வார்த்தையைக் கேட்ட பலவிதமான நபர்களைப் பற்றியும் இந்த உவமை சொல்கிறது. தேவனுடைய வசனத்தைக் கேட்ட அனைவரும் இரட்சிக்கப்பட்டு, பல மடங்கு பலன்களைக் கொடுப்பதில்லை. தேவனுடைய வார்த்தையை சரியான இடத்தில் வைத்து பாதுகாப்பவர்கள் அவர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். மற்றவர்களோ, தங்களிடம் இருப்பதாக நினைத்ததையும் இழந்து போவார்கள். இங்கே வருகிற வார்த்தைகளைக் கவனித்து, அதில் உள்ள வித்தியாசங்களைக் கவனியுங்கள். உண்மையில் அவர்களிடம் தேவனுடைய வார்த்தை இல்லை, அது தங்களிடம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உரிய இடத்தை, கனத்தைக் கொடுக்க தவறினபடியால், அவர்களிடம் இருப்பதும் எடுத்துக் கொள்ளப்படும். 

பயன்பாடு: தேவனைப் பற்றிய, தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை வெளிப்படுத்துவதை மட்டும் அல்ல, நான் சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் வெளிச்சத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இயேசு விரும்புகிறார். இது நான் எந்தளவுக்கு வெளிசமுள்ளவனாக இருக்கிறேன் என்பதையோ, எவ்வளவு தூரம் என்னில் உள்ள வெளிச்சம் பிரகாசமளிக்க முடியும் என்பதையோ அது குறிப்பதில்லை. மாறாக, நான் எவ்வளவு கவனமாக தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறேன் என்பதையும், அது வளர்ந்து ஒரு பலனுள்ள அறுவடை கொடுப்பதற்கு ஏதுவாக அதை சரியான இடத்தில் நான் வைக்க வேண்டும். வெறுமனே தேவனுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதுமானதல்ல, மாறாக நான் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, நான் தேவன் அருளும் ஆசீர்வாதங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்  (யாக்கோபு 1:22-25). தேவனுடைய வார்த்தையைக் கேட்பது மிக முக்கியமானது என்றாலும், அதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை எனில் அது முழுமையடைவதில்லை. 

ஜெபம்:  ஆண்டவராகிய இயேசுவே, தேவனுடைய ராஜ்ஜியத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ள உதவுகிற சத்தியத்தை எங்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக நன்றி. உம்முடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்கவும், அனுதினமும் அதை என் வாழ்க்கையில் பயன்படுத்தவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: