Friday, April 16, 2021

ஜெபம் செய்திடுவோம் & புறப்பட்டுச் செல்வோம்

வாசிக்க:  நியாயாதிபதிகள் 3,4; சங்கீதம் 107, லூக்கா 10: 1-24

வேதவசனம்: லூக்கா 10: 1. இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
2. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.

கவனித்தல்: இயேசு தெளிவான வழிமுறைகளுடன் எழுபதுபேரை அனுப்பியது லூக்கா நற்செய்தி நூலில் மட்டுமே பிரத்யேகமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய அதிகாரத்தில் இயேசு இதே போன்ற அறிவுரையுடன் தம் பன்னிரு சீடரை அனுப்பினதைப் பற்றி நாம் வாசிக்கிறோம் (லூக்கா 9:1,2) இயேசு தம் சீடர்களை இரண்டிரண்டு பேராக அனுப்பிய போது, “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு” மட்டுமே அவர்கள் போக வேண்டும் என சொன்னார் (மத்.10:5,6). இங்கு இந்த எழுபது பேருக்கும் அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் போக வேண்டும் என்று இயேசு விரும்புகிற எந்த இடத்திற்கும் அவர்கள் செல்லலாம். இங்கே வலியுறுத்தப்படுகிற முக்கியமான விஷயம் என்னவெனில், அறுவடைக் களத்திற்கு செல்ல அதிக வேலையாட்கள் தேவை என்பதே. ஆகவே, அறுவடையின் எஜமான் அறுப்புக்கு அதிக வேலையாட்களை அனுப்பும்படி ஜெபம் செய்ய வேண்டும் என இயேசு சொன்னார். இறுதியில், அவர்களை அறுவடை செய்வதற்கான வேலையாட்களாக இயேசு அனுப்பினார். இன்றும் கூட நாம் கிறிஸ்தவப் பணித்தளங்களில் இந்த தேவை இன்றும் இருப்பதை நாம் காண்கிறோம். ஏனெனில், இந்த அறுவடையானது பருவ காலத்திற்கு ஏற்றபடி நிகழ்கிற ஒன்று அல்ல. நாம் வருட முழுவதிலும், உலகமெங்கிலும் இந்த அறுவடையைக் காண முடியும். ஆயினும்,  “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.”  நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தின் தேவையை உணர்ந்து, அதற்காக ஜெபம் செய்ய வேண்டும். அறுவடை களத்திற்கு நம்மை அனுப்புவதற்கு ஆண்டவர் விரும்புவாரெனில், எந்த சாக்குபோக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்காமல், கிளம்பிச் செல்வதற்கு ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அறுவடைக் களமானது, ஒருவேளை நாம் தற்போது வாழ்ந்து வருகிற இடமாக இருக்கலாம், அல்லது அருகில் உள்ள ஒரு இடமாக இருக்கலாம், அல்லது தொலைவில் உள்ள ஒரு இடமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், அதிக வேலையாட்களை ஆண்டவர் அனுப்பும்படி நாம் ஜெபிக்க வேண்டும். மேலும், அதில் நம் பங்கு என்னவோ அதைச் செய்யவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

பயன்பாடு: அறுவடையை சேகரிப்பதற்கான வேலையாட்கள் தேவை என்பதை நான் உணர வேண்டும். அறுவடையின் எஜமான் அதிக வேலையாட்களை அனுப்புவதற்கு நான் ஜெபிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். கிறிஸ்தவ ஊழியங்களுக்காக ஜெபிப்பதும், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்பட வேண்டும் என ஜெபிப்பதும்  எனக்கு முக்கியமானது ஆகும். அறுவடைக்காக நான் ஜெபிக்கும்போது, எளிதான மாற்று வழிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக,  ஆண்டவர் என்னிடம் கேட்பதை நான் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். நான் கீழ்ப்படியும் போது, நான் என் வாழ்விலும், என் வாழ்க்கை மூலமாகவும் அனேக மாபெரும் காரியங்களைக் காண்பேன். 

ஜெபம்: பிதாவே, அறுவடைக்காக ஜெபிக்க என் கவனத்தை நீர் திருப்புவதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, ஆத்தும அறுவடைக்கு அனேக வேலையாட்கள் தேவை என்பதை நான் உணர்கிறேன். அனேக கிறிஸ்தவ ஊழியர்கள் புறப்பட்டுச் சென்று, நற்செய்தியைக் கேள்விப்படாத மக்கள் குழுக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இதில் எனது பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில், இதை நான் கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: