Saturday, April 3, 2021

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

வாசிக்க: உபாகமம் 33, 34; சங்கீதம் 93, லூக்கா 3: 1-20

வேதவசனம்: உபாகமம் 33: 29. இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

கவனித்தல்: இஸ்ரவேலருக்கு தேவ மனிதனாகிய மோசே கூறின இறுதி ஆசீர்வாதத்தில் வருகிற கடைசி வசனத்தை நாம் இங்கு காண்கிறோம்.  எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் பெற்ற விடுதலை, நாற்பது வருட வனாந்திர பயணத்தில் தேவன் இஸ்ரவேலர்களைப் போஷித்துக் காப்பாற்றிய விதம் ஆகியவற்றை மோசே பார்த்த போது,  “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?” என்று ஆச்சரியப்பட்டு சொல்கிறார். அவர்கள் தனித்துவமானவர்கள், ஏனெனில் அவர்களின் தேவனைப் போல வேறு ஒருவரும் இல்லை (வ.26). அவர் அநாதி  தேவன், நித்தியமானவர்! நாம் இங்கு காண்கிறது போல, தேவனுடைய பாதுகாப்பு, தேவைகளுக்குத் தேவையானதைத் தருதல், மற்றும் எதிரிகள் மீதான வெற்றி போன்றவை கடந்த காலத்திற்குரியவை மட்டுமல்ல. தம் ஜனங்கள் அவர்களின் எதிரிகள் மீது வெற்றி பெறுகிற வரைக்கும் தேவன் தம் உதவியை தொடர்ந்து வழங்குவார். தேவனுடைய ஆளுகையின் கீழ் அவருடைய ஜனங்கள் வாழ்கிற வரைக்கும், அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். தேவனுடைய ஜனங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! 
 
பயன்பாடு: என் வாழ்வின் ஆசீர்வாதமான நிலையைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போது, எனக்குத் தேவையானவைகளை எல்லாம் தந்து என்னைப் பாதுகாக்கிறவர் தேவன் என்பதை நான் நினைவு கூர வேண்டும். என் தேவன் துதிக்கும் ஆராதனைக்கும் உரியவர்.   நான் தேவனுடைய ஜனங்களில் ஒருவராக இருக்கும்படியான பாக்கியத்தை  பரலோகத்தின் தேவன் எனக்குத் தந்திருக்கிறார். கர்த்தர் தாமே என்னை பாதுகாக்கும் கேடகமாகவும், எனக்கு உதவு செய்கிறவராகவும் இருக்கும்போது, என் வாழ்விற்கான அவருடைய சித்தத்தைச் செய்ய அவருக்கு நான்  எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்க வேண்டும்! தேவனுடன் வாழ்தல் என்பது உண்மையிலேயே தனித்துவமானதும், ஈடு இணையற்ற ஆசீர்வாதமும் ஆகும். 
 
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை இரட்சித்த உம் ஆச்சரியமான கிருபைக்காக நன்றி. என் ஒவ்வொரு தேவையைக் குறித்தும் நீர் கரிசனை உள்ளவராக இருக்கிறீர். என் தேவைகளைச் சந்திக்க நீர் அருளும் அனைத்திற்கும் நன்றி. இதுவரையிலும் நீர் பாதுகாத்து வழிநடத்தினதற்காக நான் உம்மை துதிக்கிறேன். என் இரட்சகரே, உம்முடைய பாதுகாப்பு மற்றும் கவனிப்பின் கீழ் வாழ்கிற ஆசீர்வாதமான நிலையில் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ இன்று எனக்கு  உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: